Wednesday, October 29, 2008

இலங்கையில் போர் நிறுத்தம் செய்யக் கோரி புதுச்சேரியில் வணிகர்கள் கடை அடைப்புப் போராட்டம் நடத்த முடிவு!

இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப் படுவதை கண்டித்தும், தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதை கண்டித்தும் தமிழகத்தில் வணிகர் சங்க பேரவை சார்பில் கடந்த 17-ஆம் நாளன்று கடை அடைப்பு போராட்டம் நடத்த அறிவிக்கப்பட்டது.

அதே போல் புதுவையிலும், புதுவை மாநில வணிகர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் கடை அடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் அந்த போராட்டம் தமிழகத்தில் தள்ளி வைக்கப்பட்டதுபோல் புதுவையிலும் 31-ஆம் நாளன்று நடத்த முடிவு செய்யப் பட்டது.

அதன்படி வருகிற 31-ஆம் நாளன்று கடை அடைப்பு போராட்டத்தைத் திட்ட மிட்டபடி நடத்துவது குறித்து புதுவை மாநில வணிகர் சங்கங்களின் ஒருங் கிணைப்பு குழு கூட்டம் இன்று (29-10-2008) நடைபெற்றது.

கூட்டத்திற்குப் பெரிய மார்க்கெட் வியாபாரிகள் சங்கத் தலைவர் மு.கு.இராமன் தலைமை தாங்கினார். புதுவை மாநில வணிகர் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் முகமது நிசாம் வரவேற்றார். சங்க ஆலோசகர் இரா.அழகிரி முன்னிலை வகித்தார்

கூட்டத்தில் பாத்திர வியாபாரிகள் சங்கத் தலைவர் சிவஞானம், அரியாங்குப்பம் வியாபாரிகள் சங்கத் தலைவர் கண்ணையன், கனகராஜ், மற்றும் வியாபாரிகள் சங்கத்தலைவர் செல்வ ராஜ், எலக்ட்ரிக்கல் அசோசியேஷன் சங்கத் தலைவர் சண்முக சுந்தரம், புத்தக வியாபாரிகள் சங்கத்தலைவர் இராதாகிருஷ்ணன் உள்பட பல்வேறு வியாபாரிள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் திட்டமிட்டபடி வருகிற 31-ஆம் நாளன்று புதுவையில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடை அடைப்பு போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக இந்திய அரசு ஆயுத உதவி அளிப்பதை எதிர்த்தும், இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவும், தமிழக மீனவர்களை சிங்கள கடற்படை சுட்டுக் கொல்லவதைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் இந்த கடை அடைப்புப் போராட்டம் நடத்தப்படுகிறது என வணிகர்கள் அறிவித்துள்ளனர்.

Monday, October 20, 2008

இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு மூலம் அமைதி : புதுச்சேரி சட்டமன்றத்தில் தீர்மானம்!

புதுச்சேரியிலுள்ள அரசியல் கட்சிகள் – சமுதாய இயக்கத் தலைவர்கள் கடந்த 17-10-2008 அன்று, புதுச்சேரி முதல்வர் வி.வைத்திலிங்கம் அவர்களைச் சந்தித்து இலங்கையில் நடக்கும் போரை முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர்.

மேலும், புதுச்சேரி சட்டமன்ற கூட்டத்தில் ‘இலங்கை அரசு ஈழத் தமிழர்கள் மீதான போரை உடனடியாக நிறுத்த மத்திய அரசு வலியுறுத்த வேண்டும், இலங்கைக்கு ஆயுத உதவி உள்ளிட்ட இராணுவ உதவிகள் வழங்குவதை மத்திய அரசு நிறுத்த வேண்டும்’ உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும் எனவும் கோரியிருந்தனர்.

இந்நிலையில், இன்று (20-10-2008) கூடிய புதுச்சேரி சட்டமன்றத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

முன்னதாக சட்டமன்றத்தில் தி.மு.க., பா.ம.க., சி.பி.ஐ. உள்ளிட்ட கட்சிகள் ஈழத் தமிழர் பிரச்சனை குறித்து தனிநபர் தீர்மானங்கள் கொடுத்திருந்தன. இதன்மீது விவாதிக்க வேண்டுமென வலியுறுத்தின.

இதனை ஏற்றுக் கொண்ட புதுச்சேரி முதல்வர் வி.வைத்தியலிங்கம், அரசு சார்பில் தீர்மானத்தை முன்மொழிந்தார்.

தீர்மானத்தை முன்மொழிந்து அவர் பேசியதாவது:

"இலங்கை அரசு எடுத்து வரும் நடவடிகைகளால் இலங்கை வாழ் அப்பாவித் தமிழர்கள் பாதிக்கப்படுவது வருத்தத்தையும், கவலையையும் அளிக்கிறது. அங்குள்ள பிரச்சனைகளுக்கு அரசியல் தீர்வு மூலம் அமைதியை ஏற்படுத்தவும், அங்கு பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த தமிழர்களுக்கு உணவு, உடை, மருத்துவ வசதிகள் அளிக்கவும் வகை செய்ய வேண்டும்.

மேலும், இலங்கை கடற்படையினரால் தமிழகம் மற்றும் புதுவையைச் சார்ந்த மீனவர்கள் தாக்கப்படாமல் பாதுகாக்கப்பட உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் மத்திய அரசை இந்த சட்டப் பேரவை கேட்டுக் கொள்கிறது."

இந்த தீர்மானம் ஒருமந்தாக நிறைவேற்றப்பட்டது.

மேலும் இது குறித்து விரிவாக விவாதிக்க வேண்டுமென தி.மு.க., பா.ம.க., சி.பி.ஐ., புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கோரிக்கை எழுப்பின. அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இலங்கையில் போரை முடிவுக்குக் கொண்டுவர வலியுறுத்தி புதுச்சேரி சட்டசபையில் தீர்மானம்: முதல்வரிடம் மனு!

Saturday, October 18, 2008

இலங்கையில் போரை முடிவுக்குக் கொண்டு வர வலியுறுத்தி புதுச்சேரி சட்டசபையில் தீர்மானம்: முதல்வரிடம் மனு!


புதுச்சேரியிலுள்ள அரசியல் கட்சிகள் – சமுதாய இயக்கத் தலைவர்கள் 17-10-2008 அன்று, புதுச்சேரி முதல்வர் வி.வைத்திலிங்கம் அவர்களைச் சந்தித்து இலங்கையில் நடக்கும் போரை முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர்.

இரா.பாவாணன், (விடுதலைச் சிறுத்தைகள்), இரா.மங்கையர்செல்வன், (மீனவர் விடுதலை வேங்கைகள்), லோகு. அய்யப்பன், (பெரியார் திராவிடர் கழகம்), கோ.சுகுமாரன், (மக்கள் உரிமைக் கூட்டமைப்பு), இரா.அழகிரி, (தமிழர் தேசிய இயக்கம்), பா.சக்திவேல், (மீனவ மக்கள் முன்னேற்ற இயக்கம்), சி.மூர்த்தி, (புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை), தி.சஞ்சீவி, இராஷ்ட்ரிய ஜனதா தளம்), ந.மு.தமிழ்மணி, (செந்தமிழர் இயக்கம்), பாவல், (வெள்ளையணுக்கள் இயக்கம்), பெ.சந்திரசேகரன், (கிராமப்புற அடிப்படை உரிமைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம்) ஆகியோர் அடங்கிய குழுவினர் முதல்வர் வி.வைத்திலிங்கத்தை அவரது அலுவலகத்தில் சந்தித்து மனு அளித்தனர்.

மனுவில் கூறியிருப்பதாவது:

இலங்கையில் ஈழத் தமிழர்களை அழித்தொழிக்கும் நோகத்தோடு சிங்கள அரசு இராணுவ நடவடிக்கையைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. சிங்கள அரசின் இந்த இன அழிப்பு நடவடிக்கையை உலகம் முழுவதுமுள்ள தமிழர்கள் கண்டித்துள்ளனர்.

இலங்கைக்கு இந்திய அரசு ஆயுத உதவி, பயிற்சி அளிப்பது உள்ளிட்ட இராணுவ உதவிகள் செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்திய அரசின் இந்த இராணுவ உதவிகள் தமிழர்களைக் கொன்று குவிக்கவே பயன்படுத்தப்படுகிறது. இதனை தமிழகத்திலுள்ள அனைத்துக் கட்சிகளும் கண்டித்துள்ளன.

இந்நிலையில், தமிழக முதல்வர் திரு. மு.கருணாநிதி அவர்கள் தலைமையில் 14-10-2008 அன்று சென்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அதில் ‘இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெறும் போரை இரண்டு வாரத்திற்குள் நிறுத்த மத்திய அரசு முயற்சி எடுக்காவிட்டால், தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த 40 எம்.பி.களும் பதவி விலக நேரிடும்’ என்பது உள்பட பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளனர்.

தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. கே.வி.தங்கபாலு அவர்கள் ‘இந்த தீர்மானங்களை முழு மனதோடு ஆதரிக்கின்றோம், அவற்றை நிறைவேற்ற பாடுபடுவோம்‘ எனக் கூறியுள்ளார்.

புதுச்சேரியில் தங்கள் தலைமையிலான காங்கிரஸ் அரசு உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி தமிழக கட்சிகள் நிறைவேறியுள்ள தீர்மானங்களை ஆதரிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
மேலும், வரும் 20-ஆம் தேதியன்று கூடவிருக்கிற புதுச்சேரி சட்டமன்ற கூட்டத்தில் ‘இலங்கை அரசு ஈழத் தமிழர்கள் மீதான போரை உடனடியாக நிறுத்த மத்திய அரசு வலியுறுத்த வேண்டும், இலங்கைக்கு ஆயுத உதவி உள்ளிட்ட இராணுவ உதவிகள் வழங்குவதை மத்திய அரசு நிறுத்த வேண்டும்’ உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

ஈழத் தமிழர்கள் மீது சிங்கள அரசு ஏவிவரும் அடக்குமுறை புதுச்சேரி தமிழர்கள் மத்தியில் அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி தமிழர்களின் உணர்வுகளைப் எதிரொலிக்கும் விதமாக இந்த மனுவை தங்களிடம் சமர்ப்பிக்கின்றோம். ஈழத் தமிழர்களைக் காக்க தாங்கள் உரிய நடவடிக்கை எடுப்பீர்கள் என நம்புகிறோம்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதே கோரிக்கையை வலியுறுத்தி புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் அவர்களைச் சந்தித்து மனு அளித்தனர்.

Wednesday, October 15, 2008

ஈழத் தமிழர் நலன் காக்க தமிழக கட்சிகள் நிறைவேற்றிய தீர்மானங்களை புதுச்சேரி அரசு ஆதரிக்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன் 15-10-2008 அன்று விடுத்துள்ள அறிக்கை:

புதுச்சேரி ஆளும் காங்கிரஸ் அரசு ஈழத் தமிழர் நலன் காக்கும் வகையில் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஆதரிக்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

இலங்கையில் ஈழத் தமிழர்களை அழித்தொழிக்கும் வகையில் சிங்கள அரசு இராணுவ நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. சிங்கள அரசின் இந்த இன அழிப்பு நடவடிக்கையை உலகம் முழுவதுமுள்ள தமிழர்கள் கண்டித்துள்ளனர்.

தமிழர்களைக் கொன்று குவிக்கும் இலங்கைக்கு இந்திய அரசு ஆயுத உதவி, பயிற்சி அளிப்பது உள்ளிட்ட இராணுவ உதவிகள் செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கு தமிழகக் கடசிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில் நேற்று சென்னையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ‘இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெறும் போரை இரண்டு வாரத்திற்குள் நிறுத்த மத்திய அரசு முயற்சி எடுக்காவிட்டால், தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த 40 எம்.பி.களும் பதவி விலக நேரிடும்’ என்பது உள்பட பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளனர். இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்மானங்களை வரவேற்பதோடு, தமிழக கட்சிகளுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

புதுச்சேரியை ஆளும் காங்கிரஸ் அரசு காலம் தாழ்த்தாமல் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி தமிழக கட்சிகள் நிறைவேறியுள்ள தீர்மானங்களை ஆதரிக்க வேண்டும். இல்லையேல், புதுச்சேரி காங்கிரஸ் அரசு ஈழத் தமிழர்கள் மீது அக்கறை இல்லாத அரசு என்பதோடு, ஒட்டுமொத்த தமிழர்களின் நம்பிக்கையை இழக்க நேரிடும்.

அனைத்துக் கட்சித் தீர்மானங்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வி.தங்கபாலு ‘இந்த தீர்மானங்களை முழு மனதோடு ஆதரிக்கின்றோம், அவற்றை நிறைவேற்ற பாடுபடுவோம்‘ எனக் கூறியுள்ளார். புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் ஈழத் தமிழர் நலன் காக்க உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

ஒரிசா – கருநாடக கிறித்துவர்கள் மீது தாக்குதல் – உண்மை அறியும் குழு அறிக்கைகள்! (ஆங்கில வடிவம்)


ஒரிசாவில் விசுவ இந்துப் பரிசத்தைச் சேர்ந்த லட்சுமணானந்தா மாவோயிஸ்ட் இயக்கத்தினரால் கொலைச் செய்யப்பட்டதைக் காரணம் காட்டி, கிறித்துவர்கள் மீது இந்து மத வெறி அமைப்புகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள உடைமைகளைச் சேதப்படுத்தி உள்ளன. தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளன. கன்னியஸ்திரிகள் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். கிறித்துவர்கள் காடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். அகதிகளாக முகாம்களில் ஆயிரக் கணக்கானவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கருநாடகத்தில் இந்துமத வெறி ‘பஜ்ரங்தள்’ அமைப்பினர் மங்களூர், உடுப்பி, சிக்மங்களூர் ஆகிய மாவட்டங்களில் 17 தேவாலயங்கள், வழிப்பாட்டுத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைதியாகப் போராட்டம் நடத்திய கிறித்துவர்கள், பாதிரியார்கள், கன்னியஸ்திரிகள் மீது கருநாடகப் போலீஸ் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்தியுள்ளது.

இது குறித்து ஆந்திராவின் மனித உரிமை அமைப்புத் தலைவர் டாக்டர் கே.பாலகோபால் தலைமையில் இந்திய அளவிலான “உண்மை அறியும் குழு” ஒரிசா, கருநாடகம் ஆகிய மாநிலங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு இடைக்கால அறிக்கைத் தாக்கல் செய்துள்ளது. விரிவான அறிக்கை விரைவில் புத்தக வடிவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று இந்தியா முழுவதும் கிறித்துவர்கள் பாதுகாப்பு இல்லாத சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்துப் பரிசத், பஜ்ரங்தள், சிவசேனை, இராம சேனை...என பல்வேறு பெயர்களில் இந்து மதவெறி அமைப்புகள் சிறுபான்மை மக்கள் மீது கருத்து ரீதியாகவும், நேரடியாகவும் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு பா.ஜ.க. வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்துப் பேசி வருகிறது.

உண்மை அறியும் குழு அறிக்கைகள் தரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக உள்ளன. மனித உரிமையில் அக்கறை உடையவர்கள் யாராலும் இந்த காவிமயமான வன்முறையை ஏற்றுக் கொள்ள முடியாது. ஆங்கில வடிவில் உள்ள இந்த அறிக்கைகள் “மக்கள் உரிமைக் கூட்டமைப்பு” இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கைகள் மற்றும் கூடுதல் தகவல்கள் அடங்கிய சிறு வெளியீடு “மக்கள் உரிமைக் கூட்டமைப்பு” சார்பில் விரைவில் கொண்டு வரப்படும்.

அறிக்கையைப் படிக்க கீழேயுள்ள தொடர்பைச் சொடுக்கவும்:

ஒரிசாவில் கிறித்துவர்கள் மீதான தாக்குதலைத் தடுத்து நிறுத்த வேண்டும்!

கருநாடகத்தில் கிறித்துவர்கள் மீது தாக்குதல்: சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!