Saturday, October 31, 2009

இலங்கையில் முகாமிற்குள் சிறைப்பட்டுள்ள 3 லட்சம் தமிழர்களை விடுவிக்க வலியுறுத்தி தீர்மானம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு அமைப்புக் குழுக் கூட்டம், 27.10.2009 அன்று மாலை 7 மணியளவில், கூட்டமைப்பு அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்குச் செயலாளர் கோ.சுகுமாரன் தலைமைத் தாங்கினார். கூட்டத்தில் சூ.சின்னப்பா, சு.சாமிநாதன், பா.மார்கண்டன், கி.கண்ணன், மு.பொன்னுசாமி, ச.கோவிந்தசாமி, சு.காளிதாஸ் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

கூட்டத்தில் கீழ்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:

1) இலங்கையில் போர் முடிவடைந்த பின்னரும் முள் வேளி முகாமிற்குள் 3 லட்சம் தமிழர்கள் எந்தவித அடிப்படை வசதியும் இல்லாமல் சிறை வைக்கப்பட்டுள்ளனர். மனித உரிமைக்கு எதிரான இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறோம். இந்திய - தமிழக அரசுகள் இலங்கை அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து சிறைப்பட்டுள்ள அப்பாவி தமிழர்களை விடுவிக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

2) கிராம பஞ்சாயத்துகளுக்கு அண்டை மாநிலங்களில் உள்ளது போல் அனைத்து அதிகாரங்களையும் உடனே வழங்கி, பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை முழுமையாக நடைமுறைபடுத்த ஆவன செய்ய புதுச்சேரி அரசை வற்புறுத்துகிறோம்.

3) தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் முக்கிய தலைவர்களின் பிறந்த நாளின் போது 7 ஆண்டு சிறை தண்டனை முடித்த ஆயுள் தண்டனை சிறைவாசிகள் விடுதலை செய்யபடுகின்றனர். அதே போல், வரும் டிசம்பர் 8, சோனியா காந்தி பிறந்த நாளன்று, புதுச்சேரி சிறைகளில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை முடித்த ஆயுள் தண்டனை சிறைவாசிகள் அனைவரையும் விடுதலை செய்ய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4) மனித உரிமைப் போராளி டாக்டர் கே.பாலகோபால், நக்சலைட் அமைப்பின் மூத்த தலைவர் புலவர் கலியபெருமாள் மனைவி வாளாம்பாள், தனித் தமிழ்க் கழகத்தின் காப்பாளர் தேசிகன் (எ) திருநாவுக்கரசு ஆகியோர் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Thursday, October 22, 2009

மேலவளவு வழக்கு: குற்றவாளிகள் 17 பேருக்கும் ஆயுள் தண்டனையை உறுதி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

மேலவளவு முருகேசன் மற்றும் 6 தலித்துக்கள் கொல்லப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு, குற்றவாளிகள் 17 பேரின் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது.

மதுரை, மேலூர் அருகேயுள்ள மேலவளவு பஞ்சாயத்துத் தலைவர் முருகேசன் உள்ளிட்ட ஆறு பேர் கடந்த 30.06.1996 அன்று ஆதிக்கச் சாதி வெறியர்களால் பட்டப் பகலில் கொடூரமாக வெட்டிக் கொலைச் செய்யப்பட்டனர். தலித் ஒருவர் தங்களுக்குப் பஞ்சாயத்துத் தலைவராக வருவதா என்ற ஆதிக்க எண்ணத்தில் திட்டமிட்டு இந்த படுகொலையை அரங்கேற்றினர் ஆதிக்கச் சாதியினர். தமிழகத்தையே உலுக்கிய இச்சம்பவத்தில் தொடர் போராட்டத்தின் விளைவாக குற்றவாளிகள் 17 பேருக்கு சேலம் அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது.

இத்தீர்ப்பை எதிர்த்து, குற்றாவாளிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி. சதாசிவம், என்.பால் வசந்தகுமார் ஆகியோர் கடந்த 19.04.2006 அன்று குற்றவாளிகளுக்கு அமர்வு நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை உறுதி செய்தனர். மேலும், வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி தண்டனை வழங்கப்பட்டதையும் உறுதி செய்தனர்.

குற்றவாளிகள் இத்தீர்ப்பையும் எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். உச்சநீதிமன்றத்தில் இவ்வழக்கின் விசாரணை நீதிபதிகள் வி.எஸ்.சிர்புக்கர் மற்றும் தீபக் வர்மா ஆகியோர் முன்னிலையில் நடந்தது. இவ்வழக்கில், தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் கனகராஜ் ஆஜரானார். வழக்கு விசாரணை கடந்த 23.09.2009 அன்று முடிவு பெற்று தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் இன்று காலை 10.30 மணிக்கு முதல் வழக்காக இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் வி.எஸ்.சிர்புக்கர் மற்றும் தீபக் வர்மா ஆகியோர் குற்றவாளிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதனால், சென்னை உயர்நீதிமன்றம் குற்றவாளிகள் 17 பேருக்கும் வழங்கிய ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மனித உரிமையில் அக்கறையுடைய அனைவர் மத்தியிலும் இந்த தீர்ப்பு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. சாதி வெறிக்கு இந்த தீர்ப்பு சம்மட்டி அடிக் கொடுத்துள்ளது.

தொடக்கம் முதல் இந்த வழக்கில் சட்ட ரீதியாகவும், தொடர் இயக்கம் மூலம் பாதிக்கப்பட்ட தலித்துகளுக்கு நீதிக் கிடைக்க போராடிய வழக்கறிஞர் பொ.இரத்தினம் அவர்களையும், அவரோடு துணை நின்ற அனைவரையும் பாராட்ட வேண்டும். இந்த வழக்கில் அவருக்கு துணையாக இருந்து பங்களித்தமைக்கு நான் பெரிதும் மகிழ்கிறேன்.

இவ்வழக்கை வைத்து அரசியல் செய்த தலித் கட்சி, ஒரு கட்டத்தில் இவ்வழக்கு பற்றி எவ்வித அக்கறையும் செலுத்தாமல் போன நிலையிலும், வழக்கறிஞர் பொ.இரத்தினம் போன்றவர்கள் விடாது போராடி நீதியை நிலை நிறுத்தியதை மனதார பாராட்டுகிறேன்.

Friday, October 09, 2009

மனித உரிமைப் போராளி டாக்டர் கே.பாலகோபால் காலமானார் -இரங்கல்!

வாழ்நாள் முழுவதும் மனித உரிமைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட 'மனித உரிமைப் போராளி' டாக்டர் .கே.பாலகோபால் (வயது: 57) நேற்று (08.10.2009), ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு மனைவி (வசந்தாலஷ்மி), ஒரு மகன் (பிரகதா) உள்ளனர். நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஈடு செய்ய முடியாத இழப்பு இது. மனித உரிமைத் தளத்தில் போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு அவர் ஒரு சிறந்த வழிகாட்டி.

ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டத்தில் பிறந்த பாலகோபால், கணிதத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.வாராங்கலிலுள்ள கக்காடியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றிவர். நக்சல்பாரி அரசியல் மீது ஏற்பட்ட ஈர்ப்புக் காரணமாக அவர் தன் வேலையை உதறிவிட்டு, மனித உரிமைக் களத்தில் இறங்கியவர்.

காவல் மரணங்கள், போலி மோதல், மரண தணடனை ஒழிப்பு ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்திப் போராடியவர். 'ஆந்திரபிரதேச சிவில் உரிமைக் குழு' என்ற அமைப்பில் பணியாற்றியவர். நக்சலைட் அமைப்புடன் முரண்பாடு ஏற்பட்டு, தனியாக 'மனித உரிமை அமைப்பு' நிறுவி செயல்பட்டவர்.

80-களில் ஆந்திர போலீசார் முன்னின்று நடத்திய 'பிரஜா பந்து' என்று அமைப்பினரால் கடத்தப்பட்டவர். இவரைக் கடத்தி வைத்துக் கொண்டு நக்சலைட் அமைப்பினர் பிடியில் இருந்த இரண்டு போலீசாரை விடுவிக்க 'பிரஜா பந்து' அமைப்பினர் கோரிக்கை வைத்தனர். பின்னர் நக்சலைட்கள் இரண்டு போலீசாரையும் விடுவித்த பின்னர் விடுவிக்கப்பட்டவர்.

போலி மோதல் குறித்து ஆந்திர உயர்நீதிமன்றத்தில் வாதாடி, போலி மோதல் நடந்தால் இந்திய தண்டனைச் சட்டம் 302 பிரிவின்கீழ் போலீசார் மீது வழக்குப் பதிய வேண்டும் என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை பெற்றுத் தந்தவர். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கறிஞராக ஆந்திர உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி வந்தவர்.

தலை சிறந்த எழுத்தாளர். தொடர்ந்து EPW போன்ற இதழ்களில் எழுதி வந்தவர். அவரது எழுத்தில் நேர்மையும், கறாரான பார்வையும் வெளிப்படும். சில ஆண்டுகளுக்கு முன் அவரை நேர்காணல் கண்டது நெகிழ்வான அனுபவம்.

1992 முதல் அவரோடு நான் நெருக்கமான உறவுக் கொண்டவன். 1996-இல் போலீசாரின் அச்சுறுத்தல் நிறைந்த சூழலில் அந்திராவின் நக்சலைட்கள் ஆதிக்கம் நிறைந்த நான்கு மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, போலி மோதல் குறித்து ஆய்வு மேற்கொண்டது மறக்க முடியாதது. 1998-இல் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 26 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்ட போது, அதை எதிர்த்து முதலில் குரல் கொடுத்தவர்.

ஒரிசா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் கிறித்துவர்கள் மீது நடந்த தாக்குதல் குறித்த உண்மை அறியும் குழுவில் இடம்பெற்று அவ்ரோடு பணியாற்றினேன். அதுதான் அவரை கடைசியாக பார்த்தது. கடந்த ஆகஸ்ட் 7-ந் தேதி முஸ்லீம் இடஒதுக்கீடு குறித்து அவரிடம் விரிவாக தொலைபேசியில் உரையாடியதுதான் கடைசி பேச்சு.

அவரது உடல் இன்று (09.10.2009) மாலை 4 மணிக்கு அடக்கம் செய்யப்படுகிறது. அவரது இறப்பிற்கு இந்தியா முழுவதும் உள்ள மனித உரிமை அமைப்பினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல். இன்னும் விரிவாக பாலகோபால் பற்றி எழுத உள்ளேன். இந்தப் பதிவையும் கூட அழுகையை அடக்கிக் கொண்டுதான் எழுதினேன்.

பழங்குடி இருளர் தாக்கப்பட்ட வழக்கு: குற்றவாளிகளை விடுவிக்க காரணமாக இருந்த அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பிரபா.கல்விமணி (கல்யாணி) ஆகியோர் 08.10.2009, காலை 11 மணிக்கு, புதுச்சேரி செய்தியாளர் மன்றத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறியதாவது:

பழங்குடி இருளர் ஒருவரை கடத்திச் சென்று தாக்கிய வழக்கில், எஸ்.சி. எஸ்.டி வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட குற்றவாளியை விடுவிக்க காரணமாக இருந்த மத்திய இணை அமைச்சர் வே.நாராயணசாமி, ஏம்பலம் எம்.எல்.ஏ. ஆர்.ராஜாராமன் மற்றும் கண்டமங்கலம் எம்.எல்.ஏ. புஷ்பராஜ் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி, அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன்சிங், தமிழக முதல்வர் கருணாநிதி ஆகியோருக்கு மனு அனுப்பியுள்ளோம்.

தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் பழங்குடி இருளர் வகுப்பைச் சேர்ந்தவர்களிடம் முன்பணமாக ஒரு தொகை கொடுத்துவிட்டு, செங்கல் சூளைகளில் அவர்களை கொத்தடிமைகளாக வைத்து வேலை வாங்குவது வழக்கம். விழுப்புரம் மாவட்டம் ரெட்டணை கிராமத்தைச் சேர்ந்த பழங்குடி இருளர் வகுப்பைச் சேர்ந்த ஏழுமலை மற்றும் அவரது மனைவி சகுந்தலா ஆகியோர் புதுச்சேரி கரிக்கலாம்பாக்கத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவரின் செங்கல் சூளையில் ரூபாய் 36 ஆயிரம் முன் பணம் பெற்றுக் கொண்டு கொத்தடிமையாக வேலைப் பார்த்து வந்தனர். அங்கு மேற்சொன்ன வெங்கடேஷ் இருவரையும் அடித்து துன்புறுத்தி உள்ளார். இதனால், இருவரும் செங்கல் சூளையில் இருந்து வெளியேறி சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளனர்.

இந்நிலையில், மேற்சொன்ன வெங்கடேஷ் இந்த இருவரையும் தேடி அவர்களது சொந்த ஊரான ரெட்டணைக்கு இரண்டு முறை சென்றுள்ளார். அவர்கள் அங்கு இல்லாத காரணத்தால் கடந்த 24.09.2009 அன்று மேற்சொன்ன வெங்கடேஷ் மற்றும் அவரது அடியாட்கள் மூன்று பேர், விக்கிரவாண்டி அருகேயுள்ள தக்காமேடு இருளர் குடியிருப்பில் உள்ள அவர்களது மகளின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு ஏழுமலை மற்றும் சகுந்தலா ஆகியோரின் மகள் தனம் (வயது: 25) மற்றும் அவரது கணவர் விஜி (வயது: 28) ஆகியோர் இருந்துள்ளனர்.

அப்போது அங்கிருந்த தனத்திடம் ‘எங்கே உன் அப்பா, அம்மா’ என்று கேட்டு விசாரித்துள்ளனர். அதற்கு தனம் ‘எங்கள் அப்பா, அம்மா செங்கல் சூளையில் வேலை செய்ய வெளியூர் சென்றுள்ளனர்’ என்று பதில் கூறியுள்ளார். அப்போது மேற்சொன்ன வெங்கடேஷ் மற்றும் அவரது அடியாட்கள் மூவரும் தனத்தின் கணவர் விஜியை கடுமையாக அடித்து உதைத்து வலுக்கட்டாயமாக தாங்கள் கொண்டு வந்த காரில் ஏற்றிக் கடத்திச் சென்றுள்ளனர். அதைத் தடுக்கச் சென்ற தனத்தையும் தாக்கியுள்ளனர்.

பின்னர் அவரை கரிக்கலாம்பாக்கத்திலுள்ள ஒரு பழைய வீட்டில் அடைத்து வைத்துள்ளனர். பின்னர், தனம் தன் கணவர் செல் போனிற்குப் பல முறை தொடர்புக் கொண்டு கேட்டதற்கு ‘உன் அப்பா பெற்ற பணத்தைக் கொடுத்துவிட்டு உன் கணவரை அழைத்துச் செல்’ என்று வெங்கடேஷ் கூறியுள்ளார்.

இதுகுறித்து, தனம், கடத்தப்பட்ட தன் கணவரை மீட்கக் கோரியும், கடத்தல் குற்றத்தில் ஈடுபட்ட மேற்சொன்ன வெங்கடேஷ் மற்றும் அவரது அடியாட்கள் மூவர் மீதும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 1989-ன் கீழ் நடவடிக்கை எடுக்கும்படியும் விக்கிரவாண்டி காவல்நிலையத்தில் 25.09.2009 அன்று பிற்பகல் தன் உறவினர்களோடு சென்று புகார் அளித்துள்ளார். புகாரைப் பெற்றுக் கொண்ட விக்கிரவாண்டி போலீசார் புகார் மனு ஏற்புச் சான்றிதழ் வழங்கியுள்ளனர். பின்னர் அங்குப் பணியில் இருந்த விக்கிரவாண்டி காவல்நிலைய எஸ்.ஐ. ராஜாராம் கடத்தலில் ஈடுபட்ட வெங்கடேசை தொடர்புக் கொண்டுப் பேசியுள்ளார். அதன் பின்னர், அன்றைய தினம் மாலை 7 மணியளவில் மேற்சொன்ன வெங்கடேஷ் கடத்தப்பட்ட விஜியுடன் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார். பிறகு எஸ்.ஐ. ராஜாராம் புகார் அளித்த தனம் மற்றும் அவரது உறவினர்களை மறுநாள் காலை வந்து முதல் தகவல் அறிக்கை பெற்றுக் கொள்ளும்படி கூறியுள்ளார்.

அதன் பின்னர், மறுநாள் (26.09.2009) காலை மேற்சொன்ன தனத்தின் குடியிருப்புக்கு அருகிலுள்ள ரைஸ் மில் உரிமையாளரும், அதிமுக பிரமுகர்களுமான ரமேஷ், சேகர் ஆகியோர் புகாரை வாபஸ் வாங்கும்படி மிரட்டியுள்ளனர். பிறகு தனம் மற்றும் அவர்களது உறவினர்கள் விக்கிரவாண்டி காவல்நிலையம் சென்று முதல் தகவல் அறிக்கை கேட்டுள்ளனர். அப்போது, பணியிலிருந்த எஸ்.ஐ. ராஜாராம் ‘உங்கள் புகாரை டி.எஸ்.பி-க்கு அனுப்பி வைத்துவிட்டோம். செங்கல் சூளை உரிமையாளரையும் டி.எஸ்.பி.யிடம் அனுப்பி வைத்துள்ளோம். அங்கு சென்று பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், தன் கணவரை கடத்தியவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி தமிழக உள்துறை செயலர், டி.ஜி.பி. மற்றும் விழுப்புரம் மாவட்ட எஸ்.பி ஆகியோருக்கு மேற்சொன்ன தனம் விரிவான புகார் மனு ஒன்றை கடந்த 26.09.2009 அன்று அனுப்பி வைத்துள்ளார்.

இதனிடையே, விக்கிரவாண்டி போலீசார் மேற்சொன்ன தனம் அளித்த புகார் மீது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர். (FIR No. 425/09 U/s 352, 363 IPC r/w 3 (I) (X) SC ST (Prevention of Atrocities) Act). ஆனால், காவல்நிலையத்தில் சரணடைந்த குற்றாவாளி வெங்கடேஷ் மற்றும் அவரது அடியாள் ஒருவரையும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறைக்கு அனுப்புவதற்குப் பதிலாக, குற்றவாளிகளைக் காவல்நிலையத்தில் இருந்து விடுவித்துள்ளனர். வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி வழக்குப் போட்டால், குற்றவாளிகள் முன் ஜாமீன் பெற முடியாது. இந்த சட்டப் பிரிவுகள் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து விசாரித்ததில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மத்திய இணை அமைச்சர் வே.நாராயணசாமி, தி.மு.க. ஏம்பலம் தொகுதி எம்.எல்.ஏ. ஆர்.ராஜாராமன் மற்றும் கண்டமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ. புஷ்பராஜ் ஆகியோர் இவ்வழக்கில் தலையிட்டு, மேற்சொன்ன குற்றவாளிகள் சிறைக்கு செல்லாமல் இருக்க போலீசாருக்கு நிர்பந்தம் கொடுத்துள்ளது தெரிய வந்தது. இது எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி குற்றமாகும். இதுகுறித்து, விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி கடந்த 28.09.2009 அன்று விழுப்புரம் எஸ்.பி.யிடம் நாங்கள் இருவரும் புகார் மனு ஒன்றை அளித்துள்ளோம்.

மேலும், பழங்குடியின இருளர் வகுப்பை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்ட வழக்கில், அதாவது வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி பதியப்பட்ட வழக்கில் அரசியல்வாதிகள் தலையிட்டு குற்றவாளைகளை விடுவித்ததை வன்மையாக கண்டிக்கின்றோம். மேலும், இச்செயல் சட்டத்திற்குப் புறம்பானது என்பதோடு, பழங்குடியின மக்களின் உரிமையில் தேவையில்லாமல் தலையிட்டு அவர்களுக்கு அநீதி இழைப்பதாகும்.

இதற்கு காரணமான மத்திய இணை அமைச்சர் வே.நாராயணசாமி, ஏம்பலம் எம்.எல்.ஏ. ஆர்.ராஜாராமன் மற்றும் கண்டமங்கலம் எம்.எல்.ஏ. புஷ்பராஜ் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம். இதுகுறித்து, அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன்சிங், தமிழக முதல்வர் கருணாநிதி ஆகியோருக்கு கடந்த 06.10.2009 அன்று விரிவான மனு அனுப்பியுள்ளோம்.