Wednesday, March 13, 2024

சிறுமி பாலியல் வன்கொடுமைச் செய்து படுகொலை: விரைந்து குற்ற அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (13.03.2024) விடுத்துள்ள அறிக்கை:

ஒன்பது வயது சிறுமி பாலியல் வன்கொடுமைச் செய்து கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட வழக்கில் விரைந்து குற்ற அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டுமென 'மக்கள் உரிமைக் கூட்டமைப்பு' சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.

புதுச்சேரியில் ஒன்பது வயது சிறுமி பாலியல் வன்கொடுமைச் செய்து கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் நாடெங்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளிகள் இருவர் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். குற்றவாளிகளை உடனே தூக்கிலிடுங்கள், என்கவுன்டர் செய்யுங்கள், எங்களிடம் ஒப்படையுங்கள் போன்ற கருத்துகள் பேசப்படுகின்றன. ஆனால், இது நிலவுகிற சட்டப்படி செய்ய முடியாதவை.

சட்டமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்களின் தலைவர்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் முதலமைச்சர், உள்துறை அமைச்சர் உள்ளிட்டோரைச் சந்தித்து முறையிட்டதால் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. ரூபாய் 20 இலட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டது. தற்போது முதல்கட்டமாக 7 இலட்சத்து 12 ஆயிரத்து 500 ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமைகள் தடுப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.    

இக்கொடூரச் சம்பவத்திற்குக் கஞ்சா முக்கிய காரணமாக உள்ளது. கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களைத் தடுப்பதில் அரசு படுதொல்வி அடைந்துள்ளது. பள்ளிகளில் தாராளமாகப் போதைப் பொருள் புழங்குகிறது. இதைத் தடுக்கக் கல்வித்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. போதைப் பொருட்களைத் தடுக்கக் காவல்துறை, கல்வித்துறை போன்ற தொடர்புடைய துறைகள் இணைந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

போதைப் பொருட்கள் தமிழகம் வழியாக புதுச்சேரிக்கு வருவதாகத் தெரிகிறது. இதைத் தடுக்கத் தமிழக அரசு மற்றும் காவல்துறை உயரதிகாரிகளுடன் கலந்தாலோசித்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். போதைப் பொருள் புழக்கத்தை ஒழிக்கவில்லை என்றால் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்வைத் தடுக்க முடியாது.

போதைப் பொருள் தடுக்க உருவாக்கப்பட்ட காவல்துறைத் தனிப் பிரிவுக்கு வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் வழங்கும் முடிவு சரியானது. இப்பிரிவின் செயல்பாடுகளை நேரடியாக டி.ஜி.பி., மேற்பார்வையிட்டு உரிய ஆலோசனைகள் வழங்கிக் கண்காணிக்க வேண்டும்.

இக்கொடிய குற்றத்திற்குப் போதைப் பொருள்களைக் கட்டுப்படுத்தாதது, காவல்நிலையத்தில் புகார் அளித்தும் காணாமல் போன சிறுமியை நான்கு நாட்களாக கண்டுபிடிக்காதது என அரசின் அலட்சியமே முக்கிய காரணமாகும். இதற்கு அரசே முழுப் பொறுப்பேற்க (Vicariously liable) வேண்டும்.

குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனைப் பெற்றுத் தருவதில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் மக்கள் உரிமைக் கூட்டமைப்பு மற்றும் சமூக, ஜனநாயக இயக்கங்கள் துணைநிற்பதோடு, கடமையாக கருதிச் செயல்படும்.

எனவே, புதுச்சேரி அரசு இவ்வழக்கில் விரைந்து குற்ற அறிக்கைத் தாக்கல் செய்து, குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அறிவித்தபடி நிவாரணம் முழுவதையும் உடனே வழங்க வேண்டும்.


Sunday, February 04, 2024

நீதிபதி கோ.இராஜசூர்யா நினைவேந்தல் - மலரஞ்சலி நிகழ்ச்சி!


மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் இன்று (04.02.2024) காலை 10 மணியளவில், மக்கள் தலைவர் வ.சுப்பையா நினைவு இல்லத்தில் சென்னை  உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி கோ.இராஜசூர்யா நினைவேந்தல் மலரஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. 

நிகழ்ச்சிக்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமைத் தாங்கினார். 

மாண்புமிகு வேளாண்துறை அமைச்சர் திரு. தேனீ க.ஜெயக்குமார், சட்டமன்ற உறுப்பினர் திரு. கோ.நேரு (எ) குப்புசாமி மலரஞ்சலி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். 

மக்கள் வாழ்வுரிமை இயக்கச் செயலாளர் கோ.அ.ஜெகன்நாதன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், திராவிடர் கழக மண்டலத் தலைவர் வே.அன்பரசன், தமிழர் களம் செயலாளர் கோ.அழகர், தமிழர் தேசிய முன்னணி தலைவர் ந.மு.தமிழ்மணி, புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவுநர் சீ.சு.சுவாமிநாதன், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படைத் தலைவர் ஆ.பாவாடைராயன்,  தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கச் செயலாளர் இராஜா, புதுச்சேரி தன்னுரிமைக் கழகத் தலைவர் தூ.சடகோபன், தமிழ்த் தேசிய பேரியக்கத் தலைவர் இரா.வேல்சாமி, இராவணன் பகுத்தறிவு இயக்கத் தலைவர் இர.அபிமன்னன், புதுவைத் தமிழ் எழுத்தாளர் கழகச் செயலாளர் புதுவைத் தமிழ்நெஞ்சன், விடுதலை வாசகர் வட்டம் தலைவர் கோ.மு.தமிழ்ச்செல்வன், அகில இந்திய மஜ்லிஸ் கட்சி நகரத் தலைவர் பலுலுல்லா, பெரியார் சிந்தனையாளர் இயக்கத் தலைவர் அ.ச.தீனா, புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் தலைவர் இரா.சுகுமாரன், இயற்கை மற்றும் கலாச்சார புரட்சி இயக்கத் தலைவர் பிராங்கிளின் பிரான்சுவா, ஆதிதிராவிடர் உரிமை இயக்கத் தலைவர் ச.பாலசுந்தரம், இந்திய மக்கள் சக்தி பாதுகாப்பு இயக்கத் தலைவர் அர.அரிகிருஷ்ணன், அண்ணல் காந்தி மக்கள் இயக்கத் தலைவர் வேணு.ஞானமூர்த்தி, மக்கள் உரிமைக் கட்சித் தலைவர் எம்.மணிமாறன், ஓவியர்கள் இரா.இராஜராஜன், மார்கண்டன், சட்டக் கல்லூரி மாணவி இரா.சுகன்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டு மலரஞ்சலி செலுத்தி நினைவேந்தல் உரையாற்றினர். 

இந்நிகழ்ச்சியில் கீழ்காணும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

புதுச்சேரி காவலர் புகார் ஆணையம் (Police Complaints Authority) நீதிபதி கோ.இராஜசூர்யா தலைமையில் சிறப்பாக செயல்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க உதவியது. ஆனால், இந்த ஆணையத்திற்கு புதிய நீதிபதியைத் தலைவராக நியமிக்காமல் ஆட்சியாளர்களால் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசு உடனடியாக தகுதியான, நேர்மையான உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி தலைமையில் உறுப்பினர்களை நியமித்து காவலர் புகார் ஆணையத்தைச் செயல்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும். இல்லையேல் உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடருவது என தீர்மானிக்கப்பட்டது.