
பதாகை...

திரளான முசுலீம் பெண்கள்...

அரங்கத்திற்குள் திரண்டிருந்த முசுலீம் மக்கள்...

அரங்கத்திற்கு வெளியே முசுலீம் மக்கள்...

மேடையில் தலைவர்கள்...

கோ.சுகுமாரன்...
மனித நீதிப் பாசறை (MNP) சார்பில் தமிழகத்தில் அண்ணா நூற்றாண்டையொட்டி ஆயுள் தண்டனைச் சிறைவாசிகளை விடுதலைச் செய்வதில் பாகுபாடு காட்டக் கூடாது என வலியுறுத்தி கோவையில் 24-08-2008 ஞாயிறன்று மாபெரும் கருத்தரங்கம் நடைபெற்றது.
தமிழக சிறைகளில் பல்வேறு வழக்குகளில் ஆயுள் தண்டனைப் பெற்ற சிறைவாசிகள் பலர் 10 முதல் 21 ஆண்டு வரையில் விடுதலைச் செய்யப்படாமல் சிறையில் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் முக்கிய தலைவர்கள் பிறந்த நாளன்று இவ்வாறு சிறையில் உள்ள ஆயுள் தண்டனைச் சிறைவாசிகளை விடுதலை செய்வது வழக்கம். வரும் செப்டம்பர் 15 அன்று அண்ணா நூற்றாண்டு வருவதையொட்டி தமிழக அரசு ஆயுள் தண்டனைப் பெற்று 7 ஆண்டுகள் சிறையில் தண்டனை கழித்தவர்களை விடுதலைச் செய்ய முடிவு செய்துள்ளது. அதற்கான பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தமிழக அரசின் உள்துறைச் செயலர் மற்றும் சிறைத் துறை கூடுதல் இயக்குநர் ஆகியோர் இரண்டு சுற்ற்றிக்கைகளை வெளியிட்டுள்ளனர். அதில் ஆயுத மற்றும் வெடி மருந்துச் சட்டப்படி தண்டனை அடைந்தவர்கள், மதக் கலவரத்தில் தண்டனை அடைந்தவர்கள், கீழ்நீதிமன்றத்தில் மரண தண்டனைப் பெற்று உயர்நீதிமன்றத்தாலோ, உச்சநீதிமன்றத்தாலோ ஆயுள் தணடனையாக குறைக்கப்பட்டவர்கள் என இந்த மூன்று வகையினருக்கு அண்ணா நூற்றாண்டில் தண்டனை குறைத்து விடுதலை செய்வது பொருந்தாது எனக் கூறப்பட்டுள்ளது.
தமிழக அரசின் இந்த முடிவு கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. ஆயுள் சிறைவாசிகளை விடுதலைச் செய்வதில் பாகுபாடு காட்டக் கூடாது என மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பிலிருந்து குரல் எழுந்துள்ளது.
தமிழக அரசின் இந்த உத்தரவால் பல்வேறு வழக்குகளிலுள்ள முசூலீம்கள் 72 பேரும், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 17 ஆண்டுகள் கழித்த நளினி உட்பட நால்வரும், 21 ஆண்டுகள் கழித்த சந்தன வீரப்பனின் அண்ணன் மாதையன் உள்ளிட்ட தமிழக சிறைகளிலுள்ள ஆயுள் தணடனைச் சிறைவாசிகள் மொத்தம் 77 பேர் விடுதலை ஆகமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்திய அரசியல் சட்டப் பிரிவுகள் 72, 161 ஆகியவை தண்டனை பெற்றவர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்கி, அவர்களை விடுதலை செய்ய குடியரசுத் தலைவருக்கும், அந்தந்த மாநில ஆளுநருக்கும் அதிகாரம் வழங்கியுள்ளது. இதில் பாகுபாடு காட்டுவது பிரிவு 14-க்கு முரணானது.
இது குறித்து அரியாணா உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள ஒரு முக்கிய தீர்ப்பு இவ்வாறு கூறுகிறது:
“கைதிகள் தணடனைக் குறைப்பைக் கோருவது அரசியல் சட்ட அடிப்படையில் உரிமை பெற்றவர்கள் அல்லர் என்ற போதிலும் தணடனைக் குறைப்பை அளிக்க வேண்டியது அரசின் சட்ட பூர்வமான கடமைகளில் ஒன்று. மாநில அரசுகள் இருக்கிற விதிகளுக்குட்பட்டு அரசியல் சட்டப் பிரிவுகள் 72 மற்றும் 161 பிரிவின் கீழ் பொது மன்னிப்பு அளிக்க விதிமுறைகளை ஏற்படுத்திக் கொள்ளலாம். கைதிகளை வகை பிரிக்க மாநில அரசுகளுக்கு உரிமை உண்டு என்ற போதிலும், இவ்வாறு மேற்கொள்ளாப்படும் வகைப்பாடு குடிமக்களுக்கிடையே சமத்துவ உரிமையை அளிக்கும் அரசியல் சட்ட பிரிவு 14-க்கு முரணாக அமையக் கூடாது” என ஆணித்தரமாக கூறியுள்ளது.
இந்நிலையில், மனித நீதிப் பாசறை சார்பில் 24-08-2008 ஞாயிறன்று, கோவையில், சங்கமம் திருமண மண்டபத்தில், மாலை 5.45 முதல் இரவு 9.30 மணி வரையில் “சிறைக் கைதிகளை விடுவிப்பதில் சமநீதி கோரும் – கருத்தரங்கம்” நடைபெற்றது.
கருத்தரங்கில் மனித நீதிப் பாசறை மாநிலச் செயற்குழு உறுப்பினர் என்.முகமது ஷாஜகான் வரவேற்றார். மாநிலத் தலைவர் எம்.முகமது அலி ஜின்னா தலைமை தாங்கினார்.
மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன், தமிழக மனித உரிமைக் கழக வழக்கறிஞர் பாவேந்தன், தேசிய மனித உரிமை இயக்கங்களின் கூட்டமைப்பு (NCHRO) செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் நவ்பல், மாநில செயலர் எம்.ரகமத்துல்லா, மறுமலர்ச்சி முசுலீம் லீக் தலைவர் அ.ச.உமர் பாரூக், தலித் இசுலாமிய கிறித்துவ கூட்டமைப்பு பொதுச்செயலர் ஏ.கே.முகமது அனீபா, சமூக ஆர்வலர் கோவை தங்கப்பா, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா பொதுச்செயலர் இ.எம்.அப்துர் ரகுமான், (அவரது பேச்சை மக்கள் சிவில் உரிமைக் கழகத்தைச் சேர்ந்த சந்திரன் மொழிபெயர்த்தார்), அரசியல் கைதிகள் விடுதலைக்கான குழுவின் துணைத் தலைவர் பேராசிரியர் அ.மார்க்ஸ், சிறுபான்மை உதவி அறக்கட்டளை சட்ட ஆலோசகர் மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் ஆகியோர் உரையாற்றினர்.
மனித நீதிப் பாசறை மாவட்ட தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில் தீர்மானத்தை முன்மொழிந்தார். மாவட்ட செயலர் எம்.ஒய்.அப்பாஸ் நன்றி கூற கருத்தரங்கம் நிறைவு பெற்றது.
கருத்தரங்கில் ஏராளமான பெண்கள் உட்பட 2000-க்கும் மேற்பட்ட மூசுலீம்கள் கலந்துக் கொண்ட்து எழுச்சியாக இருந்தது.
இந்நிகழ்ச்சியை அரும்பாடுபட்டு ஒருங்கிணைத்த “மனித நீதிப் பாசறை” அமைப்பை அனைவரும் பாராட்ட வேண்டும்.
அகில இந்திய அளவில் உருவாக்கப்பட்டுள்ள ‘அரசியல் கைதிகள் விடுதலைக்கான குழு’ சார்பில் சென்னையில் நடந்த அதன் தொடக்க விழாவில் பாகுபாடின்றி ஆயுள் சிறைவாசிகள அனைவரையும் விடுவிக்க கோரிக்கை எழுப்பப்பட்டது இங்கு நினைவுகூரத்தக்கது.
சிறைவாசிகளின் உரிமைக் குரல் முசுலீம்களின் வாக்கு வங்கியை நம்பியிருக்கும் தி.மு.க. அரசுக்கு எட்டுமா?
புகைப்படங்கள்: மனித நீதிப் பாசறை, கோவை.
மேலும் புகைப்படங்கள் பார்க்க