Thursday, April 20, 2006

மேலவளவு வாக்குமூலங்கள் உணர்த்தும் உண்மைகள்

“அவுங்களுக்கு தண்டனை கிடைச்ச பிறகு நிலைமை மாறியிருக்கு''

மேலவளவு வாக்குமூலங்கள் உணர்த்தும் உண்மைகள்

மேலவளவிலிருந்து கோ. சுகுமாரன்;

வாக்குமூலங்கள் தொகுப்பு : முருகப்பன்;

புகைப்படங்கள் : பாலா

சமூக இயலாமைகள் ஒழிப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்து அய்ந்து ஆண்டுகள் ஆனபின்பும் "ஹரிஜன'ங்களின் பல்வேறு சிவில் இயலாமைகள், நமது கிராமங்களில் இன்னம் நீடிப்பது வருத்தமளிக்கிறது. மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் "ஹரிஜன'ங்கள் மீதான சமூகத் தடைகளை ஒழிப்பதற்கு "அகில இந்திய ஹரிஜன சேவக் சங்கம்' தனது தீவிர இயக்கத்தைத் தொடங்கி, இப்போது 9 மாதங்கள் ஆகிவிட்டன. இந்தக் காலத்தில் டீக்கடைகள், முடி திருத்தும் நிலையங்கள், கிணறுகள், குளங்கள், சாவடிகள் முதலானவற்றில் "ஹரிஜன'ங்களுக்கு உள்ள தடைகள் பற்றிப் பிரச்சாரம் செய்யப்பட்டது. சில இடங்களில், இந்தச் சட்டத்தைப் பிரச்சாரம் செய்து அதை நடைமுறைப்படுத்த வேண்டிய கிராம முன்சீபுகளே மிகப் பிற்போக்கானவர்களாகவும், "ஹரிஜன'ங்கள் தங்கள் உரிமைகளைப் பயன்படுத்துவதற்கு இடையூறாகவும் இருக்கிறார்கள். நம் சமூகத்தில் "ஹரிஜன'ங்களுக்கெதிரான பாரபட்சம், எவ்வளவு ஆழ்ந்து வேரூன்றியுள்ளது என்பதைக் காட்டுவதற்குச் சில சம்பவங்கள் கீழே தரப்படுகின்றன. ...

மேலவளவு என்ற இடத்தில், நான் இரண்டு "ஹரிஜன' பையன்களுடன் ஒரு டீக்கடைக்குச் சென்றபோது, அங்கு ஒரு குழுவினர் என்னைத் தாக்குவதாக அச்சுறுத்தி, அந்தப் பையன்களை விரட்டிவிட்டார்கள். டீக்கடைக்காரர் வேண்டுமென்றே ஒரு கண்ணாடித் தம்ளரை உடைத்தார். அங்கிருந்தவர்கள் எல்லோரும் அதற்கு நான் பணம் கொடுக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் அடிபடுவேன் என்றும் சொன்னார்கள். ஆனால், நான் அருகிலிருந்த தொடக்கப்பள்ளியில் போய்ப் புகலடைந்தேன். பஞ்சாயத்து வாரியத் தலைவர் தலையிட்டபின் கூட்டத்தினர் மறைந்து போனார்கள்.கீழவளவு என்ற இடத்தில் ஹரிஜனங்கள் அழுக்கடைந்த ஒரு குட்டையிலிருந்து தண்ணீர் எடுக்கிறார்கள். அதில் மனிதர்கள் குளிக்கிறார்கள். மாடுகளும் குளிப்பாட்டப்படுகின்றன. ஹரிஜனங்கள் பொது ஊருணியில் போய்த் தண்ணீர் எடுக்குமாறு ஹரிஜனங்களுக்கு தைரியம் சொல்லப்பட்டது. ஆனால், அவர்கள் சென்றபோது சாதி இந்துக்கள் அவர்களைத் திட்டி மிரட்டினார்கள். அதனால் ஹரிஜனங்கள் ஊருணியில் தண்ணீர் எடுக்கத் துணியவில்லை.

கீழவளவில் காவல் நிலையம் ஒன்று இருக்கிறது. ஆனால், அங்குள்ள காவலர்கள் ஹரிஜனங்களின் இந்தக் கஷ்டங்களைப் பற்றி அலட்சியமாயிருக்கிறார்கள். ஆட்டுக்குளம் என்ற இடத்தில் நாங்கள் கூறியபடி பொதுக் கிணற்றில் தண்ணீர் எடுத்த ஹரிஜனங்களைச் சாதி இந்துக்கள் தடுத்து நிறுத்த முடியவில்லை. அதனால் அவர்கள் அந்தக் கிணற்றில் மலத்தைப் போட்டார்கள். எட்டிமங்கலத்தில் ஊர்ச் சாவடியில் ஒரு பொதுக்கூட்டம் நடந்தபோது ஹரிஜனங்கள் அங்கு நுழைந்தார்கள் என்பதற்காக, அவர்கள் அரசுப் புறம்போக்கு நிலத்தில் போட்டிருந்த நெல் நாற்றாங்காலைச் சாதி இந்துக்கள் அழித்துவிட்டார்கள். இதைப்பற்றி ஹரிஜனங்கள் கொடுத்த புகார் மீது காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.....

மேலூரிலிருந்து இரண்டு மைல் தொலைவில் உள்ள நாவினிப்பட்டியில் ஹரிஜனங்கள் பொங்கல் பண்டிகையின்போது நல்ல ஆடை அணிந்ததைக் கிராம முன்சீபே ஆட்சேபித்திருக்கிறார். அவர் இரண்டு ஹரிஜன இளைஞர்களைச் சட்டையையும் மேல் துண்டையும் அகற்றிவிடச் செய்தார். மேலும் அவர்களைக் கீழே விழுந்து கும்பிடச் செய்து, கோவணத்துடன் மட்டும் போகச் செய்தார்.மிகவும் வேதனையளிக்கும் ஒடுக்குமுறை, மதுரை நகலிருந்து பத்து மைல் தூரத்தில் உள்ள மண்குளத்தில் நடந்தது. அந்த ஊரில் டீக்கடையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட இரண்டு ஹரிஜன இளைஞர்கள், காவல் துறையினரிடம் புகார் செய்ததற்காக கிராம முன்சீப் அவர்கள் மீது கோபம் கொண்டார். ஊர்ப் பெரியவர்கள் அவர்களில் ஒருவரைத் தூணில் கட்டி வைக்கச் செய்து, சாதி இளைஞர் ஒருவரைவிட்டு இரக்கமின்றி அடிக்கச் செய்தார்கள். மற்றொரு ஹரிஜன், கிராம முன்சீபின் வேலையாளால் கத்தியால் தாக்கப்பட்டார். ஹரிஜனங்கள் ஊருணியிலிருந்து தண்ணீர் எடுத்ததற்காக, அவர்களைச் சமூகப் புறக்கணிப்பு செய்து அவர்களுக்கு வேலை கொடுக்க மறுத்தார்கள். கடைக்காரர்கள் அவர்களுக்கு உணவுப் பொருள்களை விற்க மறுத்து, இரண்டு நாள்கள் பட்டினியாயிருக்க வைத்தார்கள். வருவாய்க் கோட்ட அதிகாரி தலையிட்ட பின்புதான் நிலைமை சீரடைந்தது.

சமீபத்தில் இரண்டு ஹரிஜனங்களும் நானும் குளத்தில் குளித்துவிட்டுச் சாவடியின் எதிரே இருந்த காப்பி கிளப்பில் நுழைந்ததற்காகச் சாதி இந்துக்கள் விறகுக் கட்டைகளால் அடித்தார்கள். நாங்கள் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றோம். எனக்கு வலது பாதத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டதால், வலது காலை ஊன்றி நடக்க முடியவில்லை.

கிராம முன்சீப் உள்ளிட்ட 16 பேர் மீது காவல் துறையினர் குற்றச்சாட்டு பதிவு செய்திருக்கிறார்கள்....."தென்னிந்தியாவில் ஹரிஜனங்களின் துன்பங்கள் : ஒரு சமூகத் தொண்டன் அனுபவம்' என அகில இந்திய ஹரிஜன சேவக் சங்கத்தின் மண்டல அதிகாரி ஸ்வாமி ஆனந்த தீர்த்தர் கூறியுள்ளதை, டாக்டர் அம்பேத்கர் குறிப்பிட்டு தீண்டாமை, தீண்டப்படாதவர்கள் பற்றி நூல் ஒன்றினை எழுதியுள்ளார்.அண்ணல் அம்பேத்கர் குறிப்பிட்டுள்ளபடி, அன்றைக்கு மதுரை மாவட்டத்தில் அதுவும் குறிப்பாக மேலூர் வட்டத்தில் தீண்டாமைக் கொடுமை, எந்தெந்த வடிவங்களில் நிலவியதோ, அதே போன்ற நிலை இன்றைக்கும் அப்பகுதிகளில் தொடர்வது, தலித்துகள் தங்கள் விடுதலைக்கு நீண்ட நெடிய போராட்டங்களையும் தியாகங்களையும் செய்ய வேண்டியதை வலியுறுத்துகிறது.

மேலவளவு ஊராட்சித் தலைவர் முருகேசன் உள்ளிட்ட ஆறு தலித்துகள் கொல்லப்பட்ட வழக்கு, தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கை நடத்திவரும் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் பொ. ரத்தினம், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று மேலவளவு வழக்கு குறித்து விளக்கமளித்து, நீதி கிடைக்க ஆதரவு திரட்டி வருகிறார். இதன் ஓர் அங்கமாக, 1.1.2006 அன்று புதுச்சேயில் நடைபெற்ற கூட்டத்தில் மேலவளவு கிராமத்திற்கு நேரடியாகச் சென்று உண்மை நிலையை அறிய தீர்மானிக்கப்பட்டது.

7.1.2006 அன்று வழக்கறிஞர்கள் பொ. ரத்தினம், பகத்சிங், அழகுமணி, பூபால், சுரேஷ், ராபர்ட் சந்திரகுமார், கோ. சுகுமாரன் (மக்கள் உரிமைக் கூட்டமைப்பு), மு.முத்துக்கண்ணு (இந்திய சமூக செயல்பாட்டுப் பேரவை), ரா. முருகப்பன் (பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம்), ம. இளங்கோ (தந்தை பெரியார் தி.க.), ரா. கலியபெருமாள் (நகராட்சி/கொம்யூன் பஞ்சாயத்து எஸ்.சி./எஸ்.டி. ஊழியர் ஒருங்கிணைப்பு), பாவாடைராயன், வேல்ருகன் (புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை), கோவிந்தசாமி (சமூக நீதிப் போராட்டக் குழு), பினேகாஸ் (சட்டக் கல்லூரி மாணவர்), பாலா (பத்திரிகையாளர்) ஆகியோர் அடங்கிய குழு, மேலவளவு சென்னகரம்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்குச் சென்று வந்தது.

பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆதரவு அளித்தது.இன்றைக்கும் தலித்துகள் செருப்புப் போடக் கூடாது, மேல் சட்டை, துண்டு அணியக்கூடாது என கள்ளர்கள் சட்டம் போட்டு வைத்திருப்பதாக மேலவளவு, சென்னகரம்பட்டி தலித்துகள் கூறினர். கள்ளர்கள், தலித்துகளோடு பேசினால் ரூ. 60 அபராதமாக ஊர்ப் பொதுவுக்கு செலவிட செலுத்த வேண்டும் என்ற நிலை உள்ளது. தலித்துகள் மீது நடத்தப்படும் அத்துமீறல் குறித்து காவல் நிலையங்களில் புகார் கொடுத்தால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. கள்ளர்கள் மிரட்டி புகாரைத் திரும்ப பெறச் செய்துவிடுகின்றனர். மேலவளவு முருகேசன் வழக்கில் தண்டனை கிடைத்த பிறகு, ஓரளவுக்கு நிலைமை மாறி வருவதை அறிய முடிந்தது. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை முறையாக செயல்படுத்தினால், தலித்துகள் மீதான வன்முறை ஓரளவுக்குத் தடுத்து நிறுத்தப்படும் என்பதை மேலவளவு வழக்கில் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனை தெளிவாக்குகிறது.

மேலவளவு தலித்துகள் ஓரளவிற்கு குறைந்த அளவில் நலம் உடையவர்களாகவும், படித்தவர்களாகவும் இருப்பதனால் தீண்டாமை சாதிய அழுத்தத்திலிருந்து விடுபட வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கி இருக்கிறது. ஆனால், மேலவளவு கிராமத்தில் 6,000 கள்ளர் குடும்பம் இருப்பதால் வேறு வழியில்லாமல் தலித்துகள் கள்ளர்களுக்கு அஞ்சி வாழ வேண்டிய நிலையே தொடர்கிறது. இதுபோன்ற சூழலில், டாக்டர் அம்பேத்கர் வலியுறுத்திய தனிக் குடியிருப்பு முறை மிகவும் அவசியமானதாகிறது.

மேலவளவு வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வேளையில், குற்றவாளிகள் யாரும் தப்பிவிடக் கூடாது என்பதை தலித்துகள் அனைவரும் வலியுறுத்தினர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ராமர் சிறையில் இருப்பது, தலித்துகளுக்கு ஓரளவுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்கியுள்ளது.1992இல் கோயில் நிலத்தை குத்தகைக்கு எடுத்த காரணத்தினால் சென்னகரம்பட்டியைச் சேர்ந்த தலித்துகள் அம்மாசி, வேலு ஆகியோர் கழுத்தை அறுத்துக் கொல்லப்பட்டனர். இதில் முக்கியக் குற்றவாளியான ராமர், இவ்வழக்கில் இதுவரையில் கைது செய்யப்படவில்லை. 1992இல் நடந்த இக்கொடூர கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டும் இதுநாள் வரையில் வழக்கு விசாரணை நடைபெறவில்லை.

தமிழக அரசும், நீதித் துறையும் இதுபற்றி துளியும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.அம்மாசி, வேலு கொலை செய்யப்படுவதற்கு முதல் நாளன்று குத்தகை எடுத்த நிலத்தில் நாற்று நட்ட காரணத்திற்காக ராமர் தலைமையில் கள்ளர்கள், சென்னகரம்பட்டி தலித்துகளைத் தாக்கியுள்ளனர். இதில் அம்மாசியின் மனைவி தொம்பா உள்பட 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அப்போது, தாக்கியவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டது. தி.மு.க. ஆட்சியில் சாதிக் கலவர வழக்குகளைத் திரும்பப் பெற்றபோது, இவ்வழக்கும் போதிய காரணமின்றி திரும்பப் பெறப்பட்டது. இதை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், "இவ்வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும்' என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து ராமர் தரப்பினர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து நீதிபதி கண்ணதாசன் உத்தரவிட்டார். குற்றவாளிகள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிவிட்டனர். இத்தாக்குதலில் பாதிப்பிற்குள்ளான அம்மாசியின் மனைவி, ஓராண்டு கழித்து இறந்து போனார்.

நன்கு அறியப்பட்ட சென்னகரம்பட்டி, மேலவளவு வழக்குகளின் நிலையே இதுவென்றால், அறியப்படாத தலித்துகளின் மீதான வன்கொடுமைகளுக்கு நீதி எட்டாத ஒன்றுதான்.சமூக விடுதலையை ஒதுக்கித் தள்ளிவிட்டு, தலித் இயக்கங்கள் தேர்தல் கூட்டணியில் மூழ்கி இருக்கும் நேரமிது. சாதிய தீண்டாமைக் கொடுமைகளை எதிர்த்துப் போராடுவதும், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்படி குற்றமிழைத்துள்ள ஆதிக்கவாதிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்து, தலித்துகளை அடக்குமுறைகளிலிருந்து காப்பதும்தான் நம்முன்னுள்ள கடமை. தற்போதுள்ள அமைப்பு முறையில், சட்டமன்ற உறுப்பினர்களாவும் நாடாளுமன்ற உறுப்பினர்களாவும் தலித்துகளை அரசியல் அதிகாரத்தை நோக்கி அழைத்துச் செல்லலாம். ஆனால், தலித்துகளின் விடுதலை இதனையும் கடந்தது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.எஸ் செல்லம்மா (42) : நான் பிறந்தது தும்பப்பட்டி. கக்கன்ஜி பிறந்த ஊரு. கக்கன் வகையறாவுல எனக்கு அவர் தாத்தா. எங்க அப்பா பேரு மொந்தைரியன். நானும் கொஞ்சம் கொஞ்சமா கட்சியில இருந்து மாதர் சங்கத் தலைவியா ஆனேன். அப்போது 100 பட்டா வாங்கிக் கொடுத்தேன். அரசாங்கத்துல வீடு கட்டிக் கொடுத்தாங்க.நம்ம சமுதாயத்துக்கு ஊருக்கு நான் நல்லதுதான் செய்து வரேன்.

அப்புறம் முருகேசன் தேர்தல்ல நின்ன பின்னாடி சம்பவத்துக்கப்புறம் என்னை நிக்கச் சொல்லி, மதுரை கலெக்டர் காசி விஸ்வநாதன் ஆளனுப்பினார். நான் அப்பா வீட்டில் இருந்தேன். அப்ப நான் சொன்னேன், வேண்டாம் ஆம்பள பயலுவ நின்னுட்டு இப்பிடி பிரச்சினை ஆயிப்போச்சி இனிமேல் எனக்கு வேண்டாம் என்று சொன்னேன். அதுக்கு காசி விஸ்வநாதன், இல்லம்மா நீங்க வந்தா எந்தப் பிரச்சினையும் இருக்காது; நீங்க நல்லா நிர்வாகம் பண்ணுவிங்கன்னு கலெக்டரே கேட்டாக.ஒரு நாள் ஊர்ல கூட்டம் போட்டு அன்னபோஸ்ட்டா யாராவது வரட்டும்னு கிராமத்துல கேட்டதுக்கு எங்க சமுதாயத்துல யாரும் ஒத்துக்கல.

அப்புறம் என்னைய, நல்ல வழியில வந்தபுள்ள; சொன்னா கேக்குன்னு என்னைய வந்து பார்த்துச் சொன்னாங்க. அப்ப எல்லாம் போட்டிதான். வாங்க நாமினேசன் கட்டுவோம்னாங்க. அப்ப எங்கூட 8 ஆம்பளைங்க போட்டி. ஒரு பொண்ணு நான்தான். முதல்லயும் நான் கட்டி இருந்தேன். எங்க சமுதாயத்துலயும் சரின்னாங்க. பிற்பாடு, எங்க ஆளுங்களே என்னை வாபஸ் வாங்கச் சொன்னாங்க. நான் கட்சில பொறுப்பில இருக்கேன், வாபஸ் வாங்கமாட்டேன்னு சொல்லிட்டேன்.

அப்பதான் எனக்கு கட்சில மாவட்டத் துணைத் தலைவர், தலைவருன்னு பொறுப்பு கொடுத்துக்கிட்டே இருந்தாங்க. அப்புறம் இப்ப, எல்லோருமே போட்டி நாமினேசன் பணம் கட்டினோம். எல்லோருக்கும் ஓட்டு விழுந்தது. ஆனா நான் கொஞ்சம் அதிக ஓட்டுல ஜெயிச்சேன்.உறுப்பினர்ல எங்க ஆளுங்க 2 பேர தவிர, மத்தவங்க கோனார் வீடு, முஸ்லிம் வீடு, பி.சி.ங்க, கள்ள வீட்டு ஆளுங்க, துணைத் தலைவரே எஸ்.சி.தான். எல்லாரும் ஏதாவது கேட்பாங்க. நான்தான் நம்ம ஊர்ல பிரச்சினை இல்லாம ஓட்டணும்னு பொறுமையா இருந்து நிர்வாகம் பண்ணிக்கிட்டு இருக்கேன்.

இது கட்சி சீட்டு இல்ல. தலைவருங்கறது மக்கள் பார்த்து ஓட்டுப் போட்டு எடுக்கறதுதான். கட்சிக் கூட்டங்கள்ல பேர் போடுவாங்க போவேன். வாசன், இளங்கோவன் எல்லாம் இங்க வந்தாங்கன்னா, முதல் ஆளா என்னதான் கூப்பிட்டுப் பார்த்து, எப்படிமா இருக்க, நல்ல இருக்கியா, தைரியமா இரும்மானு சொல்லுவாங்க. நானும் தைரியமா இருக்கேன். நல்லா நிர்வாகம் பண்றேன்.ஏகாதசி (63) : நான் மாட்டு வியாபாரி. முருகேசன மேலவளவு ராசாமணி மகன் கண்ணன் வெட்டினாரு. நான் பார்த்தத அவங்க யாரும் பாக்கல. வீட்டுக்குத் திரும்பிட்டேன். எல்லாருக்கும் தெஞ்சதும் ஊர அழிக்கணும்னுதான் கிளம்பினாங்க. அதுக்குள்ள அதிகாரிக வந்து, போவப்படாதுன்னு, போலிசு எல்லாம் வந்து தடுத்துட்டாங்க. அந்த செட்டு ஆளுங்க எல்லாம் என்ன மிரட்டினாங்க, சாட்சி சொல்லக் கூடாதுன்னு. அழகர்சாமி, ரெங்கசாமி, ரெங்கநாதன் எல்லாம் ஜாமீன்ல வந்தப்ப எங்கிட்ட சொன்னாங்க. நான் அதெல்லாம் முடியாது, நடந்தத சொல்லு வந்தான்னு சொல்லிட்டன்.ராஜா : முருகேசன் கொலைக்குப் பின்னாடி தீண்டாமை எல்லாம் கொஞ்சம் குறைஞ்சிருக்கு. ஊருலயும் ஒரு மாத்தம் இருக்கு. சட்டைப் போட்டுக்கிட்டு ஊருக்குள் போகலாம். மேல துண்டு, செருப்பு எல்லாம் போட்டுகிட்டுப் போனா ஒரு மாதிரி பார்ப்பாங்க.

இப்ப அவங்களுக்குத் தண்டனை கிடைச்ச பிறகு, அதெல்லாம் மாறி கொஞ்சம் நார்மலா இருக்கு. முன்னாடி துண்டு, செருப்பு போட்டுக் கிட்டு போனா, பறயன் என்ன இப்படி வர்றான்னு பேசுவாங்க. ஆனா இப்ப அப்படி யாரும் பேசறது இல்ல.மொத்தமா வாக்காளர்கள் 6000 பேர். குடும்பம் 3000 இருக்கும். இங்க காலனில 600 குடும்பம். இங்க படிச்சிட்டு 5, 6 பேருதான் அரசு வேலைல இருக்காங்க. காலேஜ் படிச்சிட்டு ஒரு 10 பேர், +2 முடிச்சிட்டு 25 பேர் இருக்காங்க. முருகேசன் கொலை நடந்த பிறவு 5 ஆவது வரைக்கும் இங்கேயே பள்ளிகூடம் இருக்கு. அதுக்கு முன்னாடி ஊர்லதான் போய்ப் படிப்போம். அப்ப 10ஆவது வரைக்கும் இருந்தது.

இப்ப +2 ஆக்கியிருக்காங்க.போதராஜன் : முருகேசன் கொலைக்கு முன்னாடி கள்ளர் ஆளுக்கும் எங்களுக்கும் ஏதாவது பிரச்சினை, சண்டை வரும். ஆனா நாங்க யாரும் பயந்துகிட்டு போய் போலிஸ்ல புகார் எல்லாம் கொடுக்க முடியாது. அப்படி சண்டை நடந்ததுன்னு தெரிஞ்சா, எங்க ஆளுங்க ஒவ்வொருத்தருக்கும் "குடி'ன்னு சொல்லி ஒரு கள்ளர் இருப்பாங்க. உடனே அவங்கள கூட்டியாந்து சமரசம் பண்ணிடுவாங்க. அடிச்சிடுவாங்க. நாங்க போய் தீண்டாமை கேஸ்ல புகார் கொடுப்போம். உடனே கொடுத்தவனோட "குடி'ய அழைச்சிகிட்டு வந்து புகாரை வாபஸ் வாங்க வச்சிருவாங்க.

நான் பி.எஸ்.சி. டிகிரி முடிச்சிட்டு எலக்டீசியனாவும், எல்.அய்.சி. ஏஜெண்டாவும் இருந்துகிட்டு இருக்கேன். நான் 92இல் பி.எஸ்.சி. முடிச்சேன். எம்ப்ளாய்மென்டல பதிவு பண்ணியிருக்கேன். 7 பேர் அரசு வேலையில இருக்காங்க. ஒருத்தர் சர்வேயர், குடிசை மாற்று வாரியத்துல, போலிஸ்ல இருக்கிறாங்க. காலேஜ் லெக்சரர். அதிக பட்டப் படிப்பு நிறைய பேர் படிச்சிருக்காங்க. ஊர்ல மீனான்றவங்க வீட்டுக்கு வயரிங் வேலைக்கு என்னை கூப்பிட்டாங்க. அது பப்ளிக் பிளேஸ். பாதை 10 அடி பாதை. நன் ஒரு கோல் ஊன்றிதான் வயர் இழுத்தேன். பக்கத்து வீட்டுக்காரர் சொக்கு அதுக்கு எதிர்ப்பு தெவிச்சார். அது மட்டுமில்லாம நீ எப்படிடா இங்க வந்து கட்டலாம்னு என்னப் பிடிச்சி இழுத்து மரத்துல எத்தினாரு. அதுவேற காரியம். என் தொழில் மரத்துல கட்டறதுதான்.

வேலை கொடுக்கறதும், கொடுக்காததும் ஈ.பி.யில போய் நீங்க தடுங்கன்னு சொன்னேன். அவர் உட்கார்ந்திட்டாரு. அப்பவே, இந்தப் பக்கத்து வீட்டு பொண்ணு அய்யனாரு சம்சாரம் ரத்தினம், ஒரு பறயன் நீ எப்படி இழுத்து கட்டலாம்னு சொல்லிச்சு. அதனால நான் மேலவளவு போலிஸ் ஸ்டேஷன் போய் ரிப்போர்ட் செஞ்சேன். சிங் போலிசார் வந்து விசாரித்தார். புகாருக்கு ரசீதுகூட கொடுக்கல. முருகேசன் அண்ணன் கருப்பையா, இன்னும் கொஞ்சம் பேரு கேள்விப்பட்டு ஓடிவந்தாங்க. அப்புறம் எஸ்.பி.கிட்ட சொல்லி, அவர் சொன்னப்புறம்தான் சி.எஸ்.ஆர். கொடுத்தாங்க. நான் வாபஸ் வாங்க மறுத்துட்டேன்.நைட் 8 மணிக்கு சண்முகம் எஸ்.அய். வந்தாரு. ஆஸ்பத்திலே சேர மெமோ கொடுக்க மறுத்துட்டாறு. நானே ஆஸ்பத்திரியில அட்மிட் ஆயி எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில எப்.அய்.ஆர். போட்டாங்க. கேஸ் போட்டவங்க எம் பேர்லயும் கேஸ் போட்டுட்டாங்க. எம்பேர்ல அத்துமீறி நான் அந்த ஊருக்குள்ள நுழைந்ததாகவும், அரிவாளால வெட்டிடுவேன்னு மிரட்டினதாகவும் சொக்கு கொடுத்த புகார்ல எம் பேர்ல பொய்க் கேசு போட்டுட்டிருந்தாங்க.

அவங்க கள்ளர் தரப்புலகூட மனு கொடுக்கல. போலிஸ் அவங்களே எழுதி கேஸ போட்டுக்கிட்டான். இப்படி எம்பேர்ல கேஸ் போட்டதுகூட, எனக்கு 90 நாள் கழிச்சுதான் தெரியும். இந்த மாதிரி போலிஸ் இன்னும் ஆதரவா அவங்களுக்குதான் இருக்கு. இந்த மாதிரி கேஸ்னா கள்ளர் சமூகத்தில யாருமே போலிஸ் ஸ்டேஷன் வரமாட்டாங்க. நாங்க எல்லாம் போவோம். அவங்க வரமாட்டாங்க. அவங்களுக்காக சண்முகம் எஸ்.அய்.தான் வந்து இருந்து எல்லாக் காரியத்தையும் முடிச்சு கொடுப்பாரு.மணிமேகலை : எனக்கு 17 அல்லது 18 வயசுல கல்யாணம் நடந்தது. நான் 5ஆவது வரைக்கும் படிச்சிருக்கேன். என்னோட சொந்த ஊரு வினோபா நகர் காலனி. அங்க 500 வீடு இருக்கும். எங்க அப்பா பேரு காந்தன். எங்கம்மா பேரு கலியாணி. எங்கூட பிறந்தவங்க 5 பொம்பள பிள்ளைங்க 2 பையங்க. நாங்க அக்காளும், தங்கச்சியும் அண்ணன் தம்பிக்கு வாக்கப்பட்டோம். 2 பேருமே இறந்துட்டாங்க. அவளுக்கு 2 பொம்பள பிள்ளைக இருக்கு. அத எங்க அப்பா வீட்ல வச்சிகிட்டு அங்கேயே இருக்கு. எங்க தங்கச்சி வீட்டுக்காரர் ராஜா. முருகேசன் தம்பி.கொலை நடந்தப்புறம் கருணை அடிப்படையில கலைஞர் ஆட்சில 7 பேருக்குமே சாலைப் பணியாளர் வேலை போட்டு கொடுத்தாக அரசாங்கத்துல. 2 லட்சம் பணம் கொடுத்தாங்க. இந்த வீடு கட்டிக் கொடுத்தாங்க. வேலை செய்யற அண்ணிக்குதான் எங்களுக்கு சம்பளம்.சென்னகரம்பட்டி மேலூர் வட்டம்பெருமாள் (47) : அம்மாச்சி அம்மன் மண்டக் கோயிலுக்கு சொந்தமான நிலம். 20 வருசமா அவங்கதான் ஏலம் எடுத்தாங்க. அந்த தடவ நாங்க எஸ்.சி. எல்லாம் ஒண்ணா சேர்ந்து ஏலம் எடுத்தோம். மொத்த நிலம் 9 ஏக்கர் 27 சென்ட். அதை ஏலம் எடுத்திட்டோம்னுதான் படிப்படியாய் அந்தமாதிரி செஞ்சாங்க.

நாங்க ஏலம் எடுத்த பின்னாடி, அதிகாரிகள்ட்ட போய் அது செல்லாதுன்னு அறிவிக்கச் சொல்றாங்க. கமிஷனர் கன்பார்ம் ஆர்டரை எங்களிடம் கொடுத்தாரு. இந்து அறநிலையத் துறை சென்னையில் இருந்து இந்தக் கடிதம் வந்தது. இந்த வேலைகளை எல்லாம் சிவனாண்டி (எ) தர்மலிங்கம்தான் நின்று செய்கிறார். இவர் வி.ஏ.ஓ.ஆ இருந்தாரு. கொலை நடக்கும்போது அவர்தான் வி.ஏ.ஓ. பிரச்சினை இருந்தால் 144 அறிவிச்சாங்க. மேலூர் தாலுக்கா ஆபிஸ்ல பீஸ் கமிட்டி போட்டாங்க. அவங்களுக்கு நோட்டீஸ் போச்சி 5.7.92இல் அவங்க வரல. நாங்க மட்டும் ஒரு 10, 20 பேர் இருக்கோம். மேலூர் தாலுக்கா போனோம். நைட் 10 மணி வரைக்கும் இருந்தும் அவங்க வரல. சாகுல் அமீதுன்றவர்தான் தாசில்தாராக இருந்து பீஸ் கமிட்டிய கூட்டினாரு.

அவங்க வரலன்னு ராத்திரி கடைசி பஸ்சுக்கு நாங்க கிளம்பினோம். வக்கிராபுரத்துல பஸ் வழி மறிச்சி இழுத்து வேலு, அம்மாசிய கொலை பண்ணிபுடறாங்க.நல்லதம்பி (அம்மாசி மகன்) : இப்ப எனக்கு 45 வயசு. பீஸ் கமிட்டிக்கு நானுந்தேன் எங்க அப்பாகூட போயிருந்தேன். பஸ்ல வரும்போது சேகருன்றவன் மட்டும் மேலூர்லயே பஸ்ல ஏறினான். இவன் ராமர் மச்சான். கவுட்டியாம்பட்டி ஊர்க்காரன். வழியில வந்துகிட்டு இருக்கும்போதே ஒரு ஸ்டாப்ல எங்கடா ஆள காணோம் அப்படின்னு சொன்னான்.

அத கேட்ட நாங்களும் ஏதோ நடக்கப் போறதுன்னு இருக்கும்போது பஸ்ல மறிச்சாங்க. ராமர்தான் பஸ்ச மறிச்சது. கூட ஒரு 20 பேர் இருக்கும். கத்திய வீசினதும் டிரைவர் பஸ்ல இருந்தாரு. நாங்க டிரைவர்கிட்ட வண்டிய எடுயா என்று சொன்னோம். ஆனா எடுக்க விடல. உள்ள பூந்து 2 பேரை இழுத்தாங்க. பீட்டுக்காக இருந்த போலிஸ் மேலூர்ல சாப்பிட்டு அதே பஸ்ல வந்துகிட்டு இருந்தாங்க. அவங்களும், நீங்களும் இதுலதாண்டா சாவப் போறீங்க எடுறா துப்பாக்கியின்னு சொன்னாரு. எல்லாரும் திபுதிபுன்னு கீழே இறங்கிடுறாங்க. டிரைவரும் வண்டிய எடுத்துடுறாரு. ராமரும் சிவனாண்டியும் சேர்ந்து, வேலுவையும் எங்க அப்பாவையும் புடிச்சி இழுத்துடுறாங்க.

சிவனாண்டிதான் எங்க அப்பாவை கையில புடிச்சி தாங்கி இழுத்தாரு. அவ்வளவுதான் நாங்க பார்த்தது. புடிச்சி இழுத்ததுல வெளியில வந்த வேலு பயந்து ஓடுனாறு, அவன தொரத்திகிட்டு ராமர் ஓடுனாறு. அதான் நாபார்த்தது. அதுக்கப்புறம் நைட்டே எங்களுக்கு விசயம் தெரிஞ்சிடுச்சி. ஆனா போலிஸ் அவரை போகவிடாம தடுச்சிருச்சி. எங்க ஊர்ல 144 போட்டு போலிஸ் பந்தோபஸ்து இருந்தாங்க. நாங்க இல்லாமலே பாடிய கொண்டு போயிட்டாங்க. மறுநாள் காலையில 10 மணிக்குதான் எங்கள அழைச்சிகிட்டுப் போனாங்க. போலிஸ் யாரையும் கைது பண்லை. 13 வருசமா இந்த கேஸ் நிலுவையில இழுத்துகிட்டு இருக்கு.இந்த கொலைக்கு முன்னாடி கள்ளர் ஆளுக எங்க ஆளுங்கள 5 பேர் குத்திப்புட்டாக. அதில் எங்க அம்மா, சுரேஷ், ராஜேந்திரன், அவங்க அம்மா, ஓனயன் இந்த 5 பேருக்கும்தான் குத்து விழுது. எங்க அம்மாவுக்குதான் இதுல அதிக காயம். இதுக்கு கேஸ் கொடுத்தோம். இப்பதான் இந்தக் கேஸ தள்ளுபடி பண்ணிட்டாங்க.

எங்க அம்மா, இந்த குத்துபட்ட காயத்தால அடுத்த 2 வருசத்திலேயே இறந்திட்டாங்க. எங்க அப்பா இறந்ததுகூட எங்க அம்மாவுக்குத் தெரியாது. புதைச்சிட்டு அப்புறம் பொறுமையாதான் சொன்னோம்.

Wednesday, April 19, 2006

ஆக்கப்பூர்வமான வன்முறை என்று ஒன்றில்லை

நேர்காணல் : கோ. சுகுமாரன்

டாக்டர் கே. பாலகோபால், இந்திய அளவில் புகழ்பெற்ற மனித உரிமைப் போராளிகளில் குறிப்பிடத்தகுந்தவர். இவர் ‘ஆந்திரப் பிரதேச சிவில் உரிமைக் குழு'வின் பொதுச் செயலாளராக இருந்தவர். தற்பொழுது ‘மனித உரிமைக் கழக'த்தின் பொதுச் செயலாளராக செயல்படுகிறார். ஆந்திராவில் வெகு மக்கள் ஆதரவுடன் 18 மாவட்டங்களில் இவ்வமைப்பு செயல்படுகிறது. மனித உரிமை அமைப்புகள் மக்கள் இயக்கமாக செயல்பட முடியாது; சிறிய குழுவாகத்தான் இருக்க முடியும் என்பதை செயலளவில் மாற்றியதில் இவருக்கு முக்கிய பங்குண்டு.


1994 இல் கர்னூலில் நடைபெற்ற ‘ஆந்திரப் பிரதேச சிவில் உரிமைக் குழு'வின் மாநில மாநாட்டில் இவரது அறிக்கை, 18 மணி நேரம் விவாதிக்கப்பட்டது. அரசு வன்முறையும், தனி அமைப்பு வன்முறையும் எதிர்க்கப்பட வேண்டும் என்ற இவரது கருத்துகள், அப்போது நீண்ட விவாதத்திற்குள்ளானது. இதன் தொடர்ச்சியாக, மேற்குறிப்பிட்ட நக்சலைட் ஆதரவு மனித உரிமை அமைப்பிலிருந்து விலகி, தனி அமைப்பு உருவாக்க வேண்டிய நிலைக்கு இவர் தள்ளப்பட்டார். ஆந்திர உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் பணியாற்றிவரும் இவர், செயல்தளத்தில் மட்டுமல்லாது எழுத்துத் தளத்திலும் பங்களிப்பு செலுத்தி வருகிறார். காவல் துறையின் அதிகாரம் மேலோங்கி இருக்கும் ஆந்திராவில், உயிருக்கு அச்சுறுத்தலுள்ள சூழலில் இவருடைய துணிவான மனித உரிமை செயல்பாடு, பலராலும் பின்பற்றப்பட வேண்டிய ஒன்றாகும்.

தங்களுடைய குடும்பப் பின்னணி, சமூகப் பின்னணி...என்னுடைய குடும்பம், ஆந்திரப் பிரதேசத்தின் ராயல்சீமா பகுதியைச் சேர்ந்தது. இப்பகுதி கடுமையான வறட்சிக்கும், ‘குழு' வன்முறைக்கும் புகழ் பெற்ற இடம். என்னுடைய அம்மாவின் தந்தை, பார்ப்பனிய மரபுவழிச் சடங்குகளில் தேர்ந்த பயிற்சி பெற்றவர். இவர் மைசூரில் உள்ள மகாராஜா கல்லூரியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார். அவருக்கு அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள அக்கிரகாரத்தில் பங்கு இருந்தது. இப்பகுதி, ராஜஸ்தானில் உள்ள பாலைவனப் பகுதிகளைப் போல மிகவும் வறண்டு காணப்பட்டது. என்னுடைய தந்தையின் குடும்பம், கடப்பாவில் உள்ள நகர்ப்புறத்தைச் சேர்ந்த கீழ் நடுத்தர வர்க்கமான பார்ப்பனக் குடும்பம். என் தந்தை இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் கிளை மேலாளராக இருந்து ஓய்வு பெற்றவர். எனது தாய் 14 முறை கருவுற்றுப் பதினோரு குழந்தைகளைப் பெற்றார்; அதில் மூவர் குழந்தைப் பருவத்திலேயே இறந்து விட்டனர். என்னுடைய தாய் எங்கள் எட்டு பேருடைய (4 சகோதரர்கள், 4 சகோதரிகள்) வளர்ச்சியில் மிகுந்த அக்கறை செலுத்தினார்.

என்னுடைய தந்தை ஒரு சராசரி ஆணாகவே இருந்தார். அவருடைய ஒரே கடமை, எங்களுக்குப் பள்ளி மற்றும் கல்லூரிக் கட்டணங்களைச் செலுத்துவது தவிர வேறில்லை என்று நம்பிக் கொண்டிருந்தார். அதுகூட அந்தக் காலத்தில் நகராட்சிப் பள்ளிகளிலும், அரசுக் கல்லூரிகளிலும் எங்களுக்கு நல்ல முறையிலும், இலவசமாகவுமே கற்றுக் கொடுக்கப்பட்டது. என்னுடைய தந்தைக்கு ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மாறுதல் வந்ததால், மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் நான் படிக்க நேர்ந்தது. என்னுடைய அறிவியல் இளங்கலைப் படிப்பை திருப்பதியில் படித்து 1972 இல் பட்டம் பெற்றேன். என்னுடைய அறிவியல் முதுநிலைப் படிப்பையும், கணிதவியலில் முனைவர் பட்டத்திற்கானப் படிப்பையும், தெலுங்கானா பகுதி வாரங்கல்லில் உள்ள’முஜினல் பொறியியல் கல்லூரி'யில் (தற்பொழுது அது ‘தேசியத் தொழில்நுட்ப நிறுவனம்' என்று அழைக்கப்படுகிறது) படித்தேன். வாரங்கல் பகுதி, 1946 - 57 காலகட்டத்தில் தெலுங்கானாவின் விவசாயிகள் எழுச்சிப் போராட்டத்திற்குப் பெயர் பெற்ற இடமாகும். 1970 களின் மத்தியில் இவ்வியக்கம், சிறீகாகுளத்திலிருந்து தெலுங்கானாவிற்கு மாறியதிலிருந்து இன்னும் பல வழிகளில் குறிப்பாக, நக்சலைட் இயக்கத்திற்கு மய்யமான இடமாக அது விளங்குகிறது.

நீங்கள் ஒரு மனித உரிமைப் போராளியாக எவ்வாறு பணியாற்றத் தொடங்கினீர்கள்?

நான் முதன் முதலில் வாரங்கல்லில்தான் நக்சலைட்டு இயக்கத்துடன் தொடர்பு கொண்டேன். அதற்கு முன்பு, திருப்பதியில் இளங்கலைப் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்தபோது, கணிதம் இயற்பியல் வேதியியல் ஆகிய வகுப்புகளைத் தவிர்த்துவிட்டு, பெரும்பாலான கல்லூரி நாட்களை சிறீ வெங்கடேஸ்வரா பல்கலைக் கழகத்தில் உள்ள நூலகத்தில்தான் செலவழித்து வந்தேன். வரலாறு, தத்துவம், ஆங்கில இலக்கியம், மனோதத்துவம், தர்க்கவியல் மற்றும் வானவியல் குறித்து நிறையப் படித்தேன். நான் வெகு விரைவில் பெர்ட்ரண்ட்ரசல் மற்றும் அவருடைய இடதுசாரி சிந்தனைகளின் பால் ஈர்க்கப்பட்டேன். எனவே, அப்போது எனக்கு கம்யூனிஸ்ட்டுகள் மனதளவில் நல்லவர்களாகவும், சிந்தனை அளவில் இறுக்கமானவர்களாகவும் பட்டார்கள்.

நான் வாரங்கல்லில் இருந்தபோதுதான் நக்சலைட் இயக்கத்துடன் எனக்குத் தொடர்பு ஏற்பட்டது. இதற்கு முஜினல் பொறியியல் கல்லூரி, ஒரு மய்ய இடமாக அமைந்தது. 1975 சூனில் நெருக்கடி நிலை நடைமுறையில் இருந்தபோது, சுராபனானி ஜனார்த்தனன் என்ற நக்சலைட் போராளிதான் முதல் முறையாகக் கொல்லப்பட்டவர். அவர் இக்கல்லூரியின் மாணவர். மற்றொருவர் செருகு ராஜ்குமார். இவர் தற்பொழுது சி.பி. அய். (மாவோயிஸ்ட்) இன் மய்யக் குழு உறுப்பினராக இருக்கிறார். ராஜ்குமார் அடிக்கடி என்னிடம் அரசியல் பேசுவார். ஆனால், கம்யூனிஸ்டுகள் உள்ளத்தால் நல்லவர்கள்; அவர்களுடைய தத்துவம் பலமற்றது என்ற என்னுடைய சிந்தனையில் எந்த மாற்றம் ஏற்படவில்லை. பெர்ட்ரண்ட் ரசலிடமிருந்து பெற்ற ஆய்வு அணுகுறையின் அடிப்படையில், என்னால் ‘நெருக்கடி நிலையை'ப் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதுதான் எனக்கு வருத்தம்.

கம்யூனிஸ்டுகளிடம் இதற்கு விடை இருப்பதாக எனக்குத் தோன்றியது. இருப்பினும், முன்னேற்றப் பதிப்பகம் வெளியிட்ட மார்க்சியம் குறித்த நூல்கள், எனக்குச் சிறிதும் உதவவில்லை. நான் தற்செயலாக டி.டி. கோசாம்பியைப் படிக்க நேர்ந்தபோதுதான் மார்க்சியத்தின் சாரத்தைப் புரிந்து கொண்டேன். அதன்பிறகுதான் நான் ‘மூலதனம்' மூன்று தொகுப்புகளையும் படித்தேன். இருப்பினும், கணிதத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்ததால், ஒரு போராளியாக மாறுவேன் என்று நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. அங்குள்ள ‘இந்திய புள்ளியியல் நிறுவனத்தில்' கணிதத்தில் முனைவர் பட்டத்திற்கான உயர் ஆய்வை மேற்கொள்ள, 1978 இல் டெல்லிக்குச் சென்றேன்.

அங்கு சென்ற ஒன்றரை ஆண்டுகளிலேயே என்னால் அந்தப் பாடத்தின் தன்மையையும், அதில் ஆய்வு செய்பவர்களின் திறமையையும், செயல்பாட்டையும் புரிந்து கொள்ள முடிந்தது. அந்தப் படிப்பு மீது எனக்கிருந்த ஈர்ப்பு குறைந்ததால், கணிதவியல் ஆராய்ச்சியாளராக மாறுவதைவிட ஒரு போராளியாக மாறுவது என்று முடிவு செய்தேன். என்னுடைய ஆய்வு முடியும் முன்பே நான் மீண்டும் வாரங்கலுக்கே வந்துவிட்டேன். எனக்கு ‘ககாட்டியா பல்கலைக் கழக'த்தில் உள்ள கணிதவியல் துறையில் விரிவுரையாளர் வேலை கிடைத்தது. நான் அப்போது ‘இயக்கத்திற்காகப் பணியாற்ற' முடிவு செய்தேன். நான் இயக்கம் என்று குறிப்பிடுவது ‘நக்சலைட் இயக்கம்'.

அந்தக் காலகட்டத்தில், ஆந்திர மாநிலத்தில் சிவில் உரிமைகளுக்காகப் பணியாற்றுவது என்பது, மிகவும் மரியாதைக்குரிய ஒன்றாகப் புரிந்து கொள்ளப்பட்டது. அதிலும் குறிப்பாக அறிவுஜீவிகள் நக்சலைட் இயக்கத்திற்கு வேலை செய்வது என்பது, மிகுந்த மரியாதையுடன் பார்க்கப்பட்டது. இந்த வகையில்தான் நான் ஒரு மனித உரிமைப் போராளியாக மாறினேன். மற்றபடி மனித உரிமைகளை முற்றாகப் புரிந்து கொண்டு நான் மாறவில்லை. அறிவாளிகள் நக்சலைட்டுகளுக்குச் செய்யக்கூடிய ஒரே உதவி என்ற முறையில், ‘ஆந்திரப் பிரதேச சிவில் உரிமைக் கழக'த்தினர் நச்சலைட்டுகளுக்கு உதவி செய்தனர். நான் 1983ஆம் ஆண்டே இவ்வமைப்பின் பொதுச் செயலாளரானேன். இதன் பின்னணியில் மிகச் சாதாரணமான காரணங்களே இருந்தன. இடதுசாரி இயக்கங்களுடன் தொடர்புடைய அமைப்புகளில் இப்படிதான் நடக்கும்.

இன்று, என்னைப் பொறுத்த வரையில், மனித உரிமை அமைப்புகளில் இருக்கும் என்னுடைய சகப் போராளிகளைப் பொறுத்தவரையில், ஓர் ஆரோக்கியமான முழுமையான மனித உரிமை இயக்கம் என்ற அளவில் எங்களுடைய தொடக்கம் சிறப்பானதாக இல்லை. இதற்காக நாங்கள் வருத்தப்படவில்லை. எனினும், நாங்கள் அரசுக்கும் நக்சலைட் இயக்கத்திற்கும் இடையில் பணியாற்றுவது அப்போதும் இப்போதும் பயனுள்ளதாக இருப்பதாகவே உணர்கிறோம். ஆனால், இது தொடக்கப் புள்ளியாக இருந்திருக்கக் கூடாது. இத்தகைய செயல்பாடுகள் அரிதாகவும், உரிமைகள் பற்றிய இருவிதமான விழிப்புணர்வுகளும் கலந்ததாக இருந்தது.


ஒரு மனிதனின் உரிமையை அரசு பறிக்கக்கூடாது என்ற விடுதலைச் சிந்தனை ஒரு புறம், புரட்சி செய்வதற்கான உரிமை வேண்டும் என்ற சிந்தனை மறுபுறம். இது எங்கு போய் முடியும் என்றால், ஒரு தனி மனிதனை எந்த விதத்திலும் மதிக்காத ஓர் அரசை அமைப்பதில் போய் முடியும். மனித உரிமைக் கோட்பாடு என்பது, தனி மனிதனின் உரிமைகளை முழுமையாக அங்கீகரிப்பதாக இருக்கிறது. அதே சமயத்தில் ஒரு மேம்பட்ட சமூகத்தைத் தீவிரமான வழிகளில் முன்னெடுப்பதையும் அங்கீகரிக்கிறது. ஆனால், அரசு எந்திரத்திற்கு எதிராக தனி மனிதனின் உரிமைகளை நிலைநிறுத்துவது என்பது மட்டும் தனி மனிதனின் எல்லாவித உரிமைகளையும் செயல்படுத்துவது என்பதாக அமையாது. மேம்பட்ட சமூகம் என்பது, எல்லா அம்சங்களிலும் இப்போதிருக்கும் சமூகத்தைவிட உரிமைகளை மதிப்பதாக அமைய வேண்டும். உண்மையில், மனித உரிமைக் கோட்பாடு என்பது மேற்குறிப்பிட்ட இரு அம்சங்களை மட்டுமே சார்ந்தது அல்ல. அது மனிதர்கள் அனைவரையும் சமமாகப் பார்க்கிறது. அவர்களுக்கான தகுதிகளையும் வாய்ப்புகளையும் சமமான அளவில் பகிர்ந்தளிக்கிறது. இந்தக் கருத்துதான் இந்தியாவில் புத்தன் காலத்திலிருந்தே, பார்ப்பன சமூகத்திற்கும் நாகரிகத்திற்கும் எதிராக, மனித உரிமைக் கோட்பாடு என்பதற்கான உண்மையான அர்த்தத்தையும் உயிர்ப்பையும் தந்திருக்கிறது.

மக்கள் யுத்தக் குழுவின் தோற்றம் மற்றும் வளர்ச்சி குறித்துச் சொல்லுங்கள்.

மக்கள் யுத்தக் குழுவின் (தற்பொழுது சி.பி.அய். மாவோயிஸ்ட் என்று அழைக்கப்படுகிறது) தொடக்கத்தை, அவர்களின் எழுத்துக்களிலிருந்தே கொள்ள முடியும். எனக்கு இது பற்றி குறைந்த அளவே தெரியும். ஏனெனில், அதைத் தெரிந்து கொள்வதில் எனக்கு ஆர்வம் இருந்ததில்லை. நக்சலைட் இயக்கத்திற்கான என்னுடைய ஆதரவு, பெருமளவு அதனுடைய சமூகத் தாக்கத்தால் ஏற்பட்டதுதான். இந்தப் பொருளில், நக்சலைட் இயக்கத்தின் (மக்கள் யுத்தக் குழு மட்டும் அல்ல) தோற்றம், கிராமத்தில் உள்ள ‘ரயத்' கூலி சங்கத்தை (விவசாயத் தொழிலாளர் சங்கம்) அடிப்படையாகக் கொண்டிருந்தது. இத்தகைய சங்கங்கள், பன்கத் தன்மை வாய்ந்த போராட்டத்தின் கருவாக இருந்தன: நிலத்திற்கானப் போராட்டம், கூலி உயர்வுக்கானப் போராட்டம், கொத்தடிமை முறைக்கு எதிரானப் போராட்டம், ஏழை / தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்களைப் பாலியல் சுரண்டலுக்கு ஆளாக்கும் நிலச்சுவான்தார்களுக்கு எதிரானப் போராட்டம், தீண்டாமைக்கு எதிரானப் போராட்டம், தங்களுக்குள் ஏற்படும் சண்டைகளை நிலச்சுவான்தார்களின் பஞ்சாயத்தால் தீர்த்துக் கொள்வதற்குப் பதில் மக்கள் தாங்களாகவே தீர்த்துக் கொள்வது போன்றவற்றை இந்தச் சங்கங்கள் முன்னெடுத்தன.

இத்தகைய செயல்பாடுகளே நக்சலைட் இயக்கத்தின் உயரிய நோக்கமாக இருந்தது. கிராமத்தில் நிலவும் சமூக உறவுகளைத் தலைகீழாக மாற்றுவது என்பதுதான் அதனுடைய அடிப்படையான நோக்கமாக இருந்தது. கணக்கிடக்கூடிய அளவில் நிலப்பங்கீட்டில் பெருமளவு மாற்றங்கள் இல்லை எனினும், கூலி உயர்வு கிடைத்தது; கொத்தடிமை முறை முழுமையாக ஒழிந்தது. கிராமத்தில் நிலவிய அதிகார உறவுகள், முன்பு எப்போதும் இல்லாத வகையில் மாறிவிட்டது.

நக்சலைட் இயக்கத்தின் ‘வளர்ச்சி' குறித்து ஒருவர் பேச வேண்டும் எனில், பின்வரும் மய்யப்புள்ளிகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ‘ரயத்' கூலி சங்கத்தின் வெற்றிகரமானப் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு பயன்படுத்திய கடும் ஒடுக்குறை; நக்சலைட்டுகளின் வன்முறை வடிவங்கள் குறிப்பாக மக்கள் யுத்தக் குழுவின் வன்முறை வழிமுறைகள்; இதற்கு எதிராக மேலும் அதிகமான வன்முறையை அரசு ஏவியது; இதற்கெதிராக மேலும் வன்முறையைக் கடைப்பிடித்த மக்கள் யுத்தக் குழு என ஒன்றிலிருந்து மற்றொன்றாகச் சுழன்று வந்தது. கட்சி ஒரு முழுமையான புரட்சிகர இயக்கமாக முதிர்ச்சி அடைந்து விட்டது என்று அவர்களுடைய வெளியீடுகள் குறிப்பிடலாம். ஆனால், இது விவாதத்திற்குட்பட்டது.

ஓர் உண்மையான மக்கள் இயக்கத்தின் சீரழிவுக்கு, ஓரளவு பயிற்சி பெற்ற போராளிகள் அரசுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தி ஓடிவிடும் தன்மைக்கு யார் முழு காரணமாக இருந்தாலும், குறிப்பாக மக்கள் யுத்தக் குழுவின் புரட்சிகர இயக்கச் செயல்பாடுகளில் வெகுமக்களுடைய பங்களிப்பு என்பது, பெருமளவில் குறைந்து விட்டது. இயக்கத்தின் மய்யமான சங்கத்தில் இருந்துதான் ஆயுதமேந்திய குழுக்கள் தேர்வு செய்யப்பட்டனர். காவல் துறை மற்றும் அரசின் பிற நிறுவனங்களுக்கு எதிராகத் தோன்றிய கெரில்லா போராட்டம், கிராமங்களின் சமூக, பொருளாதாரப் போராட்டங்களுக்கு மாற்றாக அமைந்தது. சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளை ஒடுக்கப்பட்ட மக்கள் தாங்களாகவே கையிலெடுத்துப் போராடுவதற்குப் பதில், அவை ஆயுதக் குழுக்களாலேயே கையிலெடுக்கப்பட்டன. முன்பு ஒரு போராட்டம் செய்திருக்கக்கூடிய விஷயத்தை நக்சலைட்டுகளால் கிராமத்தில் ஒட்டப்படும் ஒரு சுவரொட்டியே சாதிக்கக்கூடிய அளவுக்கு நிலைமை மாறியிருந்தது. ஆனால், மறுபுறம் மக்கள் யுத்தக் குழு, ராணுவ ரீதியாக மேலும் மேலும் தேர்ந்து விளங்கியது. காவல் துறை அதிகாரிகளே அவர்களுடைய ஆற்றலைப் பார்த்து வியக்குமளவுக்கு மாறியது.

இன்றையச் சூழலில், ஆயுதப் போராட்டம், மனித உரிமைகள் மற்றும் அரசாங்கம் ஆகியவற்றிற்கு இடையிலான பிரச்சினைகளை எப்படிப் பார்க்கின்றீர்கள்?

ஒரு மனித உரிமை இயக்கத்திற்கு உள்ளார்ந்த மாண்புகள் இருக்கின்றன. உடலுழைப்பற்ற வர்க்கம் செய்யக்கூடிய ஒரு புரட்சியாக இதைப் பார்க்க முடியாது. ஆயுதப் போராட்டம் என்பது எப்பொழுதுமே சிக்கலுக்குரியது. ஓர் உண்மையான மனித உரிமைப் போராளி, ஒருபோதும் வன்முறையை ஆதரிக்க முடியாது. வன்முறையில் ஈடுபடுகின்றவர்கள் ஒருபோதும் மனித உரிமைப் போராளிகளாக இருக்க முடியாது. வன்முறைதான் பல நேரங்களில் நீதி கிடைக்க வழி செய்கிறது என்றும், வன்முறையை ஆதரிப்பவர்கள் சொல்வது போல் உலகில் பெறப்பட்ட அனைத்து வெற்றிகளுக்கும் வன்முறைதான் காரணம் என்பதும் உண்மையல்ல. பல ஆண்டுகளாகவே இந்த சிக்கலைப் பற்றி நாங்கள் மிகத் தீவிரமாக விவாதித்து வந்திருக்கிறோம். எங்களால் ஒரு தீர்வுக்கும் வர முடிந்தது பல பிரச்சினைகளும் சிரமங்களும் இருக்கத்தான் செய்தன ஆனால் பல வழிகளிலும் நடைமுறையில் அனைத்து அம்சங்களையும் கணக்கிலெடுத்துக் கொள்ளக் கூடிய ஒரு தீர்வாக அது இருந்தது.

சமூகத்தின் கட்டுமானத்தில் எண்ணற்ற வன்முறைகள் நிலவும்போது வறியவர்களை பலம் பொருந்தியவர்கள் தாக்குவது, பசி, வறுமை, கல்வியின்மை, திட்டமிடப்பட்ட பாகுபாடுகள், தீண்டாமை முதலியன... இருப்பினும், அனைத்துவகை அரசியல் வன்முறையையும் கண்டிப்பது என்பது சரியல்ல. மனித உரிமை ஆர்வலர்கள் வன்முறையை ஆதரிப்பவர்கள் அல்ல; ஆனால், சமூகம் அதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். இதைப் ‘புரிந்து கொள்ள' வலியுறுத்துவது ஒருவகையான ஆதரவை வழங்குவதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், இது வன்முறையை ஆதரிப்பதைத் தடுக்கிறது (இதுதான் மரண தண்டனைக்கு எதிரான முக்கியமான வாதம்).

இருப்பினும், நாம் முழுமையற்ற ஒரு சமூகத்தில் வாழ்கிறோம். இந்நிலையில் நாம் வெறும் அரசியல் வழிமுறைகளை மட்டுமே கோர முடியாது. வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டும் எனில், மனித உரிமை ஆர்வலர்கள் வன்முறையை ஆதரிப்பதில்லை. ஆனால் ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்கள், விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள் ஆகியோருக்கு ஆதரவான அரசியல் வன்முறையின் பின்னணியை இந்தச் சமூகம் புரிந்து கொள்ள வலியுறுத்துகின்றனர். வன்முறையைத் தூண்டும் இந்நிலையை மாற்ற அவர்கள் முயலுகின்றனர். அதே நேரத்தில், அவர்கள் அனைத்து வகை அறியாமைகளையும், அநீதிகளையும் புரட்சியாளர்களின் வன்முறையையும் கண்டிக்கின்றனர். இந்தப் புரிதலில்கூட மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம். என்னைப் பொறுத்த அளவில், 25 ஆண்டுகளாக, விடுதலைக்காகத் தொடர்ச்சியான, திட்டமிட்ட வன்முறையை அருகில் இருந்து பார்த்து வருகின்றவன் என்ற வகையில் வன்முறை என்பது சில நேரங்களில் ஒரு தேவையான தீமை. ஆனால், அது தேவைப்பட்டாலும் ஒரு தீமையே!

ஆக்கப்பூர்வமான முறையில் வன்முறையைப் பயன்படுத்துவது பற்றி இடதுசாரி அறிவுஜீவிகள் பேசுவதை அடிக்கடி கேட்க முடிகிறது. ஆக்கப்பூர்வமான வன்முறை என்று ஒன்று கிடையாது என்பது என்னுடைய உறுதியான கருத்து. அனைத்து வன்முறையும் அழிவைத் தருபவைதான். அழிவு என்பதற்குப் பல பயன்கள் இருக்கின்றன என்பது உண்மைதான். இப்படிப்பட்ட ஒரு அழிவுக்கு தற்போதைய சூழலில் ஒரு தேவை இருக்கத்தான் செய்கிறது. ஏனென்றால், இருக்கும் மாற்று வழிகள் இதைவிட மேலும் அழிவுகளைத் தருபவைகளாக இருக்கின்றன. வன்முறையைத் தவிர்ப்பது என்பது, நம்மீது நிகழ்த்தப்படும் நியாயமற்ற வன்முறையை ஒத்துக் கொள்வதாகக்கூட முடிந்து விடலாம். இந்த நிலையில், வன்முறையைத் தவிர வேறு வழியில்லை. எப்படி இருந்தாலும், வன்முறை என்பது அடிப்படையிலேயே மனிதத் தன்மையற்றது. இந்தக் காரணத்தை மட்டும் முன்வைத்து வன்முறையை நாம் முழுமையாகத் தவிர்ப்பது என்பது, தற்கால சமூகச் சூழலில் சாத்தியமில்லை.-

பேட்டி அடுத்த இதழிலும்...

நன்றி: தலித்முரசு