Friday, April 29, 2011

புதுச்சேரியில் போலீஸ் அத்துமீறல்: கட்சி, இயக்கங்கள் சார்பில் மே 4-ல் ஊர்வலம் - ஐ.ஜி. அலுவலகம் முற்றுகை

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் 28.04.2011 வியாழனன்று காலை 10 மணியளவில் புதுச்சேரி, முதலியார்பேட்டையில் உள்ள உணவுக் களஞ்சியத்தில் பல்வேறு கட்சி, இயக்கங்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமைத் தாங்கினார்.

இக்கூட்டத்தில், கிராமப் பஞ்சாயத்து தலைவர்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு துணை அமைப்பாளர் கோ.அ.ஜெகன்நாதன், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி, ம.சிங்காரவேலர் முன்னேற்ற கழகத் தலைவர் கோ.செ.சந்திரன், மக்கள் சிவில் உரிமைக் கழகத் தேசிய கவுன்சில் உறுப்பினர் இர.அபிமன்னன், அகில இந்திய பார்வட் பிளாக் கட்சி பொதுச்செயலாளர் உ.முத்து, கான்சிராம் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் தங்க.கலைமாறன், புரட்சியாளர் அம்பேத்கர் மக்கள் படை செய்தித் தொடர்பாளர் கஸ்பர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் எம்.ஏ. அஷ்ரப் (எ) ரகமத்துல்லா, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் முகம்மது சலீம், முற்போக்கு ஜனசக்தி இயக்கத் தலைவர் சி.எம்.புரட்சிவேந்தன், மனிதநேய அமைப்புத் தலைவர் கோ.லோகலட்சகன், வன்னியர் குடும்ப ஒருங்கிணைப்பு பொறுப்பாளர் மு.மதுரை, ஆதிதிராவிடர் உரிமைக் கழகத் தலைவர் ச.பாலசுந்தரம், இந்திய சமூக செயல்பாட்டுப் பேரவை அகில இந்திய துணைப் பொதுச்செயலாளர் ஜோசப் விக்டர் ராஜ், மதிகிருஷ்ணாபுரம் கவுன்சிலர் கோ.சத்தியமூர்த்தி, அட்லஸ் அமைப்புத் தலைவர் சா.து.அரிமாவளவன், கல்வி, சுற்றுச்சூழல் கண்காணிப்பு மேம்பாட்டு கழகத் தலைவர் அ.மஞ்சினி, மக்கள் விழிப்புணர்ச்சி இயக்க செயலாளர் பா.சரவணன், மக்கள் மன்ற தலைவர் மு.நாராயணசாமி, ஈழத் தமிழர் ஆதரவு கூட்டமைப்பு பொறுப்பாளர் கலைப்புலி சங்கர், சதுப்புநில காடுகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு தலைவர் செல்வ மணிகண்டன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு அமைப்புக் குழு உறுப்பினர்கள் சு.காளிதாஸ், பா.மார்கண்டன். கலைவாணான், பா.காளிதாஸ் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

இக்கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. மேட்டுப்பாளையத்தில் நடந்த ஜெயசங்கர் கொலை வழக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட திருக்கோவிலூர் டி.கே.மண்டபத்தைச் சேர்ந்த தாமோதரன் என்பவரை போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் மேட்டுப்பாளையம் மற்றும் முதலியார்பேட்டை காவல்நிலையங்களில் வைத்து அடித்து உதைத்து சித்திரவதை செய்துள்ளனர். போலீசாரின் இந்த கொடுமைத் தாங்க முடியாமல் தாமோதரன் மரணமடைந்துள்ளார். இந்த வழக்கை சந்தேக மரணம் என போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது சந்தேகத்திற்கு இடமின்றி காவல் நிலைய மரணம் என்பதால் இவ்வழக்கை உடனடியாக காவலில் நடந்த கொலை வழக்காக மாற்றி, வழக்கு விசாரணையை சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்ற வேண்டும்.

2. இந்த காவல்நிலைய கொலை சம்பவத்தோடு தொடர்புடைய மேட்டுப்பாளையம் மற்றும் முதலியார்பேட்டை காவல்நிலைய போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் அனைவரையும் உடனடியாக தற்காலிக பணிநீக்கம் செய்து கைது செய்ய வேண்டும்.

3. இந்த சம்பவத்தை கண்ணால் கண்ட சாட்சிகளான திருக்கோவிலூரை சேர்ந்த ராஜேந்திரன், சந்தோஷ், பாலு, ராமு, தட்சணாமூர்த்தி ஆகியோர் போலீசாருக்கு எதிராக தாசில்தார் விசாரணையில் சாட்சி சொன்னதால், அவர்களை ஜெயசங்கர் கொலை வழக்கில் குற்றவாளியாக சேர்ப்போம் என போலீசார் மிரட்டி வருவதாக அறிகிறோம். எனவே, காவல் நிலைய கொலை வழக்கு சாட்சிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.

4. கணவனை இழந்து மூன்று சிறிய குழந்தைகளோடு தவிக்கும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு உடனே வழங்க வேண்டும்.

5. கடந்த 12.04.2011 அன்று அதாவது தேர்தல் நடப்பதற்கு முந்தைய நாள் இரவு கரிக்கலாம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் கோ.அ.ஜெகன்நாதன் மற்றும் அவரது மனைவி, மகன் ஆகியோரை தெற்குப் பகுதி காவல் கண்காணிப்பாளர் நந்தகோபால் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் கரிக்கலாம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டை சுற்றி வளைத்து மிரட்டி அச்சுறுத்தி, அவர்களை விடியும் வரை வீட்டுக் காவலில் வைத்துள்ளனர். அதோடு ஆளும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அமைச்சர் கந்தசாமியின் ஆதரவாளர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க கூடாது என காவல் கண்காணிப்பாளர் நந்தகோபால் பொதுமக்கள் பலர் முன்னிலையில் எச்சரிக்கை விடுத்துள்ளார். நடுநிலையோடு, சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட வேண்டிய காவல் கண்காணிப்பாளர் நந்தகோபால் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு வெளிப்படையாக ஆதரவாக செயல்பட்டுள்ளார். இதுகுறித்து, ஜெகன்நாதனின் மனைவி தேர்தல் ஆணையத்திற்கும், புதுச்சேரி அரசு மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் புகார் அளித்தும் அதன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, இப்புகார் மீது வழக்குப் பதிவு செய்து காவல் கண்காணிப்பாளர் நந்தகோபால் மற்றும் போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

6. உள்ளாட்சிகளுக்கு அதிகாரம் உள்ளிட்ட உரிமைகள் கேட்டு தொடர்ந்து போராடி வரும் ஜெகன்நாதன் மற்றும் அவரது மகன் மீதும் காவல் கண்காணிப்பாளர் நந்தகோபால் உத்தரவின் பேரில் போலீசார் தொடர்ந்து பல்வேறு பொய் வழக்குகளைப் போட்டு வருகின்றனர். அரசின் இந்த திட்டமிட்ட அடக்குமுறையை வன்மையாக கண்டிப்பதுடன் உடனடியாக ஜெகன்நாதன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும்.

7. மேற்சொன்ன கோரிக்கைளை வலியுறுத்தி பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகளின் சார்பில் வரும் மே 4 புதனன்று காலை 10 மணிக்கு புதுச்சேரி சுதேசி மில் அருகிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு ஐ.ஜி. அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

Wednesday, April 27, 2011

காவல்நிலைய மரணத்திற்கு காரணமான போலீசார் அனைவரையும் கைது செய்ய வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 27.04.2011 அன்று விடுத்துள்ள அறிக்கை:

கொலை வழக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தாமோதரன் போலீஸ் காவலில் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தோடு தொடர்புடைய மேட்டுப்பாளையம் மற்றும் முதலியார்பேட்டை காவல்நிலைய போலீஸ் அதிகாரிகள் அனைவரையும் தற்காலிக பணிநீக்கம் செய்வதோடு கைது செய்ய வேண்டுமென மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் புதுச்சேரி அரசை வற்புறுத்துகிறோம்.

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அருகேயுள்ள டி.கே. மண்டபத்தை சேர்ந்தவர் தாமோதரன். வயது 35. இவர் மேட்டுப்பாளையத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் கட்டிட மேஸ்திரியாக வேலைப் பார்த்து வந்தார். திருக்கோவிலூரை சேர்ந்த ஜெயசங்கர் என்பவர் கடந்த 24ந் தேதியன்று மேட்டுப்பாளையத்தில் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கு விசாரணைக்காக தாமோதரனை கடந்த 25-ந் தேதி மதியம் 2 மணியளவில் மேட்டுப்பாளையம் போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். அவரோடு திருக்கோவிலூரை சேர்ந்த ராஜேந்திரன், சந்தோஷ், பாலு, ராமு, தட்சணாமூர்த்தி ஆகியோரையும் அழைத்துச் சென்றுள்ளனர்.

அதன்பின்னர் மேற்சொன்ன அனைவரையும் முதலியார்பேட்டை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று அங்கு விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது மேட்டுப்பாளையம் மற்றும் முதலியார்பேட்டை போலீசார் மேற்சொன்ன அனைவரையும் அடித்துத் துன்புறுத்தி உள்ளனர். அப்போது அங்கு இரவு சுமார் 7 மணியளவில் போலீசாரின் சித்திரவதையை தாங்க முடியாமல் தாமோதரன் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரையும், அவருடன் ராஜேந்திரன், பாலு, சந்தோஷ் ஆகிய மூவரையும் ஒரு போலீஸ்காரர் ஆட்டோவில் ஏற்றி சிகிச்சைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு தாமோதரனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

ஒருவரை விசாரணைக்கு அழைத்து சென்று போலீஸ் காவலில் வைத்திருக்கும் போது அந்த நபருக்கு என்ன நேர்ந்தாலும் தொடர்புடைய காவல்துறையினர் தான் முழுப் பொறுப்பு என உச்சநீதிமன்றம் பல வழக்குகளில் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதன்படி பார்த்தால் தாமோதரன் போலீஸ் காவலில் இறந்தது மட்டுமல்லாமல், இது காவல் மரணம் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி தெள்ள தெளிவாகிறது.

இதுகுறித்து குற்றவியல் நடைமுறை சட்டம் 176 (1 ஏ) பிரிவின்படி நீதித்துறை நடுவர் விசாரணைக்கு உத்தரவிடவும், பிரேத பரிசோதனையை ஒன்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் அடங்கிய குழு மூலம் செய்யவும், வீடியோவில் பதிவு செய்திடவும் வலியுறுத்தி அரசு மற்றும் காவல்துறை உயரதிகாரிகள், தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவர் ஆகியோருக்கு நேற்று தந்தி அனுப்பியிருந்தோம். இதனை தொடர்ந்து தற்போது நீதித்துறை நடுவர் விசாரணை நடைபெற்று வருகிறது.

போலீஸ் காவலில் நடந்த மரணத்தை நேரில் பார்த்த சாட்சிகளான ராஜேந்திரன், சந்தோஷ், பாலு, ராமு, தட்சணாமூர்த்தி ஆகியோரை போலீசார் மிரட்டி வருவதாக அறிகிறோம். இந்த வழக்கின் கண்ணால் கண்ட முக்கிய சாட்சிகளான இவர்களுக்கு அரசும், காவல்துறையும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

புதுச்சேரி அரசு உடனடியாக இந்த சம்பவம் குறித்த வழக்கை கொலை வழக்காக மாற்றி வழக்கு விசாரணையை சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்ற வேண்டும். இந்த சம்பவத்தோடு தொடர்புடைய போலீஸ் அதிகாரிகள் அனைவரையும் உடனடியாக தற்காலிக பணிநீக்கம் செய்வதோடு கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு உடனே வழங்க வேண்டும். இதுகுறித்து மத்திய, மாநில அரசுக்கும், தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கும் விரிவான அறிக்கை ஒன்றை அனுப்ப உள்ளோம்.

Monday, April 25, 2011

பல்வேறு குற்றச்சாட்டிற்கு ஆளான கவர்னர் இக்பால் சிங்கை உடனடியாக பதவி நீக்க வேண்டும்!

இக்பால் சிங்
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 25.04.2011 அன்று விடுத்துள்ள அறிக்கை:

பல்வேறு குற்றச்சாட்டிற்கு ஆளான புதுச்சேரி கவர்னர் இக்பால் சிங்கை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டுமென மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.

புதுச்சேரி கவர்னர் இக்பால் சிங் வரி ஏய்ப்பு செய்து சிறையிலுள்ள அசன் அலிக்கு பாஸ்போர்ட் எடுக்க உதவிய விவகாரம் குறித்து மத்திய அமலாக்கப் பிரிவினர் அவரை கடந்த 20ந் தேதியன்று விசாரணை மேற்கொண்டனர். அவரிடம் மீண்டும் நாளை விசாரணை நடத்த உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும், கவர்னரின் மகன்கள், உறவினர்கள் பெயரில் துவங்கப்பட்ட “தி சவுத் எஜீகேஷன் டிரஸ்ட்” என்ற அறக்கட்டளைக்கு காரைக்காலில் மருத்துவ கல்லூரி துவங்க அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த மருத்துவ கல்லூரிக்கு அமைச்சரவை ஒப்புதல் இல்லாமல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேற்சொன்ன மருத்துவ கல்லூரிக்காக காரைக்காலில் 32 ஏக்கர் நிலம் விலைக்கு வாங்கப்பட்டுள்ளது. சுகாதார துறையின் பயன்பாட்டிற்கு அரசு கையகப்படுத்த இருந்த நிலத்தை சுகாதார துறை அதிகாரிகள் இடைத்தரகர்களாக இருந்து மருத்துவ கல்லூரி துவங்க அந்த இடத்தை வாங்கித் தந்துள்ளனர்.

அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து மருத்துவ கல்லூரிக்கு அங்கீகாரம் கேட்டு புதுவை பல்கலைக்கழகத்தில் அறக்கட்டளையினர் விண்ணப்பம் செய்துள்ளனர். எந்தவித அடிப்படை கட்டுமானமும், வசதியும் இல்லாததை சுட்டிக்காட்டி பல்கலைக்கழக அதிகாரிகள் அங்கீகாரம் அளிக்க மறுத்துள்ளனர். ஆனால், மருத்துவ கல்லூரி துவங்க வங்கியில் கடன் பெற வசதியாக கடிதம் ஒன்றை வழங்கியுள்ளனர்.

மருத்துவ கல்லூரி விவகாரத்தில் கவர்னருக்கு எந்தவித தொடர்பும் இல்லை என தொடர்ந்து மறுத்து வரும் கவர்னரின் சிறப்பு அதிகாரி மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் பல்கலைக்கழகம் கடன் பெற அளித்த கடிதத்தை கவர்னர் மாளிகையின் உயரதிகாரி ஒருவர் கையெழுத்துப் போட்டு பெற்றது ஏன் என்று விளக்க வேண்டும்.

இவ்வாறு சட்டத்திற்குப் புறம்பாக மருத்துவ கல்லூரிக்கு அனுமதி அளித்த தலைமைச் செயலர், சுகாதார துறை அதிகாரிகள் உட்பட பின்னணியில் உள்ள அனைவரின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமலாக்கப் பிரிவினர் விசாரணை நடந்துக் கொண்டிருக்கும் போது முதல்வர் வைத்திலிங்கம், அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி ஆகியோர் கவர்னரை
சந்தித்துவிட்டு வந்து அவர் குற்றம் செய்யவில்லை என பேட்டி அளித்துள்ளனர். இது கவர்னரை காப்பாற்றும் நோகத்தோடு குற்றத்தை மூடிமறைக்கும் முயற்சி ஆகும். மேலும், இது திட்டமிட்டே அமலாக்கப் பிரிவினரின் விசாராணைக்கு குந்தகம் விளைவிக்கும் செயலாகும்.

இந்திய அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு நடப்பேன் என பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டு, அதை மீறி குற்றமிழைத்த கவர்னருக்கு வெளிப்படையாக ஆதரவாக செயல்பட்டுள்ள முதல்வர் வைத்திலிங்கம், அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி ஆகியோரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என குடியரசுத் தலைவரை வலியுறுத்துகிறோம். இதுகுறித்து ஆதரங்களுடன் குடியரசுத் தலைவருக்கு விரிவான புகார் மனு ஒன்றை அனுப்ப உள்ளோம்.

கவர்னர் இக்பால் சிங் தனது அரசு அதிகாரத்தை பயன்படுத்தி தனது மகன்கள் மற்றும் உறவினர்கள் பெயரில் மருத்துவ கல்லூரிக்கு அனுமதி பெற்றுள்ளதும், அசன் அலிக்கு பாஸ்போர்ட் எடுக்க உதவியதும் அப்பட்டமாக சட்டத்திற்குப் புறம்பான செயல்களாகும். எனவே, கவர்னர் இக்பால் சிங்கை பதவியிலிருந்து உடனடியாக நீக்க வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.

புதுச்சேரி போன்ற யூனியன் பிரதேசங்களில் கவர்னருக்கு இந்திய அரசியல் சட்டப்படியும், யூனியன் பிரதேச சட்டப்படியும் உச்சபட்ச அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்று கவர்னருக்கு அதிகாரம் உள்ளதால்தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை நிர்பந்தித்து சட்டத்திற்கு விரோதமாக பல்வேறு பயன்களைப் அடைந்து வருகின்றனர். எனவே, கவர்னருக்கு உள்ள அதிகாரத்தைக் குறைத்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அனைத்து அதிகாரங்களையும் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய அரசு கவர்னரை நியமிக்கும் போது தொடர்புடைய மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளை கலந்தாலோசிப்பது கிடையாது. இதனால், மத்தியில் ஆளும் கட்சியை சேர்ந்தவர்களுக்கு வேறு எந்த உயர் பதவியும் அளிக்க முடியாத நிலையில் கவர்னராக நியமிக்கப்படுகிறார்கள். இதனால், தவறிழைத்த கவர்னர்கள் மீது நடவடிக்கை எடுக்க கேட்டால் மத்திய அரசு நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக அவர்களை காப்பாற்ற அனைத்து வகையிலும் முயற்சிக்கிறது.

எனவே, கவர்னரை நியமிக்கும் போது அந்தந்த மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளை கலந்தாலோசித்த பிறகே நியமிக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வர மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.

Saturday, April 16, 2011

டாக்டர் பினாயக் சென்னிற்கு உச்சநீதிமன்றம் பிணை: மனித உரிமை அமைப்புகளுக்கு கிடைத்த வெற்றி

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 16.04.2011 அன்று விடுத்துள்ள அறிக்கை:

புகழ் பெற்ற மனித உரிமை ஆர்வலர் டாக்டர் பினாயக் சென்னிற்கு உச்சநீதிமன்றம் பிணை வழங்கியுள்ளதை வரவேற்பதோடு, இது மனித உரிமை அமைப்புகளுக்கு கிடைத்த வெற்றி என்பதை மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.

அடித்தட்டு மக்களுக்காக சேவை புரிந்து வந்த டாக்டர் பினாயக் சென் மீது சட்டிஸ்கர் மாநில காவல்துறை மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு வைத்திருந்தார் எனக் கூறி தேசதுரோக குற்றச்சாட்டில் அவரை கைது செய்து சிறையில் அடைத்தது. அவர் மீதான வழக்கு விசாரணை ராய்ப்பூர் செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து முடிந்து அவருக்கு கடந்த டிசம்பர் 24ந் தேதியன்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

வன்முறையிலும், சட்டத்திற்குப் புறம்பான வழிமுறைகளின் மீதும் நம்பிக்கையற்ற பினாயக் சென்னிற்கு அயுள் தண்டனை விதிக்கப்பட்டது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்ததோடு, உலக அளவில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இந்தியா முழுவதும் இத்தீர்ப்பை எதிர்த்து கண்டன கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

புதுச்சேரியிலும் மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் கடந்த ஜனவரி 2ந் தேதியன்று கண்டன கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் பினாயக் சென் மீதான வழக்கைத் திரும்பப் பெறவும், அவருக்கு உச்சநீதிமன்றம் பிணை வழங்கவும் வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தற்போது பினாயக் சென்னிற்கு உச்சநீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும், உச்சநீதிமன்றம் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் எதுவும் இல்லை என்றும், மவோயிஸ்டுகளை ஆதாரிப்பது குற்றமல்ல எனவும் கூறியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இக்கருத்து பினாயக் சென் சட்டிஸ்கர் மாநில காவல்துறையால் திட்டமிட்டு பழிவாங்கப்பட்டதை உறுதி செய்கிறது. மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு காலம் கடந்தாவது நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

உச்சநீதிமன்றம் தேசதுரோக சட்டப் பிரிவான (Sedition) இந்திய தண்டனைச் சட்டம் 124-ஏ பிரிவை பயன்படுத்துவது குறித்து கேள்வி எழுப்பியுள்ளது. வெள்ளையர்களை எதிர்த்து சுதந்திரத்திற்கு போராடியவர்கள் மீது ஏவப்பட்ட இந்த சட்டப் பிரிவு இன்றைக்கும் தேவையா என்ற விவாதம் தற்போது மீண்டும் எழுந்துள்ளது.

உச்சநீதிமன்றத்தின் கருத்தை தொடர்ந்து மத்திய சட்டத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி தேசதுரோக சட்டப் பிரிவை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளார். இது மனித உரிமை ஆர்வலர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளிக்கிறது.

எனவே, தேசதுரோக சட்டப் பிரிவை உடனடியாக நீக்கவும், இந்தியா முழுவதும் தேசதுரோக குற்றச்சாட்டில் சிறைகளில் உள்ளவர்களின் மீதான வழக்குகளை மறுபரீசிலனை செய்து, அவர்களை விடுதலை செய்யவும் மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.