Wednesday, January 16, 2008

ஜல்லிக்கட்டுக் காளைகள் மைதானத்திற்குள் நடந்துதான் வர வேண்டும் - உச்சநீதிமன்றம் நிபந்தனை


புகைப்படம்: கோ.சுகுமாரன்
(2007-இல் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின் போது எடுத்தப் படம்)


ஜல்லிக்கட்டுக் காளைகள் மைதானத்திற்குள் நடந்துதான் வர வேண்டும் உள்ளிட்ட பல நிபந்தனைகளை விதித்து உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டிற்கு அனுமதி வழங்கியுள்ளது.

தமிழகத்தில் பொங்கல் விழாவையொட்டி ஆண்டு தோறும் ஜல்லிக்கட்டு நடைபெறும் வழக்கம். இதில் காளைகளைக் கொடுமைப்படுத்துவதாகக் கூறி விலங்குகள் நல வாரியத்தின் சார்பில் ஜல்லிக்கட்டுக்குத் தடை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு கடந்த 11-01-2008 அன்று தடை விதித்தது.

இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தடையை மீறி பல கிராமங்களில் ஜல்லிக்கட்டுகள் நடத்தப்பட்டன. பல இடங்களில் போராட்டங்கள், உண்ணாவிரதங்கள் நடந்தன. அரசியல் கட்சிகள் ஜல்லிக்கட்டு நடைபெற தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்தன.

ஜல்லிக்கட்டுக்கு புகழ்பெற்ற அலங்காநல்லூரில் 15-01-2008அன்று பொங்கல் விழா கருப்பு தினமாக கடைப்பிடிக்கப்பட்டது.

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் தடையை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு 15-01-2008 அன்று தலைமை நீதிபதி பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.

விசாரணையின்போது 400 ஆண்டு காலமாக பாரம்பரியமாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. இதற்குத் தடை விதிப்பதால் மக்களின் மத உணர்வைப் பாதிக்கும் என்று அரசுத் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

தடையை நீக்காவிட்டால் சட்டம்- ஒழுங்கு நிலைப் பாதிக்கப்படும். தடையை மீறி வழக்கம் போல ஜல்லிக்கட்டு நடத்த சில கிராமங்களில் மக்கள் முடிவு செய்திருக்கிறார்கள் என்று உளவுத்துறை தகவல் தெரிவித்து இருப்பதையும் தமிழக அரசு சார்பில் சுட்டிக் காட்டப்பட்டது.

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத உணர்வு பற்றிய பிரச்சினையை இழுத்ததற்கு உச்சநீதிமன்றம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், ஆர்.வி. ரவிந்திரன், ஜே.எம். பச்சால் ஆகியோரை கொண்ட உச்சநீதிமன்ற பெஞ்ச் கூறுகையில், "11-ஆம் நாளன்று வழங்கிய தீர்ப்பை மறு ஆய்வு செய்யும்படி (தடையை நீக்க) தமிழக அரசு கூறும் காரணங்களை ஏற்றுக் கொள்ள முடியாது'' என்று தெரிவித்தனர்.

இந்த வழக்கில் மத உணர்வை தமிழக அரசு இழுப்பது ஏன் என்று தெரியவில்லை. உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இன்னொரு வழக்கில்
(சேது சமுத்திரத் திட்ட வழக்கு) அவர்களது (தமிழக அரசு) நிலை என்ன என்பதை நினைக்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. அந்த இன்னொரு வழக்கு என்ன என்பதை நாங்கள் குறிப்பிட்டுச் சொல்ல விரும்பவில்லை'' என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

உச்சநீதிமன்றம் சில நிபந்தனைகளின் பேரில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கி தீர்ப்பு கூறியது. அவை:

1) ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் காளைகள் நல்ல உடல் நிலையில் தான் உள்ளன என்று கால்நடைத்துறை அதிகாரிகள் சான்றிதழ் வழங்க வேண்டும்.

2) காளைகள் கொடுமைப்படுத்தப்படவில்லை என்பதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

3) ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் அனைத்தையும் வீடியோவில் பதிவு செய்ய வேண்டும்.

4) காளைகளை ஓட ஓட துரத்தக் கூடாது. அவை மைதானத்துக்கு நடந்து தான் வர வேண்டும்.

5) காளைகள், பார்வையாளர்கள் காயமடைவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

6) ஜல்லிக்கட்டு நடத்துவோர் 3 நாட்களுக்கு முன்பே மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும்.

7) விலங்குகள் நல வாரியத்தைச் சேர்ந்தவர்கள் ஜல்லிக்கட்டை மேற்பார்வையிட அனுமதிக்க வேண்டும்.

8) ஜல்லிக்கட்டு நடந்த பின் 2 வாரங்களில் ஆட்சியர்கள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

ஜல்லிக்கட்டை எதிர்த்து வெளிநாட்டுப் பெண் போராட்டம்:

இதற்கிடையே இன்று (16-01-2008) கோவையில் வெளிநாட்டு பெண் ஒருவர் காந்தி சிலையின் கண்களை கறுப்பு துணியால் மூடியபடி ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கக் கோரி முழக்கமிட்டுப் போராட்டம் நடத்தினார்.

'பீட்டா' விலங்குகள் நல அமைப்பைச் சேர்ந்த ஒரு வெளிநாட்டுப் பெண் காந்தி பூங்காவிற்குச் சென்று காந்தி சிலையின் கண்கள் மீது கறுப்புத் துணியைக் கட்டி விட்டு, ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்குமாறு முழக்கமிட்டுச் சென்று விட்டார்.

இது குறித்து காலதாமதமாக கேள்விப்பட்ட போலீசார் அங்கு ஓடி வந்தனர். அந்தப் பெண்ணைத் தேடி வருகின்றனர். இச்சம்பவத்தையடுத்து மாநகராட்சி வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்குப் பலத்தப் போலீசு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அஞ்சலி: ஓவியர் ஆதிமூலம் காலமானார் - அவரது கோட்டோவியங்கள் சில..







ஓவியர் ஆதிமூலம் வரைந்த கோட்டோவியங்கள். இவை www.saffronart.com என்ற தளத்திலிருந்து எடுத்து கையாளப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு நன்றி.

ஓவியர் ஆதிமூலம் அவர்களுக்கு இரங்கல் செய்தி

Tuesday, January 15, 2008

புகழ் பெற்ற ஓவியர் கே.எம். ஆதிமூலம் காலமானார்.


தமிழகத்தைச் சேர்ந்த புகழ் பெற்ற ஓவியர் கே.எம்.ஆதிமூலம் (வயது:70), 15-01-2008 செவ்வாய் இரவு 7.00 மணியளவில் சென்னையில் காலமானார். அவருக்கு மனைவி, இரண்டு மகன்கள் உள்ளனர். அவரது இறுதிச் சடங்கு 16-01-2008 அன்று மாலை 4.00 மணியளவில் பெசண்ட் நகர் சுடுகாட்டில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1938-ஆம் ஆண்டு திருச்சி, துறையூர் அருகேயுள்ள கீராம்பூர் என்ற கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். பள்ளிப் பருவம் முதற் கொண்டே ஓவி்யத்தில் அதிக ஈடுபாடு கொண்டவராக திகழ்ந்தார். இவர் பாடத்தை விட படத்திலேயே அதிக கவனம் செலுத்தினார்.

1959-ஆம் ஆண்டு சென்னைக்கு வந்த உடனேயே சிற்பி தனபால் தொடர்பு ஏற்பட்டு, அவரால் அறிமுகப்படுத்தப்பட்டு சென்னை கலை மற்றும் கைவினைக் கல்லூரில் சேர்ந்தார். 1961-66 வரை அக்கல்லூரியில் பயின்று 'டிப்ளமா' பெற்றார்.

சென்னையில் இருந்த காலகட்டத்தில் தான் ஓவியர் ஆதிமூலத்திற்கு தமிழின் நவீன இலக்கியவாதிகள் பலரோடு தொடர்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, சிறுபத்திரிகைகளில் வெளிவந்த கவிதைகள், கதைகள், கட்டுரைகள் ஆகியவற்றில் அவரது ஓவியங்கள் இடம்பெற்றன.

1966-இல் காந்தியாரின் நூற்றாண்டு விழாவையொட்டி காந்தியாரின் பல்வேறு பரிமாணங்களைக் வெளிப்படுத்தும் வகையில் 100 ஓவியங்களை வரைந்தார். அவர் அன்றைக்கு வரைந்த காந்தியாரின் ஓவியங்கள் இன்றைக்கும் பேசப்படுகின்றன. அதன்பின்னர், தமிழ்ச் சூழலில் ஓவியர் ஆதிமூலம் வரைந்த ஓவியங்கள் வலம் வந்து ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின.

லலித் கலா அகடாமியின் தேசிய விருது, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத் ஆகிய மாநிலங்களின் ஓவிய சங்கங்களின் உயர் விருதுகள் உள்ளிட்டு ஏராளமான விருதுகளைப் பெற்றவர். ஓவியத் துறை சார்ந்த பல்வேறு பதவிகள் வகித்தவர்.

இவரது ஓவியங்கள் பல உலகப் புகழ் பெற்றவை. இவர் துருக்கி, சிங்கப்பூர், இங்கிலாந்து, பிரான்சு உள்ளிட்ட நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஓவியக் கலையைப் பரப்பியவர்.

இவரது ஓவியங்கள் தேசிய ஓவியக் கூடம், சென்னை அருங்காட்சியம் உட்பட பல இடங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவர் ஏராளமான ஓவிய முகாம்கள், பட்டறைகள் ஆகியவற்றில் கலந்துக் கொண்டு தன் ஆற்றலை வெளி உலகிற்குக் காட்டியுள்ளார்.

தமிழகத்திலிருந்து வெளிவரும் வெகுமக்கள் இதழ்களான 'ஜீனியர் விகடன்,''ஆனந்த விகடன்' போன்ற இதழ்களிலும் இவரது ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. இது போன்ற இதழ்களில் இவரது ஓவியங்கள் வெளிவந்தது இவரை மேலும் பிரபலப்படுத்தியது.

வண்ண ஓவியங்களிலும், வரைகலையிலும் நன்கு தேர்ச்சி பெற்றவர் ஓவியர் ஆதிமூலம். 'நான் துரத்தும் நிலம்' என்ற தலைப்பில் வெளிவந்த அவரது தைல வண்ண ஓவியங்கள் வண்ணத்திற்கு வண்ணம் தீட்டுயவை. அவரது கோட்டு ஓவியங்கள் மிகப் பரபலமானவை.

'நான் நேரிடையான எனது படைப்புச் சக்தியை மட்டுமே சார்ந்திருக்கிறேன். இந்த அழகின் காட்சிப்படுத்துதலை அடிப்படையாக வைத்துதான் நான் பிறரது படைப்புகளைப் புரிந்துக் கொள்ளவும், எனது படைப்புகளின் மூலம் வெளிப்படுத்த விரும்புகிறேன்' என்று அவர் படைப்பாக்கம் பற்றி கூறியது அவரது அறிவடக்கத்தைக் காட்டுகிறது.

புள்ளிகளில் தொடங்கி கோடுகளில் உருவம் பெற்ற ஓவியர் ஆதிமூலத்தின் படைப்புலகம் கவனம் பெற்றவை. அவரின் கோட்டோவியங்கள் யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க இயலாதது.

இதுபற்றி, 'அந்திமழை' இணைய இதழில் வெளிவந்த அவரது நேர்காணலில், "A Line immediately breaks the space’ ஒரு வெள்ளைப் பேப்பர்ல ஒரு dot வைச்சா அது ‘A planet in the space’ன்ற மாதிரியாயிடுதுல்ல. அந்தக் கோட்டை Horizontal ஆ left to right நீட்டினா தானாகவே மேலேயிருக்கிறது ‘Space’ கீழேயிருக்கிறது ‘land’ னு ஆயிடுது. ஒரு பேப்பர்ல புள்ளி வைச்சவுடனேயே அதோட flat surface போயிடுது. ஆதி மனிதன் அவனை கோடுகளில்தான் வெளிப்படுத்தினான். குகை ஓவியங்கள். அவன் வரைந்த விலங்குகள் வேட்டைக் கருவிகள் எல்லாமே கோடுகள்தான். கோடு, கோடுகளுக்கப்புறம்தான் எழுத்து, மொழி, இலக்கியம் எல்லாம். ஓவிய வெளிப்பாடுதான் மனித நாகரிகத்தின் முதல்படி, எறும்புகள் எப்படி வரிசையா போகுதோ அது மாதிரிதான் புள்ளிகளெல்லாம் ஒன்றாகி கோடாகுது. பல வருஷங்களா communicate பண்ணுது" என்று கூறியுள்ளது புள்ளியும், கோடும் அவரை எந்தளவுக்குப் பாதித்துள்ளது என்பதைப் புரிந்துக் கொள்ள முடிகிறது.

ஓவியர் ஆதிமூலம் அவர்களின் இழப்பு என்பது ஓவிய சமூகத்திற்கு மட்டுமல்ல, தமிழகத்தின் வெகுமக்களுக்கும் தான்.

அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜல்லிக்கட்டுக்குத் தடை நீக்கம் - உச்சநீதிமன்றம் உத்தரவு


தமிழ்கத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை உச்சநீதிமன்றம் நீக்கி இன்று (15-01-2008) உத்தரவிட்டது.

மதுரை மாவட்டத்திலுள்ள அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்டு இரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழகக் கிராமங்களில் ஆண்டுதோறும் பொங்கல் திருநாளையொட்டி காளைகளை விரட்டுப் பிடிக்கும் ஜல்லிக்கட்டு பல காலமாக நடைபெற்று வருகிறது.

மிருக வதை எதிர்ப்புச் சங்கம் சார்பில் தமிழகத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டிற்குத் தடை விதிக்க வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் 'விலங்குகளைத் துன்புறுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது' எனக் கூறி கடந்த 11-01-2008 அன்று ஜல்லிக்கட்டிற்குத் தடை விதித்தது.

இதனைத் தொடர்ந்து மதுரை மாவாட்டம் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பு, பதட்டம் ஏற்பட்டது. அலங்காநல்லூர், பாலமேடு கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கிராம மக்கள் தங்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றினர். ஜல்லிக்கட்டு திட்டமிட்டபடி நடக்கும் என அறிவித்தனர். தமிழகத்தின் பல்வேறு கிராமங்களில் மக்கள் ஜல்லிக்கட்டை நடத்தும் விதமாக தங்கள் காளைகளை அவிழ்த்து விட்டனர். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புத் தலைவர்கள் இத்தடையை நீக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர். ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அரசு உடனடியாக சிறப்புச் சட்டம் ஒன்றை இயற்ற வேண்டுமென வலியுறுத்தினர்.

இந்நிலையில், முதல்வர் கருணாநிதி தடையை நீக்க தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யும் என அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, பொதுத்துறைச் செயலாளர் ஜோதிஜெகராஜன், உளவுத்துறை ஐ.ஜி. ஜாபர்சேட், மதுரை ஆட்சியர் ஜவகர், சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மூர்த்தி ஆகியோர் கொண்ட குழுவினர் தில்லிக்குச் சென்றனர்.

நேற்று (14-01-2008) விடுமுறை நாள் என்பதால், உச்சநீதிமன்ற பதிவாளர் நிராஜ் பரத்வாஜை அவரது இல்லத்தில் சந்தித்தனர். 'தமிழகம் முழுவதும் 15-ஆம் நாள் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. மறுநாள் ஜல்லிக்கட்டு நடத்த பாலமேட்டிலும், அடுத்த நாளில் நடத்த அலங்காநல்லூரிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுவிட்டன. விழாவுக்கு ஓரிரு நாளே இருப்பதால் மறுஆய்வு மனுவை உடனே விசாரணைக்கு ஏற்க வேண்டும்' என்று பதிவாளரிடம் குழுவினர் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து, மறு ஆய்வு மனுவை ஏற்றுக் கொண்ட பதிவாளர் அதனை தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைத்தார். இம்மனு மீதான விசாரணை 15-01-2008 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இம்மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இன்று நண்பகலில் தொடங்கிய இந்த விசாரணையில் தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் கோபாலசுப்பிரமணியம் வாதிட்டார். அப்போது ஜல்லிக்கட்டு நடப்பதை தமிழக அரசு கண்காணிக்கும் என்று அவர் உத்தரவாதம் அளித்தார்.

இதனை ஏற்று ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார்.

மேலும், ஜல்லிக்கட்டு போட்டியைத் தமிழக அரசு கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தடை தொடர்பாக கடந்த சில நாட்களாக நிலவிய பதற்றம் தணிந்தது. அலங்காநல்லூர், பாலமேடு கிராமம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்காக ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Sunday, January 13, 2008

புதுச்சேரி அத்தியப்பா கெமிக்கல்ஸ் (பி) லிட் நிர்வாகத்தைக் கண்டித்து தொடர் முழக்கப் போராட்டம்



புதுச்சேரி, மேட்டுப்பாளையத்தில் உள்ள அத்தியப்பா கெமிக்கல்ஸ் (பி) லிட்., நிர்வாகத்தின் தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டித்து 11-01-2008 வெள்ளியன்று மாலை 4.00 மணியளவில் தொழிற்சாலை முன்பு தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது.

மக்கள் உரிமைக் கூட்டமைப்புடன் இணைந்த அத்தியப்பா கெமிக்கல்ஸ் (பி) லிட்., தொழிலாளர் நலச் சங்கத்தின் சார்பில் இப்போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்திற்கு சங்கத்தின் செயலாளர் ம.சந்திரகுமார் தலைமை தாங்கினார். தலைவர் சூ.சின்னப்பா வரவேற்றுப் பேசினார். மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் போராட்டத்தைத் தொடக்கி வைத்து உரையாற்றினார்.

பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், அமைப்பாளர் தந்தைபிரியன், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை அமைப்பாளர் சி.மூர்த்தி, செம்படுகை நன்னீரகம் அமைப்புத் தலைவர் கு.இராம்மூர்த்தி, செயலாளர் பார்த்திபன், சமூக நீதிப் போராட்டக் குழு அ.மஞ்சினி உள்ளிட்டோர் கலந்துக் கொண்டு உரையாற்றினர். முடிவில் சங்க இணைச் செயலாளர் சு.முருகன் நன்றி கூறினார்.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தொழிலாளர்களில் ஒரு பகுதியினருக்கு மீண்டும் வேலை அளித்த நிர்வாகம், தற்போது பல்வேறு பொய்க் குற்றச்சாட்டுக்களைக் கூறி தொழிலாளர்களைப் பணிநீக்கம் செய்ய முயற்சித்து வருகிறது.

தொழிலாளர்களைப் பழிவாங்கும் போக்கைக் கைவிட வலியுறுத்தி 10-01-2008 முதல் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தொடர் முழக்கப் போராட்டத்தில் பல்வேறு இயக்கத்தினர் பங்கேற்றனர்.

Thursday, January 10, 2008

புதுச்சேரி அத்தியப்பா கெமிக்கல்ஸ் (பி) லிட்., தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்


புதுச்சேரி, மேட்டுப்பாளையத்தில் உள்ள அத்தியப்பா கெமிக்கல்ஸ் (பி) லிட் தொழிற்சாலை நிர்வாகம் தொழிலாளர்களைப் பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டும், தொழிலாளர் விரோதப் போக்கைக் கடைபிடித்தும் வருவதைக் கண்டித்து, 10-01-2008 வியாழனன்று காலை 6.00 மணி முதல் தொழிலாளர்கள் அனைவரும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மக்கள் உரி்மைக் கூட்டமைப்புடன் இணைந்த அத்தியப்பா கெமிக்கல்ஸ் (பி) லிட் தொழிலாளர் நலச் சங்கம் இப்போராட்டத்தை ஒருங்கிணைத்துள்ளது.

போராட்டத்தை அத்தியப்பா கெமிக்கல்ஸ் (பி) லிட் தொழிலாளர் நலச் சங்கத்தின் சிறப்புத் தலைவர் கோ.சுகுமாரன் தொடக்கி வைத்தார். சங்கத் தலைவர் சூ.சின்னப்பா, துணைத் தலைவர் மு.பொன்னுசாமி, செயலாளர் ம.சந்திரகுமார், இணைச் செயலாளர் சு.முருகன், துணைச் செயலாளர் லோ.இராஜேந்திரன், பொருளாளர் கி.கண்ணன், இணைப் பொருளாளர் கி.பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

செம்படுகை நன்னீரகம் அமைப்புத் தலைவர் கு.இராம்மூர்த்தி, செயலாளர் பார்த்திபன் ஆகியோர் போரட்டத்தில் கலந்துக் கொண்டவர்களை வாழ்த்தினர்.

தொழிலாளர்கள் அனைவரும் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

'வெல்க, வெல்க, வெல்கவே...
அத்தியப்பா.. தொழிலாளர் நலச் சங்கம்
வெல்க, வெல்க, வெல்கவே...

பழிவாங்காதே...பழிவாங்காதே...
தொழிலாளர்களைப்
பழிவாங்காதே...

வெளியேற்று...வெளியேற்று...
வெளியாட்களை
வெளியேற்று...

விடமாட்டோம்...விடமாட்டோம்...
வெற்றி கிட்டும்வரை
விடமாட்டோம்...

ஒன்றுப்பட்டு நிற்கின்றோம்...
உரிமைக்காக நிற்கின்றோம்...

தொழிலாளர் ஒற்றுமை...
ஓங்குக...

என்று போராட்டத்தில் கலந்துக் கொண்ட அனைவரும் ஒருமித்து முழக்கமிட்டனர்.

போராடும் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து புதுச்சேரியிலுள்ள கட்சிகள், சமுதாய இயக்கங்கள், மனித உரிமை அமைப்புகள் பங்கேற்கும் தொடர்முழக்கப் போராட்டம் 11-01-2008 வெள்ளிகிழமை மாலை 4.00 மணியளவில் தொழிற்சாலை முன்பு நடைபெற உள்ளது.

Sunday, January 06, 2008

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கைப் பயணம் ரத்து

1948 பிப்ரவரி 4 அன்று இலங்கை விடுதலை அடைந்தது. வரும் பிப்ரவரி 4-ஆம் நாளன்று இலங்கையின் 60-ஆவது விடுதலை நாள் விழா கொழும்பில் நடைபெற உள்ளது. இதில் இந்தியா சார்பில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமை விருந்தினராக கலந்துக் கொள்ளப் போவதாக செய்திகள் வெளியாகி இருந்தன. இந்நிலையில், பிரதமர் இலங்கைச் செல்வதற்கு தமிழ்நாட்டில் பலத்த எதிர்ப்புக் கிளம்பியது.

பிரதமர் மன்மோகன் சிங் இலங்கைச் செல்வதைக் கைவிட வேண்டுமென தமிழ்நாட்டிலுள்ள அரசியல் கட்சியில், இயக்கங்கள் கோரிக்கை விடுத்தன. கடந்த 31-12-2007 அன்று சென்னையில் தி.க. சார்பில் அவ்வமைப்பின் தலைவர் கி.வீரமணி தலைமையில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் தொல்.திருமாவளவன், திராவிடத் தமிழர் கழகத் தலைவர் சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் ஆகியோரும் இதனை வலியுறுத்தினர்.

இதனிடையே, பிரதமர் மன்மோகன் சிங் இலங்கைப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இன்று (06-01-2008) செய்திகள் வெளியாகியுள்ளன. பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அன்றைய தினம் முக்கிய பணி இருப்பதால் இலங்கை நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளமாட்டார் என்று தில்லியிலுள்ள பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

இலங்கையில் போர் நிறுத்த ஒப்பந்தம் முறிவு, தமிழகக் கட்சிகள் எதிர்ப்பு ஆகிய காரணங்களால் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கைப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மேலும், இந்த ஆண்டு இறுதியில் இலங்கையில் நடைபெற உள்ள 'சார்க்' மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துக் கொள்வார் என்று தெரிய வருகிறது.