Sunday, July 29, 2012

ஜெயலலிதாவின் அறிவிப்புகளும், குற்றமிழைத்தப் போலீசார் தப்பித்தலும்

நேற்றைய தினம் (28.7.2012) தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, நாங்குனேரி அருகே மறுகால்குறிச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டரால் சுட்டுக் கொல்லப்பட்ட வானமாமலை குடும்பத்திற்கு ரூ. 3 லட்சம் நிதி உதவியும், இறந்தவரின் மனைவிக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். மேலும், இந்த சம்பவத்தோடு தொடர்புடைய இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் அனைவரையும் பணியிடை நீக்கம் செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.

இது வரவேற்கத்தக்கது என்றாலும், இந்த நடவடிக்கை போதாது என்பதுதான் மனித உரிமையில் அக்கறை உடையோரின் கருத்து. மேலும், இந்த அறிவிப்பு எந்தப் பின்னணியில் வந்தது என்பதைப் பார்க்க வேண்டும். வழக்கமாக என்கவுன்டர் நடக்கும் போது, அதற்கு மக்களிடம் ஆதரவு இருக்கும். ஆனால், இந்த முறை வானமாமலை சுட்டுக் கொல்லப்பட்ட போது அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாகர்கோவில் - நெல்லை நான்கு  வழிச்சாலையில் பொதுமக்கள் நான்கு மணி நேரம் சாலை மறியல் செய்தனர். பின்னர் பாளையங்கோட்டை அரசு பொது மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்த பின்னர் வானமாமலை உடலை வாங்க மறுத்துப் போராட்டம் நடத்தினர். மேலும்,  வானமாமலை சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து நீதி விசாரணை, சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி விஜயகுமார் உள்ளிட்டவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்தல், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு, வானமாமலையின் மனைவி மஞ்சுவிற்கு அரசு வேலை என நியாயமான கோரிக்கைகளை வைத்துப் போராட்டம் நடத்தினர். எதிர்க்கட்சிகளான தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க. மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்த சம்பவத்தைக் கண்டித்ததோடு, சம்பந்தப்பட்ட போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் கோரினர். வைகோ பாதிக்கப்பட்ட மக்கள் நடத்திய போராட்டத்திற்கு ஆதரவாக அறிக்கை கொடுத்ததோடு, அப்போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டார். இந்தச் சூழலில்தான் தமிழக முதலமைச்சரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முதலமைச்சரின் அறிவிப்பில் குற்றமிழைத்தப் போலீசார் மீது கிரிமினல் சட்ட நடவடிக்கைப் பற்றி எதுவும் சொல்லப்படவில்லை. வெறுமனே பணியிடை நீக்கம், துறை சார்ந்த விசாரணை என கூறப்பட்டுள்ளது. இதெல்லாம், வெறும் கண்துடைப்பு என்பதை அனைவரும் அறிவோம்.

ஜெயலலிதா பதவியேற்ற பின்னர் தமிழகத்தில் 6 பேர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். 12 பேர் போலீஸ் காவலில் இறந்துள்ளனர். 5 பெண்கள் போலீசாரால் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அதிமுக ஆட்சி தற்போது “போலீஸ்” ஆட்சியாகவே நடக்கிறது.

போலீஸ் அத்துமீறலுக்கு எதிராகப் போராட்டங்கள் தீவிரமாகும் போது அதை மழுங்கடிக்க முதலமைச்சர் மேற்சொன்னபடி அறிவிப்புகள் மூலம் அதை திசைத் திருப்பி விடுவதை வாடிக்கையாகவே கொண்டுள்ளார். இதற்கு போலீஸ் உயரதிகாரிகள் அவருக்கு துணைநின்று அறிவுரை வழங்குகின்றனர்.

பரமக்குடியில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 6 தேவேந்திரர்கள் கொல்லப்பட்ட போது உடனடியாக இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 1 லட்சம் நிதி அளித்தார்கள். திருக்கோவிலூர் போலீசாரால் இருளர் பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ. 4 லட்சம் நிதி வழங்கி முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தபோது, வேறு வழியில்லாமல் பரமக்குடி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கும் கூடுதலாக ரூ. 3 லட்சம் நிதி அறிவித்தார். ஆனால், துப்பாக்கிச் சூட்டிற்குக் காரணமான போலீசார் மீது எவ்வித நடவடிக்கையும் இல்லை. போலீசாரை பணியிடை நீக்கம்கூட செய்யாமல், வெறுமனே இடமாற்றம்தான் செய்துள்ளனர்.

திருக்கோவிலூரில் 4 இருளர் பெண்கள் போலீசாரால் கடத்திச் செல்லப்பட்டு, பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தில் நிலைமை இன்னமும் மோசம். இந்த சம்பவம் ஊடகங்களில் பெரிதாக்கப்பட்ட பின்னர் முதலமைச்சர் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ. 4 லட்சம் நிதி அளித்து அறிவித்தார். உடனடியாக குற்றமிழைத்தப் போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். ஆனால், இதுவரையில், போலீசார் கைது செய்யப்படவில்லை. இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ‘போலீசாரை ஏன் கைது செய்யவில்லை’ என தமிழக அரசைப் பலமுறை கண்டித்தும் இதுவரையில் போலீசார் கைது செய்யப்படவில்லை. குற்றமிழைத்தப் போலீசாரை கைது செய்ய உத்தரவிடாமல், அரசைக் கண்டித்துக் கொண்டே இருக்கும் உயர்நீதிமன்றத்தின் போக்குக் கொடுமையிலும் கொடுமை. அதிகாரத்தின் கரங்களால் பாதிக்கப்பட்டவர்கள் வழக்குகளை நீதிமன்றங்கள் அணுகும் போக்குக் குறித்துப் பிறகுப் பார்ப்போம்.

சேலம் அருகே நெய்க்காரப்பட்டியில் ஆண்டுதோறும் நடக்கும் எருதாட்டத்தைத் தடை செய்ததன் விளைவாக நடந்த மோதலில், கிராம மக்கள் மீது போலீசார் நடத்திய கொடிய தடியடித் தாக்குதல் பற்றி அறிவோம். போலீசாரை தாக்கியதாக கூறிப் போடப்பட்ட வழக்கில் தற்போது பொதுமக்கள் 79 பேர் சிறையில் உள்ளனர். இந்த சம்பவத்தை முழுவதையும் நியாயப்படுத்தி போலீஸ் உயரதிகாரிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதில் மக்களைத் தாக்கிய போலீசார் மீது எந்தவித சிறிய நடவடிக்கையும்கூட எடுக்கப்படவில்லை.

முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம், கிருஷ்ணகிரியில் பெரியார் தி.க. பிரமுகர் பழனி என பல கொலை வழக்குகளில் குற்றவாளிகள் இன்னமும் கைது செய்யப்படவில்லை. தமிழகம் முழுவதும் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சட்டம் ஒழுங்கைக் கட்டுக்குள் கொண்டு வர உருப்படியான திட்டம் தமிழக அரசிடம் இருப்பதாக தெரியவில்லை.

இந்நிலையில், போலீசாரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதிக் கிடைக்கும் என்ற நம்பிக்கைக் கீற்று தென்படுவதாக தெரியவில்லை. மனித உரிமை ஆர்வலர்கள் ஆகிய நாங்கள் தொடர்ந்துப் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து உண்மை நிலைமைகளை அறிந்து வெளிப்படுத்தி வருகிறோம். வெற்று அறிவிப்புகளால் அரசு இவற்றை எதிர்க்கொண்டு வருகிறது. நாங்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதாவது செய்ய முடியாதா என்ற நம்பிக்கையில் ‘விடாது கறுப்பு’ போல செயல்பட்டுக் கொண்டே இருக்கிறோம்.

‘சலிப்பு, ஓய்வு இவை இரண்டும் தற்கொலைக்குச் சமம்’ என்ற தந்தை பெரியாரின் வாசகத்துடன் நாட்காட்டி என் அறையில், கண்முன்னே தொங்கிக் கொண்டிருக்கிறது.

Thursday, July 19, 2012

தமிழர்களிடையே தமிழ்க் கணினி குறித்து விழிப்புணர்வு செய்ய பல்வேறு நூல்களை எழுதியவரான ஆண்டோ பீட்டர் அவர்களுக்கு புதுச்சேரியில் நினைவேந்தல் நிகழ்ச்சி வரும் 22-07-2012 அன்று காலை 10 மணியளவில் வணிக அவை சிறிய அரங்கத்தில் 'புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்' சார்பில்நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரியின் பல்வேறு தமிழறிஞர்களும் தமிழ்க் கணினி ஆர்வலர்களும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்த உள்ளனர்.

தமிழ்க் கணினி குறித்த விழிப்புணர்வைத் தமிழர்களிடையே அதிகப்படுத்தியவர்களில் ஆண்டோ பீட்டரும் ஒருவர். தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் 26.04.1967 இல் பிறந்தார். கணினி, இணையம், அச்சுத்துறை சார்ந்த பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் ஆண்டோ பீட்டர். மென்பொருள் தயாரிப்பு, இணையப் பக்கம் வடிவமைப்பில் ஈடுபட்டவர்.

தமிழகத்தில் முதன்முதலாகப் பல்லூடகக் கல்வியை அறிமுகப்படுத்திய இவர் இளைஞர்கள் வேலைவாய்ப்பு, தொழில் வாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்பு மேம்பாட்டிற்காக 500க்கும் மேற்பட்ட இலவச கருத்தரங்குகளை நடத்தியுள்ளார்.

கணினி, தமிழ் தொடர்பான பல்வேறு மாநாடுகளில் கலந்து கொண்டிருப்பதுடன் 26 ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளார்.

அச்சு வடிவில் வந்து கொண்டிருக்கும் இதழ்களில் இருக்கும் படங்கள், செய்திகள் மற்றும் அனைத்துவிதமான படைப்புகளையும் இணைய தளங்களில் அச்சு இதழ்களைப் போன்று பகுதிகளாகவும், பக்கங்களாகவும் அனைவரும் பார்க்கவும் படிக்கவும் உருவாக்கப்பட்ட இணைய இதழ்களில் முதல் தமிழ் இணைய இதழான "தமிழ் சினிமா" எனும் பெயரில் முதல் தமிழ் இணைய இதழைத் தொடங்கியவர்.

கணினித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராகவும் இந்திய அரசு, தமிழ்நாடு அரசு அமைத்துள்ள சில குழுக்களில் உறுப்பினராகவும் இருந்துள்ளார். ‘தமிழும் கணிப்பொறியும்’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு - 2004. நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் சிறந்த எழுத்தாளருக்கான விருது 2007. ஸ்ரீராம் நிறுவனத்தின் ‘பாரதி இலக்கியச் செல்வர் விருது’, தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் ‘பெரியார் விருது’ ஆகிய விருதுகளை பெற்றவர்.

கணித்தமிழ் வளர்ச்சியின் முன்னோடியும், சி.எஸ்.சி, சாப்டுவியூ நிறுவனத்தின்  நிறுவனரும், கணித்தமிழ்ச் சங்கத்தை நிறுவிப் பணிபுரிந்தவரும், பல கணினி நூல்களின் ஆசிரியருமான மா.ஆண்டோபீட்டர் 12.07.2012 வியாழக்கிழமை அதிகாலை 3 மணியளவில் மாரடைப்பால் சென்னையில் காலமானார்.

இவரின் மறைவு தமிழ் இணையத் துறைக்குப் பேரிழப்பாகும்.