Friday, June 12, 2009

ரூ. 10 கோடி மதிப்புள்ள வீட்டை அபகரிக்க கொலை: சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட கோரிக்கை

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 12.06.2009 அன்று விடுத்துள்ள அறிக்கை:

புதுச்சேரி நகரத்தில் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை அபகரிக்கும் நோக்கத்தோடு மெக்கானிக் ஒருவரை கொலை செய்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டுமென அரசை வற்புறுத்துகிறோம்.

புதுச்சேரியில் கடந்த 98-ம் ஆண்டு வீடு, நிலம் அபகரிக்கும் செயல் வெளிச்சத்திற்கு வந்தது. வீடு, நிலம் அபகரிக்கும் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தொடர்ந்து போராடியதன் விளைவாக இச்செயல் தற்காலிகமாக நின்று போனது.

ஆனால், தற்போது மீண்டும் வீடு, நிலம் அபகரிக்கும் குற்றம் தலைத் தூக்கியுள்ளது. வீடு, நிலம் அபகரிக்கும் கும்பல் கொலை செய்யும் அளவிற்கு துணிந்ததற்குப் போலீசார் கடும் நடவடிக்கை எடுக்காததே காரணம்.

தற்போது இக்கொலை வழக்கில் முக்கிய குற்றாவாளிகளைக் காப்பாற்றும் நோக்கத்தோடு அப்பாவிகள் சிலரை போலீசார் பிடித்து வைத்துள்ளதாக தெரிகிறது. இக்கொலைக்குப் பின்னணியில் அரசியல் பிரமுகர்கள், போலீஸ் அதிகாரிகள் இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

எனவே, இக்கொலை வழக்கை சி.பிஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டுமென வலியுறுத்துகிறோம். அண்மைக் காலமாக சி.பி.ஐ. பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருவது புதுச்சேரி மக்களிடையே சி.பி.ஐ. மீது நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், வீடு, நிலம் அபகரிக்கும் திட்டத்தோடு நடந்த இக்கொலை குறித்து ஆதாரங்களைத் திரட்டி மத்திய உள்துறைக்கும், சி.பி.ஐ. உயர் அதிகாரிகளுக்கும் மனு அளிக்க உள்ளோம்.