Tuesday, July 17, 2007

“ஈழப் போர்ச் சூழல் ஜாதியை மறைத்திருக்கிறது; அழித்துவிடவில்லை’’ - ஈழக் கலைஞர் சி.ஜெய்சங்கர்

சந்திப்பு : இரா.முருகப்பன்.

சி.ஜெய்சங்கர்:மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழகத்தில் நாடகம் மற்றும் அரங்கத் துறையில், முதுநிலை விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். ''மூன்றாவது கண்'' என்கிற உள்ளூர் அறிவுச் செயற்பாட்டுக் குழுவினை வழிநடத்தி வருகிறார். 'மூன்றாவது கண்' என தமிழிலும்,'தேர்ட் ஐ' என ஆங்கிலத்திலும் இதழ்களை நடத்துகிறார். தமிழிலும், ஆங்கிலத்திலும் கவிதைகள் எழுதி வருகிறார். இவருடைய துணைவியார் வாசுகி ஓவியராக இருப்பதுடன், பெண்ணிலைவாதச் செயற்பாட்டாளராகவும் இயங்கி வருகிறார்.

1965 டிசம்பரில் யாழ்பாணம் கோண்டாவில் என்கிற கிராமத்தில், அரசு ஆயுர்வேத மருத்துவரான சிவஞானம்&யோகேஸ்வரி தம்பதியருக்கு ஜெய்சங்கர் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் மூன்று சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரர். இதில் இருவர் புலம்பெயர்ந்து வாழ்கிறார்கள். தொடக்கக் கல்வியை கிராம பாடசாலையிலும், உயர்கல்வியை யாழ் கல்லூரியிலும் முடித்தார்.

குழந்தை மா.சண்முகலிங்கம் அவர்களை தனது முதன்மைக் ஆசானாக கருதும் இவர், யாழ்பாணத்தில் இருக்கும்போது, நிலாந்தன், செல்வி, சிவரமணி, வைதேகி, மனோகரன், வாசுகி, அருந்ததி, அகிலன், சத்யன், வில்வரத்தினம், கருணாகரன், ராமேஸ்வரன், கோபிதாஸ், கண்ணதாசன் ஆகியோருடன் இணைந்து குழுவாக நாடகம் மற்றும் கலை இலக்கியச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார்.


அவர் ‘தலித்முரசுக்கு’ அளித்த சிறப்பு பேட்டி.

ஈழம் வடக்கு, கிழக்கு என இரு பிரதேசங்களாக உள்ளன. வடகில் யாழ்பாணமும், கிழக்கில் மட்டக்களப்பும் மிக முக்கியமான பகுதிகள். இவை இப்போது எப்படி இருக்கிறது?

உலகில் எல்லா நாடுகளிலும் காணப்படுவது போன்றே இலங்கையில் வாழ்கின்ற சிங்களர், தமிழர் இடையேயும் பிரதேச ரீதியான வேறுபாடுகளும், ஒருமைப்பாடுகளும் காணப்படுகின்றன. இலங்கையில் உள்ள வடக்கு, கிழக்கு தமிழ்ப்பிரதேசங்களுக்கு இடையேயும் ஒத்துபோகக் கூடியதும்; வித்தியாசப்படுவதுமான பண்பாட்டு அம்சங்கள் நிலவுகின்றன. இரண்டுக்குமிடையே மொழிரீதியான ஒரு பொதுத்தன்மை காணப்படுகின்ற அதே நேரம், பிராந்திய மொழிவழக்கில் வேறுபாடுகள் இருக்கவே செய்கின்றன. கிழக்கில் உள்ள மட்டகளப்பில் படுவான்கரை, எடுவான்கரை என்கிற இரு பகுதிகளுக்கும் இடையே வித்தியாசங்கள் காணமுடியும். அதே போல் யாழ்பாணத்தில் உள்ள வலிகாமம், தீவகம், வடமராட்சி, தென்மராட்சி பகுதிகளுக்குள்ளும் பண்பாட்டு வித்தியாசங்களை காணமுடியும். வடக்கு, கிழக்கின் பொதுத்தன்மை என்பது வித்தியாசங்களுடன் கூடியது. முக்கியமான அடிப்படையான வித்தியாசமாக இருப்பது சமூகப், பொருளாதார நிலைமைகள்தான்.

ஈழம் பற்றி சிந்திக்கும்போது, கிழக்குப் பகுதியில் குறிப்பாக மட்டகளப்பிலுள்ள படுவான்கரை என்பது முக்கியமான, பாரம்பரியமான, சமூக பண்பாட்டு மையமாக விளங்கி வருகிறது. ஆனால் கெடுவாய்ப்பாக இந்த படுவான்கரை இன்று மக்கள் புலம் பெயர்ந்த பிரதேசமாக இருந்து வருகிறது. அங்கிருந்த மக்கள் இடம்பெயர்ந்து எழுவான்கரை என்ற இடத்தில் புலம்பெயர்வு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். படுவான்கரை ஏன் முக்கியத்துவம் பெறுகிறது என்று சொன்னால் பாரம்பரியமான உள்ளூர் அறிவுத்திறன் களஞ்சியமாக இருந்துகொண்டிருக்கிறது. நாங்கள் பலமான சமூகமாக வாழ்வதற்கான ஆதாரங்கள் பல அங்கே காணப்படுகின்றன. இன்றைய யுத்தமும், அதனால் அந்தப் பகுதியில் ஏற்பட்டிருக்கின்ற இடம்பெயர்வும், குறிப்பாக தமிழ்மக்களுக்கு பெரும் பாதிப்பாக இருக்கின்றது. இந்த இடப்பெயர்வு அந்த மக்களை பாரம்பரிய அறிவுசார் முறையிலிருந்து அன்னியப் படுத்தியிருக்கிறது; அப்புறப்படுத்தியிருக்கிறது. உள்ளூர் அறிவுத்திறனை கொண்ட ஒரு சமூக பொருளாதார கட்டமைப்பு நோக்கில் பார்க்கும்போது, இதை ஒரு மிக மோசமான இழப்பாக பார்க்கிறோம்.

அரசியல் மொழியில் சொன்னால் வடதமிழீழம், தென் தமிழீழம் என்பது, சமூக- பண்பாட்டு-பொருளாதார ரீதியாக பொதுத்தன்மைகளும் வித்தியாசங்களும் கொண்டவை. அதே நேரம், எல்லா சமூகங்களுக்கும் உள்ளது போல் அந்தப் பிராந்தியங்களில், பிராந்தியங்களுக்கிடையில் காணப்படுகின்ற ஆதிக்க நிலைமையை கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது அவசியத் தேவையாக இருக்கிறது.

ஈழத்தில் முகாம்களிலும், வெளிநாடுகளில் அகதிகளாகவும் உள்ள தமிழர்களின் பிரச்சினைகளை எப்படி பார்க்கிறீர்கள்?

தொடர்ச்சியான போரும், இடப்பெயர்வும் எம்மக்களின் வாழ்விடங்களை, வாழ்வாதரங்களை எல்லாம் தொலைத்துவிட்டு ஒரு அன்னியப்படுத்தப்பட்ட நிலையில் தங்கி வாழ்கின்ற சூழலை ஏற்படுத்தியிருக்கின்றது. இது எங்களை மிக ஆபத்தான ஒரு சமூக, பொருளாதார நிலைக்கு இட்டுச்செல்கிறது. மேலும், தாராளமயம் மிகத்தீவிரமாக நடைமுறைபடுத்தப்படுவதற்கு, உள்ளூர் முரண்பாடும், அதன் காரணமாக எழுந்த போரும் பயன்படுத்தப்படுகிறது என்றுதான் சொல்லவேண்டும். மேலும் இந்த இடப்பெயர்வு என்பது, உற்பத்தி சக்தியாக இருந்த எங்களை தங்கிவாழும் ஒரு சமூகமாக மாற்றி, குறைந்த ஊதியத் தொழிலாளர்களாக மாற்றும் நிலைமைளையும், வெறும் நுகர்வு சக்திகளாக வாழுகின்ற நிலைகளையுமே ஏற்படுத்தியிருக்கிறது என்பதை விளங்கிக் கொள்ளவேண்டும்.

இன்றைய நிலையில் பெண்கள் எத்தைகய பிரச்சனைகளை சந்திக்கிறார்கள்?

வரலாற்றுக்காலம் முழுக்க, உலகில் போரின் முதல் பலி உண்மை என்று சொல்வார்கள். அதற்கு சமமாக நாங்கள் சொல்ல வேண்டியது. போரில் நேரிடையாகவும், மறைமுகமாகவும் மிக்க உக்கிரமமாக பாதிக்கப்படுவர்கள் பெண்கள்தான். குடும்பச்சுமையைத் தாங்கி வீட்டிற்குள் குடும்பத்தை நடத்திக்கொண்டிருந்த பெண்கள், யுத்தம் காரணமாக இடப்பெயர்வு நிகழும் நிலையில், அவர்கள் அம்பலத்தில் வெட்டவெளியில் குடும்பத்தை நடத்த வேண்டிய சூழலுக்குள் தள்ளப்படுகின்றனர். இது ஒன்றே, இந்தப் போரில் பெண்கள் நிலையை புரிந்துகொள்ள பொருத்தமாக இருக்கும். அம்பலத்தில் குடும்பத்தை நடதுதுவது என்பது பெண்களுக்கு எத்தைகயதொரு மோசமான சூழல் என்பது சிந்திக்க தெரிந்த எவருக்கும் விளங்கும். போர் நடைபெறும்போது பெண்கள் வன்முறைக்கு உள்ளாக்கப்படுவது ஒரு வெளிப்படையான உரையாடலுக்குரியதாகவும், எதிர்ப்புக்குரியதாகவும் இருப்பது என்பதை காணமுடிகிறது. இதுமட்டுமில்லாமல் கவனிக்கப்பட வேண்டிய இன்னொரு விஷயமும் உள்ளது.

போர்சார்ந்த நடவடிக்கையால் பெண்கள் வன்முறைக்கு உட்படுத்தப்படுவது முக்கியத்துவம் பெறுகின்ற அதே நேரம், சமூகத்தில் பெண்கள் அவர்கள் வாழ்கிற குடும்பத்துள் வன்முறைக்கு உட்படுத்தப்படுவது என்கிற விஷயம் பேசாப்பொருளாக அல்லது மறந்து போகிற விடயமாக ஆகியிருப்பது என்பது கவனத்தில் கொள்ளவேண்டும், அது குறித்து ஒரு உரையாடல் முன்னெடுக்கப்படவேண்டும் என்பதும் மிகவும் அவசியமாகும். இது பற்றிய சிந்தனைகளில் அடிப்படை மாற்றம் தேவை என்பது மிக முக்கியமாகும்.

ஒரு சமூக விடுதலை என்பது அனைத்துவகையான ஒடுக்குமுறைகளையும், வன்முறைகளையும் ஒன்றோடொன்று தொடர்புபடுத்தி எதிர்கொள்ள வேண்டிய செயற்பாடாகவே பார்க்கவேண்டும். ஒவ்வொன்றாக தனிதனியாக அல்லது ஒன்று முந்தியது, மற்றது பிந்தியது என்று பார்ப்பதென்பது பொருந்தாது. ஏனெனில்,இத்தகைய நிலைகள் என்பது சமூகத்தில் ஒன்றுடன் ஒன்று இணைந்ததாகவும், சிக்கல்கள் நிறைந்ததாகவும் காணப்படுகின்ற சூழலில்,சமூகங்களால் புறத்திருந்தும், அகத்திருந்தும் நிகழ்த்தபடுகின்ற வன்முறைகள் பற்றி ஒரே நேரத்தில், ஒரே தளத்தில் நாங்கள் எதிர்கொள்ளவேண்டியது என்பதுதான் யதார்த்தமானதும், இயல்பானதும், பொருத்தமானதும் என்பதை நாங்கள் சிந்தித்து செயல்படவேண்டியுள்ளது.

இந்த வகையில் ஈழத்தில் பெண்கள் அமைப்புகள் போரினால் ஏற்படும் வன்முறைகளை எதிர்கொன்டும்; குடும்ப சமூக வன்முறைகளை எதிர்கொண்டும்; சமூகத்தின் உள்ளிருந்தும், வெளியிருந்தும் தடைகளையும் சவால்களையும் கடந்து செயற்பட்டு வருவது சாதகமானதொரு நிலைமையாகும்.

சிறுவர்கள் அங்கு இயல்பாக இருக்க முடிகிறதா? அவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது?

போரின் எதிர்காலத்தை முன்னெடுப்பவர்களாக இந்த சிறுவர்களே எல்லோராலும் முன்னிறுத்தப்படுகிறார்கள். இதன் காரணமாக, ஆக்கப்பூர்வமான சக்திக்காக உள்வாங்கப்பட வேண்டிய சிறுவர்கள், போரின் அழிப்பு செயல்பாட்டு சக்தியாக உள்வாங்கப்பட்டு முன்வைக்கப்படுவதென்பதுதான் யதார்த்தமாக இருக்கிறது. வளர்ச்சி இல்லை என்பதற்கும் மேலாக அழிவு நடந்து கொண்டிருக்கின்றது என்பதை காண நேரிடுகிறது. இதனால் சிறுவர்களது, இளைஞர்களது உழைப்புச் சக்திகள் வீணடிக்கப்படுகிறது. இது இரட்டிப்பு பாதகமான நிலையாக காணப்படுகின்றது. சிறுவர்கள் காண்கின்ற இயல்பு வாழ்க்கை வன்முறை சார்ந்ததாக உள்ளது. எனவே அவர்களின் எதிர்கால வாழ்க்கை என்பதும் வன்முறை சார்ந்ததாகவே இருக்கும் என்பதற்கான சாத்தியப்பாடுகள்தான் காண்ப்படுகின்றன. இது மிகவும் ஆபத்தான நிலை.

ஏவுகனைத் தாக்குதல்கள், ராணுவ சுற்றிவளைப்புகள் என்ற சூழலில் வாழ்கிற சிறுவர்களுக்கு தங்களை ஒரு போராளிகளாக நினைத்துக்கொள்வதைத் தவிர வேறு எந்தத் தெரிவும் அவர்களுக்கு இல்லை என்பதை நாங்கள் மறுக்கமுடியாது. மேலும் இப்போதுள்ள சூழலில் நிலைமை என்னவெனில் வெறுங்கையுடன் சாதாரணமாக அவலமாகச் சாவதா அல்லது போராளியாக போரிட்டுச் சாவதா என்கிற இருவகையான சூழலுக்குள் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள சிறுவர்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இது ஒருபக்கம் என்றால்,தென்னிலங்கையின் அரசியல் நிறுவனங்கள், அதிகார மையங்கள் மத்தியில், சுற்றுலா மையங்களில் நடைபெறும் சிறுவர்களது பாலியல் தொழில் என்பது இணையதளங்களில் பிரசித்தமாயிருக்கின்ற நிலையில் அதிக கவனத்தில் கொள்ளப்படாமல் உள்ளது.

சிறுவர்கள் வடகிழக்கா அல்லது தெற்கா என்பது முக்கியமில்லை. இவர்களை வைத்து அரசியல் நடத்துகிறார்கள் என்பதுதான் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விஷயம். சிறுவர்கள் படையில் சேர்வதை தவிர்த்தல் என்பதில் நாங்கள் உண்மையில் அக்கறை உடையவர்களாக இருக்கிறோமா என்பதற்கு முதல் நிபந்தனையாக எந்தவித நிபந்தனையும் இன்றி யுத்தத்தை நிறுத்தவேண்டும். இதுதான் அடிப்படையான விடயம். அதைச் செய்வதற்கு நாம் எவருமே தயாரில்லாமல், பாதகமான நிலைமைகள் எல்லாவற்றையும் ஒவ்வொருவரும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் விடயத்தில் நாம் கவனமாய் இருக்கவேண்டும்.

போர்சூழல் காரணமாக ஈழத்தில் சாதிகள் ஒழிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதில் உண்மை இருக்கிறதா?

போர்ச்சூழல் காரணமாக சாதிய வன்கொடுமைகள் குறைந்திருக்கிறது என்றுவேண்டுமானால் கூறலாம். ஆனால் ஜாதி ஒழிந்துவிட்டதாகச் சொல்லமுடியாது. மறைந்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். உதாரணமாகக் கூறினால். ராணுவம் குண்டு வீசப்போகிறதென்றால் மக்கள் முதலில் போய் தஞ்சமடையும் இடம் அருகிலிருக்கின்ற கோயில்தான். உயிர்பிழைக்க ஒடி கோயிலில் தஞ்சம் புகும்போது கூட சாதிப்படி நிலை வெளிபடும். ஓடி தஞ்சமடையும் போது பார்ப்பனர்கள் கோயிலின் கர்ப்பகிரகத்திலும், ஊரில் முற்பட்ட முன்னேறிய சாதியினர் அதற்கடுத்த பிரகாரத்திலும் இருப்பார்கள். கோயிலின் வெளியே உள்ள மரத்தடி, சகடைகள் நிறுத்துகின்ற கொட்டகைகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் தஞ்சமடைவார்கள்.

இன்னொன்றையும் சொல்கிறேன். கூத்து குறித்து ஒரு அண்ணாவியிடம் பேசிக் கொண்டிருந்தேன். பறையறிவிப்போன் குறித்து அந்த பேச்சு நீண்டது. அரசருடைய செய்திகளையும்,உத்திரவுகளையும் நாட்டு மக்களுக்கு அறிவிக்கின்ற பணியை செய்கின்றவன் பறையறிவிப்போன். அரசன் வரவை அறிவிக்கும் கௌரவமான கட்டியகாரன் போல அரச செய்தியைச் சொல்லும் பறை அறைவோனும் கௌரமாகவே பணியாற்றுவது யதார்த்தமாக இருக்கும் என்றேன். அதற்கு அந்த அண்ணாவி, பறை அறைவோனை பாரம்பரியக் கூத்தில் உள்ளது போல் குடிகாரனாக, முடவனாக, அறிவில்லாதவனாக, கூடாத வார்த்தைகள் பேசி வருபவனாக அல்லாமல் கௌரவமான பாத்திரமாகக் கொண்டு வருவது பிரச்சினயில்லை. அது நல்லதுதான். ஆனால் அரசர் பிரதானிகளுடன் பறையறைவோன் கொலுவில் வர முடியாது. அதை ஏற்கமாட்டார்கள் என்றார். இப்படி ஒரு புதிய கருத்து எனக்கு அப்போதுதான் புரிந்தது. உரையாடல் களம் இருப்பதால்தான் இப்படி புதிது புதிதாய் புரியவும், உணரவும் முடிகிறது. பிறகு பேசினோம். கட்டாயம் நாம் அடுத்ததொரு கூத்தில் மன்னன் கொலு வரவில் பறையறிவிக்கும் பறையனை கட்டாயம் இடம் பெறச் செய்யும் வகையில் புதிய கூத்து எழுதப்பட வேண்டும். எனது சிற்றறிவுக்கு எட்டிய வகையில் இதுவரையில் அத்தகையதான கூத்துப் பற்றிக் கேள்விப்படவில்லை.

விடுதலைப் போராட்டத்தில் கலைவடிவங்களின் பங்கு எந்த அளவில் உள்ளது?


எங்களின் விடுதலைப் போராட்டத்தில் கலை வடிவங்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன. எல்லா கலைகளும் ஆக்கப்பூர்வமாக பயன்படுதப்படுகின்றது. குறிப்பாக விடுதலை இயக்கம் சார்ந்த கலைப்படைப்புகள் ஒரு வகையாகவும், விடுதலை இயக்கம் சாராத சமூக, மக்கள் சார்ந்து வாழ்ந்து கொண்டிருக்கின்ற கலைஞர்களது ஆக்கங்கள், படைப்புகள் ஒரு வகையாகவும் என இரு தளங்களில் நாங்கள் இயங்கிக்கொண்டிருக்கின்றோம். இதில் விடுதலை இயக்கங்களின் கலை படைப்புகள் அரசியல் பிரச்சார நோக்கில் பயன்படுத்தப்படுகிறது. இது இன்று மேலோங்கியுள்ளது.

கலைகளில் எவை பேசப்பட்டுள்ளன. எவை பேசப்படவில்லை என்பது பற்றி ஒரு மதிப்பீடு செய்கின்றபோது, எங்களுடைய அரசியல் சூழ்நிலையில் கலை வெளிப்பாடு எவ்வாறு நிகழ்ந்திருகிறது என்பதை விளங்கிக்கொள்ள முடியும். பிரச்சார நோக்கில் பார்க்கும்போது எல்லா கலைச்சாதனங்களுமே மிகவும் வலுவான முறையில் முன்னெடுக்கபட்டிருக்கிறது. நாடகம் என்று பார்த்தாலும் சரி, கூத்து என்று பார்த்தாலும் சரி, அரங்கு என்பது பிரச்சார நோக்கில் வீதிநாடகங்களாக, மேடைநாடகங்களாக பரவலாக மேடையேற்றப்பட்டிருக்கிறது. புலிகள் வீதிநாடகங்களை வலுவான கலையாக முன்னெடுத்திருக்கிறார்கள். அதற்கு மேலாக மேடை நாடகம் என்பதிலும் அவர்கள் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

இந்தக் கலைவடிவங்களில் எங்களுடைய பாரம்பரிய கலையம்சங்கள் பல்வேறு வழிவகைகளில் எடுத்து கையாளப்பட்டிருக்கிறது. அதில் சிற்பம், ஓவியம், கவிதை, ஆடல்கள், வாத்தியங்கள், பாடல்கள், நாடகங்கள் என எல்லா வடிவங்களும் அடங்கியுள்ளன். மக்கள் மத்தியில் தொடர்பு கொள்வதற்கு ஒரு வலுவான வழிமுறையாக இவை இனங்காணப்பட்டுள்ளன.

மூன்றாவது கண் என்கிற உள்ளூர் அறிவுத் திறன் செயற்பாட்டுக்குழுவின் மூலம் எத்தகைய பணிகளை செய்து வருகிறீர்கள்?

எமது சமூகத்தில் மக்கள் தமக்கு வசதியான, வாய்ப்புள்ள இடங்களான கோயில், வீதி, தெருச்சந்திப்பு, வீட்டு முற்றம், மரநிழல்களில் கூடிக்கதைகும் மரபு இருந்தது. இந்தச் சமயங்களில் பல்வேறு செய்திகளையும், சம்பவங்களையும், தலைப்புகளையும் அதன் சாதக பாதகங்களுடன் அலசி, ஆராயும் நிலை இருந்தது. ஆனால் இன்று இனப்பிரச்சனையும், ராணுவ நடவடிக்கைகளும் கூர்மையடைந்துள்ள நிலையில் பொதுமக்களால் கூடிக்கதைக்கும் நிலை இல்லாமல் போனது.

இப்போது வீடுகளில் முடங்கியுள்ள மக்களை தொலைக்காட்சிகள் மூளைச்சலவை செய்வதில் பெரும்பங்காற்றி வருகின்றன. தமிழ்நாட்டு திரைப்படங்கள், தொடர் நாடகங்கள் புற்றீசல்போல வீடுகளுக்குள் நுழைந்துவிட்டன. இது மக்களுக்கு இன்றுள்ள யதார்த்தின் குரூரத்தை விளங்கி கொள்ளாவிட்டாலும்; அதிலிருந்து தப்பித்துக்கொள்வதற்கான வழியாகவும் அமைந்து காணப்படுகிறது. இத்தகைய மாய வாழ்கையில் இருந்து எம்மை விடுவித்துக்கொண்டு, எங்களை நாங்கள் புரிந்துகொண்டு, எங்களுக்கான ஒரு சமூகத்தை உருவாக்குவதை நோக்கி செயல்படவும், சிந்திப்பதுமே மூன்றாவது கண் நோக்கம்.

இதற்காக அறிவுத்தளதில் நின்று பல்வேறு தளங்களில் விவாதிப்பது முக்கியமாகிறது. குறிப்பாகப் பிரதான ஒட்ட அச்சு மற்றும் இலத்திரணியல் தொடர்பு ஊடகங்கள் இந்த வேலையை செய்வதாக சொல்கிறதே தவிர செய்வதில்லை. தொடர்பு சாதனங்களான ஊடகங்கள் அனைத்தும், ஒன்று அதிகாரத்திற்கு சேவகம் செய்கின்றன. அல்லது வியாபாரத்தை மையமாகக் கொண்டு அதிகாரத்திற்கு கட்டுபட்டு இயங்குகின்றன.

தொடர்புசாதனங்களின் ஆக்கிரமிப்பு வலைபின்னலுக்கு மாற்றாக பொதுமக்கள் மத்தியில் விவாதங்களை தூண்டவல்ல அரங்குகளின் தேவை அவசியமாகிறது. அப்பொழுதுதான் செய்திகளுக்குப் பின்னால் உள்ள செய்திகளை விளங்கிக் கொள்ளவும், அது பற்றி விவாதிக்கவும் முடியும். எமக்குப் பொருத்தமான மக்கள் மையப்பட்ட விவாதக் களங்களை அரங்க அறிவுடனும், பாரம்பரிய உரையாடல் களங்களின் அனுபவத்துடனும், அறிவுத்தளத்தில் நிகழ்த்துவது முக்கியம் என்கிற உரத்த சிந்தனையும் செயற்பாடும் இன்றைய அவசியத் தேவையாக உள்ளன. இதற்கான அரங்குகளைத்தான் மூன்றாவது கண் முன்னெடுத்து வருகின்றது.

மேலும் இன்றைய கல்விமுறையில் மாற்றங்கள் செய்யவேண்டிய அவசியத்தேவையிலும் உள்ளோம். தொழிற்சந்தை நிலவரத்திற்கேற்ப மாணவர்களை உற்பத்தி செய்கின்றோம் என்று கல்விமான்களும், அரசியல்வாதிகளும் நிர்வாகிகளும் சொல்கிறார்கள். அதில் பெருமை கொள்கிறார்கள். ஆனால் மாணவர்கள் எப்படி உருவாக்கப்படுகிறார்கள் என்பதற்கு ஒரு உதாராணம் சொல்கிறேன். பல்கலைகழக உயர்கல்விக்கு தெரிவான புதுமுக மாணவர்களுக்குக் கற்பிக்கும் வாய்ப்புகள் எனக்கு கிடைத்தன. அப்போது அந்த மாணவர்களிடம், கண்டுபிடிப்புகள்; கண்டுபிடிப்பாளர்களாக வெள்ளையர்கள் பெயர்கள் மட்டுமே பாடப்புத்தகங்களில் காணப்படுகின்றன. ஏன் நம்மவர்கள் காணப்படவில்லை என்ற கேள்வியை எழுப்பினேன். அதற்கு மாணவர்களிடமிருந்து ; அவர்கள்தான் கண்டுபிடிப்பார்கள், கண்டுபிடிக்கக் கூடியவர்கள், அவர்கள் கண்டுபிடிக்கட்டும். நாங்கள் பயன்படுத்திக் கொள்வோம்; அவர்களுக்குதான் எல்லா வசதிகளும் உள்ளன எங்களுக்கு வசதி வாய்ப்புகள் இல்லை மேலும் நாங்கள் சோம்பேறிகள் என்கிற பதில்கள் கிடைத்தன. கல்வித்துறையில் கற்பிக்கும் பணியை செய்துவருகின்ற நானே ஒரு கணம் அதிர்ந்து போனேன். அவர்கள்தான் கண்டுபிடிப்பார்கள், நாங்கள் சோம்பேறிகள், நாங்கள் பயன்படுத்துவோம் என்கிற இந்த பதில்களை கூறத்தான், மாணவர்களுக்கு இத்தனை ஆண்டுகளாக நாம் சொல்லித் தந்திருக்கின்றோமா?

காலனித்துவ கல்விமுறையால் இன்றைய யதார்த்தச் சூழலில் இருந்து அந்நியப்படுத்தப் பட்டுள்ளோம் இச்சூழலை உணரவைத்து அதிலிருந்து மீள வேண்டும் என்கிற உணர்வை உருவாக்கி கற்பனை, சிந்தனை, படைப்பாற்றல், செயற்றிறனுள்ள சமூகத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக கல்விசார்ந்தும் சில செயல்பாடுகளுக்கு மூன்றாவது கண் முன்னெடுத்து வருகின்றது.

மக்களை ஒன்று சேர்க்கவும், தங்களுக்குள் உரையாடிகொள்ளவும் தங்களது தேவைகளை தாங்களே அறிந்துகொள்ளவும், அவைகளை பூர்த்தி செய்துகொள்ளும் வழிவகைகளை தீர்மானித்துக்கொள்ளவும், தங்களது ஆற்றல்களை அடையாளம் காணவும், வெளிபடுத்திக் கொண்டாடவும், தாழ்வுச்சிக்கல்களில் இருந்து விடுபட்டுக்கொள்ளவும், படைப்பாற்றல்கள் வெளிபடவும் கூடியக் கல்வியை, சமூகத்தை, பண்பாட்டை அறிவுத்தளத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான் ‘மூன்றாவது கண்’ணின் நோக்கம்.

(தொடரும்)

நன்றி: தலித் முரசு ஜூலை 2007

Sunday, July 15, 2007

ஜூலை 21: சென்னையில் போலி மோதல் படுகொலைகளை எதிர்த்து கருத்தரங்கம்

போலி மோதல் கொலை எதிர்ப்புக் கூட்டியக்கம் சார்பில் வரும் 21-07-2007 சனியன்று, சென்னையில், போலி மோதல் படுகொலைகளை எதிர்த்து கருத்தரங்கம் நடைபெற உள்ளது.

இதற்கென வெளியிடப்பட்டுள்ள துண்டறிக்கை:

குஜராத்தில் வன்சாரா, ராஜ்குமார் பாண்டியன் போன்ற அய்.பி.எஸ். அதிகாரிகளே முன்நின்று நடத்திய போலி மோதல் படுகொலைகள் அம்பலப்பட்டுப் போனதை ஒட்டி இன்று இந்தியா முழுவதிலும் காவல்துறையின் இந்தச் சட்ட விரோதக் கொடூரங்கள் குறித்த ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. சென்ற ஜூன் 26, அன்று மும்பையில் 'மனித உரிமை அமைப்புகளின் தேசியக் கூட்டமைப்பின்' சார்பாக போலி மோதல்களை எதிர்த்து மாநாடொன்றும் நடத்தப்பட்டுள்ளது.

'மோதல்' என்ற பெயரில் காவல்துறையினர் படுகொலைகளை நிகழ்த்துவதில் முன்னிற்கும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. பயங்கரவாதிகள், நக்சல்பாரிகள், தாதாக்கள் எனக் காரணம் சொல்லி வெளிப்படையாக குடிமக்களைக் கொன்று குவிக்கும் இந்தப் பண்பாடு 1975-77 நெருக்கடி நிலை காலத்தில் அதிகமாகியது. நெருக்கடி நிலையை ஒட்டி மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏற்பட்ட ஆரோக்கியமான விவாதங்கள், ஏற்பட்டிருந்த ஜனநாயக விழிப்புணர்வு ஆகியவற்றால் சற்றே அடக்கம் காட்டிய காவல்துறை, காலிஸ்தான் மற்றும் காஷ்மீர் போராட்டங்களைக் காரணம் காட்டி மீண்டும் படுகொலைகளில் இறங்கியது. அரசியல் கட்சிகளின் பூரணமான ஆதரவுடன் இவை அரங்கேறின.

சட்டம் ஒழுங்கு, தேச ஒற்றுமை, உள்நாட்டுப் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு என்றெல்லாம் சொல்லாடி இங்கே ஒரு போலிஸ் ஆட்சி, இராணுவ ஆட்சி உருவாக்கப்பட்டது. இந்திரா காந்தி படுகொலைக்குப் பின் குடிமக்கள் அனைவரும் சந்தேகத்திற்குரியவர்களாக அணுகப்பட்டனர். தடா', 'பொடா' முதலான ஆள்தூக்கி அடக்குமுறைச் சட்டங்கள், 'இஸட்' பாதுகாப்பு, கறுப்புப் பூனை என்பதெல்லாம் நிர்வாகத் திறனின் அடையாளமாகவும் பெருமைக்குரிய அரசியல் அந்தஸ்தாகவும் ஆக்கப்பட்டன.

போராட்டப் பகுதிகளின் பாதுகாப்பைக் காரணம் காட்டி குடிமக்கள் யாரையும் எந்த நேரத்திலும் இழுத்துச் செல்லவும், காணாமற் போனவர்களாக அறிவிக்கவும், படுகொலை செய்யவும் அதிகாரம் படைத்ததாக அரசும், காவல்துறையும் ஆயின. நெருக்கடி நிலையில் குடிமக்களுக்கு உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் உரிமை கிடையாது என அரசு கூறியதையும், அதை நீதிமன்றங்கள் ஏற்றுக் கொண்டதையும் நாம் மறந்துவிட இயலாது.

1996ஆம் ஆண்டு மத்திய புலனாய்வுத் துறை (CBI) உச்சநீதி மன்றத்திற்கு அளித்த அறிக்கை ஒன்றின்படி 1984-95 காலகட்டத்தில் அமிர்தசரஸ் நகரில் மட்டும் சட்ட விரோதமாக 2097 உடல்கள் எரிக்கப்பட்டன. அங்கு மட்டுமல்ல, பஞ்சாப் மாநிலம் முழுவதும் இது நடந்துள்ளது என்பதை மனித உரிமை அமைப்புகள் வெளிக் கொணர்ந்தன. காணாமற் போனதாக அறிவிக்கப்பட்டவர்களில் சுமார் 60 சதம் பேர் இவ்வாறு கொல்லப்பட்டார்கள்.

கைது செய்து கொண்டு போனது மட்டுமல்ல, அவர்களது சொத்துக்களையும் போலிசார் சூறையாடியிருந்தனர். என்கவுன்டர் செய்து விடுவோம் என மிரட்டி குடும்பத்தாரிடம் பெருந்தொகைகள் பறிக்கப்பட்டன. இன்று மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள அப்சல் குரு முதல் மேலப்பாளையம் முசுலிம்கள் வரை 'என்கவுன்டர்', 'பொடா' மிரட்டல்களுக்குப் பயந்து கொஞ்ச நஞ்ச சொத்துக்களையும் விற்றழித்து காவல்துறைக்கு காணிக்கையாக்கியவர்கள் ஏராளம்.

மேற்குறிப்பிட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் பொறுப்பை தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் தட்டிக் கழித்தது. இந்திரா ஜெய்சிங், இராம் நாராயண்குமார் போன்ற புகழ்பெற்ற மனித உரிமைப் போராளிகள் சுமார் பத்தாண்டு காலம் போராடியும் குற்றம் செய்த காவல்துறையினர் இன்றுவரை தண்டிக்கப் படவில்லை.

ஆந்திரம், தமிழ்நாடு போன்ற இடங்களில் நக்சல்பாரிகள் எனப்படும் மார்க்சிய-லெனினிய-மாவோயிச இயக்கங்களைச் சேர்ந்தோரை ஒழிப்பதற்கு 'என்கவுன்டர்' முறையை அறிமுகப்படுத்தின மாநில அரசுகள். எண்பதுகளில் தேவாரத்தின் தலைமையில் தர்மபுரி, வட ஆற்காடு மாவட்டங்களில் இருபதுக்கும் மேற்பட்ட நக்சல்பாரி இயக்க இளைஞர்கள் இவ்வாறு கொல்லப்பட்டனர்.

இன்று உள்நாட்டுப் பாதுகாப்புக்கு மிகப்பெரிய ஆபத்தாக நக்சல்பாரிகள் சுட்டிக்காட்டப்படுகின்றனர். நக்சல்பாரிகள் செயல்படும் மாநிலங்கள் அனைத்திலும் அரசாங்கங்களே முன்னின்று சட்ட விரோதமான கொலைப் படைகளை நடத்துகின்றன. சட்டிஸ்கரில் இதற்குப் பெயர் 'சல்வா ஜூடும்', ஆந்திராவில் 'நில்லமல்லா நாகம்', 'நிர்ஸா நாகம்' எனப் பல பெயர்களில் படைகள்.

'பாதுகாப்பு தொடர்பான செலவு' என்கிற பெயரில் அரசாங்க நிதியிலிருந்து இவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. 'ஆந்திர மாதிரியைப் பின்பற்றி பிற மாநிலங்களிலும் நக்சலிசத்தை ஒழிப்போம்' எனப் பிரதமரே வெளிப்படையாகப் பேசுகிறார். சட்ட ஒழுங்கை நலைநாட்டுவது என்கிற பெயரில் அரசே சட்ட விரோதக் கொலைகளைச் செய்வதை என்ன சொல்வது? இதில் மத்திய மாநில அரசுகள் எல்லாமே கூட்டுக் களவாணிகள் தான். காங்கிரஸ், பா.ஜ.க., தி.மு.க., அ.தி.மு.க. என்றெல்லாம் வேறுபாடு கிடையாது. குஜராத் அதிகாரி வன்சாரா மேற்கொண்ட ஷெராபுதீன் படுகொலையில் குஜராத், இராஜஸ்தான், ஆந்திரம் ஆகிய ­மூன்று மாநிலங்கள் இணைந்து செயல்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொண்ணூறுகளில் ஏற்பட்ட இன்னொரு மாற்றம் குண்டர்கள், தாதாக்கள் மற்றும் கிரிமினல்களை ஒழிப்பதற்கு 'என்கவுன்டர்கள்' பெரிய அளவில் விரிவாக்கப்பட்டது. மும்பை நகரம் இதில் முதலிடம் வகித்தது. இந்தியாவில் 'என்கவுன்டர்கள்' தலைநகரம் என அழைக்கப்பட்டது. அய்ம்பது, நூறு என மோதல் படுகொலை செய்த அதிகாரிகள் போற்றப்பட்டனர். இவர்களைப் பற்றி புத்தகங்கள், சினிமாக்களெல்லாம் வந்தன. பிரதிப் வர்மா என்கிற போலிஸ் அதிகாரிக்கு 'அப்தக் 100' என்று செல்லப்பெயர். அதாவது நூறு என்கவுன்டர் செய்தவன். 'அப்தக் 56' என்கிற இந்தித் திரைப்படம் இவனது வாழ்க்கை வரலாறு. அதில் நாயகனாக நடிக்க நானா படேகருக்கு பிரதிப் வர்மா எப்படி என்கவுன்டர் செய்வது என பயிற்சி கொடுத்தான். பிரதீப்பின் சிஷ்யன் தயாநாயக். இவன் 83 என்கவுண்டர் செய்தவன். பிரதிப்பின் இன்றைய 'ஸ்கோர் 105'.

மேற்குறித்த இருவரும் இன்று தற்காலிக வேலை நீக்கம் செய்யப்பட்டு நீதிமன்றங்களுக்கு அலைந்து கொண்டுள்ளனர். இரண்டு குழுக்கள் இருந்தால் ஒரு குழுவினரிடம் பணம் வாங்கிக் கொண்டு இன்னொரு குழுவைச் சேர்ந்தவரை 'என்கவுன்டர்' செய்ததாக வழக்கு. எட்டாயிரம் ரூபாய் மாதச் சம்பளம் வாங்கும் தயா நாயக்கின் இன்றைய சொத்து 100 கோடி ரூபாய்.

அவுட்லுக் (மே.14, 2007) இதழ் 'என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்டு'களின் ஆல்பம் ஒன்றை வெளியிட்டுள்ளது. உ.பி.யைச் சேர்ந்த நிவநீத் சிகோரா (50), பிரிஜ்லால் (100), ராஜேஸ்வர் சிங் (23), டெல்லியைச் சேர்ந்த ரஜ்பீர் சிங் (100), ஜம்மு காஷ்மீரின் ஹன்ஸ் ராஜ் பரிஹார் (50), ஆந்திராவின் முரளி (25) ஆகியோர் இதில் அடக்கம்.

நம்மூ­ர் தேவாரம், விஜயகுமார், வெள்ளத்துரை ஆகியோர் ஏனோ இதில் விடுபட்டுள்ளனர். இன்று நக்சலைட்டுகளைப் பிடிப்பதற்கான சிறப்புப்படைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள விஜயகுமாரின் அதிகாரத்தில் சுமார் 12 மோதல் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. சந்தன வீரப்பன் குழுவினர் கொல்லப்பட்டதும் இதில் அடக்கம்.

வீரப்பனைப் பிடிப்பதெனச் சொல்லி நூற்றுக்கணக்கான பழங்குடியினர் சித்திரவதை செய்யப்பட்டதையும், 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதையும் நாம் அறிவோம். இதை சதாசிவம் ஆணையம் வெளிபடுத்தியுள்ளது.

இந்த ''வீரதீரச்'' செயல்களைப் பாராட்டி ஜெயலலிதா அரசு கோடிக்கணக்கான ரூபாய்களையும், வீட்டு மனைகளையும் பரிசளித்த கதை வெட்கக் கேடானது. தேவாரத்திற்குக் கொடுக்கப்பட்ட வீட்டுமனை மட்டும் ஒரு கோடி ரூபாய் பெறும் என ஒரு இதழ் குறிப்பிட்டிருந்தது. இவர்கள் செய்யும் மோதலை விட வேதனையானது இந்தக் 'கலைஞர்கள்' வழிபாட்டுக்குரியவர்களாக மாற்றப்படுவது.

பிடித்துக் கொண்டு போய் வைத்து சித்திரவதை செய்துவிட்டுப் பின்பு கொலை செய்து மோதல் நடந்ததாக அறிவிப்பது, காவலில் உள்ளவர்களைக் கொல்வது தவிர சிறையில் இருப்பவர்களையே சொல்லி வைத்து 'என்கவுன்டர்' செய்யும் கலையில் முன் நிற்பது தமிழகம்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் இராஜராமன், சரவணன் என்கிற இரு தமிழ்த் தேசிய கொள்கை கொண்ட இளைஞர்களைக் காவல் நீடிப்பதற்கென சென்னை மத்திய சிறையிலிருந்து சைதாப்பேட்டை நீதிமன்றத்துக்கு அழைத்து வந்து, திரும்பிச் செல்லும்போது கொன்றது நினைவிற்குரியது. காவல் நீடிப்பிற்கு வழக்கமாகக் காலையில் தான் கொண்டு வருவார்கள். ஆனால், அன்று மாலையில் கொண்டு வந்தார்கள். சைதாப்பேட்டை நீதிமன்றத்திலிருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் இருந்த அன்றைய மத்திய சிறைக்கு அண்ணாசாலை வழியாகக் கொண்டு செல்வதே வழக்கம். ஆனால், அன்று கோட்டூர்புரம் வழியாகக் கொண்டு வந்து, 'டிராபிக்கை' எல்லாம் நிறுத்திவிட்டு சுட்டுக் கொன்றனர். அரசியல்வாதிகள், போலீஸ், சிவில் நிர்வாகம் எல்லாம் இதில் ஒன்றாக இணைவது கவனிக்கத்தக்கது.

தி.மு.க. அரசும் இதில் சளைத்ததில்லை. இம்முறை ஆட்சிக்கு வந்தவுடன் சரமாரியாக ­மூன்று, நான்கு 'என்கவுன்டர்களை' கலைஞர் அரசு செய்தது. பத்திரிகைகளால் சொல்லப்பட்ட காரணம் என்ன தெரியுமா? ஜெயலலிதா ஆட்சியைக் காட்டிலும் கலைஞர் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு குறைந்துவிட்டதாக ஓர் உணர்வு ஏற்படக்கூடாதாம். அதற்காக அந்த நால்வர் பலியிடப்பட்டனர்.

சென்ற ஆண்டு போலி மோதலில் கொல்லப்பட்ட மணல்மேடு சங்கரின் கதை ரொம்பப் பரிதாபமானது. முன்பெல்லாம் 'என்கவுன்டர்' முடிந்த பின்புதான், இன்னார் கொல்லப்பட்டார் என படத்துடன் பத்திரிகைகளில் செய்தி வரும். இப்போதோ அடுத்தடுத்த என்கவுன்டர்கள் யாரை நோக்கி இருக்கும் என முன் கூட்டியே படத்துடன் செய்திகள் வருகின்றன. சங்கரை சிறையிலுள்ள போதே 'என்கவுன்டர்' செய்யப்போவதாக போலீஸ் மிரட்டியது. பஞ்சாயத்துத் தலைவரான சங்கரின் அம்மா எல்லோரிடமும் புலம்பினார். மனித உரிமை அமைப்புகள் இச்செய்தியை நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்றன. நீதிமன்றம் வினவியபோது அப்படியெல்லாம் செய்யப் போவதில்லை என்று சொன்னது அரசு. அடுத்த சில வாரங்களில் சங்கர் கொல்லப்பட்டார். யாரும் கண்டு கொள்ளவில்லை.

எதற்கெல்லாம் எப்படியெல்லாம் மோதல் படுகொலைகள் செய்யப்படுகின்றன என்பதைப் பாருங்கள். பணத்திற்காகக் கொல்வதைப் பார்த்தோம். ஷெராபுதீனைக் கடத்திச் சென்று கொன்று, மனைவி கவுசர் பீவியைப் பாலியல் வன்முறை செய்து கொன்றெரிந்து, எஞ்சிய உடற்பாகங்களைக் கிணற்றில் போட்டு, ஒரே சாட்சியான துளசிராம் பிரஜாபதியையும் கொன்ற வன்சாரா கும்பலும் கூட தொழில் போட்டியாளரான ஒரு சலவைக் கல் வியாபாரியாம். பணம் வாங்கிக் கொண்டேகூட இதைச் செய்ததாகக் கூறப்படுகிறது.

அரசியல்வாதிகள் தம்மையும் தம் ஆட்சியையும் காப்பாற்றிக் கொள்ளவும் என்கவுன்டர்கள் பயன்படுகின்றன. குஜராத் கொடுங்கோலன் மோடி தன் உயிர் எப்போதும் ஆபத்தில் உள்ளது என்கிற பிம்பத்தைக் கட்டமைப்பதற்காக இதுவரை 21 என்கவுன்டர்களை தனது ஆட்சியில் அரங்கேற்றியுள்ளார்.

19 வயது கல்லூரி மாணவி இஷ்ரத் ஜெஹான் உட்பட லஷ்கர் ஐ தொய்பா, ஜெய்ஷ்இ முஹம்மது, அய்.எஸ்.அய், நக்சலைட் எனக் காரணம் சொன்னால் யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள். இஷ்ரத் ஜெஹான் என்ற அந்த மாணவி லஷ்கர் ஐ தொய்பாவின் ஏஜண்ட் என்பதற்கு ஒரே ஆதாரம் அவரது பெயரும் மதமும்தான்.

இப்படி முத்திரை குத்தப்பட்டுக் கொல்லப்படும்போது அவர்களது உடல்கள் மட்டுமின்றி அவற்றோடு பல ஆதாரங்களும் தடயங்களும் அழிக்கப்படுகின்றன. வீரப்பன் கொலையோடு அவருடன் தொடர்புடைய அரசியல்வாதிகள், இராஜ்குமார் கடத்தலின்போது கைமாறியதாகச் சொல்லப்பட்ட பணம், தெல்கி, ரஜினி வரை தொடர்புபடுத்திப் பேசப்பட்ட செய்திகள் எல்லாம் அழிக்கப்படவில்லையா?

கையில் எந்த ஆயுதமில்லாது அந்த 19 வயதுப் பெண்ணைச் சுட்டுக் கொல்வதைக் காட்டிலும் கைது செய்து விசாரிப்பதல்லவா பயங்கரவாதத்தை ஒழிக்கப் பயன்படும்?

என்கவுன்டரில் கொல்லப்பட்ட உடல்களை உறவினர்கள் குளிப்பாட்டி புதைக்கக்கூட அனுமதிக்காமல் அவசர அவசரமாகக் காவல்துறையே எரிப்பது ஏன்? 'மோதல்' என்பது எதிர்பாராத நிலையில் எதிரிகளுடன் ஏற்படக்கூடிய எதிர்கொள்ளல். இதில் எதிரி கொல்லப்படத்தான் வேண்டுமென்பதில்லை. எல்லா மோதல்களிலும் எதிரிகள் தப்பிச் செல்வதும் எப்படி?

இப்படி எத்தனையோ 'ஏன்'களையும் 'எப்படி'களையும் உள்ளடக்கியவைதான் என்கவுன்டர் கொலைகள்.

வன்முறைகளையும், பயங்கரவாதத்தையும் கிரிமினல் நடவடிக்கைகளையும் அரசு கண்டு கொள்ளக்கூடாது என நாம் சொல்லவில்லை. சட்டம் ஒழுங்கை நலைநாட்டும் கடமை அரசுக்கு உண்டு என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். இந்த நிலைநாட்டலில் உள்ள காவல்துறையும் நாம் ஏற்றுக் கொள்கிறோம். இத்தகைய நடவடிக்கைகளில் சுய பாதுகாப்பிற்காக கொலையும் செய்ய இ.பி.கோ. 96, 97, 100 பிரிவுகளில் ஏற்பு இருந்த போதும் வன்முறையையும் உயிர்க் கொலையையும் தவிர்ப்பதே குற்ற நடவடிக்கைச் சட்டம் சாராம்சமாக வலியுறுத்தும் செய்தி. குறிப்பாக 46(III) பிரிவு இதை அழுத்தம் கொடுத்து வலியுறுத்துகிறது. சுயபாதுகாப்புக்காகச் சுட்டதாக போலீசே உரிமை கொண்டாடி அத்தோடு பிரச்சினையை ஊற்றி ­மூடிவிட இயலாது.

'என்கவுன்டர்களை' ஒரு குற்றமாகப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்வது அவசியம். அவ்வாறு பதிவு செய்யாமையும், விசாரணை மேற்கொள்ளாமையும் அரசியல் சட்டத்திற்கு எதிரானது.

அரசியல் சட்டத்தின் 21ஆம் பிரிவின்படி உயிர் வாழ்தல் குடிமக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்று. 14ஆம் பிரிவின்படி அனைவரும் சட்டத்தின் முன் சமம். போலீஸ் செய்தாலும் மற்றவர்கள் செய்தாலும் கொலை கொலையே.

1994 மார்ச் 30 அன்று ஆந்திர மாநில சிவில் உரிமைக் கழகம் (APCLC) 1991-93 கால கட்டத்தில் ஆந்திரத்தில் நடைபெற்ற 496 போலி மோதல் கொலைகளைப் பட்டியலிட்டு தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் (NHRC) புகார் மனு ஒன்றை அளித்தது. அது தொடர்பான விசாரணையின் போது 'என்கவுன்டர்' தொடர்பாக ஆணையம் வைத்த பரிந்துரைகளாவன:

(1) கொலை செய்யப்பட்டவரை, என்கவுன்டர் நடந்தபின், குற்றம் சுமத்தப்பட்டவராக அறிவித்து, குற்ற நடைமுறைச் சட்டம் 307ம் பிரிவின் கீழ் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்து, பின் குற்றவாளி இறந்து போனதால் வழக்கை முடித்துக் கொள்வதாக அறிவிப்பது சட்ட விரோதமானது.

(2) மோதல் கொலைகள் ஒவ்வொன்றிலும் குறிப்பிட்ட காவல் நிலையத்தில் பொறுப்பிலுள்ள அதிகாரியால் குற்ற நடைமுறைச் சட்டம் பிரிவுகள் 154, 170, 173 மற்றும் 190 ஆகியவற்றின் கீழ் முறையான விசாரணை செய்யப்படுவது அவசியம்.

(3) இந்திய சான்றுச் சட்டம் 105இன் (EVIDENCE ACT) பிரிவின்படி சுயபாதுகாப்பிற்காகக் கொல்லும் உரிமையைப் பயன்படுத்தியதை நீதிமன்றத்தில் நிறுவ வேண்டும்.

(4) ஒவ்வொரு கொலையும், அது தற்காப்பிற்காகச் செய்யப்பட்டிருந்த போதும்கூட, கைது செய்யப்பட வேண்டிய குற்றமே. எனவே, புலன் விசாரணை செய்வது அவசியம். மாநில உளவுத்துறை அல்லது வேறு ஏதேனும் சுதந்திரமான புலன் விசாரணை அமைப்பு ஒன்றின் ­மூலம் ஒவ்வொரு என்கவுன்டர் கொலையும் புலன் விசாரணை செய்ய வேண்டுமென மாநில அரசுக்குப் பரிந்துரை செய்யப்படுகிறது.

இது தவிர தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நீதியரசர் எம்.என்.வெங்கடாசலையா முதலமைச்சருக்கு எழுதிய மார்ச் 29, 1997 நாளிட்ட கடிதத்திலும் மேற்குறித்தவை வற்புறுத்தப்பட்டன.

புலன் விசாரணை செய்யும் காவல் நிலையத்தைச் சேர்ந்தவர்களே என்கவுன்டர் செய்தவர்களாக இருக்கும்பட்சத்தில் வேறு சுதந்திரமான புலன் விசாரணை நிறுவனம் விசாரிக்க வேண்டும் எனவும், இத்தகைய விசாரணையின் அடிப்படையில் காவல் துறையினர் மீது வழக்குத் தொடரப்பட்டால் மோதலில் பலியானவர்களின் குடும்பத்தாருக்கு ஈட்டுத் தொகை வழங்க வேண்டும் எனவும் கூட வெங்கடாசலையா குறிப்பிட்டிருந்தார்.

டி.கே.பாசு எதிர் மேற்கு வங்க அரசு, அசோக் ஜோரி எதிர் உ.பி. அரசு ஆகிய ரிட் வழக்குகளில் நீதியரசர்கள் குல்தீப் சிங், ஏ.எஸ்.ஆனந்த் ஆகியோரும், பி.யூ.சி.எல். எதிர் இந்திய அரசு வழக்கில் நீதியரசர்கள் ஜீவன்ரெட்டி மற்றும் சுஹால் சென் ஆகியோரும் வழங்கிய தீர்ப்பையும் விசாரணை மேற்கொள்ள வழங்கப்பட்ட ஆணையையும் சுருக்கம் கருதித் தவிர்க்கிறோம்.

மோதலில் கொல்லும் காவல்துறையினரை வீரதீரச் சாகசக்காரர்களாகக் காட்டுவது, அவர்கள் சொல்லும் பொய், புனை சுருக்கங்கள் அனைத்தையும் அப்படியே வெளியிடுவது ஆகியவற்றின் ­மூலம் என்கவுன்டருக்கு ஆதரவான ஒரு மனநிலையை ஊடகங்கள் உருவாக்குவதும் கண்டனத்திற்குரியது.

''விஜயகுமாருக்கும் விஜயகாந்துக்கும் என்ன வித்தியாசம்? முன்னவர் 'என்கவுன்டர்' செய்தார். பின்னவர் 'சின்னக்கவுண்டர்' செய்தார்'' என்பது போன்ற 'ஜோக்'குகளை வெளியிட்டு மத்திய தர வர்க்கத்தினரைப் புல்லரிக்கச் செய்வது என்பதெல்லாம் மனித உரிமை நோக்கில் மிகவும் கவலைக்குரியது.

என்கவுன்டர் கொலைகள் விசாரணையின்றி அனுமதிக்கப்படுவதன் ­மூலம் என்றென்றும் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்ட பிரதேமாக நம்முடையது மாற்றப்படுகிறது. சட்டப்பூர்வமற்ற ஒரு நிலையைச் சட்டப்பூர்வமாக்குவதாக பரிசறிவித்தல்கள், புகழ் பாடல்கள் முதலியன அமைகின்றன. அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை எந்த மக்கள், 'குடிமக்கள்' என்கிற நிலையிலிருந்து 'குடிமக்கள் அல்லாதவர்கள்' என்கிற நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

என்கவுன்டர் கொலைகள், குற்றம் சுமத்தப்பட்டவர்களை நீதிமன்றத்திற்கே அழைத்து வராமல் காவல் நீடிக்கும் 'வீடியோ கான்பரன்சிங்', பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள 'உண்மை அறியும் சோதனைகள்' ஆகியவற்றின் ­மூலம் காவல்துறையில் உரிமைகள் அபரிதமாக்கப்படுதல் ஜனநாயகத்திற்கும் கேடு.

குடி உரிமையிலும், மனித கண்ணியங்களிலும் அக்கறையுள்ளோர் ஒன்றிணைவோம்!

போலி மோதல்களை எதிர்ப்போம்!



போலி மோதல் கொலை எதிர்ப்புக் கூட்டியக்கம்


தொடர்புக்கு:

வழக்குரைஞர் பொ.இரத்தினம் 94434 58118,
பேராசிரியர் அ.மார்க்ஸ் 94441 20582,
வழக்குரைஞர் பாவேந்தன் 94433 06110,
கோபால் 98413 24699,
புதுவை கோ.சுகுமாரன் 98940 54640.

Wednesday, July 11, 2007

ஆனந்த விகடனில் கோ.சுகுமாரன் நேர்காணல்

ஆனந்த விகடன் இதழில் மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன் நேர்காணல் வெளிவந்துள்ளது.
நேர்காணல் கண்டவர்: டி.அருள் எழிலன்.
புகைப்படங்கள்: கே.ராஜசேகரன்.

குறிப்பு: தெளிவாக படிக்க படத்தைக் கிளிக் செய்யவும்.








இணையதளத்தில் கோ.சுகுமாரன் நேர்காணல் குறித்த விவாதம்

போலீஸ் தொல்லையால் அரவாணி தற்கொலை : ரூ.5 லட்சம் நட்டஈடு - உயர்நீதிமன்றம் உத்தரவு

போலீசாரின் பாலியல் தொல்லையால் அரவாணி ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் அவரது சகோதரிக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் நட்டஈடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவர் காய்கறி கடை வைத்திருக்கும் ஒரு பெண்ணிடம் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். திருட்டு புகார் தொடர்பாக வியாசர்பாடி போலீசார் இவரை கடந்த மே 2006-இல் பிடித்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர் மீது வழக்குப் பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர். பின்னர் பிணையில் வெளியெ வந்த அவர் தினமும் வியாசர்படி காவல் நிலையத்திற்குச் சென்று கையெழுத்துப் போட்டு வந்தார்.

தினமும் காலை 8 முதல் இரவு 11.30 மணி வரை அவரை காவல் நிலையதிலேயே தங்க வைத்த போலீசார் சின்னபாண்டியன், திருநாவுக்கரசு, குமார், ரவி, சம்பத் ஆகியோர் அரவாணியான பாண்டியனை பாலியல் தொந்தரவு கொடுத்து துன்புறுத்தியுள்ளனர். இந்த கொடுமை தாங்காமல் தன் அக்கா ஜெயலட்சுமியிடமும் போலிசாரிடமும் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறியுள்ளார்.

இதன் பின்னரும் போலிசாரின் பாலியல் தொந்தரவு தொடர்ந்ததால் பாண்டியன் போலீஸ் நிலையம் முன்பே உடலில் மண்எண்ணையை ஊற்றி தீயை பற்ற வைத்தார். படுகாயம் அடைந்த அவர் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது சைதாப்பேட்டை நீதிபதியிடம் போலிசார் தன்னை துன்புறுத்தியதால் தற்கொலைக்கு முயன்றதாக மரண வாக்குமூலம் அளித்தார். இதனிடையே சிகிச்சைப் பலன் அளிக்காமல் கடந்த 29.6.2006 அன்று மரணமடைந்தார்.

போலீசாரின் பாலியல் கொடுமையால் தனது சகோதரர் மரணம் அடைந்தார் என்றும், எனவே தனக்கு ரூ.10 லட்சம் நட்டஈடு வழங்க வேண்டும் என்றும், அவருடைய சகோதரி ஜெயலட்சுமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி பி.ஜோதிமணி ஆகியோர் விசாரித்தனர். கொடுமை தாங்காமல் அரவாணி பாண்டியன் தற்கொலை செய்து கொண்டதால் அவரது சகோதரிக்கு, தமிழக அரசு ரூ.5 லட்சம் நட்டஈடு வழங்க வேண்டுமென்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.

மேலும் நீதிபதிகள் தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

“வழக்குத் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் இந்நீதிமன்றம் பரிசீலித்தது. போலீஸ் அதிகாரிகள் அத்துமீறி செயல்பட்டுள்ளனர் என்பதற்கு முகாந்திரங்கள் உள்ளன. பாண்டியன் தற்கொலை செய்து கொண்டது 5 போலீசாரின் நடத்தையால் தான் நடந்துள்ளது என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை.

துன்புறுத்தலுக்கு ஆளானதால் பாண்டியன் மரணம் அடைந்துள்ளார். எனவே மனுதாரருக்கு ரூ.5 லட்சத்தை அரசு நட்ட ஈடாக வழங்க வேண்டும். சின்னபாண்டியன் உள்பட 5 போலீசார் மீதும் ஒழுங்கு நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். நட்டஈடு தொகையை 5 போலீஸ்காரர்களிடமிருந்து வசூலித்துக் கொள்ள தகுந்த நடவடிக்கை எடுப்பது தமிழக அரசின் முடிவைப் பொறுத்தது.’’

இவ்வாறு தீர்ப்பில் கூறியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆதரவாக உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் டி.கீதா ஆஜராகி இத்தீர்ப்பை பெற்றுத் தந்ததின் மூலம் நீதியை நிலைநாட்டியுள்ளார்.

மேதா பட்கர் மீது வழக்கு தொடர்ந்தவருக்கு அபராதம் : உச்சநீதிமன்றம்


சமூக ஆர்வலர் மேதா பட்கர் தலைமையில் இயங்கும் நர்மதை அணை எதிர்ப்பு இயக்கத்தின் நடவடிக்கைகள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தவருக்கு அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

குஜராத்தில் நர்மதா நதியில் அணை கட்டப்படுவதால் பாதிக்கப்படும் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தி வருகிறார் மேதா பட்கர். இதற்காக நர்மதை அணை எதிர்ப்பு இயக்கம் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளார்.

இந்த அமைப்பு வெளிநாட்டில் இருந்து நிதி உதவி பெறுகிறது என்றும், வெளிநாட்டு சக்திகள் சொல்கிறபடி செயல்பட்டு இந்தியாவில் அரசியல் உறுதியைக் குலைக்கிறது என்றும் குஜராத்தைச் சேர்ந்த தேசிய மக்கள் உரிமைக் கவுன்சில் என்ற தொண்டு நிறுவனம் குற்றம்சாட்டியது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கும் தொடர்ந்தது.நர்மதை அணை எதிர்ப்பு இயக்கச் செயல்பாடு பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டு இருந்தது.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நர்மதை அணை எதிர்ப்பு இயக்கம், தனிப்பட்ட ஆதாயத்திற்காக வேண்டுமென்றே தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரியிருந்தது.

இந்த வழக்கை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் சி.கே.தாக்கர், அல்ட்மாஸ் கபீர் ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் விசாரித்து தள்ளுபடி செய்தது. நீதிமன்ற நேரத்தை வீணடித்ததற்காக மனுதாரருக்கு ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிப்பதாக தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மக்களுக்காகப் போராடும் இயக்கங்களைக் கொச்சைப்படுத்தும் நோக்கத்தோடு செயல்படுபவர்களுக்கு இத்தீர்ப்பு ஒரு பாடமாக அமையும்.

Monday, July 09, 2007

கீற்றுக்கு உதவுங்கள்





தமிழின் பல மாற்று சிறுபத்திரிகைகளையும் ஒருசேர வாசிக்கும் தளமாக விளங்குவது 'கீற்று' இணையத்தளம். மார்க்சியம், பெரியாரியம், பெண்ணியம், தலித்தியம், மனித உரிமைகள் என பல்வேறு அரசியல் பார்வைகளை அடிப்படையாகக் கொண்ட இத்தளத்தை நடத்திவருபவர் இளைஞரான தோழர்.ரமேஷ். இந்தத் தளத்தின் மூலம் எந்த ஆதாயமும் பெறாத அதேநேரத்தில் கடும் உழைப்பையும் செலுத்திவருபவர். இப்போது கீற்று இணையத்தளத்தில் பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் போன்றவர்களின் நூல்களையும் சமகால இலக்கிய மற்றும் அரசியல் நூற்களையும் ஏற்றவுள்ளார் ரமேஷ். ஆனால், இதற்கென ஒருவரை நியமித்து அவருக்கான சம்பளம் மற்றும் தொலைபேசி போன்ற பல்வேறு செலவுகள் அவரை எதிர்நோக்கியுள்ளன. மேலும் கீற்று இணையத்தளம் குறித்த அறிமுகத்தையும் அனைத்துத் தமிழர்களுக்கும் கொண்டு செல்வதற்கான ஆலோசனைகளையும் வேண்டுகிறார் தோழர்.ரமேஷ். மாதம் அதிகபட்சம் பத்தாயிரம் ரூபாய் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலக்கியம் மற்றும் அரசியலில் ஆர்வமுள்ள நண்பர்கள் தங்களால் இயன்ற அளவில் மாதம் ஒரு தொகையைப் பகிர்ந்துகொள்ளலாம். தமிழ்ச் சூழலில் இதுபோன்ற முயற்சிகள் அரிதாகிவரும் வேளையில் அனைவரும் உதவ வேண்டுகிறேன்.

இணையத்தளத்தைக் காண : கீற்று

மேலும் தொடர்புக்கு ரமேசின் கைப்பேசி: 9940097994, மின்னஞ்சல் : editor@keetru.com

ரமேசின் வங்கிக் கணக்கு எண் : 603801511669. ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, சென்னை கிளை.

Monday, July 02, 2007

அது ஒரு பொடா காலம்! (12) சுப.வீரபாண்டியன்

அந்த இளைஞனைப் பக்கத்து அறையில் அடைத்துவிட்டு, என்னிடம் வந்த காவலர்கள், ‘‘சார், வழக்கம் போல கொசுவத்தி எதுவும் அவனுக்குக் கொடுத்தனுப்பாதீங்க. கொசுவத்தியைச் சாப்பிட்டு செத்துக்கித்துப் போயிட்டான்னா, அப்புறம் நாங்க, நீங்க எல்லாருமே மாட்டிக்குவோம்’’ என்று சிறிதாக அச்சுறுத்திவிட்டுப் போனார்கள்.

புதிதாகச் சிறைக்கு வருபவர்களுக்குப் பழைய சிறையாளி என்ற முறையில் கொசுவத்தி கொடுத்து அனுப்பி ‘விருந்தோம்புவது’ என் வழக்கமாக இருந்தது. அந்த இளைஞனுக்கு அதுவும் கூடாது என்று கூறிவிட்டனர். ஏனெனில் அது ‘பயங்கரமான கேஸாம்’. அந்த இளைஞனின் பெயர் ராஜாராம்.

கொலை வழக்கு, வெடிகுண்டு வழக்கு உள்ளிட்ட பல வழக்குகளில் தேடப்பட்டுத் ‘தமிழ்த் தீவிரவாதி’ என்று காவல் துறையினரால் பெயர் சூட்டப்பட்டவன். குடியரசு நாள், விடுதலை நாள், காந்தியார் பிறந்த நாள் ஆகியவை வந்துவிட்டால் எங்காவது ஒரு குண்டு வெடிக்கும். குண்டு வைத்தவன் ராஜாராம்தான் என்று காவல் துறை அறிவிக்கும். ஆண்டுகள் பலவாகத் தேடுதல் வேட்டை நடைபெற்றது. நாளேடுகளில் ராஜாராம் படம் (சின்ன வயதில் எடுத்தது) அடிக்கடி வரும்.

ராஜாராமுக்கும் எனக்கும் ஒரு வேடிக்கையான தொடர்பு உண்டு. தேடுதல் வேட்டையின் ஒரு பகுதியாக என்னையும் காவல் துறை இரண்டு முறை அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளது. ஒரு முறை, விருகம்பாக்கம் காவல் நிலையத்தில்; இன்னொரு முறை, சைதாப்பேட்டையில் உள்ள உதவி ஆணையர் அலுவலகத்தில்.

சைதாப்பேட்டையில் சற்று மிரட்டலாகவே விசாரணை நடைபெற்றது. ‘‘அவன் இருக்குமிடம் உங்களுக்குத் தெரியும் என்று நாங்கள் நினைக்கிறோம். மறைக்காமல் உண்மையைச் சொல்லிவிடுங்கள்’’ என்றனர்.

எனக்கு உள்ளூரச் சிரிப்பாக இருந்தது. எனக்கும் ராஜாராமுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் அந்த மனிதனைப் பார்த்ததுகூட இல்லை. எனக்குத் தொடர்பே இல்லாத வழக்கில், என்னை ஏன் இப்படித் துன்புறுத்துகிறீர்கள்?’’ என்று நான் கேட்டதற்கு, அவர்கள் சொன்ன விடை, மீண்டும் எனக்குச் சிரிப்பையே வரவழைத்தது.

ராஜாராம் எழுதிய நாட்குறிப்பு ஒன்று, காவல் துறையிடம் சிக்கியுள்ளதாகவும், அதில் என்னையும் என் மேடைச் சொற்பொழிவையும் பாராட்டி எழுதியுள்ளதோடு, என்னைச் சந்திக்க வேண்டும் என்ற ஆவலையும் பதிவு செய்துள்ளதாகக் கூறினர். அவர்கள் சொல்வது உண்மை-யாக இருக்குமா என்பதிலேயே எனக்கு ஐயம் இருந்தது. அப்படியே இருந்தாலும் அதற்கு நான் எப்படிப் பொறுப்பாவேன் என்று கேட்டேன். இறுதியில் என்னை விடுவித்துவிட்டனர்.

2003 ஜனவரி 2 அன்றுதான், முதன்முதலாக ராஜாராமை நான் சிறையில் நேரில் பார்த்தேன். மறு நாள் அறிமுகமானோம். பகல் முழுவதும் ராஜாராம் என்னுடன் பேசிக்கொண்டே இருந்ததைக் காவலர்கள் கவனித்துக்கொண்டு இருந்தனர். நான்காம் தேதி காலை எட்டு மணிக்கெல்லாம், அந்த இளைஞனை வேறு தொகுதிக்கு மாற்றிவிட்டனர்.

அதன் பின்பு மனுப் பார்க்கவும், வழக்குரைஞர்களைப் பார்க்கவும் போய் வரும்போது, எதிரெதிராகச் சந்தித்துக்கொள்வோம். இரண்டொரு சொற்கள் பரிமாறப்படும். ஒரு முறை, கூடுதல் கண்காணிப்பாளர் என்னைத் தன் அறைக்கு அழைத்திருந்தார். அங்கு ராஜாராமைப் பார்த்தேன். ‘‘வாங்க, இந்தப் பையன், சிறையில இருந்தபடியே, தமிழ்ல மேல் படிப்பு படிக்கணும்னு ஆசைப்படுறாரு. ஜெயில்ல அதுக்கு அனுமதி உண்டு. தொல்காப்பியம்னு ஒரு பாடத்துல ஒங்ககிட்ட சந்தேகம் கேட்டுக்கிறேன்னு சொல்றார். ஒங்களுக்குச் சம்மதம்னா சொல்லிக்-குடுங்க’’ என்றார் அதிகாரி.

‘‘அதுக்கென்ன, சிறையில் சும்மாதானே இருக்கேன். நல்லா சொல்லிக் குடுக்கலாம்’’ என்றேன்.

‘‘யாராவது ஒரு ஏட்டு கூட்டிக்கிட்டு வருவாங்க. அவுங்க முன்னாடி, வாரத்துக்கு ஒரு நாள் ஹெல்ப் பண்ணுங்க’’ என்றார்.

என் புன்முறுவலைக் கண்ட அவர், ‘‘ஏட்டு முன்னால’’ என்பது ஒரு நடைமுறை என்றார். ‘‘தாராளமா! அவருக்கும் கொஞ்சம் தொல்காப்பியம் போகட்டுமே’’ என்றேன். இருவரும் சிரித்தனர்.

ஆனால், என்ன காரணத்தினாலோ, அப்படி ஒரு வகுப்பு நடைபெறவே இல்லை. எப்போதேனும் சந்திப்பதோடு சரி.

அப்படித்தான் 25.03.2003 அன்று மாலையும் ராஜாராமைச் சந்தித்தேன். அப்போது என் நண்பர் தமிழ் முழக்கம் சாகுல் அமீதும் பொடாவில் கைதாகி உள்ளே வந்துவிட்டார்.

நான், பரந்தாமன், சாகுல் அமீது மூவரும், வழக்குரைஞர்களைப் பார்த்துவிட்டுத் தொகுதிகளுக்குத் திரும்பியபோது எதிரில் ராஜாராமைப் பார்த்தோம்.

சாகுலும், ராஜாராமும் மூன்றாவது தொகுதியில் இருந்தனர். நானும், பரந்தாமனும் முதல் தொகுதி.

‘‘கோர்ட்டுக்குப் போறேன்’’ என்றார் ராஜாராம்.

‘‘சாயந்திரம் ஆயிடுச்சு. இப்ப என்ன கோர்ட்டு?’’ என்றார் பரந்தாமன்.

‘‘காலையில இருந்து காத்திருந்தேன். இப்பதான் வழிக்காவல் வந்திருக்கு.’’

கையில் பழமும், ரொட்டியும் வைத்திருந்தார். ‘‘திரும்பி வர நேரமாச்சுன்னா, இதை வெச்சுக்க. சாப்பிடு’’ என்று சொல்லி சாகுல் கொடுத்தாராம்.

என்னைப் பார்த்து, ‘‘நாளயில இருந்து, நீங்க படிச்சு முடிச்சதும் தினமணி பத்திரிகையை அனுப்பிவைங்க’’ என்றார்.

‘‘அதிகாரிகிட்ட சொல்லிடு. காலையிலயே அனுப்பிவைக்கிறேன்’’ என்றேன்.

‘‘நேத்தே சொல்லிட்டேன். மறக்காம நாளைக்கி அனுப்பிடுங்க.’’

ராஜாராம் வெளியேற, நாங்கள் உள்நோக்கி நடந்தோம்.

அந்த நிமிடத்தில் அது எங்களுக்கு ஒரு சாதாரண சந்திப்பாகவும், மிகச் சாதாரண நிகழ்வாகவுமே இருந்தது. அவரவர் தொகுதியில், அவரவர் அறையில் வழக்கம் போல் மாலை ஆறு மணிக்கு பூட்டப்பட்டோம்.

அறை பூட்டப்படும் நேரத்தில், உயரே இருக்கும் தொலைக்காட்சிப் பெட்டியை எடுத்து, தன் அறைக்கு அருகில் மோகன் வைத்துக்கொள்வார். நள்ளிரவு வரை, ஒலியைக் குறைத்து, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்துக்கொண்டு இருப்பார். பல ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் அவருக்கு அந்தப் பெட்டிதான் தோன்றாத் துணை என்று சொல்ல வேண்டும்.

அந்தப் பெட்டியில் பொதிகை மற்றும் அரசுத் தொலைக்காட்சிகள் மட்டும்தான் தெரியும். அவற்றை அவர் தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருப்பார். ஏதேனும் முக்கியமான செய்தி என்றால் எங்களையும் அழைத்துச் சொல்வார்.

அப்படித்தான் அன்று இரவு 8.30 மணிக்கு, மேலே இருந்து அவர் ‘சார்... சார்’ என்று அழைக்கும் குரல் கேட்டது. ‘‘என்ன மோகன்?’’ என்றேன்.

‘‘மூணாம் பிளாக்குல இருந்த ராஜாராமை போலீஸ் சுட்டுடுச்சு சார். செத்துப்போயிட்டான். தப்பி ஓட முயன்றபோது சுடப்பட்டான்னு சொல்றாங்க’’ என்றார்.

எனக்குப் பகீரென்றது!

(தொடரும்)

நன்றி:
ஆனந்த விகடன்.
www.subavee.blogspot.com