Saturday, June 30, 2007

தமிழ்த் தேசியப் போராளி புலவர் கு.கலியபெருமாள் நினைவேந்தல் நிகழ்வுகள்


பகுத்தறிவு, வர்க்க விடுதலை, சாதி ஒழிப்பு, விவசாயிகளுக்கானப் போராட்டம், ஈழ விடுதலை ஆதரவு, மொழிப் பாதுகாப்பு, இன விடுதலைக்கு ஆயுதமேந்திய போராட்டம் என தன் வாழ்நாளை தமிழ்ச் சமூகத்திற்கு ஈகம் செய்த புலவர் கு.கலியபெருமாள் 16-05-2007 அன்று நம்மை விட்டுப் பிரிந்தார். அவருக்கு எம் வீரவணக்கம்.

புலவரின் உடல் பெண்ணாடம் அருகேயுள்ள அவரது சொந்த ஊரான சௌந்தரசோழபுரத்தில் அவருக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் விதைக்கப்பட்டது. 22-2-1970-இல் தோழர்கள் சர்ச்சில், கணேசன், காணியப்பன் வீரமரணம் எய்திய அதே இடத்தில் புலவரின் உடல் விதைக்கப்பட்டுள்ளது. தற்போது அவ்விடம் `தென்னஞ்சோலை செங்களம்' என அழைக்கப்படுகிறது.

01-07-2007 ஞாயிறன்று மதியம் 3-00 மணியளவில் சௌந்தரசோழபுரம் `செங்களத்தில்' புலவர் கு.கலியபெருமாள் அவர்களுக்கு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. கல்லறை கல்வெட்டு திறப்பு, படத்திறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

மாலை 6 மணியளவில் பெண்ணாடம் வானொலித் திடலில் நினைவேந்தல் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சிகளில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், தமிழின உணர்வாளர்கள், முற்போக்குச் சிந்தனையாளர்கள், அவரது குடும்பத்தினர் என பலதரப்பினர் கலந்துகொண்டு வீரவணக்கம் செலுத்த உள்ளனர்.

தானும், தன் குடும்பத்தினரும் கடும் அடக்குமுறையைச் சந்தித்தும் உறுதிகுலையாமல் இறுதிவரை ஓர் போராளியாக வாழ்ந்த புலவர். கு.கலியபெருமாள் போன்ற புரட்சியாளர் தமிழகத்தில் இதுவரையில் எவரும் இருந்ததில்லை. வரும் காலங்களில் தோன்றுவதற்கான அறிகுறியும் தென்படவில்லை.

தூக்குக் கயிறு எந்நேரமும் தன் கழுத்தை இறுக்கிக் கொல்லலாம் என்ற சூழலில்கூட கொள்கையில் உறுதியாக இருந்தவர் புலவர்.

``ஓர் அடிப்படைச் சமூக மாற்றத்திற்காகப் போராளியாக உருவெடுத்த என்னால், என் உயிரைக் காக்க கருணை மனு கொடுக்கும் அளவுக்கு தாழ்ந்து போக முடியவில்லை...''

- புலவர் கு. கலியபெருமாள்.


தமிழகப் புரட்சியாளர்கள் அனைவரும் தங்கள் தந்தையை இழந்து நிற்கின்றனர்.

``சாவிலிருந்துதான் வாழ்வு பிறக்கிறது''

- லியோனார்ட் பெல்டியர்.


(செவ்விந்திய பழங்குடியின மக்களின் உரிமைக்காகப் போராடி 35 ஆண்டுகளாக அமெரிக்க சிறையில் வாடிக் கொண்டிருப்பவர்.)

Thursday, June 28, 2007

அது ஒரு பொடா காலம்! (11) சுப.வீரபாண்டியன்

கவலை காரணமாக, பரந்தாமனின் மூல நோய் மிகுதியாகிவிட்டது. உடலாலும், உள்ளத்தாலும் அவரைத் துன்புறுத்திய அன்றைய அரசின் மீது எனக்கு அடங்காச் சினம் எழுந்தது. ‘கருணை இல்லா ஆட்சி கடுகி ஒழிய வேண்டும்’ என்று கருதினேன்.

21.11.2002 காலை, உடல் நலிவுகளைப் பொருட்படுத்தாமல், காவல் துறையினரின் காவலுக்குப் பரந்தாமன் அழைத்துச் செல்லப்பட்டார்.

டிசம்பர் மாதத்தில் ஒரு நாள், மதியம் வரை நீதிமன்றம் நடக்கும் என்று வழக்கறிஞர் கூறியதும், மகன் இலெனினிடம் சொல்லி, அன்று நீதிமன்றத்துக்கு வீட்டிலிருந்து மதிய உணவு கொண்டு வரும்படி கூறினேன். சிறை உணவுகளைச் சாப்பிட்டுச் சாப்பிட்டு நாக்கு செத்துப் போயிருந்தது.

அந்த நாள் வந்தது. நீதிமன்றத்தில் ‘கேஸ்காரர்கள்’ அனைவரும் சந்தித்துக் கொண்டோம். கடலூரிலிருந்து, நெடுமாறன் ஐயாவும், கோவைச் சிறையிலிருந்து நண்பர் பாவாணனும், சேலம் சிறையிலிருந்து மருத்துவர் தாயப்பனும் அழைத்து வரப்பட்டிருந்தனர்.

தாயப்பனிடம் மெதுவாக, வீட்டிலிருந்து உணவு வரவிருக்கும் செய்தியைச் சொன்னேன். உமாவும் வீட்டு உணவு கொண்டுவர இருக்கும் செய்தியை அவர் சொன்னார். அதன் பின் இருவரும் நீதிமன்ற நடவடிக்கைகளில் அதிகம் கவனம் செலுத்தவில்லை.

மதியம் 2 மணியளவில் நீதிமன்றத்தை ஒத்திவைத்துவிட்டு, நீதிபதி கீழ் இறங்கி விட்டார்.

வீட்டிலிருந்து என் மனைவியும், மருமகள் விஜியும் எனக்கு எது பிடிக்கும் என்று எண்ணி எண்ணிச் சமைத்துக் கொண்டு வந்திருந்தனர். உமாவும் ஐயாவுக்குப் பிடித்த எலுமிச்சைச் சோறு, தேங்காய்ச் சோறு எனப் பலவித உணவைக் கொண்டு வந்திருந்தார்.

பாவாணனும் தாயப்பனும் ‘பணி’யைத் தொடங்கிவிட்டனர். ஐயாவுக்கும் எனக்கும் தட்டுகளில் உணவு பரிமாறப்பட்டது. முதல் வாய் உணவை நான் கையில் எடுத்ததுதான் தாமதம்... வழிக் காவலாக வந்த ஓர் உதவி ஆய்வாளர் மிக விரைந்து என்னிடம் வந்தார். ‘‘வீட்டுச் சாப்பாட்டுக்கெல்லாம் அனுமதி கிடையாது’’ என்றவர், என் மனைவியை நோக்கி ‘‘அம்மா, அந்தத் தட்டை வாங்கிக்குங்க’’ என்றார்.

அன்று நீதிமன்றத்துக்கு என் அண்ணன் எஸ்.பி.முத்துராமனும் வந்திருந்தார். ‘‘உங்க கண்ணு முன்னாடிதானே சாப்பாட்டையெல்லாம் எடுத்துவெச்சாங்க. அப்பெல்லாம் ஒண்ணும் சொல்லாம, இப்படி சாப்பிடப் போற நேரத்துல வந்து தடுக்கிறீங்களே?’’ என்றார் அவர்.

‘‘அதோ, அங்கே நிக்குற ஏ.சி.யோட உத்தரவு. நாங்க ஒண்ணும் செய்ய முடியாது’’ என்றார் காவலர்.

‘‘நாங்க எல்லாம் வழக்கமா சாப்பிட்டுக்கிட்டுதானே இருக்கோம்?’’ என்றார் தாயப்பன்.

‘‘அது ஒங்க எஸ்கார்ட்ஸைப் பொறுத்த விஷயம். ஆனா, எங்க ஏ.சி கூடாதுங்கறார். நாங்க அனுமதிக்க மாட்டோம். அவ்வளவுதான்!’’

பாவாணன் சற்று கோபக்காரர். அவர் என் பக்கம் திரும்பி, ‘‘நீங்க சாப்பிடுங்க. என்ன செய்யுறாங்கன்னு பார்த்துடுவோம். அதென்ன ஊருக்கு ஒரு சட்டம்..!’’ என்று பொரிந்தார்.

அதுவரை பொறுமையாக எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு இருந்த நெடுமாறன் ஐயா, அந்த உதவி ஆய்வாளரை அருகில் அழைத்தார். ‘‘என்ன, ஒங்க அதிகாரத்தைக் காட்டுறீங்களா?’’ என்று தொடங்கிப் பல கேள்விகளைக் கேட்டார். எதற்கும் பதில் சொல்லாமல் கேட்டுக்கொண்டு இருந்த அவர், பிறகு உதவி ஆணையர் (ஏ.சி.) இருக்குமிடம் நோக்கி நகர்ந்தார். அவரிடம் ஏதோ பேசிவிட்டு மீண்டும் நெடுமாறன் ஐயாவிடம் வந்து, ‘‘ஸாரி சார், ஏ.சி. அனுமதிக்க முடியாதுன்னு கண்டிப்பா சொல்லிட்டாரு’’ என்றார்.

அவ்வளவுதான்... ஐயா சட்டென எழுந்து, காவல் ஊர்தியை நோக்கி விரைந்தார். கடலூரிலிருந்து வந்த வழிக் காவலர்கள், ‘‘ஐயா! நீங்க சாப்பிட்டுட்டு வாங்க’’ என்றனர். ‘‘ஓ! அவர் சாப்பிடக் கூடாது. நாங்க மட்டும் சாப்பிடலாம். நல்லா இருக்குய்யா ஒங்க சட்டம்’’ என்று சொல்லிவிட்டு, ஊர்தியில் ஏறி அமர்ந்துவிட்டார்.

அண்ணன்கூட அருகில் சென்று சொல்லிப் பார்த்தார். ஐயா எதையும் கேட்கவில்லை. எனக்காகக் கடலூர் வரை அவரும் பட்டினியாகவே பயணப்பட்டார். பாவாணனும் தாயப்பனும்கூடப் பாதியில் உணவை நிறுத்திவிட்டுப் புறப்பட்டுவிட்டனர். என் அண்ணன், மனைவி, மகன், மருமகள் எல்லோர் முகத்திலும் ஒரு வாட்டம்.

உணவு பெரிதில்லை; ஆனால், உணர்வு பெரிதல்லவா! சிறையிலும், வெளியிலும் அன்று யாருமே மதிய உணவு உண்ணவில்லை.

காவல் துறைக் காவல் முடிந்து, பரந்தாமன் சிறை திரும்பினார். நாங்கள் அஞ்சியதைப் போல அங்கு எதுவும் நடைபெறவில்லை. மிரட்டல்களோ, சித்ரவதைகளோ எதுவும் இல்லை என்றும், மதிப்புடனேயே நடத்தினார்கள் என்றும் கூறினார். ஆறுதலாக இருந்தது.

வெடிகுண்டு குச்சிகளின் விவரம் காவல்துறைக்குத் தெரியும்தானே! அதனால்தான் வேறு வகையில் நெருக்கி விசாரிக்கவில்லை போலும் என்று பேசிக்கொண்டோம். எந்த ஒரு கூற்றின் கீழும், வெள்ளைத் தாளிலும் கையப்பமிடவில்லை என்ற செய்தியையும் கூறினார்.

எனினும், அவருடைய உடல்நலம் மேன்மேலும் கெடத் தொடங்கியதால், சிறைக்குள்ளேயே இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

வெளியில் இருக்கும் போது, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது துன்பமானது. ஆனால், சிறையில் அதற்குப் பெரிய போட்டியே நடக்கும். கைதிகளில் பலர், சிறை மருத்துவரிடம், ‘‘ஐயா! என்னை ஒரு வாரமாவது ஆஸ்பத்திரிக்கு அனுப்பணும்னு எழுதிக் கொடுங்கய்யா’’ என்று கெஞ்சுவார்கள். நேர்மையான மருத்துவர்கள், உண்மையான நோயாளிகளை மருத்துவமனைக்கு அனுப்புவார்கள். மற்றவர்கள் ‘பார்த்து’ அனுப்புவார்கள்.

சிறையைக் காட்டிலும், சிறை மருத்துவமனையில் சில வசதிகளும் சில சுதந்திரங்களும் உண்டு. மாலை 6 மணிக்கு அறையில் அடைத்துப் பூட்டுவது என்பது அங்கு கிடையாது. வெளியிலிருக்கும் ஒரு பெரிய கதவை மட்டுமே பூட்டுவார்கள். எனவே, நடமாட்டம் தடைப்-படாது. வரிசையாகப் படுக்கைகள் இருக்கும். சேர்ந்து அமர்ந்து பேசிக்கொண்டு இருக்கலாம். இரவில் ரொட்டியும், பாலும் கொடுப்பார்கள். எல்லாவற்றையும்விட, அங்கே மின் விசிறி உண்டு. அப்பாடா.... கொஞ்சம் காற்று வாங்கலாம். மருத்துவமனையில் மாடிப்பகுதி கிடைத்துவிட்டால், எதிரேயுள்ள சென்னை மாநகராட்சிக் கட்டடம் தெரியும். வாகனப் போக்குவரத்தைச் சற்று வேடிக்கை பார்க்கலாம். இவ்வாறு பல வாய்ப்புகள் உண்டென்று மோகனும், செல்வராஜும் சொன்னதைக் கேட்டு பரந்தாமனும் மகிழ்ச்சியாக மருத்துவ மனைக்குப் புறப்பட்டார். மருத்துவமனைக்கு மகிழ்ச்சியாகப் புறப்படும் முரண், எங்களைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது.

முதல் வகுப்புக் கைதிகள் என்பதால், எங்களுக்கு நாற்காலியும், மேசையும் வழங்கப்பட்டன. ஓர் இரவில், வெளியில் எரியும் விளக்கின் மங்கலான வெளிச்சத்தில், மேசை மீது புத்த கத்தை வைத்துச் சிரமப்பட்டுப் படித்துக்கொண்டு இருந்தேன். அப்போது காவலர்கள், ஓர் இளைஞனை எங்கள் தொகுதிக்குள் அழைத்து வந்தனர். ‘ஏதோ புது வரவு’ என்று நினைத்துக் கொண்டேன். என் அறையைத் தாண்டி, அந்த இளைஞனை அழைத்துச் சென்றபோது, அவனை எங்கோ பார்த்திருப்பது போன்று எனக்குப் பட்டது. சட்டென்று ஒரு மின்னல் வெட்டு! கண்டுபிடித்துவிட்டேன். ‘அட, அவன்தானா இவன்!’ என்ற ஆர்வத்தில் மீண்டும் அந்த இளைஞனை உற்றுப்பார்க்க முயல்வதற்குள், பக்கத்து அறையில் அவன் அடைக்கப்பட்டுவிட்டான்!

(தொடரும்)

நன்றி:
ஆனந்த விகடன்.
www.subavee.blogspot.com

Sunday, June 24, 2007

மும்பையில் மோதல் கொலைகள் குறித்து அகில இந்திய மாநாடு - கோ.சுகுமாரன் பங்கேற்கிறார்

மனித உரிமை அமைப்புகளின் தேசிய கூட்டமைப்பு மற்றும் இலண்டனில் உள்ள ஆம்னஸ்டி இன்டர்நேசனல் ஆகியவை சார்பில் 26-06-2007 செவ்வாயன்று மும்பையில் மோதல் கொலைகள் குறித்து அகில இந்திய மாநாடு நடைபெற உள்ளது.

இந்திய அளவில் மோதல் கொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுபற்றி ஆழமாக ஆராய்ந்து அப்பாவி மக்களின் உயிரைப் பறிக்க காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், பதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்கவும் பாடுபடுவது பற்றி இம்மாநாட்டில் திட்டமிடப்பட உள்ளது. மேலும், மோதல் கொலைகள் குறித்த பல்வேறு அம்சங்கள் பற்றி விரிவாக விவாதிக்கப்பட உள்ளன.

இதில், மும்பை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எச்.சுரேஷ், தில்லியிலிருந்து பேராசிரியர் கிலானி, டாக்டர் ஜான் தாமஸ், மும்பையிலிருந்து வழக்கறிஞர் செபஸ்டின், பேராசிரியர் ஷாம்சுல் இஸ்லாம், பெங்களூரிலிருந்து கெளரி லங்கேஷ், பேராசிரியர் பாபையா, சென்னையிலிருந்து மனிதம் அக்னி சுப்பிரமணியம் உட்பட பலர் கலந்துகொண்டு உரையற்றுகின்றனர்.

புதுச்சேரியிலிருந்து மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இம்மாநாட்டில் கலந்துகொண்டு “மோதல் கொலைகளில் சாதி, மதப் பின்னணி“ என்ற தலைப்பில் கருத்துரை வழங்குகிறார்.

மோதல் கொலைகள் குறித்து மக்களிடையே போதிய விழிப்பிணர்வு ஏற்படுத்தவும், இதுபோன்ற சட்டத்திற்குப் புறம்பான செயல்களைத் தடுத்து நிறுத்தவும், அகில இந்திய அளவிலான குழு ஒன்று இம்மநாட்டில் அமைக்கப்பட உள்ளது. இக்குழுவில், இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள் இடம் பெறுவார்கள்.

சித்திரவதைக்கு எதிரான சர்வதேச நாளில் (ஜுன் 26) இம்மாநாடு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tuesday, June 19, 2007

அது ஒரு பொடா காலம்! (10) சுப.வீரபாண்டியன்

அந்த அதிர்ச்சிச் செய்தியை அன்றைய மாலை நாளேடுகள் வெளியிட்டு இருந்தன.

‘நெடுமாறன் கட்சிப் பிரமுகர் வீட்டுக் கோழிப் பண்ணையில் ஜெலட்டின் குச்சிகள்!’ என்று தலைப்பிட்டு, காவல்துறை கொடுத்த செய்தி அது. எங்கள் வழக்குரைஞர்கள் சந்திரசேகரன், புருசோத்தமன் இருவரும் அது பற்றி விரிவாகக் கூறினர்.

நவம்பர் 6-ம் தேதி அதிகாலை, மானாமதுரையில் உள்ள பரந்தாமன் இல்லத்துக்குச் சென்ற உளவுத்துறைக் காவல் பிரிவினர், கோழிப் பண்ணையைச் சோதனையிட வேண்டும் என்று கூறியுள்ளனர்.

வீட்டிலிருந்த அவருடைய மகன் ரகுராமனை அழைத்துக்கொண்டு அங்கே போய், பல இடங்களைச் சோதனையிட்டுள்ளனர். ஒரு பிரிவினருடன் ரகு நின்றுகொண்டு இருக் கும்போது, இன்னொரு பிரிவினர், ‘வாங்க... இங்கே வாங்க’ என்று கூவியுள்ளனர்.

‘இதோ... இங்கே பாருங்க, ஜெலட்டின் குச்சிகளும் டெட்டனேட்டர்களும் மறைத்து வைக்கப்பட்டுள்ளன’ என்று, எல்லாவற்றையும் வீடியோ படம் எடுத்து, அவர் மகனையே சாட்சியாக ஆக்கிவிட்டனர்.

எனினும், அவர்கள் கவனத்தில் கொள்ளாமல்போன சில சட்ட நுணுக்கங்களை எங்களுக்கு வழக்குரைஞர்கள் தெளிவுபடுத்தினர்.

‘‘ஒண்ணும் கவலைப்படாதீங்க... இதெல்லாம் கோர்ட்டில் நிக்காது” என்று பரந்தாமனுக்கு ஆறுதல் கூறினர். ஆறுதல் மொழிகள் அவ்வளவாக வேலை செய்யவில்லை. கடுமையான மன உளைச்சலில் இருந்தார் பரந்தாமன். குடும்பத்தினருக்கும் ஏதாவது பாதிப்பு வந்துவிடுமோ என்று கவலைப்பட்டார்.

‘‘ஏன் சுபவீ... டெட்டனேட்டர்னு ஏதோ சொல்றாங்களே, அப்படின்னா என்ன..?’’ என்று என்னிடம் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டு இருந்தார். ‘‘ஏன் அண்ணாச்சி, நான் மட்டும் என்ன இதுக்கு முன்னாடி வெடிகுண்டா வெச்சுக்கிட்டு இருந்தேன்?’’ என்று நான் கேலியாகக் கேட்க, இருவரும் சிரித்தோம்.

மறுபடியும் கடும் மழை தொடங்கியது. இரண்டு நாள்கள் மழை பெய்யும் என்றும், புயல் சின்னம் தோன்றியிருப்பதாகவும் செய்தியில் சொன்னார்களாம். மழையில் நனைந்தபடி, பரந்தாமன் மாடிக்கு ஓடினார். இரவு கடுமையாகக் காற்று வீசியது. மின்சாரமும் துண்டிக்கப்பட்டுவிட்டதால், சிறிது நேரம் முழுமையான இருட்டு, தனிமை, காற்று மழையின் இரைச்சல் என்று புதிய அனுபவமாக இருந்தது.

மின்சாரம் வந்து வந்து போய்க்கொண்டு இருந்த அந்த இரவில், கடுங்குளிர் தாக்கத் தொடங்கிவிட்டது. கம்பிக் கதவுகளுக்குள் சாரல் விழுந்து விழுந்து, தரை ஏறத்தாழ ஈரமாகிவிட்டது. படுக்கவும் முடியாமல், நடக்கவும் முடியாமல்... அது ஒருவிதமான சோகம்!

சிறையில் கொடுக்கப்படும் போர்வை, ஒன்றுக்கும் பயன்படவில்லை. உள்ளேயிருந்து ஒரு ‘ஜீன்ஸ்’ முழுக்கால் சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டேன். ஒரு சட்டைக்கு மேல் இன்னொரு சட்டையை எடுத்துப் போட்டுக்கொண்டேன்.

அந்த நேரம் பார்த்து மழைக்கோட்டு, கையில் விளக்குடன் வந்த ஒரு அதிகாரி என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார். நள்ளிரவில் உடைமாற்றிக் கொண்டு இருப்பதைப் பார்த்துவிட்டு, ‘என்ன, இந்த ஆள் புறப்படுறானா?’ என்று எண்ணியிருக்கக் கூடும்.

‘‘ஒண்ணுமில்லே, ரொம்பக் குளிரா இருக்கு’’ என்றேன்.

‘‘அப்படியா!’’ என்றார் சந்தேகம் தீராமல்.

அன்று, நவம்பர் 13. செய்தித் தாளில் மதுரைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் நண்பர் வண்ணமுத்துவின் படம் இருப்பதைப் பார்த்துவிட்டு, செய்தியைப் படித்தபோது வலித்தது. மாரடைப்பு காரணமாகப் பேராசிரியர் வண்ணமுத்து மறைவு என்ற செய்தி என்னைத் துயரில் ஆழ்த்தியது.

நல்ல மனிதர். எனக்கு நல்ல நண்பர். 1976-ம் ஆண்டு, சென்னை எஸ்.ஐ.வி.இ.டி. கல்லூரியில் நான் பயிற்றுநராக வேலையில் சேர்ந்தபோது, வண்ணமுத்துவும் பாலசுந்தரமும்தான் எனக்கு நேர் மூத்த ஆசிரியர்கள். இரண்டு பேருமே பக்திப் பழங்களாக இருந்தார்கள். சைவ இலக்கியங்களில் இருவருக்கும் நல்ல தோய்வு. சிவன், சக்தி, முருகன் என்று அவர்கள் பேசிக்கொண்டு இருக்க, பெரியார், அண்ணா, பாரதிதாசன் என்று நான் பேசிக்கொண்டு இருப்பேன். அவர் கள் இருவரும் பட்டை பட்டையாகத் திருநீறு பூசியிருப்பார்கள். நானோ, ‘கோயில் இல்லா ஊரில் குடியிருப்போர் வாழ்க! குழைத்துநீறு பூசாக் கொள்கையினர் வளர்க! ஆயிரமாம் பகைகள் அணி வகுத்தபோதும் அயராத பெரியார் அருந்தொண்டு வெல்க!’ என்று 1972-ம் ஆண்டிலேயே கவிதை எழுதியவன். ஆனாலும் எங்களுக்குள் நல்ல நட்பு இருந்தது. எப்போதும் என்னைத் ‘தம்பி, தம்பி’ என்று வாய் நிறைய அழைப்பார் வண்ணமுத்து. இன்று அவர் போய்விட்டார்.

சிறையில் இருந்த நாள்களில் அடுத்தடுத்து எழுத்தாளர் சு.சமுத்திரம், கவிஞர் மீரா போன்றவர்களையும் காலம் விழுங்கிவிட்டது.

சமுத்திரம் ஓர் அரிய எழுத்தாளர். பன்னீர்ப் பூக்களைப் பற்றிப் பலர் பாடிக்கொண்டு இருந்த வேளையில், வியர்வை மலர்களின் வேதனையை வெளிப்படுத்தியவர் அவர்.

இன்றைய இளைஞர்கள் ‘ரசிகர்’களாக மட்டுமே நின்று, தங்கள் வாழ்க்கையைத் தொலைக்கும் அவலத்தை ‘மேய்ச்சல் நிலம்’ என்னும் பெயரில், நான் சிறப்பாசிரியராக இருந்த நந்தனில் தொடர்கதையாக எழுதினார். அப்போது இருவரும் அடிக்கடி சந்தித்துப் பேசிக்கொள்ளும் வாய்ப்புகள் கிடைத்தன.

கவிஞர் மீரா, எனக்கு மிகவும் மூத்தவர். நேரடிப் பழக்கம் குறைவு. ஆனாலும், எங்கள் கல்லூரி நாள்களில் அவர் எழுதிய ‘கனவுகள்+ கற்பனைகள் = காகிதங்கள்’ என்னும் கவிதை நூல்தான் எங்களின் வேதப் புத்தகம். காதல் சுவை நனி சொட்டச் சொட்டக் கவிஞரால் எழுதப்பட்ட நூல்.

காரைக்குடிக் கல்லூரி வகுப்பறையில் ஒரு நாள், ஒரு நண்பன், ‘‘ஏன் மச்சி... இந்தக் கவிதையைப் படிச்சியா..?

‘உனக்கென்ன
ஒரு பார்வையை
வீசிவிட்டுப் போகிறாய்...
என் உள்ளமல்லவா
வைக்கோலாய்ப் பற்றி எரிகிறது...’


அடடா! எப்படியிருக்கு?’’ என்று வகுப்புத் தோழிகள் காதில் விழுகிற மாதிரி உரத்துப் படிக்க, ‘‘தீயணைப்பு நிலையத்துக்குப் போன் பண்ணச் சொல்லுடி’’ என்று ஒரு மாணவி சொல்லிவிட்டுப் போனார்.

இப்படி அன்று ஏராளமான இளைஞர்களை ஈர்த்த, தன் சமூகக் கவிதைகளால் அண்ணாவின் பாராட்டைப் பெற்ற கவிஞர் மீராவின் இறப்புச் செய்தியும், எங்களைச் சிறையில்தான் வந்து எட்டியது.

துக்கமோ, இன்பமோ தூரத்திலிருந்துதான் பங்கேற்க முடியும் என்ற நிலையைச் சிறை உருவாக்கிவிட்டது.

சிறையில், கண்காணிப்பாளர் அழைத்து வரச் சொன்னதாக யாரேனும் வந்து கூப்பிட்டால், நல்லதாகவோ, கெட்டதாகவோ ஒரு செய்தி உள்ளது என்று பொருள்.

அன்று பரந்தாமனுக்கு அப்படி ஓர் அழைப்பு வந்தது. அவர் திரும்ப வரும் வரை, எதற்காக அழைத்திருப்பார்கள் என்று இங்கே யூகங்கள் ஓடும்.

15 நிமிடங்களுக்குப் பிறகு திரும்பி வந்த அவரிடம், மீண்டும் பழைய துயரம் குடிகொண்டு இருந்தது. கெட்ட செய்திதான் என்று முடிவாகிவிட்டது. அவராகச் சொல்லட்டும் என்று காத்திருந்தேன்.

‘‘போலீஸ் கஸ்டடிக்கு என்னை அனுப்பச் சொல்லி கோர்ட் உத்தரவாம்’’ என்றார்.

எனக்கும் அதிர்ச்சியாக இருந்தது. ஏன் அவருக்கு இப்படிச் சோதனை மேல் சோதனை என்று தோன்றியது. சிறை என்பது நீதிமன்றக் காவல். அப்படி இல்லாமல் காவல் நிலையத்திலேயே வைத்து விசாரிப்பதைக் காவல் துறைக் காவல் என்பார்கள்.

காவல் துறைக் காவலில் பல சித்ரவதைகள் நடக்கும் என்று கேள்விப்பட்டுள்ளோம். இப்போது அது போன்ற காவல் பரந்தாமனுக்கு எதற்காக என்று புரியவில்லை. என்ன ஆகுமோ என்ற கவலை எல்லோரையும் பற்றிக்கொண்டது!

(தொடரும்)

நன்றி:
ஆனந்த விகடன்.
www.subavee.blogspot.com

Saturday, June 16, 2007

அருந்ததியர்களுக்கு உள்ஒதுக்கீடு கோரிக்கை : ரவிக்குமார் எம்.எல்.ஏ. எதிர்ப்பு



Ravikumar MLA on Arunthathiar Reservation - BBC - Tamilosai - 12-6-2007
Ravikumar MLA on A...
Hosted by eSnips

தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கு வழங்கப்படும் 18 விழுக்காடு இடஒதுக்கீட்டில் அருந்ததிய இன மக்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க வேண்டுமென்ற கோரிக்கைக்கு விடுதலைச் சிறுத்தைகளின் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

12-6-2007 அன்று சென்னையில் பல்வேறு அருந்ததிய இன மக்களின் இயக்கங்களை ஒருங்கிணைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாபெரும் பேரணி ஒன்றை நடத்தியது. இதில் தமிழகமெங்கும் இருந்து பல்லாயிரக்கணக்கான அருந்ததியர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் என். வரதராஜன் தலைமையிலான குழு தமிழக முதல்வர் கருணாநிதியை கோட்டையிலுள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தது.

அம்மனுவில், பாதாளச் சாக்கடை, துப்புரவுப் பணியை நவீனப்படுத்த வேண்டும்; அருந்ததியர் குறித்த முழுமையான கணக்கெடுப்பை நடத்த வேண்டும்; தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் அருந்ததியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இருந்தனர்.

கோரிக்கை மனுவைப் பெற்றுக் கொண்ட முதல்வர் கருணாநிதி, அருந்ததியர் பற்றிய கணக்கெடுப்பு நடத்த ஒரு குழு அமைக்கப்படும்; மற்ற கோரிக்கைகளையும் அரசு பரிசீலிக்கும் என உறுதியளித்துள்ளார்.

இப்பேரணியில் கலந்து கொண்ட ஆதித் தமிழர் பேரவையின் தலைவர் இரா.அதியமான் `தமிழகத்தில் மூன்றில் ஒரு பங்காக இருக்கின்ற அருந்ததிய இன மக்களுக்குத் தாழ்த்தப்பட்டோருக்கான 18 சதவீத மொத்த இடஒதுக்கீட்டில், மூன்றில் ஒரு பங்கான 6 சதவீதத்தை வழங்க வேண்டும்' என்றார்.

தாழ்த்தப்பட்ட மக்களில் அடித்தட்டில் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் உழன்றுவரும் அருந்ததியர்களுக்கு தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்குவதுதான் இயற்கை நீதி, சமூக நீதி. தமிழகத்திலுள்ள பல அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள் பல காலமாக இக்கோரிக்கையை எழுப்பி வருகின்றன. இந்தச் சூழலில், ஆளும் திமுக கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அருந்ததியர்களின் கோரிக்கையை முன்னெடுத்திருப்பது ஒரு முக்கிய திருப்பம் எனலாம்.

இதனிடையே, தமிழகத்தில் குறிப்பிடத்தகுந்த தலித் கட்சியான விடுதலைச் சிறுத்தைகளின் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார், அருந்ததிய இன மக்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் இலண்டன் பி.பி.சி. தமிழோசை வானொலிக்கு அளித்த நேர்காணலில் தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகளின் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் நேர்காணலில் கூறியதாவது :

’அருந்ததியின மக்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஆந்திர பிரதேசத்தில் முதன்முதலில் எழுப்பப்பட்டது. தெலுங்கு தேசக் கட்சி ஆட்சியில் சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தபோது உள்ஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றினார். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்ககான இடஒதுக்கீட்டை இப்படி பிரிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் ஆந்திர பிரதேசத்தின் அந்த சட்டத்தை ரத்து செய்துவிட்டது. இப்போது இதே கோரிக்கையை இங்கே எழுப்புகிறார்கள். இடஒதுக்கீடு என்பது எந்தவொரு பிரச்சினைக்கும் முழுமையான தீர்வாகாது. இடஒதுக்கீடு மூலம் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களில் 10 விழுக்காட்டினர் மட்டும்தான் பயன்பெற முடியும். மொத்த இடஒதுக்கீட்டில் தனியார் துறை, அரசு ஒதுக்கீடு என இடஒதுக்கீடு பூர்த்தி செய்யப்பட்டாலும்கூட அது அந்த சமூகத்தைச் சேர்ந்த 10 விழுக்காட்டு மக்களுக்கே பயன் அளிக்கக் கூடியதாகும். ஆக, இடஒதுக்கீடு என்பதிலேயே முழுமையான ஒரு தீர்வைக் கண்டுவிடலாம் என்ற தவறான கண்ணோட்டத்தில்தான் உள்ஒதுக்கீடு கோரிக்கைகள் முன் வைக்கப்படுவதாக நான் கருதுகிறேன்’
என்று கூறியுள்ளார்.

அருந்ததியர்களுக்கான உள்ஒதுக்கீட்டை எதிர்ப்பதன் மூலம் சாதிப் படிநிலையில் கடைகோடியில் இருக்கும் அருந்ததிய இன மக்களுக்கு தன் ஆதரவு இல்லை என்பதையே ரவிக்குமார் தெளிவுப்படுத்தியுள்ளார். மேலும், தாழ்த்தப்பட்ட மக்களில் கீழ்நிலையிலுள்ள அருந்ததி இன மக்கள் முன்னேற்றம் அடைவதால் தன்னுடைய சமூக மக்களுக்கான இடங்கள் பறிபோகும் என்ற அச்சத்தை அவர் இப்படி வெளிப்படுத்தி உள்ளதாகவே கருத வேண்டியுள்ளது.

விடுதலைச் சிறுத்தைகளின் சட்டமன்ற உறுப்பினராக இருந்து ரவிக்குமார் இப்படி அருந்ததிய இன மக்களுக்கு எதிராக கருத்து தெரிவித்திருப்பது பல்வேறு அய்யங்களுக்கு வழிவகுத்துள்ளன. ஒட்டுமொத்த தலித்துகளுக்கானக் கட்சி என கூறிவரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவன், இதுபற்றிய மறுப்போ அல்லது அருந்ததிய இன மக்களுக்கான உள்ஒதுக்கீடு பற்றியோ இதுவரையில் எதுவும் கூறாமல் இருப்பது, ரவிக்குமாரின் கருத்தை ஆதரிக்கிறாரா என எண்ணத் தோன்றுகிறது. இது குறித்து அவர் உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

ரவிக்குமார் அருந்ததியர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்திருப்பது இதுவே முதல் முறையல்ல. 2004-ஆம் ஆண்டு ஆகஸ்டில் வெளிவந்த `காலச்சுவடு' என்ற பார்ப்பன - இந்துத்துவ இதழில், ’இறந்த உதடுகள் ஒன்று கூடும் பொழுது’ என்ற தலைப்பில் புகழ்பெற்ற கவிஞர் பாப்லோ நெரூடா நூற்றாண்டையொட்டி, அவரைப் பற்றி எழுதிய குறிப்பு ஒன்றில் இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.

’நெரூடா கொழும்பில் வசித்த பங்களா மிகப்பெரியது. அதன் கழிவறை வெளியே தனியே அமைக்கப்பட்டிருந்தது. அந்தக் கழிவறையை யார் சுத்தம் செய்கிறார்கள் என்பது நெரூடாவுக்கு தெரியாது. ஒருநாள் அது யாரென்பது நெரூடாவுக்குத் தெரியவந்தது. ''இலங்கையில் நான் இதுவரை சந்தித்திராத அழகி. ஒரு சிலையைப் போல இருந்தாள். அவள் ஒரு தமிழ்ப்பெண், பறையர் சாதியை சேர்ந்தவள். அவள் சிவப்பும் பொன்நிறமும் கொண்ட மட்டரகமான புடவையை உடுத்தியிருந்தாள். கைகளில் கனமான வளையல்கள். அவளது மூக்கின் இரு புறமும் இரண்டு சிறிய சிவப்பு மூக்குத்திகள் மின்னிக்கொண்டிருந்தன. அவை வெறும் கண்ணாடிகள்தான் என்ற போதிலும் அவளது முகத்தில் ரத்தினங்களாய் மின்னிக்கொண்டிருந்தன.''

அவளை வசியப்படுத்த நெரூடா பலவித முயற்சிகளைச் செய்கிறார். எதற்கும் பலனில்லை. ''ஒரு நாள் நேராகச் சென்று அவளது கையைப் பிடித்தேன், கண்களைப் பார்த்தேன். அவளோடு பேச என்னிடம் மொழியும் இல்லை. சிறு புன்னகை கூட இன்றி அவள் படுக்கையறைக்கு வந்தாள்.'' ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தென்னிந்தியச் சிற்பத்தைப் போல அவள் இருந்ததாக நெரூடா வர்ணிக்கிறார். ''அவளைப் புணர்ந்தது ஒரு சிலையைப் புணர்ந்ததுபோல் இருந்தது. கடைசிவரை அவளது கண்கள் திறந்தபடியே இருந்தன. அவளிடமிருந்து ஒரு எதிர்வினையும் இல்லை.''

பறையர் என நெரூடா குறிப்பிட்டிருப்பது அக்காலத்தில் (1929) கொழும்பில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்த சக்கிலிய வகுப்பினரைத்தான். நெரூடாவின் வர்ணனையைப் படிக்கும்போது ஏறத்தாழ நெரூடா அந்தப் பெண்ணைக் கற்பழித்தார் என்றே சொல்லத் தோன்றுகிறது.’


பாப்லோ நெரூடா உறவு கொண்டது பறையர் வகுப்பைச் சேர்ந்த பெண் அல்ல, அவள் சக்கிலியர் வகுப்பைச் சேர்ந்தவள் என குறிப்பிட்டதின் பின்னணி எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய ஒன்றுதான். ரவிக்குமார் இவ்வாறு எழுதியதற்கு அப்போது பலதரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பாப்லோ நெரூடா உறவு கொண்டது, ரவிக்குமார் சொற்களில் கூறினால் கற்பழித்தது ஒரு தலித் பெண் என எடுத்துக் கொள்ளாமல் அவள் அருந்ததிய இனப் பெண் எனக் குறிப்பிட்டுச் சொன்னதின் உள்ளீடு நுண்ணிய சாதி ஆதிக்க வெளிப்பாடு; அம்பேத்கர், பெரியார் போன்றவர்கள் வலியுறுத்திய சாதி ஒழிப்புக்கு முரணானது; தலித் விடுதலைக்கு எதிரானது.

ரவிக்குமார் அவரது பேச்சிலும், எழுத்திலும் தொடர்ந்து வலியுறுத்திய ஒன்றை அவருக்கு தற்போது நினைவுபடுத்த விரும்புகிறேன்.

`எவன் ஒருவன் தான் பிறந்த சாதிக்கு துரோகம் இழைக்கிறானோ, அவனே சாதியை ஒழிக்க முடியும்.’

Monday, June 11, 2007

சட்ட விரோத காவலில் இருளர்கள்: காவல் அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை



சட்ட விரோதமாக பழங்குடி இருளர்களைக் காவலில் வைத்த வழக்கில் உதவி ஆய்வாளர், தலைமைக் காவலர் ஆகியோருக்கு வழங்கிய 3 ஆண்டு சிறை தண்டனையை திண்டிவனம் விரைவு நீதிமன்றம் உறுதி செய்தது.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தாலுக்கா அத்தியூரில் கடந்த 1994ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16ஆம் நாள் அத்தியூர் விஜயாவின் அக்காள் கணவர் பச்சையப்பன் மற்றும் தைலாபுரம் ஈச்சங்காட்டில் வசிக்கும் விஜயாவின் உறவினர் பலராமன் ஆகிய இருவரையும் ஒரு திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்டதாக கூறி செஞ்சி உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் 4 போலீசார் அழைத்துச் சென்றனர்.

இது தொடர்பாக பலராமன் மனைவி சந்திராவும், பச்சையப்பன் மனைவி கன்னியம்மாளும் பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் மூலம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியருக்கும், காவல் கஙாணிப்பாளர் உள்ளிட்ட அனைவருக்கும் புகார் மனு அனுப்பினர்.

ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், கடந்த 1994ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் நாள் சென்னையிலுள்ள இலவச சட்ட உதவிக் கழக உதவியோடு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்தனர்.

அதே ஆண்டில் மார்ச் 14ஆம் நாள் பச்சையப்பன் செஞ்சி நீதிமன்றத்திலும், பலராமன் நெய்வேலி நீதிமன்றத்தில் பொய்யாக புனையப்பட்ட ஒரு திருட்டு வழக்கில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதற்கிடையே ஆட்கொணர்வு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மேற்படி நீதிமன்றங்களில் பரிகாரம் தேடிக் கொள்ளலாம் என்று கூறி மனுவை தள்ளுபடி செய்யது.

இதனை எதிர்த்து பலராமனின் மனைவி சந்திரா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த 1994ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13ஆம் நாள் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்து, சட்ட விரோதமாக காவலில் வைக்கப்பட்ட பலராமனுக்கு உரிய பரிகாரம் காண வேண்டும் எனக் கூறி, உயர்நீதிமன்றத்திற்கு சந்திராவின் மனுவை திருப்பி அனுப்பியது. இவ்வாறு மனுவை திருப்பி அனுப்புவது என்பது சம்பந்தப்பட்ட நீதிமன்றம் உரிய கவனம் செலுத்த வேண்டும் என சுட்டிக் காட்டுவதாகும்.

இதையடுத்து பலராமன் சட்ட விரோதமாக காவலில் வைக்கப்பட்டுள்ளாரா? என்று விசாரணை செய்து அறிக்கை அனுப்ப மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மாவட்ட அமர்வு நீதிமன்றம் விரிவான விசாரணை நடத்தியது. பலராமன் சட்ட விரோதமாக காவலில் வைக்கப்பட்டார் என்று உறுதி செய்து, அப்போதைய நீதிபதி சிவக்குமரன் உயர்நீதிமன்றத்திற்கு 40 பக்க அறிக்கை தாக்கல் செய்தார்.

இதை தொடர்ந்து 1995ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22ஆம் நாள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அருணாசலம், ஜெயராமசௌதா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் பலராமன், அவரது மனைவி சந்திராவுக்கு தமிழக அரசு இழப்பீடாக ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும்;அந்த தொகையை தவறு செய்த போலீசாரிடமிருந்து வசூலிக்க வேண்டும்; சட்டவிரோத காவலில் வைக்க காரணமான போலீசார் மீது வழக்குப் பதிவு செய்து, புலன் விசாரணையை சி.பி.சி.ஐ.டி போலீஸ் மேற்கொள்ள வேண்டும் எனத் தீர்ப்பளித்தது.

உயர்நீதிமன்ற தீர்ப்பை அடுத்து, சி.பி.சி.ஐ.டி காவல் துணைக் கண்காணிப்பாளர் மீர் சௌகத் அலி தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி, செஞ்சி உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, தலைமைக் காவலர்கள் பெருமாள், முருகேசன், ராமலிங்கம், பாலு, ராமகிருஷ்ணன், சத்தியமங்கலம் உதவி ஆய்வாளர் பக்கிரிசாமி, பண்ருட்டி உதவி ஆய்வாளர் கண்ணையன் ஆகிய 8 பேர் மீது குற்றம் சுமத்தி, வானூர் நடுவர் நீதிமன்றத்தில் குற்றபத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை வானூர் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று 2004ஆம் ஆண்டு மார்ச் மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது.

சட்ட விரோதமாக காவலில் வைத்த செஞ்சி உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி், செஞ்சி தலைமைக் காவலர்கள் பெருமாள், பாலு, ராமலிங்கம், ராமக்கிருஷ்ணன், முதுநிலைக் காவலர் முருகேசன், சத்தியமங்கலம் உதவி ஆய்வாளர் பக்கிரிசாமி, பண்ருட்டி உதவி ஆய்வாளர் கண்ணையன் ஆகிய 8 பேருக்கும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.6 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின் போது சத்தியமங்கலம் உதவி ஆய்வாளர் பக்கிரிசாமி இறந்து விட்டார்.

இந்த தண்டனையை எதிர்த்து போலீசார் திண்டிவனம் விரைவு நீதிமன்றம்(1)-இல் மேல் முறையீடு செய்தனர். மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி தயாளன், 09-06-2007 அன்று மாலை தீர்ப்பளித்தார்.

வானூர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை செஞ்சி உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, தலைமைக் காவலர் பெருமாள் ஆகியோருக்கு உறுதி செய்தும், நான்கு பிரிவுகளுக்கு தலா ரூ.ஆயிரம் என்று ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.

பண்ருட்டி உதவி ஆய்வாளர் கண்ணையன், செஞ்சி தலைமைக் காவலர்கள் பாலு, ராமலிங்கம், ராமகிருஷ்ணன், முதுநிலைக் காவலர் முருகேசன் ஆகிய 5 பேரை விடுதலை செய்து தீர்ப்பு கூறினார்.

காவல்துறை அத்துமீறல்களால் பாதிக்கப்பட்ட பழங்குடி இருளர்களுக்கு நீதி கிடைக்க பாடுபட்ட பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பா.கல்யாணி, உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பொ.இரத்தினம், உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கே.வெங்கட்ரமணி ஆகியோரின் பணி குறிப்பிடத்தக்கது.

Saturday, June 09, 2007

அது ஒரு பொடா காலம்! (9) சுப.வீரபாண்டியன்

நவம்பர் மாதத் தொடக்கத்தில் சில நல்ல செய்திகள் வந்தன. எந்த காஷ்மீரைக் காட்டி, இந்தியா முழுமைக்கும் பொடா சட்டத்தைக் கொண்டு வந்தார்களோ, அந்த காஷ்மீரில் பொடா விலக்கிக் கொள்ளப்பட்டது. பொடாவின் கீழ் அன்று சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ஜே.கே.எல்.எஃப். அமைப்புத் தலைவரான யாசின் மாலிக் விடுதலை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியானது.

‘‘என்னங்கய்யா இது, காஷ்மீர்லேயே பொடா கைதிகளை விடுதலை செய்யுறப்போ, உங்களை ஏன் விட மாட்டேங்குறாங்க?’’ என்று மோகன் கேட்டார். ‘‘எங்க மேல அம்மாவுக்கு அபாரமான அன்பு. அதான் விட மாட்டேங்குறாங்க’’ என்று வேடிக்கையாகச் சொன்னாலும், அந்த வினா ஆழமானது என்பதை நான் அறிவேன். அதற்கு விடை சொல்லத் தொடங்கினால், அது மிக நீளமானதாக அமையும்.

பொடா சட்டத்தை நடுவண் அரசு கொண்டுவந்தாலும், அதனை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் அந்தந்த மாநில அரசுகளிடமே உள்ளது. எனவே, ஒருவரைப் பொடாவில் கைது செய்வதும் செய்யாமல் இருப்பதும் மாநில அரசுகளின் விருப்பு வெறுப்பை ஒட்டியதாக அமைந்துவிட்டது.

குஜராத்தில், 2002 பிப்ரவரிக்கும் ஏப்ரலுக்கும் இடையே ஏறத்தாழ 2,000 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். அந்தக் கொலைகளுக்காக எவர் ஒருவரும் பொடாவின் கீழ் கைது செய்யப்படவில்லை. மாறாக, 200-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய மக்கள், வேறுவேறு சிறு காரணங்களுக்காகப் பொடாவில் உள்ளே தள்ளப்பட்டனர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில், 60-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர் பொடாவில் கைது செய்யப்பட்டனர். பழங்குடி வகுப்பைச் சேர்ந்த, ஏழாம் வகுப்பு மாணவியான மயந்திரகுமாரி, பொடாவில் கைதான ‘பயங்கரவாதி’களில் ஒருவர். சிறுவர்களைத்தான் கைது செய்தார்கள் என்று யாரும் சொல்லிவிடக் கூடாது என்பதற்காக, அம்மாநிலத்தில் ராஜ்சரத் என்ற 81 வயது முதியவரையும் பொடா கைதி ஆக்கினார்கள். அவரால் நடக்கவே முடியாது. ஆனாலும் ‘நடமாட முடியாத பயங்கரவாதி’யாக அவர் ஜார்கண்ட் அரசின் கண்களுக்குத் தெரிந்தார். அதே மாநிலத்தில், நக்ஸலைட் ஒருவருக்குத் தேநீர் கொடுத்ததற்காக, பன்சிதார் சாகு என்பவரும் நக்ஸலைட்டாகக் கருதப்பட்டு, பொடா சிறைக்கு வந்து சேர்ந்தார்.

இவ்வாறு, ஒவ்வொரு மாநிலத்திலும் நிலைமை வேறுவேறாக இருந்தது. அந்தக் காலகட்டத்தில் நடைபெற்ற இன்னொரு நிகழ்வும் எங்கள் சிந்தனையைத் தூண்டியது.

தாய்லாந்து நாட்டில், சிறீலங்கா அரசுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையில் தொடங்கிய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் காணப்படுவதாகச் செய்தித்தாள்கள் கூறின.

சிறீலங்காவில் புலிகள் அமைப்புக்குத் தடை இல்லை. அவர்களோடு அதிகாரபூர்வமாகப் பேச்சு வார்த்தை நடைபெறுகிறது. ஆனால், இந்தியாவில் புலிகளுக்குத் தடை. அவர்களை ஆதரித்துப் பேசியவர்களுக்குப் பொடா. இந்த அரசியல் விந்தைகளையெல்லாம் சொல்லிச் சிரிப்பதற்குக்கூட எங்களுக்கு யாரும் இல்லை.

தமிழக அரசியலில் எப்போதுதான் மாற்றம் வரும் என்று நாங்கள் எண்ணிக்கொண்டு இருந்த வேளை யில், அந்தச் செய்தி வெளியானது.

திராவிட முன்னேற்றக் கழகத் தின் தலைவர் கலைஞர், வேலூர் சிறைக்குச் சென்று வைகோவைச் சந்தித்தார் என்பதும், இருவரும் நெகிழ்ந்துபோனார்கள் என்பதும் நல்ல செய்தியாக இருந்தது.

இதனை, வெறும் தலைவர்களின் சந்திப்பாக மட்டும் நான் பார்க்கவில்லை. பாரதிய ஜனதா கட்சிக் கூட்டணியிலிருந்து, திராவிடக் கட்சிகள் விலகி வரக்கூடிய தொடக்கமாகவே அது தெரிந்தது.

இந்த இரு கட்சிகளுக்குள் ஏற்படுகிற நெருக்கம், காலப் போக்கில் பொடாவுக்கும், பா.ஜ.க. கூட்டணிக்கும் எதிரான ஒன்றாக அமைய வேண்டும் என்பதே என் விருப்பமாக இருந்தது. அந்த விருப்பம், பிறகு நிறைவேறியது என்பதே உண்மை.

ஒரு நாள் காலையில், கண்விழிக்கும்போது நல்ல மழை. அறைக்கதவைத் திறக்க வந்த காவலர், ‘‘என்ன சார், மேல தூறல் விழுகிறதுகூடத் தெரியாம நல்லாத் தூங்குறீங்களே?’’ என்றார். சிரித்துக் கொண்டே எழுந்தேன்.

இந்த ‘சார்’ மரியாதை எல்லாம் இது போல் ஒரு சில தொகுதிகளுக்கும், குறிப்பிட்ட ஒரு சிலருக்கும் மட்டுமே உரியது. மற்றபடி ‘பள்ளி எழுச்சிப் படலம்’ வேறு மாதிரி இருக்கும்.

தூக்கம் கலைந்த நான், மழை நன்றாகவே பெய்வதை அப்போதுதான் கவனித்தேன். மாடியிலிருந்த அவர்கள் நான்கு பேரும் கீழே வர முடியாமலும், நான் மேலே போக முடியா மலும் மழை எங்களைப் பிரித்துவிட்டது. ஏறத்தாழ இரண்டு, மூன்று மணி நேரம், அன்றைய மழை என்னைச் சிறைக்குள் சிறை வைத்து விட்டது.

அன்று காலை பரந்தாமன், நீதி மன்றம் செல்ல வேண்டும். மழை இன்னும் விடவில்லை என்பதோடு, அவருக்குச் சிறிது உடல் நலமில்லாமலும் இருந்தது. சிறைக்கு வந்ததிலிருந்தே அவ்வப்போது அவரை மூலநோய் சிரமப்படுத்திக்கொண்டு இருந்தது.

உதவிச் சிறை அதிகாரியை அணுகி, இன்று நீதிமன்றம் செல்ல உடல்நலம் இடம் தரவில்லை என்றும், மருத்துவரைச் சந்தித்துக் கடிதம் பெற்று, நீதிமன்றத்துக்கு அனுப்ப விரும்புவதாகவும் கூறினார். அப்படி ஒரு நடைமுறை உண்டு. மருத்துவர் பரிந்துரை செய்தால், சிறை அதிகாரி கள் அவருக்கு ஓய்வு கொடுக்க முடியும்.

ஆனால், அந்த நடை முறையைப் பொடா கைதிக்குப் பின்பற்ற, சிறை அதிகாரிகள் தயங்கினர். ‘மருத்துவரை வரவழைக்கிறோம்; உரிய மாத்திரைகளை எடுத்துக்கொண்டு நீதிமன்றம் சென்று வந்து விடுங்கள்’ என்று கூறிவிட்டனர்.

அவ்வாறே, பாதிக்கப்பட்ட உடல் நலத்தோடு, காலை 10 மணி அளவில் பரந்தாமன் நீதிமன்றத்துக்குப் புறப்பட்டுப் போனார்.

ஒருவர் நீதிமன்றம் சென்றால், திரும்பி வரும்போது வெளியுலகச் செய்தி ஏதேனும் கொண்டுவருவார் என்ற எதிர்பார்ப்பு உண்டு. அன்று நானும் அப்படி எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.

மதியம் இரண்டு மணியளவில், பரந்தாமன் சிறைக்குத் திரும்பி வந்தபோது, அவர் முகம் சோர்வாகக் காணப்பட்டது. ‘‘என்ன ஆச்சு... ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க?’’ என்று கேட்டேன். ‘‘நீதிமன்றத்துக்கு வந்த கதிரவன் அதிர்ச்சியான செய்தி ஒண்ணு சொன்னாரு’’ என்றார்.

கதிரவன் அவருடைய இரண்டாவது மருமகன். சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குரைஞராக இருக்கிறார்.

‘‘இன்னிக்கு அங்கே போனவுடனே, ‘ரகுராமன்கிறது யாரு?’ன்னு நீதிபதி கேட்டார். ‘என் மகன்தான்’னு சொன்னேன். அப்புறம், ‘கலைமகள் கோழிப் பண்ணை யாருடையது?’ன்னு கேட்டார். ‘என்னுடையதுதான்’னேன். வேற ஒண்ணும் கேக்கலை. அடுத்த வாய்தா கொடுத்து அனுப்பிட்டார்’’ என்றார் பரந்தாமன்.

‘‘பிறகென்ன?’’ என்றேன்.

‘‘இதையெல்லாம் ஏன் நீதிபதி கேக்குறார்னு, அங்கே வந்திருந்த என் மாப்பிள்ளைகிட்ட கேட்ட போதுதான், அவர் அப்படி ஓர் அதிர்ச்சியான விஷயத்தைச் சொன்னாரு!’’

(தொடரும்)


நன்றி:
ஆனந்த விகடன்.
www.subavee.blogspot.com

அது ஒரு பொடா காலம்! (8) சுப.வீரபாண்டியன்

அவ்வப்போது நாங்கள் பிணைக்கு மனுப் போடுவதும், அதனை நீதிமன்றம் மறுப்பதும் வழக்கமாகிவிட்டது. ஒவ்வொரு முறையும், நெடுமாறன் ஐயாவின் மகள் உமா எங்களைப் பார்க்க வரும்போது, ‘‘இன்னிக்கு நம்ம சந்துரு சார் (எங்கள் வழக்குரைஞர்) கடுமையா வாதங்களை வெச்சாரு. நீதிபதியும் நல்லா கேட்டாரு’’ என்று நீதிமன்றத்தில் நடந்தவற்றை எடுத்துச் சொல்வார். பரந்தாமனுக்கு அதில் நம்பிக்கை முழுமையாகப் போய்விட்டது. ‘‘ஆமா, தெனமும்தான் நீதிபதிகள் நம்ம வாதங்களைக் கேக்குறாங்க. அப்புறம் ஜாமீன் இல்லேங்கிறாங்க. இதானே நடக்குது’’ என்பார்.

உமாவைப் போல ஒரு பெண்ணைப் பார்க்க முடியாது. தன் அப்பாவுக்காக மட்டுமின்றி, பொடாவில் அடைபட்ட எங்கள் அனைவருக்காகவும் உமா பட்ட துன்பங்கள் அதிகம். தினந்தோறும் வழக்குரைஞர்களைப் பார்ப்பது, வழக்கு நாள்களில் நீதிமன்றம் செல்வது, சிறைக்கு வந்து எங்களைப் பார்ப்பது, பிறகு, எங்கள் குடும்பத்தினருக்குச் செய்திகள் சொல்வது என ஒன்றரை ஆண்டு காலமும் பம்பரமாகச் சுற்றிச் சுழன்று அவர் ஆற்றிய பணிகளை எங்கள் வாழ்நாளில் மறக்க முடியாது.

ஒருநாள், நீதிபதி பக்தவச்சலம் தலைமையில் பொடா மறு ஆய்வுக் குழு ஒன்றை அரசு அமைத்திருக்கும் செய்தியை உமா கொண்டுவர, சற்று மகிழ்ந்தோம். ஆனால், அந்தக் குழு இயங்கவே தொடங்கவில்லை. அந்தக் குழுவுக்கென்று ஓர் அறைகூட ஒதுக்கப்படாத செய்தியைச் சில நண்பர்கள் கூறினர். பிணை எதிர்பார்ப்பு எங்களை விட்டு விடைபெற்றுச் சென்றுவிட்டது.

ஒருநாள் கவிப்பேரரசு வைரமுத்துவிடமிருந்து கடிதம் வந்தது. ‘சிறை உங்களைச் சிதைக்காது; செதுக்கும்!’ என்று தன் கைப்பட எழுதியிருந்தார். சிறைத் துன்பங்களுக்கிடையிலும் அவர் தமிழ் இனித்தது.

கவிஞர் சிற்பிக்கு விருது கொடுக்கப்படும் செய்தியை ஒருநாள் நாளேடு-களில் பார்த்துவிட்டு, ஒரு அறுசீர் விருத்தத்தை மட்டும் மடலில் எழுதி அனுப்பினேன்.

‘விருது ஓர் தமிழன் பெற்றான்
விரிந்தது மகிழ்வில் உள்ளம்
அருகிலே வந்து வாழ்த்த
அவாவினன் என்ற போதும்
இரும்பிலே செய்த கம்பி
ஏழெட்டு தடுப்பதாலே
தருகிறேன் மடலில் வாழ்த்தை
தமிழ்மானம் வாழ்க வென்றே’

என்று நான் அனுப்பிய வாழ்த்துச் செய்தி கண்டு மகிழ்ந்து, உடன் அவரும் கவிதையிலேயே ஒரு விடை எழுதினார்.

‘தன்மானத்துக்குத் தடைகள் உண்டோ?
தமிழைத் தடுக்கச் சுவர்கள் உண்டோ?
அன்புக்கு ஏதும் தாழ்கள் உண்டோ?
அணையா நெருப்பே வாழ்க! நன்றி!’

என்று அவர் தந்த விடை, என் நெஞ்சை நெகிழச் செய்தது.

இலக்கிய வேட்கைக்குக் கிடைத்தது சில இரை இப்படியும் இலக்கியம் வளர்த்தது சிறை!
சிறைக்குப் புதிய புதிய ‘விருந்தாளிகள்’ வருவதும் போவதுமாக இருப்பர். எப்போதாவது சில முக்கிய விருந் தாளிகளை எங்கள் தொகுதிக்கு அனுப்புவார்கள். அப்படி வந்தவர் களில் ஒருவர்தான் ‘பங்க் குமார்.’

ஒருநாள், இரவு எட்டு மணி இருக்கும்... தொட்டியில் இருக்கும் நீரை ஒருவர் அள்ளிக் குளிக்கும் சத்தம் கேட்டது. இந்த நேரத்தில் யார்குளிப் பது என்ற வியப்பில் எட்டிப் பார்த்தேன். உருவம் சரியாகத் தெரிய வில்லை. அருகில் இரண்டு காவலர்கள் நின்றனர்.

குளித்து முடித்ததும், அந்த மனிதரை என் பக்கத்து அறைக்கு அழைத்து வந்தனர். அவர் என்னை ஒரு மாதிரியாக ஏற இறங்கப் பார்த்தார். அடுத்த அறைக்குப் போனதும், ‘‘ம்ஹ¨ம்... இங்க காத்தும் வரலை, ஒண்ணும் வரலை. பேசாம, என்னை மாடியில வெச்சுப் பூட்டுங்க’’ என்றார். அவர் கேட்டபடி, மாடிக்கு அழைத்துச் சென்று காலியாக இருந்த ஓர் அறையில் பூட்டிவிட்டுத் திரும்பினர்.

ஒரு காவலர் என் அறைக்கு அருகில் வந்து, ‘‘ஆளு எப்பிடி ஜம்முனு இருக்கான் பார்த்தீங்களா சார், இவன்தான் பயங்கர ரவுடி பங்க் குமார்’’ என்றார்.

‘பங்க் குமார்’ என்ற பெயரை நானும் கேள்விப்பட்டு இருக்கிறேன். நீதிமன்ற வாசலிலேயே பட்டப் பகலில் ஒருவரை வெட்டிக் கொன்றதாக அவர் மீது ஏற்கெனவே ஒரு வழக்கு உள்ளது. மேலும் பல வழக்குகளும் உள்ளனவாம். இப்போது ஒரு குண்டு வெடிப்பு வழக்கு!

மறுநாள் காலையில் அறிமுகப்படலம். மோகனுக்கும் செல்வராஜுக்கும் பங்க் குமாரை நன்றாகவே தெரிந்திருந்தது. எங்கள் இருவருக்கும் அறிமுகம் செய்துவைத்தனர். பார் வைக்கு மிகவும் சாதுவா கத் தெரிந்த குமாரை, ‘சாமி, சாமி’ என்று செல்வராஜ் அழைத்ததைப் பார்த்ததும், எனக்கு வியப்பாக இருந்தது. பிறகு தனியாகக் கேட்டேன்... ‘‘அது என்ன சாமி?’’

‘‘அவருக்கு ரொம்பப் பக்தி சார்! பாருங்க, இன்னும் கொஞ்ச நாள்ல இங்கேயே பெரிய பூஜை எல்லாம் ஆரம்பிச்சிடுவாரு. அதனால ‘சாமி’ன்னுதான் கூப்பிடுவோம்!’’

எனக்கும் பரந்தாமனுக்கும் உள்ளூரச் சிரிப்பாக இருந்தது. அவருக்கும் அறவே கடவுள் நம்பிக்கை கிடையாது. ‘‘என்னய்யா... குத்து, வெட்டு, கொலைனு அலையுறீங்க. அப்புறம் சாமி, கடவுள் பூஜை வேற பண்றீங்க’’ என்றார் பரந்தாமன்.

‘‘அது வேற, இது வேற நயினா’’ என்று விடை வந்தது செல்வராஜிடமிருந்து.

சில நாள்களுக்குப் பிறகு, பங்க் குமாருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் சதுரங்க விளையாட் டில் கெட்டிக்காரர் என்று மோகன் சொல்ல, ஒருநாள் குமாருடன் சதுரங்கம் விளையாடினேன்.

பள்ளி, கல்லூரி நாள்களிலிருந்தே அந்த விளையாட்டில் எனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. அதில் பல பரிசுகளையும் வாங்கியுள்ளேன். எனவே, குமாரை எளிதாக வென்றுவிடலாம் என்று விளை யாடத் தொடங்கினேன். ஆனால், குமார் வெற்றி பெற்றுவிட, அதிர்ச்சிக்குள்ளானேன். கவனமில்லாமல் விளையாடிவிட்டோமோ என்று எண்ணி, மறுபடியும் விளையாடினேன். தொடர்ந்து பல தடவை குமாரே வெற்றி பெற, எப்போதாவதுதான் எனக்கு வெற்றி கிடைத்தது.

அவ்வளவு புத்திசாலித்தனமும் நல்ல வழியில் திருப்பப்பட்டிருந்தால், பங்க் குமார் மட்டுமல்ல, நாடும் பயன்பெற்றிருக்கும்.

இரண்டு மாதங்களுக்குப் பின், பிணை கிடைத்து பங்க் குமார் விடுதலையானார். பிரியும்போது, மனம் மாறி வெளியில் செல்வதாகவும், படிக்க வேண்டிய சில நல்ல புத்தகங்களின் பெயர்களை எழுதித் தருமாறும் கேட்டார். கொடுத்தேன்.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது சில மாதங்களுக்கு முன் நாளேடுகளில் ஒரு நாள், ‘ரவுடி பங்க் குமார் சுட்டுக் கொலை’ என்று செய்தி வந்திருந்தது.

நல்லவரோ, கெட்டவரோ... பழகிய அந்த நாள்கள் இப்போதும் என் நினைவில்!
(தொடரும்)


நன்றி:
ஆனந்த விகடன்.
www.subavee.blogspot.com

Tuesday, June 05, 2007

குஜராத் மோடி அரசுமீது நீதிமன்ற அவமதிப்பு - உச்சநீதிமன்றம்



குஜராத் மாநிலம் கோத்ரா கலவரம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட 4 ஆயிரத்து 545 குடும்பங்களைச் சேர்ந்த 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் 81 குடியிருப்பு முகாம்களில் மிகப் பரிதாபமான நிலையில் இருந்து வருகின்றனர் எனும் உண்மையை உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழு கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்த மக்களுக்கு வாழ்வுரிமையோ, உணவோகூடச் சரிவர இல்லாமல் அவதிப்படுகின்றனர் எனக் குழு அவ்வறிக்கையில் கூறியுள்ளது.

உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் டாக்டர் என்.சி. சக்சேனா தன் அறிக் கையில் பின்வரும் அதிர்ச்சி தரும் தகவல்களைத் தந்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கான குடியிருப்புகள் எதையும் மாநில அரசு அமைத்துத் தரவில்லை. மொத்தம் உள்ள 81 குடியிருப்புகளில் அய்ந்தில் மட்டுமே பள்ளிகள் உள்ளன. இவற்றிலும் நான்கில் மட்டுமே மதிய உணவு வழங்கப்படுகிறது. குழந்தைகளுக்கான வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நான்கு மட்டுமே குழந்தைகளுக்கு ஊட்டச் சத்து வழங்குகின்றன. கருவுற்ற தாய்மார்களுக்கும், குழந்தை பெற்ற தாய்மார்களுக்கும் தரப்படும் உதவியை ஒரே ஒரு நிலையம் மட்டுமே அளிக்கிறது.

வழக்கு விசாரணை

இந்த அறிக்கையைப் பரிசீலித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரிஜித் பசாயத் மற்றும் டி.கே. ஜெயின் ஆகியோர் கோடை விடுமுறைக்குப் பின் இது தொடர்பான விசாரணையைத் தள்ளி வைத்துள்ளனர். இடம்பெயர்ந்த மக்கள் உணவுக்கும் மற்ற தேவைகளுக்கும் மிகவும் சிரமப்படும் நிலைபற்றிய சங்கடம் தரும் தகவல்கள் கிடைத்துள்ளன. உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபடி குஜராத் அரசு எவ்வித நடவடிக்கையும் நிறைவேற்றவில்லை.

குஜராத் அரசு ஒப்புதல்

குழு அனுப்பிய கடிதத்துக்குப் பதில் எழுதிய நரேந்திர மோடி அரசு, 2002 கலவரத்தில் பாதிக்கப் பட்ட மக்களுக்கு நிவாரணக் குடியிருப்புகள் அரசால் செய்து கொடுக்கப்படவில்லை என்பதை ஒத்துக் கொண்டுள்ளது. ``கலவரத்தில் வெடித்த வன்முறை பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதித்துவிட்டது. அவர்களுக்கு ஏற்கெனவே வேலை தந்து உதவியவர்கள் தற்போது வேலை தரத் தயாரில்லை. எனவே, அவர்கள் வேலை வாய்ப்பின்றி உள்ளனர்’’ என்று குழு தெளிவாகவே தெரிவித்துள்ளது.

இந்நிலையில், குஜராத் அரசு உச்சநீதிமன்றத்திற்குத் தவறான தகவல்களைத் தந்திருக்கிறது. நீதிமன்ற உத்தரவின்படி பாதிக்கப்பட்டோருக்குத் தரவேண்டிய உணவு, வேலைவாய்ப்பு ஆகியவற்றை அரசு தரவேயில்லை என்பதை சான்றுகள் மெய்ப்பிக்கின்றன எனக் குழு தெரிவித்திருக்கிறது.

ஆய்வு வெளிப்படுத்தும் அவலங்கள்

குழுவின் உறுப்பினர்கள் முழு அளவில் ஆய்வு செய்துள்ளனர். 81 குடியிருப்புகளில் மூன்றில் மட்டுமே நியாய விலைக் கடைகள் உள்ளன. 4 ஆயிரத்து 545 குடும்பங்களில் 725 குடும்பங்களுக்கு மட்டுமே வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கான குடும்ப அட்டைகள் தரப்பட்டுள்ளன. இவர்கள் மீதான பொருளாதார புறக்கணிப்பு மிகவும் கடுமையாக நிலவுகிறது.

நீதிமன்ற அவமதிப்பு

பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களின் குடியிருப்புகளில் நிலவும் மோசமான சூழலைக் கருத்தில் கொண்டு பார்த்தால், குஜராத் மோடி அரசின் தலைமைச் செயலாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு அறிவிக்கை தரப்படவேண்டும் என்று குழுவின் தலைவர் டாக்டர் சக்சேனா தெரிவித்துள்ளார். தலைமைச் செயலாளர் மற்றுள்ள உயர் அலுவலர்கள் நீதிமன்றக் குழு அதிகாரிகளுக்குத் தவறான, பொய்ப் புள்ளி விவரங்களை அளித்துள்ளனர்.

குடியிருப்புகளில் வசிக்கும் எல்லாக் குடும்பங்களுக்கும் ’அந்தியோதயா’ அடையாள அட்டைகள் வழங்கப்பட வேண்டும்; இவர்கள் தங்கள் உடைமைகளை இழந்துவிட்டனர்; பொருளாதாரப் புறக்கணிப்பால் மிகவும் பாதிப்படைந்துள்ளனர்; தங்கள் வீடுகளுக்குச் செல்ல பயப்படுகின்றனர்; தொடக்கப்பள்ளிகளும், மதிய உணவுக் கூடங்களும் 81 குடியிருப்புகளிலும் தொடங்கப்படவேண்டும்; குழந்தைகளுக்கான வளர்ச்சித் திட்ட உதவிகள் அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றக் குழு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

கோத்ரா சம்பவத்தை வைத்துக் கொண்டு இந்து மதவெறி சக்திகள் சிறுபான்மை இசுலாமிய மக்கள் மீது நடத்திய தாக்குதல் மிகக் கொடூரமானது. பல்லாயிரக்கணக்கான இசுலாமியர்கள் கொல்லப்பட்டனர். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள இசுலாமியர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. இசுலாமியப் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர்.
குஜராத்தில் நடத்தப்பட்ட இந்து மதவெறியின் கோர தாண்டவம் ஆர்.எஸ்.எஸ்., பஜரங்தள், சங்பரிவார், பா.ஜ.க. போன்ற மதவெறிக் கட்சி, அமைப்புகளின் ரத்தம்படிந்த இன்னொரு பக்கத்தை உலகிற்கு அம்பலப்படுத்தியது.

இதுநாள்வரையில், இந்து பாசிச நரேந்திர மோடி அரசு, பாதிக்கப்பட்ட சிறுபான்மை இசுலாமிய மக்களுக்கு குறைந்தபட்ச நிவாரணம்கூட வழங்கவி்ல்லை. நீதியைப் பெற்றுத் தர வேண்டிய நீதி அமைப்புகளும் தேவையான முயற்சிகளை மெற்கொள்ளவில்லை.

தற்போது உச்சநீதிமன்றம் அமைத்த குழு தனது அறிக்கையில், பாதிக்கப்பட்ட சிறுபான்மை இசுலாமியர்களுக்கு குஜராத் அரசு எதையும் செய்யவில்லை எனபதைத் தெளிவாக கூறியுள்ளது.

சிதறிக்கிடக்கும்
சிறுபான்மை இசுலாமிய மக்களின்
சாம்பலின் துகல்களின் ஊடே..

மரண ஓலங்கள்,
வழிந்தோடும் ரத்த ஆறுகள்,
சிதறிக் கிடக்கும் சதைகள்,
மண்டை ஓடுகள்,
பிய்த்து எறியப்பட்ட பிஞ்சுகள்,
சிதைக்கப்பட்ட பெண்களின் உடல்கள்..

நாறிக் கொண்டிருக்கிறது
நரேந்திர மோடியின்
இந்து மதவெறி.

நீதிக்காக காத்துக் கிடக்கிறது
குரலற்றவர்களின் குரல்...

அது ஒரு பொடா காலம்! (7) சுப.வீரபாண்டியன்

நான் நந்தன் இதழின் சிறப்பாசிரியராக இருந்தபோது, தாயப்பன் எனக்கு அறிமுகமானார்.

அப்போது அவர், சென்னை பல் மருத்துவக் கல்லூரி மாணவர். துடிப்பான இளைஞர். தமிழில் சிறந்த சொல்லாற்றலும் எழுத்தாற்றலும் உடையவர். எனவே, அவரைப் பொது மேடைகளில் அறிமுகப்படுத்துவதில், நானும் நண்பர் சாகுல் அமீதும் மிக விருப்பமாக இருந்தோம். அதன் விளைவாகவே, சிக்கலுக்குக் காரணமாக இருந்த சென்னைக் கூட்டத்துக்கும் அழைத்திருந்தோம்.

ஆனாலும், அன்றைய நிலைமைகள் குழப்பமாக இருந்த காரணத்தால், நான் அவரை வரவேற்புரை மட்டும் நிகழ்த்துமாறு சொன்னேன். பொடாவில் கைது செய்வதற்கு வரவேற்புரை மட்டுமேகூடப் போதுமானது என அன்றைய அரசு கருதிவிட்டது.

துன்பத்திற்கிடையில், தாயப்பனை எப்போது இங்கு அழைத்து வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு எங்களுக்கு இருந்தது. ஆனால், இரவு வரை தாயப்பன் வரவில்லை. மறுநாள் காலைச் செய்தித்தாள்களைப் பார்த்தபோதுதான், அவரை சேலம் சிறையில் அடைத்துவிட்டார்கள் என்பது தெரிந்தது.

அருகில் உள்ள சிறையில் அடைப்பதன் மூலம் நண்பர்களும் உறவினர்களும் அடிக்கடி பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்ற ‘நல்ல எண்ண’த்தில் தொலைதூரச் சிறைகளில் கொண்டுபோய் அடைக்கும் பழக்கம் அன்றிருந்தது. சென்னையில் கைது செய்யப்பட்ட தாயப்பனை சேலத்திலும், மானாமதுரையில் கைது செய்யப்பட்ட பரந்தாமனை சென்னையிலும், புதுக்கோட்டையில் கைது செய்யப்பட்ட பாவாணனை கோவையிலும், ஈரோட்டில் கைது செய்யப்பட்ட கணேசமூர்த்தியை மதுரையிலும் சிறைகளில் அடைத்து மகிழ்ந்தது ஜெயலலிதா அரசு. என்னைப் போன்ற ஒரு சிலருக்கு விதிவிலக்கு என்றே கூற வேண்டும். சென்னையில் கைது செய்து, சென்னையிலேயே சிறை வைத்ததால், ‘மனு பார்க்க’ வருவோரின் எண்ணிக்கை கூடுதலாகவே இருக்கும். அதற்கும், இடையில் தடை விதிக்கப்பட்டது. வாரத்துக்கு மூன்று நாட்கள், குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் மனு பார்க்கலாம் என்று கூறிவிட்டனர்.

அக்டோபர் 16-ம் நாள், மனுவுக்கு அழைப்பு வந்தபோது, மனம் மகிழும் வாய்ப்பு ஒன்றும் வந்தது.

வழக்கம் போல் காலை 11 மணியளவில், கூடுதல் கண்காணிப்பாளர் அறைக்கு நான் அழைத்துச் செல்லப்பட்ட போது, யாரெல்லாம் என்னைப் பார்க்க வந்துள்ளனர் என்று தெரியாது. ஒவ்வொரு முறையும் நாங்கள் அங்கு கொண்டுசெல்லப்பட்ட பின் சிறிது நேரத்தில், எங்களைப் பார்க்க வருவோர் வலைக்கம்பிகள், தடுப்புகளுக்கு அந்தப் பக்கத்தில் உள்ளே அனுப்பப்படுவர். அப்போது தான் யார் யார் வந்துள்ளனர் என்பதை நாங்கள் அறியமுடியும்.

ஆனால் அன்றோ, எனக்கு முன்பே அவர்கள் அழைத்து வரப்பட்டு இருந்தனர். அதுமட்டுமல்லாமல், சிறைக்கு உள்ளே, கூடுதல் கண்காணிப்பாளர் அறையின் உள்ளேயே அவர்கள் அமர்த்திவைக்கப்பட்டு இருந்தனர்.

என் மூத்த அண்ணன் திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், என் மனைவி, என் மகள் மூவரும் அமர்ந்திருக்க, மகளின் மடியில் புத்தம் புது மலராக ஒரு குழந்தை. வியப்பிலிருந்தும் மகிழ்விலிருந்தும் மீள முடியாமல் அந்தக் குழந்தையை நான் உற்றுப் பார்க்க, ‘‘நம்ம பேரன்தாங்க’’ என்று என் மனைவி சொன்னதும், மகிழ்ச்சி, அப்படியரு மகிழ்ச்சி!

அவர்கள் அருகில் அமர, அன்று சிறை என்னை அனுமதித்தது. கண்காணிப்பாளர் ஒப்புதலுடன் இப்படிச் சில சிறப்புச் சலுகைகளைச் சிறையில் வழங்குவார்கள். அன்று காலை என் அண்ணன், கண்காணிப்பாளருடன் தொலைபேசியில் பேசியதன் விளைவாக, அவர்கள் உள்ளே அனுமதிகப்பட்டுள்ளனர் என்று அறிந்துகொண்டேன்.

இரண்டு மாதங்கள்கூட நிரம்பாத அந்தப் பிஞ்சுக் குழந்தையை என் மடியில் வைத்துவிட்டு, என் தோளில் சாய்ந்து மகள் இந்து அழுத அழுகை இப்போதும் என் நினைவில் உள்ளது.

அண்ணன் அதட்டினார்... ‘‘அழக் கூடாது! பெரியப்பா என்ன சொல்லிக் கூட்டிக்கிட்டு வந்தேன், மறந்துட்டியா?’’ என்றார்.

என் மனமும் இளகத் தொடங்கியது. ஆனாலும், அது கண்ணீராய்க் கரைந்துவிடாமல் கட்டுப்படுத்திக் கொண்டேன்.

குழந்தையை என் முகத்தருகில் தூக்கி, அதன் கன்னத்தில் ஒரு முத்தம் பதித்தேன். ‘‘அப்பா, நாங்க அமெரிக்கா போறதுக்குள்ள வந்துடுவீங்களா?’’ என்று இந்து கேட்க, ‘‘ஜாமீன் கேட்டு போட்ட மனுவில் இன்னிக்குத் தீர்ப்பாம். சாயங்காலம் தீர்ப்புச் சொல்லிட்டா, நாளைக்கே அப்பா வந்துடப் போறான். எதுக்கு அழுவுற?’’ என்று அண்ணன் ஆறுதல் சொன்னார்.

10, 15 நிமிடங்கள் அருகருகே அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தோம். சட்ட விதிப்படி, இரண்டு காவலர்கள் இரண்டு பக்கமும் நின்று, எங்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டு இருந்தனர். வழக்கு பற்றிய ரகசியங்களைப் பேசிக்கொள்கிறோமா, மறைமுக மாகக் கடிதங்கள், பொருள்களைப் பரிமாறிக்கொள்கிறோமா என்றெல்லாம் கவனிக்க வேண்டியது அவர்கள் கடமை.

பார்வையாளர்கள் புறப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதைக் காவலர்கள் உணர்த்தினர். புறப்படுவதற்கு முன், அண்ணன் ஒரு பழைய செய்தியை நினைவு கூர்ந்தார். ‘‘உன் பேரனை மட்டுமில்லப்பா... நீ குழந்தையா இருந்தப்போ, உன்னையும் நான் சிறைக்குத் தூக்கிட்டுப் போயிருக்கேன்’’ என்று அவர் சொல்ல, மனைவியும், மகளும் விழித்தனர்.

எங்கள் அப்பா காரைக்குடி இராம.சுப்பையா, கல்லக்குடிப் போராட்டத்தில் ஈடுபட்டு, 1953-ம் வருடம், கைதாகி திருச்சி சிறையில் இருந்தார். கல்லக்குடிப் போராட்டத்தில் முதல் அணிக்குக் கலைஞரும், இரண்டாவது அணிக்கு அப்பாவும், மூன்றாவது அணிக்குக் கவிஞர் கண்ணதாசனும் தலைமை ஏற்றிருந்தனர்.

அப்போது கலைஞரின் நெருக்கமான தொண்டராக, அவர் கூடவே அப்பா சிறையில் இருந்தார். அந்த வேளையில், ஒரு வயதுக் குழந்தையான என்னைப் பார்க்க அவர் ஆசைப்பட, அம்மாவும், அண்ணன் முத்துராமனும் என்னைச் சிறைக்குத் தூக்கிச் சென்றுள்ளனர். அன்று, இந்த அளவுச் சலுகைகூட வழங்கப்படாமல், கம்பி வலைகளின் வழியாக விரலைவிட்டு, என்னைத் தொட்டு அவர் முத்தம் கொடுத்துள்ளார்.

அந்தக் காட்சியைத்தான் அண்ணன் இப்போது நினைவுபடுத்தினார். 50 ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு, அதே காட்சி மீண்டும் எங்கள் குடும்பத்தில் அரங்கேறியது. இரண்டு காட்சிகளிலும் அண்ணனுக்கு இடம் இருந்தது.

பேரனின் பிஞ்சு விரல்களில் நான் மீண்டும் ஒரு முறை முத்தமிட, ‘பிரிவென்னும் ஒரு பாவி’ இடையில் வந்தான்.

மாலை வழக்குரைஞர்கள் வந்தனர். சற்று நேரம் மௌனமாக இருந்தனர். அவர்களின் மௌனம் எனக்குச் சத்தமாகச் செய்தி சொல்லியது.

‘‘என்ன, பிணை கிடைக்க வில்லையா?’’

‘‘ஜாமீன் குடுக்க முடியாதுன்னு நீதிமன்றம் சொல்லிடுச்சு. மறுபடியும் ஜாமீன் கேட்டு மனுப் போடக் கொஞ்ச நாளாகும்!’’

(தொடரும்)

நன்றி:
ஆனந்த விகடன்.
www.subavee.blogspot.com

Sunday, June 03, 2007

தென்றல் தவழும் தேங்காய்த்திட்டே! தமிழ்க்கனல் க.இராமகிருட்டினர்


தென்னையும் மாவும் தேர்ந்த பலாவும்
புன்னையும் பனையும் பூத்த வாழையும்
வளையும் சவுக்கும் வளர்ந்த பூவரசும்
கலைமிகு ஆலும் கழி பெரும் அரசும்
கத்தரி வெண்டை களம்வளர் சுண்டை
கொத்தவரை பாகல் கோவை பீர்க்கன்
வெள்ளரி பூசுணை மிளகாய் புளி சுரை
தள்ளரிய காய்கனி தக்காளி பப்பாளி
அகத்தி பசலை அரை - சிறு கீரை
புகழ்பெறு காசினி பொன்னாங் கண்ணி
முல்லை ரோஜா மூக்கைத் துளைக்கும்
மல்லிகை சாமந்தி மணமிலாக் கனகா
இன்னவும் பிறவும் எல்லாம் விளையுதே
தென்றல் தவழும் தேங்காய்த் திட்டிலே!

புரட்சிக்கவிஞர் பாவேந்தரின் மாணவரும், 'புதுவை முரசு' ஆசிரியருமான தேங்காய்த்திட்டு மண்ணில் சுயமரியாதை சுடராய் வாழ்ந்த தமிழ்க்கனல் க.இராமகிருட்டினர், அவர் வாழ்ந்த ஊரின் செழிப்பு பற்றி 1972-1978 ஆண்டுகளின் இடைப்பட்ட காலத்தில் எழுதிய பாடல்.

புதுச்சேரி தேங்காய்த்திட்டில் அய்யா வே.ஆனைமுத்து






துறைமுக விரிவாக்கத் திட்டத்தை எதிர்த்துப் போராடி வரும் தேங்காய்த்திட்டு மக்களை மார்க்சிய-பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் பொதுச்செயலாளர் அய்யா வே.ஆனைமுத்து 26-05-2007 அன்று சந்தித்தார். முன்னதாக ஊர்பெரியவர்கள் திரண்டு அவருக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர்.

துறைமுக விரிவாக்கத் திட்டத்திற்காக அரசு கையகப்படுத்தப்பட உள்ள பசுமையான விளைநிலங்களைப் பார்வையிட்டார். பிறகு பழைய மீன்பிடி துறைமுகத்தை சுற்றிப் பார்த்தார். உடன் இருந்த தேங்காய்த்திட்டு கவுன்சிலர் பாஸ்கரன் ஊர் பற்றிய விவரங்களை எடுத்துக் கூறினார். அனைத்துத் தகவல்களையும் தான் கொண்டுவந்த சுவடியில் குறித்துக் கொண்டார்.

போராடும் மக்களுக்கு ஆதரவு அளித்ததோடு அம்மக்களின் வாழ்க்கை நிலை, அவர்களின் முன்னோர்கள் பற்றிய விவரங்களைக் கேட்டறிந்தார். அவருடைய உறவினர்கள் பலரது வீடுகளுக்கும் சென்று பழைய நினைவுகளை அசை போட்டார்.

தேங்காய்த்திட்டு சுயமரியாதைப் பாவலர் ’புதுவை முரசு’ இதழ் ஆசிரியர் இராமகிருட்டினர் இல்லத்திற்குச் சென்று அவர்களின் குடும்பத்தாரைச் சந்தித்து நலம் விசாரித்தார். அவருடைய நூற்றாண்டு விரைவில் வர உள்ளதால், அவ்விழாவைச் சிறப்பாக கொண்டாட வலியுறுத்தினார்.

பின்னர், முதுபெரும் தியாகி டி.கே.இராமாநுஜம் இல்லத்திற்குச் சென்றார். அவருடைய படத்திற்கு வீரவணக்கம் செலுத்தினார். தியாகி டி.கே.இராமாநுஜம் தீவிரக் பொதுவுடைமைவாதி். தலை சிறந்த தொழிற்சங்கவாதி. உச்சநீதிமன்ற தீர்ப்பு ஒன்றில், நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் இவரை ’குறிப்பிடத் தகுந்த போராளி’ என்று குறிப்பிட்டுள்ளார்.

’துறைமுக விரிவாக்கத் திட்டம் மக்களுக்குத் தேவையற்றது, இது குறித்து முதல்வர் ந.ரங்கசாமியிடம் பேசுகிறேன், சிந்தனையாளன் இதழில் எழுதுகிறேன்’ என்று போராடும் மக்களுக்கு உறுதி கூறினார் அய்யா வே.ஆனைமுத்து.

மதிமுக பொறுப்பாளர் சடகோபன், மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன், பெரியார் தி.க. தலைவர் லோகு.அய்யப்பன், செம்படுகை நன்னீரகம் தலைவர் கு.இராம்மூர்த்தி, புதுவைக் குயில் பாசறை ச.ஆனந்தகுமார், த.செயமூர்த்தி, சிவகுமார் உட்பட பலர் உடனிருந்தனர்.

Saturday, June 02, 2007

அது ஒரு பொடா காலம்! (6) சுப.வீரபாண்டியன்

சிறையில் சில வேடிக்கையான விதிகள் உண்டு. காவலர் அனுமதியோடு கொசுவத்தி வைத்துக் கொள்ளலாம். ஆனால், தீப்பெட்டி வைத்துக்கொள்ளக் கூடாது. அவர்களிடம் தீக்குச்சி வாங்கிக் கொசுவத்தி ஏற்றினாலும், அந்தச் சிறைக் கொசுக்கள் அதையெல்லாம் மதிப்பதே இல்லை. உள்ளே விளக்கும் கிடையாது. வராந்தாவில் கண்சிமிட்டும் சின்ன விளக்கின் வெளிச்சம் மட்டும்தான், நம் ஒரே நண்பன். அந்த வெளிச்சத்தில் புத்தகங்கள் படிப்பதும் மிகவும் கடினம். கம்பிகளின் நிழல்கள், புத்தகத்தின் மேல் கோடுகளாக விழும்.

அன்று கொஞ்சம் புழுக்கமாகவும் இருந்தது. வியர்வையைத் துடைத்தபடி இருந்தபோது, பக்கத்து அறையில் பரந்தாமன் பூட்டப்பட்டார். ஒரு காவலர் மூலம் கொசுவத்திச் சுருள் ஒன்றை அவருக்கு அனுப்பிவைத்தேன். ‘‘என்ன சுபவீ, எதுக்கு இது?’’ என்றார். ‘‘கொஞ்ச நேரத்தில் தெரியும்’’ என்றேன்.

ஆனால், அதையும் மீறிய கொசுக்கடியாலும், மிகக் கடுமையான புழுக்கத்தினாலும், அன்று அவரால் சரியாகத் தூங்க முடியவில்லை. மறுநாள் காலை, இருவரும் சந்தித்துப் பேசினோம். வெளியே நிலைமைகள் எப்படி உள்ளன என்று நானும், உள் நிலவரம் பற்றி அவரும் ஒருவரையருவர் கேட்டு அறிந்து கொண்டோம். இரண்டுமே மகிழ்ச்சி தருவதாக இல்லை.

அவரை பொடாவில் கைது செய்ததற்கான காரணம், எந்த ஜனநாயக நாட்டிலும் நடைபெற முடியாத ஒன்றாக இருந்தது. 25.08.2002 அன்று, கட்சி அலுவலகத்தை மூடுவதாகச் சொல்லி, ‘தென் செய்தி’ இதழ் அலுவலகத்துக்குச் ‘சீல்’ வைத்தபோது, திருச்சி சௌந்தரராசன், பரந்தாமன் உள்ளிட்ட இயக்கத் தோழர்கள் சிலர் அங்கு இருந்துள்ளனர். அப்போது தொலைக்காட்சியினர் பரந்தாம னிடம் கருத்து கேட்டுள்ளனர். அதற்கு விடையாக அவர் சொன்ன நான்கு வரிகள் தொலைக்காட்சிகளிலும், மறுநாள் நாளேடுகளிலும் வெளிவந் துள்ளன.

‘ஈழத் தமிழருக்கு ஆதரவாகப் பேசியதைத் தமிழக அரசு தவறு என்று கருதினால், அதைத் தொடர்ந்து செய்யத் தயங்க மாட்டோம். தமிழக அரசின் நடவடிக்கை கண்டிக்கத் தக்கது’ என்பதுதான் அவருடைய கூற்று. இந்தப் ‘படு பயங்கரவாதச் சொல்லாட’லுக்காகவே அவரை அன்றைய அரசு பொடாவில் கைது செய்தது.

மீண்டும் 24.09.2002 அன்று, நீதிமன்றம் அழைத்துச் செல்லப்பட்டேன். கடலூர் சிறையிலிருந்து நெடு மாறன் ஐயாவையும், கோவைச் சிறையிலிருந்து நண்பர் பாவாணனையும் அழைத்து வந்திருந்தனர்.

சிறையிலிருந்து புறப்படும்போதே மோகன் சொன்னார்... ‘‘ஐயா, இன்னிக்கு நீங்க உங்க கேஸ்காரங்க எல்லாரையும் பார்க்க வாய்ப்பிருக்கு’’ என்று. ‘‘அது என்ன ‘கேஸ்காரங்க’?’’ என்று கேட்டேன். ‘ஊர்க்காரங்க, உறவுக்காரங்க’ என்பது போல், ஒரு குறிப்பிட்ட வழக்கில் குற்றம்சாட்டப் பெற்றுள்ள அனைவரும் ‘கேஸ்காரங்க’ ஆகிவிடுவார்கள் என்று விளக்கினார். அந்தச் சிறை மொழியின்படி ‘கேஸ்காரங்க’ மூவரும் ஒருவரையருவர் அன்று சந்தித்துக்கொண்டோம். பரந்தாமன் வேறு ‘கேஸ்காரர்’ என்பதால், அன்று நீதிமன்றம் அழைத்து வரப்படவில்லை.

எங்கள் மூவரையும்கூட ஒரே சிறையில் வைத்திருந்தால், ஒன்றாகவே அழைத்துச் சென்றுவிடலாம். அரசுக் குச் செலவும் மிச்சம். ஆனால்,மூலைக் கொருவராக ஆளுக்கொரு சிறையில் அடைத்து வைக்கப்பட்டோம். ‘‘ஐயா எப்படியிருக்கீங்க?’’ என்று நெடுமாறன் ஐயாவிடம் நான் கேட்க, ‘‘நல்லா யிருக்கேன். நல்ல ஓய்வு. ‘இந்திய தேசியம்: உருவாகாத கரு’ங்கிற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதுறதுக்குக் குறிப்புகள் எடுத்துட்டு இருக்கேன். அது தொடர்பா உங்ககிட்டே ஏதாவது புத்தகங்கள் இருந்தாலும், கொடுத்தனுப்புங்க’’ என்றார்.

‘‘அந்த அம்மா அவ்வளவு சிரமப் பட்டு நம்மளையெல்லாம் உள்ளே போட்டிருக்குது. நீங்க ரெண்டு பேரும், ‘நல்ல ஓய்வு, புத்தகம் எழுத லாம்’னா பேசிக்கிறீங்க?’’ என்று கிண்டலடித்தார் பாவாணன்.

நானும் பாவாணனும் காரைக்குடி அழகப்பர் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள். என்னைவிட ஓர் ஆண்டு இளையவர். குழிபிறை சிங்காரமாக இருந்து, தனித் தமிழியக்கப் பற்றின் காரணமாகத் தன் பெயரை புதுக்கோட்டை பாவாணனாக மாற்றிக்கொண்டவர். படிக்கும் காலத்தில் நான் அவரிடம் பார்த்த மாணவத் தீ இன்னும் அணையாமலே உள்ளது.

வைகோ உட்பட எல்லோருக்கும் முன்பாக, ஜூலை மாதம் 4-ம் தேதியே கைது செய்யப்பட்டவர் அவர்தான். முதலில் சாதாரணச் சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டு, பிறகு பொடா வழக்குக்கு மாற்றப்பட்டார். அவருக்கு இன் னொரு சிறப்பையும் அரசு வழங் கியது. கவுந்தப்பாடி கூட்டத்தில் பேசியதற்கு ஒரு வழக்கு, சென்னைக் கூட்டத்தில் எங்களோடு பேசியதற்கு ஒரு வழக்கு என அவர் மீது இரண்டு பொடா வழக்குகள்! இரண்டு தங்கப் பதக்கங்கள் வாங்கிய மாதிரி அவர் முகத்தில் ஒரு பெருமை தென் படும்.

சிறைக்கு வந்து ஒரு வாரத்துக்கு மேலாகிவிட்ட நிலையிலும், இரவு நேரப் புழுக்கத்தைத் தாள முடியா மல் தவித்தார் பரந்தாமன். ‘‘பொடா கைதிகள் மின் விசிறி வெச்சுக் கிறதுக்குச் சட்டத்தில் இடம் இருக் காமே?’’ என்றார். ‘‘கேக்கிறதுக்குக் குளுமையாத்தான் இருக்கு’’ என் றேன். ‘‘நான் விளையாட்டுக்குச் சொல்லலை. நாளைக்கு வக்கீல் கிட்ட கேப்போம்’’ என்றார்.

அப்படியே சட்டத்தில் இடம் இருந் தாலும், நடைமுறைச் சிக்கல்களை எல்லாம் தாண்டி வருவதற்குச் சில மாதங்கள் ஆகிவிடும். அதற்குள் குளிர் காலமே வந்துவிடும். மின் விசிறி எதற்கு என்று தோன்றியது. அடுத்த கோடைக் காலத்துக்கும் இங்குதான் இருக்கப் போகிறோம் என்பதை அப்போது நான் உணரவில்லை.

ஆனாலும், சிறைக்கு வந்த மறுநாளே அதிகாரிகளிடம் அனுமதி பெற்று, பரந்தாமன் மேல் தளத்துக்குச் சென்று விட்டார். அங்கே கொஞ்சம் காற்று வரும் என்பது அவருடைய நம்பிக்கை. மீண்டும் கீழ்த்தளத்தில் நான் மட்டுமே.

ஒரு நாள் இரவு அயர்ந்து உறங்கிக் கொண்டு இருந்த வேளையில், யாரோ காலின் பெருவிரலைச் சுரண்டுவது போலிருந்தது. சட்டென்று காலை உதறிவிட்டு, மீண்டும் உறங்கினேன். சற்று நேரத்தில் மறுபடியும் சுரண்டல். தூக்கம் கலைந்து எழுந்தேன். மங்கிய வெளிச்சத்தில் உற்றுப்பார்த்தபோது, ஒரு மூலையில் கறுப்பாக ஓர் உருவம் தெரிந்தது. உர்ரென்று உறுமியது. அடடா, பெருச்சாளி! என்ன செய்வ தென்று புரியவில்லை.

பகலில் சில வேளைகளில் எலிகள், பெருச்சாளிகள் ஓடுவதைப் பார்த்திருக் கிறேன். இரவில் இப்படி அறைக்குள் வந்து காலைச் சுரண்டும் என்று எதிர் பார்க்கவே இல்லை. மணி என்னவாக இருக்கும் என்று தெரியவில்லை. அருகில் ஓடுகிற மின் தொடர் வண்டி ஒலியை வைத்து ஓரளவு முடிவு செய்வோம். இப்போது எந்த ஒலியும் இலை. ஆகவே, இரவு 12 மணிக்கும், அதிகாலை 4 மணிக்கும் இடையில் இருக்கிறோம் என்று பொருள்.

பக்கத்திலிருந்த செய்தித் தாளையும், புத்தகங்களையும் வைத்து அந்தப் பெருச்சாளியை விரட்டப் பார்த்தேன். எதற்கும் அசைந்து கொடுக்காத முரட்டுப் பெருச்சாளியாக இருந்தது அது.

வேறு வழியின்றிக் கம்பியின் வழியாகக் காவலரை அழைக்க முயற்சி செய்தேன். ‘‘வார்டர்’’, ‘‘வார்டர்’’ என்று ஓங்கிக் குரல் கொடுத்ததும், மேலேயிருந்து செல்வராஜ், ‘‘என்ன ஐயா?’’ என்று கேட்டார். சொன்னேன். ‘‘அது ஒண்ணும் பண்ணாது, சும்மா தூங்குங்க’’ என்றார். ‘‘எனக்கு ஆறுதல் வேண்டாம்; காவலர்தான் வேண்டும்’’ என்று சொன்னதும், அவரும் குரல் கொடுத்தார். அதன் பிறகு ஒரு காவலர் உள்ளே வந்து, தன் கையிலிருந்த தடியைக் கொடுத்தார். தடியால் பெருச் சாளி மீது ஓர் அடி போட, ஓட்டம் எடுத்தது. ‘அப்பாடா’ என்று ஒரு பெரு மூச்சு வந்தது. ஆனாலும், மறுபடியும் பெருச்சாளி வந்தால் என்ன செய்வது என்று புரியவில்லை. ‘‘சார், இந்தத் தடியை காலையில வந்து வாங்கிக்குங்களேன்’’ என்றேன். ‘‘ஒங்ககிட்ட தடி இருந்தா பெருச்சாளி போயிடும். ஆனா, என் வேலையும் போயிடுமே’’ என்றவர், ‘‘மறுபடி வந்தா கூப்பிடுங்க’’ என்று சொல்லிவிட்டுத் தடியை வாங்கிக்கொண்டு போய்விட்டார்.

எவ்வளவோ முயற்சி செய்தும், அதன் பின், அன்று இரவு முழுக்க வரவே இல்லை - தூக்கம்!

மறுநாள் காலை, அதிகாரிகளிடம் நடந்ததைச் சொல்ல, அவர்கள் ஒரு கைதியை அழைத்து, கீழ்ப் பகுதிக்கு வலை அடித்துக் கொடுக்கச் சொன்னார்கள். அந்தப் பையன் என்னைப் பார்த்து, ‘‘எங்க பிளாக்குக்கு இந்தப் பெருச்சாளி வர மாட்டேங்குதே சார்! வந்துச்சுன்னா மறு நாள் மட்டன் சாப்பாடுதான்’’ என்றான். எலிக் கறிக்கு அங்கே ஏகப்பட்ட போட்டி!

இயல்பான உரிமைகள்கூட எங்களுக்கு மறுக்கப்பட்டன. இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராசசிங்கமும், அவருடைய துணைவியாரும் கடலூர் சிறைக்கு வந்தபோது, நெடுமாறன் ஐயா வைப் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டதாக செய்தித்தாள்களில் ஒரு செய்தி வெளியாகி யிருந்தது. சென்னைச் சிறையிலும், சிறை அதிகாரி அறையில் அமர்ந்து என்னையும் பரந்தாமனையும் சந்திக்க, விடுதலைச் சிறுத்தைகளின் அமைப்பாளர் திருமா வளவன் அனுமதி கோரி, அது மறுக் கப்பட்டதால் திரும்பிச் சென்றுவிட் டார் என்று சில காவலர்கள் கூறினர்.

எல்லாவற்றுக்கும், ‘மற்ற சட்டங்கள் வேறு, பொடா வேறு’ என்பது மட்டும்தான் எங்களுக்கு விடையாகச் சொல்லப்பட்டது.

வலைத் தடுப்புகளின் வழியே பார்வையாளர்களைச் சந்திப்பது என்பது, சில நேரங்களில் முற்றிலும் பயனற்றதாகப் போய்விடும். கூடுதல் கண்காணிப்பாளரின் அறையில் நாங்கள் நிறுத்தப்படுவோம். வலைக் கம்பிகளைத் தாண்டிக் கொஞ்சம் இடைவெளி. அதன் பிறகு அங்கே வலைக் கம்பித் தடுப்பு இருக்கும். அதற்கு அப்பால் பார்வையாளர்கள் நிற்பார்கள். இந்தப் பக்கம் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பத்து பேர் நின்றால், அந்தப் பக்கம் நாற்பது பார்வையாளர்கள் நிற்பார்கள். எல்லோரும் சத்தம் போட்டுப் பேசு வார்கள். யார் யாரோடு பேசுகிறார்கள் என்பதே சில நேரங்களில் புரியாது. இரைச்சலுக்கு இடையே, சில சொற் கள் செவிகளை எட்டும்.

இவற்றுக்கெல்லாம் என்ன மாற்று எனச் சிந்தித்துக்கொண்டு இருந்த வேளையில், மாலை எங்களைச் சந்திக்க வந்த எங்கள் வழக்குரைஞர்கள் சந்திரசேகரும் புருசோத்தமனும், பொடா சட்டத்தின் சில பிரிவுகளை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கலாம் என்று அறிவுரை கூறினர். கடலூர் சென்று நெடுமாறன் ஐயாவிடம் கருத்துப் பெற்று வந்துள்ளதாகக் கூறினார்கள். அதன் அடிப்படையில், ‘பொடா சட்டத்தின் பிரிவுகள் 1(4), 3-9, 14, 18-24, 26, 27, 29, 33, 36&53 ஆகியன, இந்திய அரசியல் சாசனச் சட்டத் துக்கு முரணானவை. எனவே, அவை செல்லாது என்று அறிவிக்கவேண்டும்’ என என் பெயரில், நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது.

வழக்குரைஞர்கள் இன்னொரு அதிர்ச்சித் தகவலையும் கொண்டு வந்தனர். வேறு சிலரும்கூட பொடா வில் கைது செய்யப்படலாம் என்பதே அது!

அவர்கள் கூற்று, சில நாட்களில் உண்மையாகிவிட்டது. எங்கள் கூட்டத்தில் வரவேற்பு ஆற்றிய மருத்துவர் தாயப்பன், 03.10.2002 அன்று பொடாவில் கைது செய்யப்பட்டார்.

(தொடரும்)

நன்றி:
ஆனந்த விகடன்.
www.subavee.blogspot.com