Friday, October 25, 2013

ஒரு சிறைக் காவலரும், மரண தண்டனை ஒழிப்பும்!

1988-ல் நானும், நண்பர்களும் கொடைக்கானல் தொலைக்காட்சி நிலைய வெடிகுண்டு வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை அரசரடியில் உள்ள நடுவண் சிறையில் அடைக்கப்பட்டிருந்தோம். அப்போது சிறைவாசிகளுக்கு 15 நட்களுக்கு ஒருமுறை திரைப்படம் காண்பிப்பார்கள். சிறைவாசிகளின் இறுக்கம் நிறைந்த வாழ்வு சற்று இலகும் தருணம் அவை. எங்களுக்கு அந்த உரிமை மறுக்கப்பட்டிருந்தது.

மிசா காலத்தில் தி.மு.க.வைச் சேர்ந்த சிட்டி பாபு போன்றவர்களை கொன்றும், எண்ணற்றவர்களைத் அடித்து உதைத்துத் துன்புறுத்தியும் புகழ்ப் பெற்ற சிறை அதிகாரி வித்யாசாகர். அவர் அப்போது சிறைத்துறை ஐ.ஜி.யாக இருந்தார். அவர் தான் தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளுக்குப் பொறுப்பு. அவர் மதுரை சிறையைப் பார்வையிட வருவதாகவும், சிறைவாசிகளின் குறைகளைக் கேட்டறிவதாகவும் எங்களுக்கு தகவல் வந்தது.

நாங்கள் எப்போதுமே சிறை அதிகாரிகளின் நேரடிக் பார்வையிலுள்ள ஆறாம் பிளாக் செல்லில் அடைக்கப்படிருந்தோம். அதோடு மட்டுமல்லாமல், தீவிரவாதிகள் அல்லவா? ஆகையால், சிறை அதிகாரிகள் எங்களுக்கு முடிந்தவரை எந்தக் குறையும் இல்லாமல் பார்த்துக் கொள்வார்கள். இருந்தாலும், திரைப்படம் பார்க்க வேண்டும் என்ற கோரிக்கை எங்களுக்குள் எழுந்து, நீண்ட விவாதம் நடந்தது. திரைப்படம் பார்க்க சிறை அதிகாரிகளிடம், அதுவும் கொடூரமான மனித உரிமை மீறலை நிகழ்த்திய அதிகாரியிடம் கேட்பதா என்ற மாபெரும் விவாதம். இதற்குப் புரட்சிகர பிம்பம் இக்கோரிக்கையை எழுப்ப பெரும் தடையாக இருந்தது. நானும், சில தோழர்களும் இக்கோரிக்கையை எழுப்ப வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். பின்னர் ஒரு வழியாக கோரிக்கையை எழுப்புவது என்று முடிவுக்கு வந்தோம். இதில் ஆர்வமாக இருந்த என்னிடமே அந்தப் பொறுப்பும் ஒப்படைக்கப்பட்டது.

அந்த நாளும் வந்தது. சிறை அதிகாரிகள் மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டனர். சிறைவாசிகள் ஏதாவது குறை சொல்லிவிடக் கூடாது என்ற அச்சம்தான் அதற்குக் காரணம். சிறைவாசிகள் வரிசையாக தங்கள் பிளாக் மற்றும் செல்லின் முன் வந்து நிற்க வேண்டும். அதிகாரிகள் வரும் போது வலது கையை உயர்த்தி நீட்ட வேண்டும். அப்போது அதிகாரி நிற்பார். அச்சமயத்தில் அவரிடம் குறைகளைக் கூற வேண்டும். இதுதான் சிறை நடைமுறை. கையை நீட்டி குறை சொன்ன சிறைவாசிகளுக்கு அந்த அதிகாரி சென்றவுடன் கடும் தண்டனை விதிக்கப்படும். சிறை காவலர்கள் அடித்து துவைத்து விடுவார்கள். அவர்களுக்கு சிறை விதிகளை தளர்த்தி அளிக்கப்டும் பீடி, சிகரெட், இன்ன பிற நிறுத்தப்படும். அவரைப் பொருத்தவரையில் மட்டும் சிறை விதிகள் கடுமையாக பின்பற்றப்படும். இதனால், பெரும்பாலும் யாரும் குறை சொல்ல மாட்டார்கள். ஆயுள் தண்டனைச் சிறைவாசிகள் மட்டும் தங்களின் ‘ரெமிஷன்’ முன்விடுதலைக் குறித்து ஏதாவது கேட்பார்கள். மற்றபடி அந்த உயரதிகாரிகளின் வருகை ஒரு சடங்காகவே நடந்து முடியும். ஒழுங்காக ‘மாமூல்’ அளிக்காத சிறைகளுக்கே இதுபோன்ற உயரதிகாரிகள் வருகை இருக்கும் என்ற செய்தியும் உண்டு.

நாங்களும் எங்கள் செல்லின் முன்பு வரிசையாக நின்றிருந்தோம். சிறை அதிகாரிகளுக்கு எங்கள் மீது மரியாதை இருந்தாலும், ஒருபுறம் சந்தேகமும் எப்போதும் உண்டு. ஏதாவது சிக்கல் ஏற்படுத்திவிடுவார்கள் என்ற அச்சம்தான்.

அதிகாரிகள் புடைசூழ வித்யாசாகர் தூரத்தில் வருவதைப் பார்த்தோம். மிகக் கொடூரமான அதிகாரியை சந்திக்க நாங்களும் ஆவலுடன் இருந்தோம். எங்களுக்குப் பாதுகாப்புக்காக நிற்கும் சிறைக் காவலர்கள் கஞ்சிப் போட்டு தேய்த்த உடையின் மிடுக்குடன், மிகுந்த விரைப்புடன் நின்றிருந்தனர். மிக அருகில் வித்யாசாகர் வந்து எங்களிடம் நின்றார். வரிசையில் என்னருகில் நின்றிருந்த பொழிலனிடம் நலம் விசாரித்தார். ‘அப்பா (பாவலரேறு பெருஞ்சித்திரனார்) நலமாக இருக்கிறார்களா’ என்று கேட்டார். அவரும் பதில் அளித்தார். மிசாவில் சென்னை நடுவண் சிறையில் இருந்த பாவலரேறு பெருஞ்சித்திரனார், எம்.ஆர்.இராதா ஆகிய இருவர் மட்டுமே வித்யாசாகரின் தடிக்குத் தப்பியவர்கள் என்பது கூடுதல் தகவல். அந்த கொடூர வரண்ட உள்ளத்திற்குள் இவர்கள் இருவர் மீதும் ஏதோ ஒரு வகையில் மரியாதையும், ஈரமும் இருந்துள்ளது. எங்கள் அருகில் நின்ற அவரின் தோற்றமும், பேச்சும் எந்த வகையிலும் அவரின் கொடூர முகத்தைப் பிரதிபலிக்கவில்லை.

அடுத்து என்னருகில் வந்தவுடன் நானும், ஈகையரசன் அண்ணனும் திடீரென எங்களது கையை உயர்த்தினோம். அன்றாடம் எங்களை நலம் விசாரித்து கவனித்துக் கொள்ளும் சிறை அதிகாரிகள் முகத்தில் அதிர்ச்சி ரேகை ஓடியது. நான் ‘சார்! எங்களுக்கும் திரைப்படம் காண்பிக்க வேண்டும்’ என்றேன். ஈகை அண்ணனும் ஏதோ சொல்ல வந்தார். அதற்குள் வித்யாசாகர் ‘அலோ தெம்’ என்றார். அதாவது, இவர்களை அனுமதிக்கவும் என்று கூறினார். சிறை அதிகாரிகளுக்கு சற்று நிம்மதி அடைந்ததைக் காண முடிந்தது. தூய தமிழில் பேசுவதையே வழக்கமாக கொண்ட எங்களுக்குக் காவல்துறை, சிறைத்துறை அதிகாரிகளை ‘அய்யா’ என்ற அழைக்க மனம் வராது. அதில் ஏதோ அடிமைத்தனம் இருப்பதாக உணர்வோம். கீழ்நிலையில் உள்ளவர்கள் தங்கள் அதிகாரிகளை மூச்சுக்கு மூச்சு ‘அய்யா.. அய்யா’ என்று விளிப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

எங்களுக்கான திரைப்படம் பார்க்கும் நாளும் வந்தது. சிறைக்குள் பெரிய திரையரங்கம் ஒன்றைக் கட்டி வைத்துள்ளார்கள். சிறை நுழைவு வாயிலில் நுழைந்தவுடன் வலதுபுறம் சிறைவாசிகளுக்கான பிரத்தியோக திரையரங்கு உள்ளது. மாலை 6 மணிக்கு அடைப்புக் கணக்கு முடிந்து அனைவரும் பிளாக், செல்லில் அடைக்கப்பட்டவுடன், ஒவ்வொரு பிளாக், செல்லாக திறந்து அனைவரையும் எண்ணி வரிசையாக அனுப்புவார்கள். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் சிறைவாசிகள் தப்பித்துச் செல்லும் சம்பவங்கள் நிறைய நடந்துள்ளதால் கடும் பாதுகாப்பு இருக்கும். எங்களின் வரிசைக்கு அருகிலேயே சிறைக் காவலர்களும் வரிசையாக நிற்பார்கள். வரிசை நத்தைப் போல் ஊர்ந்து பொறுமையாக நகர்ந்து, நகர்ந்து திரையரங்கை அடைய ஒரு மணிநேரம்கூட ஆகும்.

திரையரங்கை நெருங்கிக் கொண்டிருந்தோம். அப்போது அருகில் ஒரு நீண்ட நெடிய மதில் சுவறு கொண்ட மேற்கூரை இல்லாத அறைக்குள் ஒரு சிறிய கோயில் ஒன்று தென்பட்டது. அந்த அறை பெரிய இரும்புக் கதவுப் போட்டு பூட்டப்பட்டிருந்தது. அந்தக் கதவு வழியாக அந்த திறந்த வெளி அறைக்கு செல்ல நிறைய படிகள் அமைக்கப்பட்டிருந்தன. நீண்ட நேரம் நின்றுக் கொண்டே இருந்ததினால் எனக்கு சற்று கால் வலி ஏற்பட்டது. நான் அந்தப் படிக்கட்டுகளின் ஒன்றில் சற்று அமர்ந்தேன். இதை தூரத்தில் இருந்துக் கவனித்துக் கொண்டிருந்த எனக்கு நன்கு அறிமுகமான சிறைக்காவலர் ஒருவர் என்னை நோக்கி வேகமாக ஓடிவந்தார். என்னை மிகவும் கோபமாகவும், சொல்ல முடியாத வார்த்தைகளாலும் திட்டித் தீர்த்தார். ஒரு சமயத்தில் என்னை அடிக்கவும் முற்பட்டார். ஆனால், அடிக்கவில்லை.

சிறைவாசிகள் யாருக்கும் அந்த சிறைக் காவலரைப் பிடிக்காது. கடுமைக்குப் பெயர் பெற்றவர். சின்ன தவறுக்குக்கூட சிறைவாசிகளை அடிக்க தயங்கமாட்டார். எனக்கு சிறிய வயது என்பதாலும், எந்தத் தவறும் செய்யாத போதும் அவர் என்னிடம் நடத்துக் கொண்ட விதம் மிகவும் அவமானமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது. சக தோழர்களுக்கும், பிற சிறைவாசிகளுக்குமே ஒன்றும் புரியவில்லை. என் கண்ணில் எவ்வளவு அடக்கியும் நீர் வழிந்து ஓடியது. என் அழுகையை நான் மறைக்க முயன்று தோல்வியுற்றேன்.

இந்த மன அழுத்தத்துடனே நான் திரையரங்கிற்குச் சென்றேன். அன்றைக்கு ‘அந்தமான் காதலி’ படம் திரையிட்டார்கள். சிவாஜி, சுஜாதா ஆகியோர் போட்டிப் போட்டுக் கொண்டு நடித்த படமது. எனக்குப் படம் பார்க்க மனம் ஒப்பவில்லை. எல்லோரும் ரசித்துப் படம் பார்த்துக் கொண்டிருக்கும் அவ்வேளையில் நான் மட்டும் அகமும், புறமும் அழுதுக் கொண்டே இருந்தேன். அந்தக் காவலர் நடந்துக் கொண்ட விதம் என்னை திரும்பத் திரும்ப நினைவில் வந்து அழுத்தியது. எப்போது படம் முடிந்து செல்லிற்கு செல்வோம் என்ற எண்ணத்திலேயே அமர்ந்திருந்தேன்.

மற்ற சிறைவாசிகள் எல்லாம் தரையில் அமர்ந்திருந்தனர். எங்களைத் தனிமையாக வைத்துப் பாதுக்காக்க வேண்டும் என்பதால், நாங்கள் மட்டும் பள்ளிக்கூட மர பெஞ்சு போன்ற பெஞ்சில் அமர்ந்துப் படம் பார்க்க வைக்கப்பட்டோம். டூரிங் தியேட்டரில் தரை டிக்கெட், பெஞ்ச் டிக்கெட் போல. திடீரெனெ படத்தை நிறுத்திவிட்டு விளக்கைப் போட்டுப் பார்ப்பார்கள். எங்களின் எண்ணிக்கை சரியாக இருக்கிறதா என்று சரி பார்ப்பார்கள். ஒருவழியாக படம் முடிந்தது. நாங்கள் எங்களது செல்லிற்குத் திரும்பினோம். இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை. சிறைக் கம்பியின் ஊடாக வெளியே மெல்லிய ‘குண்டு பல்ப்’ வெளிச்சத்தில் தெரியும் சிறைப் பகுதிகளின் நிழல் படிமங்களை வெறித்துப் பார்த்துக் கொண்டே கிடந்தேன். அழுகையும், அரைகுறை தூக்கமும் கலந்த அந்த இரவு என் வாழ்வில் மறக்க முடியாத சூது கவ்விய இரவு எனலாம்.

வழக்கம் போல் பொழுது விடிந்தது. தினம்தோறும் காலை 6 மணிக்கு கீழ்நிலை சிறை அதிகாரிகள் வந்து எங்களை எழுப்பி, கணக்கெடுத்துச் செல்வார்கள். அதாவது, நாங்கள் அனைவரும் உயிரோடு இருக்கிறோமா? என்று பார்த்துச் செல்வார்கள். வழக்கமாக வரும் அந்த அதிகாரியும், சிறைக் காவலர்களும் வந்து கணக்கெடுத்தார்கள். பின்னர், கதவுகளைத் திறந்து எங்களை காலைக்கடன் முடிக்கவும், குளிக்கவும் வெளியே அனுப்பினார்கள். அந்தக் குழுவில் நேற்று என்னிடம் மிக மோசமாக நடந்துக் கொண்ட சிறைக் காவலரும் இருந்தார். நான் அவசரம் அவசரமாக வெளியே வந்து நேற்று நடந்த சம்பவம் பற்றி அவரிடம் விளக்கம் கேட்டேன். அவர் அளித்த விளக்கம் இன்றும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. நான் என் கவலைகளை எல்லாம் மறந்து மகிழ்ச்சி அடைந்தேன். இவ்வளவு கடுமையாக நடந்துக் கொள்ளும் அந்த சிறைக் காவலருக்குள் இப்படி ஒரு மனிதாபிமானமா? நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. எண்ணி எண்ணிப் பெருமைப்படும் அளவுக்கு அவர் மீது எனக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் மரியாதை கூடியது. அவர் எங்களுக்குள் மிகவும் உயர்ந்து நின்றார். எளிய மனிதர்களுக்குள் நல்ல குணங்கள் குடிக் கொண்டிருக்கும் என்பதற்கு அவரும் ஒரு நிதர்சமான சாட்சி.

அவர் சொன்ன விளக்கத்தை அப்படியே இங்குத் தருகிறேன். “தம்பி, நேத்து நான் நடந்துக் கொண்ட விதத்துக்கு நீங்க வருத்தப்பட்டிப்ருப்பீக. ஏன் எல்லாருமே வருத்தப்பட்டிருப்பீக. கொஞ்சம் வயசு தம்பி உங்களுக்கு. நீங்கள் எல்லாம் இன்னும் நிறைய வருசம் வாழனும். அந்த இடத்தில் உங்க கால் படக் கூடாது. அதான் கொஞ்ச கோவமா நடந்துகிட்டேன். போய்க் கால வேலைய முடிச்சி, குளிச்சி சாப்பிடுங்க தம்பி..” என்று கூறிவிட்டு சென்றார். அவரை வெறித்துப் பார்த்துக் கொண்டே இருந்தேன். மெல்ல மெல்ல அந்த உருவம் என்னை விட்டு அகன்று மறைந்துச் சென்றது.

அவர் என் கால் படக் கூடாது என்று சொன்ன இடம், மரண தண்டனையை நிறைவேற்றும் “தூக்கு மேடை” இருக்கும் இடம் என்று தெரிந்த போது மனது கனத்தது. ஒப்புக்குகூட அந்த இடத்தில் எங்களைப் போன்றவர்களின் கால்கள் படக் கூடாது என்று நினைத்த, அந்த கடுமையான தோற்றம் கொண்ட மனதிற்குள் எத்தனை அழகானதொரு மனிதநேயம். சிறிய தப்புக்குக்கூட கடும் தண்டனை தரும் அந்த மனதிற்குள் மரண தண்டனைக்கு எதிரான உயரிய சிந்தனை. என் வாழ்வில் என்றும் மறக்க முடியாத சம்பவம் இது. அவர் மறக்க முடியாத உயிரும் கூட.  

அக்டோபர் 10: இன்று உலக மரண தண்டனை ஒழிப்பு நாள்…

Saturday, October 12, 2013

ஒரு சிறைக் காவலரும், மரண தண்டனை ஒழிப்பும்!

1988-ல் நானும், நண்பர்களும் கொடைக்கானல் தொலைக்காட்சி நிலைய வெடிகுண்டு வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை அரசரடியில் உள்ள நடுவண் சிறையில் அடைக்கப்பட்டிருந்தோம். அப்போது சிறைவாசிகளுக்கு 15 நட்களுக்கு ஒருமுறை திரைப்படம் காண்பிப்பார்கள். சிறைவாசிகளின் இறுக்கம் நிறைந்த வாழ்வு சற்று இலகும் தருணம் அவை. எங்களுக்கு அந்த உரிமை மறுக்கப்பட்டிருந்தது.

மிசா காலத்தில் தி.மு.க.வைச் சேர்ந்த சிட்டி பாபு போன்றவர்களை கொன்றும், எண்ணற்றவர்களைத் அடித்து உதைத்துத் துன்புறுத்தியும் புகழ்ப் பெற்ற சிறை அதிகாரி வித்யாசாகர். அவர் அப்போது சிறைத்துறை ஐ.ஜி.யாக இருந்தார். அவர் தான் தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளுக்குப் பொறுப்பு. அவர் மதுரை சிறையைப் பார்வையிட வருவதாகவும், சிறைவாசிகளின் குறைகளைக் கேட்டறிவதாகவும் எங்களுக்கு தகவல் வந்தது.

நாங்கள் எப்போதுமே சிறை அதிகாரிகளின் நேரடிக் பார்வையிலுள்ள ஆறாம் பிளாக் செல்லில் அடைக்கப்படிருந்தோம். அதோடு மட்டுமல்லாமல், தீவிரவாதிகள் அல்லவா? ஆகையால், சிறை அதிகாரிகள் எங்களுக்கு முடிந்தவரை எந்தக் குறையும் இல்லாமல் பார்த்துக் கொள்வார்கள். இருந்தாலும், திரைப்படம் பார்க்க வேண்டும் என்ற கோரிக்கை எங்களுக்குள் எழுந்து, நீண்ட விவாதம் நடந்தது. திரைப்படம் பார்க்க சிறை அதிகாரிகளிடம், அதுவும் கொடூரமான மனித உரிமை மீறலை நிகழ்த்திய அதிகாரியிடம் கேட்பதா என்ற மாபெரும் விவாதம். இதற்குப் புரட்சிகர பிம்பம் இக்கோரிக்கையை எழுப்ப பெரும் தடையாக இருந்தது. நானும், சில தோழர்களும் இக்கோரிக்கையை எழுப்ப வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். பின்னர் ஒரு வழியாக கோரிக்கையை எழுப்புவது என்று முடிவுக்கு வந்தோம். இதில் ஆர்வமாக இருந்த என்னிடமே அந்தப் பொறுப்பும் ஒப்படைக்கப்பட்டது.

அந்த நாளும் வந்தது. சிறை அதிகாரிகள் மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டனர். சிறைவாசிகள் ஏதாவது குறை சொல்லிவிடக் கூடாது என்ற அச்சம்தான் அதற்குக் காரணம். சிறைவாசிகள் வரிசையாக தங்கள் பிளாக் மற்றும் செல்லின் முன் வந்து நிற்க வேண்டும். அதிகாரிகள் வரும் போது வலது கையை உயர்த்தி நீட்ட வேண்டும். அப்போது அதிகாரி நிற்பார். அச்சமயத்தில் அவரிடம் குறைகளைக் கூற வேண்டும். இதுதான் சிறை நடைமுறை. கையை நீட்டி குறை சொன்ன சிறைவாசிகளுக்கு அந்த அதிகாரி சென்றவுடன் கடும் தண்டனை விதிக்கப்படும். சிறை காவலர்கள் அடித்து துவைத்து விடுவார்கள். அவர்களுக்கு சிறை விதிகளை தளர்த்தி அளிக்கப்டும் பீடி, சிகரெட், இன்ன பிற நிறுத்தப்படும். அவரைப் பொருத்தவரையில் மட்டும் சிறை விதிகள் கடுமையாக பின்பற்றப்படும். இதனால், பெரும்பாலும் யாரும் குறை சொல்ல மாட்டார்கள். ஆயுள் தண்டனைச் சிறைவாசிகள் மட்டும் தங்களின் ‘ரெமிஷன்’ முன்விடுதலைக் குறித்து ஏதாவது கேட்பார்கள். மற்றபடி அந்த உயரதிகாரிகளின் வருகை ஒரு சடங்காகவே நடந்து முடியும். ஒழுங்காக ‘மாமூல்’ அளிக்காத சிறைகளுக்கே இதுபோன்ற உயரதிகாரிகள் வருகை இருக்கும் என்ற செய்தியும் உண்டு.

நாங்களும் எங்கள் செல்லின் முன்பு வரிசையாக நின்றிருந்தோம். சிறை அதிகாரிகளுக்கு எங்கள் மீது மரியாதை இருந்தாலும், ஒருபுறம் சந்தேகமும் எப்போதும் உண்டு. ஏதாவது சிக்கல் ஏற்படுத்திவிடுவார்கள் என்ற அச்சம்தான்.

அதிகாரிகள் புடைசூழ வித்யாசாகர் தூரத்தில் வருவதைப் பார்த்தோம். மிகக் கொடூரமான அதிகாரியை சந்திக்க நாங்களும் ஆவலுடன் இருந்தோம். எங்களுக்குப் பாதுகாப்புக்காக நிற்கும் சிறைக் காவலர்கள் கஞ்சிப் போட்டு தேய்த்த உடையின் மிடுக்குடன், மிகுந்த விரைப்புடன் நின்றிருந்தனர். மிக அருகில் வித்யாசாகர் வந்து எங்களிடம் நின்றார். வரிசையில் என்னருகில் நின்றிருந்த பொழிலனிடம் நலம் விசாரித்தார். ‘அப்பா (பாவலரேறு பெருஞ்சித்திரனார்) நலமாக இருக்கிறார்களா’ என்று கேட்டார். அவரும் பதில் அளித்தார். மிசாவில் சென்னை நடுவண் சிறையில் இருந்த பாவலரேறு பெருஞ்சித்திரனார், எம்.ஆர்.இராதா ஆகிய இருவர் மட்டுமே வித்யாசாகரின் தடிக்குத் தப்பியவர்கள் என்பது கூடுதல் தகவல். அந்த கொடூர வரண்ட உள்ளத்திற்குள் இவர்கள் இருவர் மீதும் ஏதோ ஒரு வகையில் மரியாதையும், ஈரமும் இருந்துள்ளது. எங்கள் அருகில் நின்ற அவரின் தோற்றமும், பேச்சும் எந்த வகையிலும் அவரின் கொடூர முகத்தைப் பிரதிபலிக்கவில்லை.

அடுத்து என்னருகில் வந்தவுடன் நானும், ஈகையரசன் அண்ணனும் திடீரென எங்களது கையை உயர்த்தினோம். அன்றாடம் எங்களை நலம் விசாரித்து கவனித்துக் கொள்ளும் சிறை அதிகாரிகள் முகத்தில் அதிர்ச்சி ரேகை ஓடியது. நான் ‘சார்! எங்களுக்கும் திரைப்படம் காண்பிக்க வேண்டும்’ என்றேன். ஈகை அண்ணனும் ஏதோ சொல்ல வந்தார். அதற்குள் வித்யாசாகர் ‘அலோ தெம்’ என்றார். அதாவது, இவர்களை அனுமதிக்கவும் என்று கூறினார். சிறை அதிகாரிகளுக்கு சற்று நிம்மதி அடைந்ததைக் காண முடிந்தது. தூய தமிழில் பேசுவதையே வழக்கமாக கொண்ட எங்களுக்குக் காவல்துறை, சிறைத்துறை அதிகாரிகளை ‘அய்யா’ என்ற அழைக்க மனம் வராது. அதில் ஏதோ அடிமைத்தனம் இருப்பதாக உணர்வோம். கீழ்நிலையில் உள்ளவர்கள் தங்கள் அதிகாரிகளை மூச்சுக்கு மூச்சு ‘அய்யா.. அய்யா’ என்று விளிப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

எங்களுக்கான திரைப்படம் பார்க்கும் நாளும் வந்தது. சிறைக்குள் பெரிய திரையரங்கம் ஒன்றைக் கட்டி வைத்துள்ளார்கள். சிறை நுழைவு வாயிலில் நுழைந்தவுடன் வலதுபுறம் சிறைவாசிகளுக்கான பிரத்தியோக திரையரங்கு உள்ளது. மாலை 6 மணிக்கு அடைப்புக் கணக்கு முடிந்து அனைவரும் பிளாக், செல்லில் அடைக்கப்பட்டவுடன், ஒவ்வொரு பிளாக், செல்லாக திறந்து அனைவரையும் எண்ணி வரிசையாக அனுப்புவார்கள். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் சிறைவாசிகள் தப்பித்துச் செல்லும் சம்பவங்கள் நிறைய நடந்துள்ளதால் கடும் பாதுகாப்பு இருக்கும். எங்களின் வரிசைக்கு அருகிலேயே சிறைக் காவலர்களும் வரிசையாக நிற்பார்கள். வரிசை நத்தைப் போல் ஊர்ந்து பொறுமையாக நகர்ந்து, நகர்ந்து திரையரங்கை அடைய ஒரு மணிநேரம்கூட ஆகும்.

திரையரங்கை நெருங்கிக் கொண்டிருந்தோம். அப்போது அருகில் ஒரு நீண்ட நெடிய மதில் சுவறு கொண்ட மேற்கூரை இல்லாத அறைக்குள் ஒரு சிறிய கோயில் ஒன்று தென்பட்டது. அந்த அறை பெரிய இரும்புக் கதவுப் போட்டு பூட்டப்பட்டிருந்தது. அந்தக் கதவு வழியாக அந்த திறந்த வெளி அறைக்கு செல்ல நிறைய படிகள் அமைக்கப்பட்டிருந்தன. நீண்ட நேரம் நின்றுக் கொண்டே இருந்ததினால் எனக்கு சற்று கால் வலி ஏற்பட்டது. நான் அந்தப் படிக்கட்டுகளின் ஒன்றில் சற்று அமர்ந்தேன். இதை தூரத்தில் இருந்துக் கவனித்துக் கொண்டிருந்த எனக்கு நன்கு அறிமுகமான சிறைக்காவலர் ஒருவர் என்னை நோக்கி வேகமாக ஓடிவந்தார். என்னை மிகவும் கோபமாகவும், சொல்ல முடியாத வார்த்தைகளாலும் திட்டித் தீர்த்தார். ஒரு சமயத்தில் என்னை அடிக்கவும் முற்பட்டார். ஆனால், அடிக்கவில்லை.

சிறைவாசிகள் யாருக்கும் அந்த சிறைக் காவலரைப் பிடிக்காது. கடுமைக்குப் பெயர் பெற்றவர். சின்ன தவறுக்குக்கூட சிறைவாசிகளை அடிக்க தயங்கமாட்டார். எனக்கு சிறிய வயது என்பதாலும், எந்தத் தவறும் செய்யாத போதும் அவர் என்னிடம் நடத்துக் கொண்ட விதம் மிகவும் அவமானமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது. சக தோழர்களுக்கும், பிற சிறைவாசிகளுக்குமே ஒன்றும் புரியவில்லை. என் கண்ணில் எவ்வளவு அடக்கியும் நீர் வழிந்து ஓடியது. என் அழுகையை நான் மறைக்க முயன்று தோல்வியுற்றேன்.

இந்த மன அழுத்தத்துடனே நான் திரையரங்கிற்குச் சென்றேன். அன்றைக்கு ‘அந்தமான் காதலி’ படம் திரையிட்டார்கள். சிவாஜி, சுஜாதா ஆகியோர் போட்டிப் போட்டுக் கொண்டு நடித்த படமது. எனக்குப் படம் பார்க்க மனம் ஒப்பவில்லை. எல்லோரும் ரசித்துப் படம் பார்த்துக் கொண்டிருக்கும் அவ்வேளையில் நான் மட்டும் அகமும், புறமும் அழுதுக் கொண்டே இருந்தேன். அந்தக் காவலர் நடந்துக் கொண்ட விதம் என்னை திரும்பத் திரும்ப நினைவில் வந்து அழுத்தியது. எப்போது படம் முடிந்து செல்லிற்கு செல்வோம் என்ற எண்ணத்திலேயே அமர்ந்திருந்தேன்.

மற்ற சிறைவாசிகள் எல்லாம் தரையில் அமர்ந்திருந்தனர். எங்களைத் தனிமையாக வைத்துப் பாதுக்காக்க வேண்டும் என்பதால், நாங்கள் மட்டும் பள்ளிக்கூட மர பெஞ்சு போன்ற பெஞ்சில் அமர்ந்துப் படம் பார்க்க வைக்கப்பட்டோம். டூரிங் தியேட்டரில் தரை டிக்கெட், பெஞ்ச் டிக்கெட் போல. திடீரெனெ படத்தை நிறுத்திவிட்டு விளக்கைப் போட்டுப் பார்ப்பார்கள். எங்களின் எண்ணிக்கை சரியாக இருக்கிறதா என்று சரி பார்ப்பார்கள். ஒருவழியாக படம் முடிந்தது. நாங்கள் எங்களது செல்லிற்குத் திரும்பினோம். இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை. சிறைக் கம்பியின் ஊடாக வெளியே மெல்லிய ‘குண்டு பல்ப்’ வெளிச்சத்தில் தெரியும் சிறைப் பகுதிகளின் நிழல் படிமங்களை வெறித்துப் பார்த்துக் கொண்டே கிடந்தேன். அழுகையும், அரைகுறை தூக்கமும் கலந்த அந்த இரவு என் வாழ்வில் மறக்க முடியாத சூது கவ்விய இரவு எனலாம்.

வழக்கம் போல் பொழுது விடிந்தது. தினம்தோறும் காலை 6 மணிக்கு கீழ்நிலை சிறை அதிகாரிகள் வந்து எங்களை எழுப்பி, கணக்கெடுத்துச் செல்வார்கள். அதாவது, நாங்கள் அனைவரும் உயிரோடு இருக்கிறோமா? என்று பார்த்துச் செல்வார்கள். வழக்கமாக வரும் அந்த அதிகாரியும், சிறைக் காவலர்களும் வந்து கணக்கெடுத்தார்கள். பின்னர், கதவுகளைத் திறந்து எங்களை காலைக்கடன் முடிக்கவும், குளிக்கவும் வெளியே அனுப்பினார்கள். அந்தக் குழுவில் நேற்று என்னிடம் மிக மோசமாக நடந்துக் கொண்ட சிறைக் காவலரும் இருந்தார். நான் அவசரம் அவசரமாக வெளியே வந்து நேற்று நடந்த சம்பவம் பற்றி அவரிடம் விளக்கம் கேட்டேன். அவர் அளித்த விளக்கம் இன்றும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. நான் என் கவலைகளை எல்லாம் மறந்து மகிழ்ச்சி அடைந்தேன். இவ்வளவு கடுமையாக நடந்துக் கொள்ளும் அந்த சிறைக் காவலருக்குள் இப்படி ஒரு மனிதாபிமானமா? நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. எண்ணி எண்ணிப் பெருமைப்படும் அளவுக்கு அவர் மீது எனக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் மரியாதை கூடியது. அவர் எங்களுக்குள் மிகவும் உயர்ந்து நின்றார். எளிய மனிதர்களுக்குள் நல்ல குணங்கள் குடிக் கொண்டிருக்கும் என்பதற்கு அவரும் ஒரு நிதர்சமான சாட்சி.

அவர் சொன்ன விளக்கத்தை அப்படியே இங்குத் தருகிறேன். “தம்பி, நேத்து நான் நடந்துக் கொண்ட விதத்துக்கு நீங்க வருத்தப்பட்டிப்ருப்பீக. ஏன் எல்லாருமே வருத்தப்பட்டிருப்பீக. கொஞ்சம் வயசு தம்பி உங்களுக்கு. நீங்கள் எல்லாம் இன்னும் நிறைய வருசம் வாழனும். அந்த இடத்தில் உங்க கால் படக் கூடாது. அதான் கொஞ்ச கோவமா நடந்துகிட்டேன். போய்க் கால வேலைய முடிச்சி, குளிச்சி சாப்பிடுங்க தம்பி..” என்று கூறிவிட்டு சென்றார். அவரை வெறித்துப் பார்த்துக் கொண்டே இருந்தேன். மெல்ல மெல்ல அந்த உருவம் என்னை விட்டு அகன்று மறைந்துச் சென்றது.

அவர் என் கால் படக் கூடாது என்று சொன்ன இடம், மரண தண்டனையை நிறைவேற்றும் “தூக்கு மேடை” இருக்கும் இடம் என்று தெரிந்த போது மனது கனத்தது. ஒப்புக்குகூட அந்த இடத்தில் எங்களைப் போன்றவர்களின் கால்கள் படக் கூடாது என்று நினைத்த, அந்த கடுமையான தோற்றம் கொண்ட மனதிற்குள் எத்தனை அழகானதொரு மனிதநேயம். சிறிய தப்புக்குக்கூட கடும் தண்டனை தரும் அந்த மனதிற்குள் மரண தண்டனைக்கு எதிரான உயரிய சிந்தனை. என் வாழ்வில் என்றும் மறக்க முடியாத சம்பவம் இது. அவர் மறக்க முடியாத உயிரும் கூட.                                                                  

இன்று உலக மரண தண்டனை ஒழிப்பு நாள்…