Monday, February 07, 2011

திராவிட இயக்க சுயமரியாதை வீரர் தம்பு. சுப்ரமணி படத்திறப்பு - நினைவேந்தல் நிகழ்வு

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் திராவிட இயக்க சுயமரியாதை வீரர் தம்பு. சுப்ரமணி படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு, 05.02.2011 சனிக்கிழமை காலை 9.30 மணியளவில்,புதுச்சேரி, நேதாஜி நகர்-2, ரங்கநாதன் வீதியில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமைத் தாங்கினார்.

இதற்கு கரிக்கலாம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் கோ.அ.ஜெகன்நாதன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு அமைப்புக் குழு உறுப்பினர் ஒவியர். இரா.இராஜராஜன், புதுச்சேரி மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவநர் சீ.சு.சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அமைப்புச் செயலர் சு.பாவாணன் தொடக்கவுரை ஆற்றினார்.

பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பிரபா.கல்விமணி படத்தைத் திறப்பு வைத்து நினைவேந்தல் உரையாற்றினார்.

இதில், சிங்காரவேலர் முன்னேற்ற கழகத் தலைவர் கோ.செ.சந்திரன், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா. அழகிரி, புரட்சியாளர் அம்பேத்கர் மக்கள் படை அமைப்பாளர் சி.மூர்த்தி, செந்தமிழர் இயக்க அமைப்பாளர் ந.மு.தமிழ்மணி, மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் எம்.ஏ.அஷ்ரப் (எ) ரகமத்துல்லா, மாவட்டச் செயலர் ஐ.முகம்மது சலீம், புதுவை கிறிஸ்துவர் கூட்டமைப்பின் தலைவர் சாமி ஆரோக்கியசாமி, புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் ஒருங்கிணைப்பாளர் இரா.சுகுமாரன், பெற்றோர், ஆசிரியர்,மாணவர் நலச் சங்கத் தலைவர் மு.நாராயணசாமி, புதுச்சேரி மக்கள் விழிப்புணர்ச்சி இயக்க செயலாளர் பா. சரவணன் செயலாளர் பா.சரவணன், ஆகியோர் கலந்துக் கொண்டு நினைவேந்தல் உரையாற்றினர்.

முடிவில் தம்பு. சுப்ரமணியின் மகனும், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு அமைப்புக் குழு உறுப்பினருமான சு. காளிதாஸ் நன்றி கூற நிகழ்வு முடிவு பெற்றது.;


தம்பு.சுப்ரமணி ( 20-11-1933 - 13-01-2011 )

புதுச்சேரி உப்பளம் நேத்தாஜி நகர் 2-ல் வாழ்ந்து வந்த திராவிட இயக்க சுயமரியாதை வீரர் திரு. தம்பு. சுப்ரமணி அவர்கள் சென்ற 13-01-2011 அன்று உடல் நலம் பாதிக்கப்பட்டு மறைவுற்றார். இவர் உப்பளம் பகுதி மக்களால் குரு என்று அன்போடு அழைக்கப்பட்டவர்.

இளம் பருவத்தில் தந்தை பெரியாரின் கொள்கையில் ஈர்க்கப்பட்டு சுயமரியாதை இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோர் மீது பற்றுக் கொண்டு இறுதிநாள் வரையில் கொள்கை மாறாமல் வாழ்ந்தவர்.

அப்போதைய திராவிடர் கழகத் தலைவர்களான பாரதிதாசன், ம. நோயேல், புதுவைச் சிவம், ஏத்துவால் ரங்கசாமி, ப. கனகலிங்கம், அவுக்கா பெருமாள், சாமிநாதன் ஆகியோரோடு நெருங்கிப் பழகி பகுத்தறிவுப் பணியாற்றியவர். அப்போதைய புதுச்சேரி திராவிடர் கழகம் தீண்டாமைக்கு எதிராகப் போராடிய வரலாறு குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கோயில் நுழைவுப் போராட்டம், மாதா கோயிலில் நடுக்கட்டை உடைப்புப் போராட்டம் போன்றவை ஒடுக்கப்பட்ட மக்கçள எழுச்சிப் பெற செய்தது.

உப்பளத்தில் உருவாக்கப்பட்ட தன்மதிப்புக் கழகத்தில் இணைந்து பணியாற்றியவர். 1955-ஆம் ஆண்டு தந்தை பெரியார் அவர்கள அழைத்து வந்து, எத்துவால் துய் மெர்த்தேன் திடலில் (தற்போது பெரியார் போக்குவரத்து கழகப் பணிமனை) தன்மதிப்புக் கழகம் திருவள்ளுவர் விழாவை நடத்தியது. அப்போது ஈஸ்வரன் கோயில் வீதியில் இருந்த விடுதியில் தங்கியிருந்த தந்தை பெரியாரை சந்தித்து உரையாடிய வரலாற்றுக்குச் சொந்தக்காரர். திராவிட இயக்கத்தின் மீது மிகுந்த பற்றுக் கொண்ட இவர் பகுத்தறிவு ஏடு, விடுதலை நாளிதழ் போன்றவற்றின் தீவிர வாசகராக இருந்தார்.

தன்மதிப்புக் கழகத் தோழர்கள் எத்துவால் ரங்கசாமி, தூய்ழான் தர்மசிவம், இராமகிருட்டிணன், எழிலன், பெரம்புக்கடை பெருமாள், தொல்காப்பியர், மாணிக்கவேல் சகேர் போன்றவர்களோடு இணைந்து பகுத்தறிவு கருத்துக்களைப் பரப்பியவர்.

மூலிகை மருத்துவத்திலும் புலமைப் பெற்று விளங்கியவர். நாய் கடிக்கு இவர் கொடுத்த மருந்தால் பலர் உயிர் பிழைத்ததை அப்பகுதி மக்கள் இன்றும் நினைவு கூர்கின்றனர்.

இவருக்கு மனைவி அஞ்சலை, காளிதாஸ், கார்த்திகேயன் ஆகிய மகன்களும், விமலா, விஜயா, வினோலியா ஆகிய மகள்களும் உள்ளனர். இதில் காளிதாஸ் மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்புக் குழு உறுப்பினர். திரு. தம்பு. சுப்ரமணி அவர்கள் தந்தை பெரியார் வழியில் ஆற்றிய பணிகள் என்றும் மறக்கக்கூடியவை அல்ல. காலத்தால் நிலைத்து நிற்கும் அவரது கொள்கைப் பணிகளைப் போற்றுவோம். பின்பற்றுவோம்.

Thursday, February 03, 2011

முன்விடுதலை செய்யப்படாததால் ஆயுள் தண்டனைக் கைதி மரணம்: நீதிவிசாரணைக்கு உத்தரவிட கோரிக்கை!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 03.01.2011 அன்று விடுத்துள்ள அறிக்கை:

காலாப்பட்டு சிறையில் 15 ஆண்டுகளாக அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனைக் கைதி அப்பாராஜ் உரிய காலத்தில் முன்விடுதலை செய்யப்படாததால் மனமுடைந்து, உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டு மரணமடைந்துள்ளார். இதற்கு அரசும், சிறை அதிகாரிகளுமே காரணம் என்பதால் இது குறித்து புதுச்சேரி அரசு நீதிவிசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.

கிருமாம்பாக்கம், பிள்ளையார்குப்பத்தைச் சேர்ந்த அப்பாராஜ் ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனைப் பெற்று கடந்த 15 ஆண்டுகளாக காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர் 14 ஆண்டுகள் சிறை தண்டனை முடித்ததால் தன்னை முன்விடுதலை செய்ய வேண்டுமென அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். புதுச்சேரி அரசு முக்கிய தினங்களில் 14 ஆண்டுகள் சிறையில் கழித்த ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்து வருகிறது.

இந்நிலையில், கடந்த ஜனவரி 24-ம் தேதியன்று அப்பாராஜை விடுதலை செய்ய வேண்டுமென கோரி காலாப்பட்டு சிறையில் தண்டனைக் கைதிகள் அனைவரும் உண்ணாவிரதம் இருந்துள்ளனர். அப்போது உண்ணாவிரதம் இருந்த கைதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய சிறைத்துறை ஐ.ஜி., சென்ற குடியரசுத் தினத்தன்று அப்பராஜை விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியுள்ளார். அப்போது அருகிலிருந்த சிறைக் கண்காணிப்பாளர் ஜெயகாந்தனிடம் அதற்கான கோப்பை முறைப்படி அனுப்பி வைக்கும்படி கூறியுள்ளார். ஆனால், மேற்சொன்ன அதிகாரி இதுதொடர்பான கோப்பை அனுப்பி வைக்காததோடு, இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருந்துள்ளார்.

குடியரசுத் தினத்தன்று விடுதலை ஆவோம் என்று நம்பிக்கையுடன் இருந்த அப்பாராஜ் அதிகாரிகளின் அலட்சியத்தால் விடுதலை செய்யப்படாததால் மிகவும் மனமுடைந்து மன உளைச்சலோடு இருந்துள்ளார். மேலும், 70 வயதான அவருக்கு இருதய மற்றும் காச நோய் இருந்துள்ளது. இந்நிலையில், நேற்றைய தினம் மனமுடைந்து இருந்த அவரது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு இரவு அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இன்று அதிகாலை மரணமடைந்துள்ளார்.

தேசிய மனித உரிமைகள் ஆணையம் 1997 மற்றும் 2003 ஆகிய ஆண்டுகளில் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசின் தலைமைச் செயலர்களுக்கும் ஒரு பரிந்துரையை அனுப்பியுள்ளது. அதில், 7 ஆண்டுகள் சிறை தண்டனை முடித்த மற்றும் 5 ஆண்டுகள் சிறை தண்டனை முடித்த 65 வயதைத் தாண்டிய ஆயுள் தண்டனைக் கைதிகளை முன்விடுதலை செய்ய வேண்டுமென அறிவுறுத்தியுள்ளது.

தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் அண்ணா பிறந்த நாளில் 7 ஆண்டுகள் சிறையில் இருந்த ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்து வருகிறது. இதுவரையில் கடந்த 2008 முதல் 2010 வரையில் ஆயுள் தண்டனைக் கைதிகள் 1509 பேரை விடுதலை செய்துள்ளது. இதைச் சுட்டிக்காட்டி மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் பலகட்டப் போராட்டங்கள் நடத்தியும் ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்வதில் புதுச்சேரி அரசு தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகிறது.

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் பரிந்துரைகளை மதிக்காமலும், 14 ஆண்டுகள் சிறை தண்டனை முடித்த அயுள் தண்டனைக் கைதிகளை முன்விடுதலை செய்ய வேண்டுமென புதுச்சேரி அரசு பிறப்பித்துள்ள அரசாணையை மீறியும் செயல்பட்டதன் மூலம் ஒரு உயிர் பலியாவதற்கு அரசும், சிறைத் துறையும் காரணமாக இருந்துள்ளது.

மேலும், இதற்கு முழுக் காரணமான சிறைக் கண்காணிப்பாளர் ஜெயகாந்தன் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 7 ஆண்டுகள் சிறை தண்டனை முடித்த ஆயுள் தண்டனைக் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். அப்பாராஜ் மரணத்திற்கு அரசுதான் முழுப் பொறுப்பு என்பதால் அவரது குடும்பத்திற்கு ரூ. 5 லடசம் இழப்பீடு வழங்க வேண்டும்.