Friday, March 04, 2011

பொதுப்பணித்துறை பொறியாளர்கள் 13 பேரின் இடமாற்றத்தை ரத்து செய்ய வேண்டும்!

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு நடத்தை விதிகள் அமுலில் உள்ள போது விதிகளுக்கு மாறாக பொதுப்பணித்துறை இளநிலைப் பொறியாளர்கள் 13 பேரை இடமாற்றம் செய்ததை ரத்து செய்ய வேண்டி ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான ராகேஷ் சந்திராவிடம் இன்று மனு அளிக்கப்பட்டது.

மனுவில் கூறியிருப்பதாவது:

பொதுப்பணித்துறையில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றும் இளநிலைப் பொறியாளர்கள் 13 பேரை கடந்த பிப்ரவரி 28-ந் தேதியிட்ட உத்தரவின் அடிப்படையில் தலைமைப் பொறியாளர் இடமாற்றம் செய்துள்ளார். இந்த இடமாற்ற உத்தரவை மார்ச் 2-ந் தேதியன்று பெற்றுக் கொள்ளுமாறு இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகளிடம் கட்டாயப்படுத்தி உள்ளார்.

மேலும், இடமாற்ற உத்தரவைப் பெற்றுக் கொண்டு அவர்கள் பணியாற்றும் இடத்தில் இருந்து மார்ச் 1-ந் தேதியன்றே விடுவிக்கப்பட்டதாக எழுதிக் கையெழுத்துப் போடுமாறும் வற்புறுத்தியுள்ளார். இதனை ஏற்காமல் இளநிலைப் பொறியாளர்கள் இடமாற்ற உத்தரவை வாங்காமல் இருந்து வருகின்றனர்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமுலில் உள்ள போது இதுபோன்ற இடமாற்றம் செய்வது சட்டத்திற்கும், விதிகளுக்கும் புறம்பானது. மேலும், தேர்தல் நடத்தை விதிகளை மீறுவது சட்டப்படி கிரிமினல் குற்றமாகும்.

எனவே, தாங்கள் இதுகுறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிடவும், சட்ட விதிகளுக்கு மாறான இந்த இடமாற்ற உத்தரவை ரத்து செய்து அரசு நிர்வாகத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்திடுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Wednesday, March 02, 2011

அரசு மருத்துவ கல்லூரி ஊழியர்கள் மீது போலீஸ் தடியடி: நீதி விசாரணைக்கு கோரிக்கை!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 02.03.2011 அன்று விடுத்துள்ள அறிக்கை:

பணி நிரந்தரம் செய்ய கோரி மறியல் போராட்டம் நடத்திய அரசு மருத்துவ கல்லூரி ஊழியர்கள் மீது போலீசார் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தியது குறித்து பணியில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.

புதுச்சேரி அரசு மருத்துவ கல்லூரி ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்றைய தினம் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது தன்வந்தரி நகர் போலீசார் அவர்கள் மீது தடியடி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், ஏராளமான பெண்கள் உட்பட ஊழியர்கள் காயமடைந்துள்ளனர்.

மேலும், பெண் ஊழியர்களை ஆண் போலீஸ் அதிகாரிகள் மானபங்கப்படுத்தும் நோக்கத்தோடு தொடக் கூடாத இடத்தில் தொட்டு அப்புறப்படுத்தியுள்ளனர். பெண் போலீசார் இருந்தும் இவ்வாறு போலீஸ் அதிகாரிகள் நடந்துள்ளது தவறானது. இந்த போலீஸ் அத்துமீறலுக்கு பத்திரிகைகளில் வெளிவந்துள்ள புகைப்படங்களே சாட்சியமாக அமைந்துள்ளன.

அண்மைக் காலமாக புதுச்சேரி போலீசார் தேவையில்லாமல் 144 தடை உத்தரவு போட்டு வருகின்றனர். மக்களிடம் செல்வாக்கு குறைந்து வரும் காங்கிரஸ் அரசு மக்களின் நியாயமான போராட்டங்களை ஒடுக்க காவல்துறையை பயன்படுத்துவது தவறான போக்காகும். இதற்கு காவல்துறை உடன்படுவது சட்டப்படி குற்றமாகும்.

காவல்துறை அரசியல் குறுக்கீடு இல்லாமல் சுயேட்சையாக செயல்பட வேண்டுமென உச்சநீதிமன்றம் பல தீர்ப்பளித்துள்ளது. மேலும், இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் கடந்த 2010 மார்ச் 3-ந் தேதியன்று மாநில பாதுகாப்பு ஆணையம் (State Security Commission) ஒன்றை மத்திய உள்துறை அமைச்சகம் அமைத்துள்ளது. இதில் புதுச்சேரி சார்பில் தலைமைச் செயலர் உறுப்பினராக உள்ளார். இந்த ஆணையம் இதுகுறித்து விசாரித்து தவறிழைத்த போலீஸ் அதிகாரிகள் அனைவரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், தவறு செய்த போலீஸ் அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க கேட்டு தேசிய மனித உரிமைகள் ஆணையம், மகளிர் ஆணையம், மாநில பாதுகாப்பு ஆணையம் மற்றும் புதுச்சேரி அரசின் உயர் அதிகாரிகள் உள்ளிட்டவர்களுக்கு விரிவான புகார் மனு அனுப்ப உள்ளோம். மேலும், புதுச்சேரி அரசு இதுகுறித்து பணியில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென வலியுறுத்துகிறோம்.