Wednesday, March 13, 2024

சிறுமி பாலியல் வன்கொடுமைச் செய்து படுகொலை: விரைந்து குற்ற அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (13.03.2024) விடுத்துள்ள அறிக்கை:

ஒன்பது வயது சிறுமி பாலியல் வன்கொடுமைச் செய்து கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட வழக்கில் விரைந்து குற்ற அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டுமென 'மக்கள் உரிமைக் கூட்டமைப்பு' சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.

புதுச்சேரியில் ஒன்பது வயது சிறுமி பாலியல் வன்கொடுமைச் செய்து கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் நாடெங்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளிகள் இருவர் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். குற்றவாளிகளை உடனே தூக்கிலிடுங்கள், என்கவுன்டர் செய்யுங்கள், எங்களிடம் ஒப்படையுங்கள் போன்ற கருத்துகள் பேசப்படுகின்றன. ஆனால், இது நிலவுகிற சட்டப்படி செய்ய முடியாதவை.

சட்டமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்களின் தலைவர்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் முதலமைச்சர், உள்துறை அமைச்சர் உள்ளிட்டோரைச் சந்தித்து முறையிட்டதால் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. ரூபாய் 20 இலட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டது. தற்போது முதல்கட்டமாக 7 இலட்சத்து 12 ஆயிரத்து 500 ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமைகள் தடுப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.    

இக்கொடூரச் சம்பவத்திற்குக் கஞ்சா முக்கிய காரணமாக உள்ளது. கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களைத் தடுப்பதில் அரசு படுதொல்வி அடைந்துள்ளது. பள்ளிகளில் தாராளமாகப் போதைப் பொருள் புழங்குகிறது. இதைத் தடுக்கக் கல்வித்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. போதைப் பொருட்களைத் தடுக்கக் காவல்துறை, கல்வித்துறை போன்ற தொடர்புடைய துறைகள் இணைந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

போதைப் பொருட்கள் தமிழகம் வழியாக புதுச்சேரிக்கு வருவதாகத் தெரிகிறது. இதைத் தடுக்கத் தமிழக அரசு மற்றும் காவல்துறை உயரதிகாரிகளுடன் கலந்தாலோசித்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். போதைப் பொருள் புழக்கத்தை ஒழிக்கவில்லை என்றால் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்வைத் தடுக்க முடியாது.

போதைப் பொருள் தடுக்க உருவாக்கப்பட்ட காவல்துறைத் தனிப் பிரிவுக்கு வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் வழங்கும் முடிவு சரியானது. இப்பிரிவின் செயல்பாடுகளை நேரடியாக டி.ஜி.பி., மேற்பார்வையிட்டு உரிய ஆலோசனைகள் வழங்கிக் கண்காணிக்க வேண்டும்.

இக்கொடிய குற்றத்திற்குப் போதைப் பொருள்களைக் கட்டுப்படுத்தாதது, காவல்நிலையத்தில் புகார் அளித்தும் காணாமல் போன சிறுமியை நான்கு நாட்களாக கண்டுபிடிக்காதது என அரசின் அலட்சியமே முக்கிய காரணமாகும். இதற்கு அரசே முழுப் பொறுப்பேற்க (Vicariously liable) வேண்டும்.

குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனைப் பெற்றுத் தருவதில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் மக்கள் உரிமைக் கூட்டமைப்பு மற்றும் சமூக, ஜனநாயக இயக்கங்கள் துணைநிற்பதோடு, கடமையாக கருதிச் செயல்படும்.

எனவே, புதுச்சேரி அரசு இவ்வழக்கில் விரைந்து குற்ற அறிக்கைத் தாக்கல் செய்து, குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அறிவித்தபடி நிவாரணம் முழுவதையும் உடனே வழங்க வேண்டும்.


Sunday, February 04, 2024

நீதிபதி கோ.இராஜசூர்யா நினைவேந்தல் - மலரஞ்சலி நிகழ்ச்சி!


மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் இன்று (04.02.2024) காலை 10 மணியளவில், மக்கள் தலைவர் வ.சுப்பையா நினைவு இல்லத்தில் சென்னை  உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி கோ.இராஜசூர்யா நினைவேந்தல் மலரஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. 

நிகழ்ச்சிக்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமைத் தாங்கினார். 

மாண்புமிகு வேளாண்துறை அமைச்சர் திரு. தேனீ க.ஜெயக்குமார், சட்டமன்ற உறுப்பினர் திரு. கோ.நேரு (எ) குப்புசாமி மலரஞ்சலி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். 

மக்கள் வாழ்வுரிமை இயக்கச் செயலாளர் கோ.அ.ஜெகன்நாதன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், திராவிடர் கழக மண்டலத் தலைவர் வே.அன்பரசன், தமிழர் களம் செயலாளர் கோ.அழகர், தமிழர் தேசிய முன்னணி தலைவர் ந.மு.தமிழ்மணி, புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவுநர் சீ.சு.சுவாமிநாதன், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படைத் தலைவர் ஆ.பாவாடைராயன்,  தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கச் செயலாளர் இராஜா, புதுச்சேரி தன்னுரிமைக் கழகத் தலைவர் தூ.சடகோபன், தமிழ்த் தேசிய பேரியக்கத் தலைவர் இரா.வேல்சாமி, இராவணன் பகுத்தறிவு இயக்கத் தலைவர் இர.அபிமன்னன், புதுவைத் தமிழ் எழுத்தாளர் கழகச் செயலாளர் புதுவைத் தமிழ்நெஞ்சன், விடுதலை வாசகர் வட்டம் தலைவர் கோ.மு.தமிழ்ச்செல்வன், அகில இந்திய மஜ்லிஸ் கட்சி நகரத் தலைவர் பலுலுல்லா, பெரியார் சிந்தனையாளர் இயக்கத் தலைவர் அ.ச.தீனா, புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் தலைவர் இரா.சுகுமாரன், இயற்கை மற்றும் கலாச்சார புரட்சி இயக்கத் தலைவர் பிராங்கிளின் பிரான்சுவா, ஆதிதிராவிடர் உரிமை இயக்கத் தலைவர் ச.பாலசுந்தரம், இந்திய மக்கள் சக்தி பாதுகாப்பு இயக்கத் தலைவர் அர.அரிகிருஷ்ணன், அண்ணல் காந்தி மக்கள் இயக்கத் தலைவர் வேணு.ஞானமூர்த்தி, மக்கள் உரிமைக் கட்சித் தலைவர் எம்.மணிமாறன், ஓவியர்கள் இரா.இராஜராஜன், மார்கண்டன், சட்டக் கல்லூரி மாணவி இரா.சுகன்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டு மலரஞ்சலி செலுத்தி நினைவேந்தல் உரையாற்றினர். 

இந்நிகழ்ச்சியில் கீழ்காணும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

புதுச்சேரி காவலர் புகார் ஆணையம் (Police Complaints Authority) நீதிபதி கோ.இராஜசூர்யா தலைமையில் சிறப்பாக செயல்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க உதவியது. ஆனால், இந்த ஆணையத்திற்கு புதிய நீதிபதியைத் தலைவராக நியமிக்காமல் ஆட்சியாளர்களால் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசு உடனடியாக தகுதியான, நேர்மையான உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி தலைமையில் உறுப்பினர்களை நியமித்து காவலர் புகார் ஆணையத்தைச் செயல்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும். இல்லையேல் உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடருவது என தீர்மானிக்கப்பட்டது.

Tuesday, April 05, 2022

புதுச்சேரியில் மின் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (05.04.2022) விடுத்துள்ள அறிக்கை:

புதுச்சேரியில் மின் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டுமென அரசை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.

புதுச்சேரியில் மின்துறையை தனியார்மயம் ஆக்குவதை எதிர்த்து அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் குரல் கொடுத்ததாலும், ஊழியர்களின் தொடர் போராட்டத்தினாலும் தனியார்மயம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

தற்போது மின் கட்டணம் உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1 முதல் 1 முதல் 100 யூனிட் வரை ரூ.1.55-ல் இருந்து ரூ.1.90 ஆகவும், 101 முதல் 200 யூனிட் வரை ரூ.2.60-ல் இருந்து ரூ.2.90 ஆகவும், 201 முதல் 300 யூனிட் வரை ரூ.4.65-ல் ரூ.5.00 ஆகவும், 300 யூனிட்டிற்கு மேல் ஒரு யூனிட் ரூ.5.05-ல் இருந்து ரூ.5.45 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

கொரோனா காலத்தில் பொருளாதார ரீதியில் மிகவும் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னமும் அதிலிருந்து மீளவில்லை. இந்நிலையில், இந்த மின் கட்டண உயர்வு மக்களுக்கு மேலும் சுமையாக அமையும். அதுவும் மின்சாரம் அதிகம் பயன்படுத்தப்படும் கோடைக் காலத்தில் மின் கட்டணத்தை உயர்த்தி இருப்பது வெயிலின் கொடுமையில் வாடும் மக்களை மேலும் வாட்டுவதாகும்.

புதுச்சேரியில் கோடிக்கணக்கான ரூபாய் மின் கட்டண பாக்கி வைத்துள்ள அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களிடம் இருந்து வசூலிக்க முயற்சிக்காமல் மின் கட்டண உயர்வு மூலம் மக்களை வஞ்சிப்பது சரியல்ல.

எனவே, மக்கள் நலன் கருதி மின் கட்டண உயர்வைத் திரும்பப் பெற புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம். இல்லையேல், கட்சி, சமூக அமைப்புகளைத் திரட்டிப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கிறோம்.

Sunday, February 13, 2022

பாரதியார் பல்கலைக்கூடத்திற்குத் தகுதியில்லாத முதல்வர்: நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (13.02.2022) விடுத்துள்ள அறிக்கை:

பாரதியார் பல்கலைக்கூடத்திற்குத் தகுதியில்லாதவரை முதல்வராக நியமித்தது குறித்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை அமைச்சகம் தலைமைச் செயலருக்கு உத்தரவிட்டுள்ளது.

பாரதியார் பல்கலைக்கூடத்திற்கு ஏ.ஐ.சி.டி.இ. (AICTE) விதிகளுக்கு மாறாக எவ்விதத் தகுதியும் இல்லாத இசைத் துறைப் பேராசிரியர் பி.வி.போஸ் முதல்வராக நியமிக்கப்பட்டதில் ஊழல், முறைகேடுகள் நடந்துள்ளது. இதுகுறித்து, புதுச்சேரி அரசுக்குப் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கலைப் பண்பாட்டுத்துறைச் செயலர் நெடுஞ்செழியன் தகுதி இல்லாதவரை முதல்வராக நியமித்தது மட்டுமல்லாமல் அவரை நிரந்தர முதல்வராக்கவும் முயற்சித்து வருகிறார்.

கலைப் பண்பாட்டுத்துறைச் செயலர் மீது பல்வேறு புகார்கள் அளித்தும் புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், மத்திய அரசு இதில் தலையிட்டு ஊழல் அதிகாரியான கலைப் பண்பாட்டுத்துறைச் செயலரைக் காத்திருப்போர் பட்டியலில் வைக்க வேண்டும்.

மேலும், பாரதியார் பல்கலைக்கூடத்திற்குத் தகுதி இல்லாதவரை முதல்வராக நியமித்தது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

இதுகுறித்து கடந்த 21.10.2021 அன்று பிரதமர், உள்துறை அமைச்சர், உள்துறைச் செயலர், சி.பி.ஐ. இயக்குநர், மத்திய ஊழல் கண்காணிப்புத் தலைமை ஆணையர் உள்ளிட்டோருக்குப் புகார் மனு அனுப்பினோம்.

கடந்த 02.02.2022 அன்று இப்புகார் மனுவை மத்திய உள்துறை அமைச்சகம் தலைமைச் செயலருக்கு அனுப்பி வைத்து தேவையான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.

எனவே, இப்புகார் மனு மீது தலைமைச் செயலர் உடனடியாக நடவடிக்கை எடுத்து பாரதியார் பல்கலைக்கூட முதல்வரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறோம். இல்லையேல், கட்சிகள், சமூக அமைப்புகள் சார்பில் போராட்டம் நடத்துவோம் எனத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Wednesday, January 19, 2022

புதுச்சேரி மேரி கட்டிடத்தை ஆளுநர் மாளிகையாக மாற்றக் கூடாது!

புதுச்சேரியின் அடையாளமாகத் திகழும் நகராட்சி அலுவலகக் கட்டிடத்தை ஆளுநர் மாளிகையாக மாற்றக் கூடாது:

சமூக ஜனநாயக இயக்கங்கள் வலியுறுத்தல்!

மக்கள் வாழ்வுரிமை இயக்கச் செயலாளர் கோ.அ.ஜெகன்நாதன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பாளர் இரா.மங்கையர்செல்வன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், தமிழர் களம் செயலாளர் கோ.அழகர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி அமைப்பாளர் சி.ஸ்ரீதர், தமிழ்த் தேசிய பேரியக்கப் பொறுப்பாளர் வேலுச்சாமி, புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை தலைவர் ஆ.பாவாடைராயன், செம்படுகை நன்னீரகம் தலைவர் கு.இராம்மூர்த்தி ஆகியோர் இன்று (19.01.2022) விடுத்துள்ள கூட்டறிக்கை:

புதுச்சேரியின் மிக முக்கிய அடையாளங்களில் ஒன்றான “மேரி கட்டிடம்” எனப்படும் நகராட்சிக் கட்டிடம், பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சியில் கடந்த 1887-ஆம் ஆண்டு “ஐரோப்பியன் கிரிட்டோ ரோமன்” எனும் கட்டிட கலை நுணுக்கத்துடன் கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தைக் கடந்தகால ஆட்சியாளர்களும், பொதுப்பணித்துறையும் உரிய வகையில் பராமரிக்காத காரணத்தால் 2016ஆம் ஆண்டு முழுவதுமாக சேதமடைந்து இடிந்து விழுந்தது.

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட தேசிய தலைவர்கள், குபேர், அன்சாரி துரைசாமி, வ.சுப்பையா உள்ளிட்ட மாநிலத் தலைவர்கள் பங்கேற்ற கூட்டங்கள் நடந்த வரலாறு இந்த நகராட்சி அலுவலகக் கட்டிடத்திற்கு உண்டு.

புதுச்சேரி திட்ட செயலாக்க முகமை மூலம் சுமார் ரூ.16 கோடியில் மேரி கட்டிடம் கட்டுமானப் பணி கடந்த 2017-ஆம் ஆண்டு துவங்கியது. 700 சதுர மீட்டரில் பழமை மாறாமல் கடந்த 2021 ஆண்டு மார்ச் மாதம் முழுமையாக கட்டுமானப் பணி முடிவடைந்துவிட்டது.

முன்னாள் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி பெயரை அழைப்பிதழில் அன்றைய காங்கிரஸ் ஆட்சியாளர்கள் போடவில்லை என்பதனால் மேரி கட்டிடம் திறப்பு விழா நின்றுபோனது. இந்நிலையில் புதுச்சேரி நகராட்சி அலுவலகம் போதிய இடவசதி இல்லாமல் கடந்த ஐந்தாண்டு காலமாக குபேர் திருமண நிலையம், கம்பன் கலையரங்கம், பிறப்பு இறப்பு சான்றிதழ் முதலியார்பேட்டை மேரியிலும் என மக்கள் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர். தற்போதைய அரசு நகராட்சிக் கட்டிடத்தை உடனடியாக திறந்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என அனைத்து தரப்பினரும் விரும்புகின்றனர்.

அதைவிடுத்து துணைநிலை ஆளுநர் மாளிகையில் சிறிய அளவில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் ஆளுநர் மாளிகையை தற்காலிகமாக மேரி கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்ய போவதாக தகவல் கிடைத்துள்ளது. இது எந்த நோக்கத்திற்காக புதிய நகராட்சிக் கட்டிடம் கட்டப்பட்டதோ அந்த நோக்கத்தையும் மக்களுக்கான பணிகளையும் முடக்கும் செயலாகும்.

எனவே, மேரி கட்டிடத்தை ஆளுநர் மாளிகையாக மாற்றுவதைக் கைவிட வேண்டும். மேரி கட்டிடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு உடனே திறக்க வேண்டுமென சமூக, ஜனநாயக இயக்கங்கள் சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம். 

Friday, January 14, 2022

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வாதாட 100 வழக்கறிஞர்களை உருவாக்குங்கள் – கே.ஜி.கண்ணபிரான்

மூத்த வழக்கறிஞர் பா.பா.மோகன் உரை

மதுரையில் பிறந்து ஐதராபாத்தில் கல்வி கற்று, இந்திய ஒன்றியம் முழுவதும் அறியப்பட்ட பிரபல மக்கள் வழக்கறிஞராக திகழ்ந்த கே.ஜி.கண்ணபிரான் அவர்களின் குடும்பத்தினரால், 8 நவம்பர் 1929 முதல் 30 டிசம்பர் 2010 வரையான கே.ஜி.கண்ணபிரான் அவர்களின் வாழ்க்கை, சமூகப் பணி மற்றும் அதன் எதிர்காலத்தைக் கொண்டாடும் வகையில் 14-12-2020 அன்று ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் தமிழகத்தைச் சேர்ந்த மூத்த மக்கள் வழக்கறிஞர் தோழர் ப.பா.மோகன் அவர்கள் அற்றிய ஆங்கிலச் சொற்பொழிவு தமிழில்..

தமிழாக்கம் – தோழர் பிரேம்குமார்

அனைவருக்கும் காலை வணக்கம்.  நான் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தின் பவானியில் இருந்து வருகிறேன். இது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கெளரவம். கே.ஜி.கே (கே.ஜி.கண்ணபிரான்) உடனான எனது அனுபவத்தை பகிர்ந்துக்கொள்ள கல்பனா கண்ணபிரான் கேட்டபோது நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். என் வாழ்க்கையில் நான் கண்ட மிகச்சிறந்த மனிதர்களில் கண்ணபிரானும் ஒருவர் என்பதால் இந்த வாய்ப்புகாக மிகவும் பெருமைப்படுகிறேன். நானும் ஒரு கம்யூனிஸ்ட் குடும்பத்தைச் சேர்ந்தவன். எனது தந்தையும் மற்ற குடும்ப அங்கத்தினர்களும் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள். நான் சட்டம் படிக்கும் போது சில காலம் கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியராக இருந்தேன்.

எனது சட்டப் படிப்பை முடித்ததும், என்.டி.வானமாமலை அவர்களின் அலுவலகத்தில் சேர விரும்பினேன். ஆனால், முதலில் எனது வேலையை கீழ்மட்டத்தில் இருந்து தொடங்க வேண்டும் என்று வானமாமலை அவர்கள் கூறினார்.

நான் எனது வழக்கறிஞர் பயிற்சியைத் தொடங்கினேன், குறிப்பாக பழங்குடி மக்களுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கினேன். மேற்குத் தொடர்ச்சி மலையைச் சேர்ந்த பழங்குடியின மக்களின் பல வழக்குகளை நான் நடத்தியுள்ளேன். அந்த நேரத்தில், வீரப்பனை பிடிக்கிறோம் என்ற பெயரில் தமிழகம் மற்றும் கர்நாடகாவின் சிறப்பு காவல்படை அப்பாவி பழங்குடியினரைக் கைது செய்து கொடுமைப்படுத்தியதை நான் அறிந்துக்கொண்டேன். பழங்குடி மக்கள் பெரிதும் பாதிப்பிற்குள்ளான சோளகர் தொட்டி வழக்கை நான் கையில் எடுத்தேன். வழக்கறிஞர் பாலமுருகன் எழுதியுள்ள நாவலின் மூலம் இந்த இடத்தை நீங்கள் அறிந்திருக்கலாம். இந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் எஸ்.டி.எஃப் முகாம்களுக்கு இழுத்து செல்லப்பட்டு, அதிகாரிகளின் மனிதாபிமானமற்ற சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டனர். சித்திரவதையின் ஒருபகுதியாக அவர்களின் மீது மின்சாரம் கூட பாய்ச்சப்பட்டன. 17 பிப்ரவரி 1996 அன்று அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்த சித்திரவதையினால் நாற்பது பழங்குடிகளின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையொட்டி, பழங்குடியினர் சங்கத்தின் தலைவரான வி.பி.குணசேகரனும் நானும் அவர்களை முதலில் மருத்துவமனைக்கும் பின்னர் மாவட்ட ஆட்சியரிடமும் அழைத்துச் சென்றோம். நாங்கள் இருவரும் இந்த வழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தினோம். ஆனால் யாரும் எங்களை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இதனால் இது குறித்து ஏதாவது செய்ய வேண்டும் என்று வி.பி.குணசேகரன் கூறினார்.

1996-ல், மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம், மனித உரிமைகள் அமைப்புகள், மனித உரிமை நீதிமன்றங்கள் மற்றும் மாநில மனித உரிமை ஆணையங்கள் அமைக்கப்பட்டன. எனவே, உயர்நீதிமன்றத்திற்குச் செல்வதற்குப் பதிலாக, அந்த நேரத்தில் மனித உரிமைகள் நீதிமன்றமாக நியமிக்கப்பட்ட ஈரோடு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஒரு தனிநபர் புகார் அளிக்க முடிவு செய்தேன். நீதிபதி தணிகாசலம் அப்போது உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்த்தப்பட்டார். எனவே, இந்த நபர்கள் சித்திரவதைக்கு ஆளாகியுள்ளதாகவும், சிகிச்சை, இழப்பீடு மற்றும் பிற விஷயங்களை வழங்க வேண்டும் என்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 212-ன் கீழ் நான் ஒரு தனிநபர் புகார் அளித்தேன்.

நீதிபதி தணிகாசலம் அப்போது, ​​”நிச்சயமாக இது ஒரு மனித உரிமை நீதிமன்றம்தான், மேலும் ஒரு சிறப்பு நீதிமன்றமாகவும் நியமிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவைகளுக்கான நடைமுறை விதிகள் எங்கே? எந்த சட்டத்தின் கீழ் நான் புகாரை எடுப்பது? நான் தண்டனை விதிப்பதற்கான விதிகள் எங்கே?” என்று கேள்விகளை எழுப்பி அந்த புகாரை திருப்பி அனுப்பினார். ஆனால், புகாரை மீண்டும் நான் பிரதிநிதித்துவப்படுத்தினேன்.  இதுதான் ‘மனித உரிமைகள் நீதிமன்றம்’ என்று ஒரு குழு சொல்வதால் இதுதான் நான் புகார் அளிக்கக்கூடிய இடம். அந்த நேரத்தில் பி.யூ.சி.எல். செயலாளர்களில் ஒருவரும் வழக்கறிஞருமான திரு. பாலமுருகன் எனது அலுவலகத்தில் எனது ஜூனியராக இருந்தார். அவர் இந்த விஷயத்தை கையில் எடுத்து, ஓய்வு பெற்ற பின்னர் கொச்சியில் இருந்த நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் அவர்களுக்கு புகார் அனுப்பினார். புகாரைப் படித்த கிருஷ்ணய்யர் இது நடத்தப்பட்ட விதம் குறித்து மிகவும் கடுப்படைந்தார். எனவே, அப்போது சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த கே.ஏ.சாமி அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார். கடிதத்தைப் படித்த தலைமை நீதிபதி கே.ஏ.சாமி அவர்கள் இந்திய அரசியலமைப்பின்படி நீதிபதி கற்பகவிநாயகம் கீழ் Suo Moto திருத்தத்தை அமைத்தார். இந்த சூ மோட்டோ திருத்தம் உயர் நீதிமன்றத்தால் எடுத்துக் கொள்ளப்பட்டு அனைத்து வழக்குரைஞர் ஜெனரல்கள், அனைத்து பொது வழக்கறிஞர்கள், அனைத்து மனித உரிமை அமைப்புகள் என்று அனைவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. இந்த சமயத்தில் தான், தமிழக பி.யூ.சி.எல் தலைவர் சுரேஷ் கே.ஜி.கே.வை இந்த வழக்கை எடுத்து நடத்தும்படி கேட்டுக் கொண்டார். அனைத்து கருத்தரங்குகள் மற்றும் விசாரணைகளில் கே.ஜி.கே.வுடன்  கலந்து கொள்ளும் முதல் வாய்ப்பு எங்களுக்கு அப்போதுதான் கிடைத்தது.

இவ்வளவு சிறந்த மனிதரைச் சந்திக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது அதுவே முதல்முறை. அவர் ஒரு எளிய, பணிவுமிக்க மனிதர். ஆனால் அதே நேரத்தில் ஒரு முழு சிந்தனைக் குழுவாகவும் இருந்தார். எனவே, விசாரணைக்கு ஒரு நாள் முன்பு ஒரு கருத்தரங்கில் பங்கேற்று அனைத்து கருத்துக்களையும் பொறுமையாகக் கேட்டார். ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பி.யூ.சி.எல். கூட்டத்தில் அனைத்து மூத்த வழக்கறிஞர்களும் பங்கேற்றனர். நாங்களும் கலந்துரையாடலில் பங்கேற்றோம். அந்த நேரத்தில் நாங்கள் மாவட்ட அளவிலும் குற்றவியல் நடுவர்  அளவிலான நீதிமன்றங்களில் மட்டுமே பயிற்சி செய்து கொண்டிருந்தோம். உயர் நீதிமன்றத்தில் நான் ஆஜாரனதுகூட இல்லை. மனித உரிமைகள் சட்டம் தொடர்பான அனைத்து கருத்துக்களையும் கே.ஜி.கே. பொறுமையாகக் கேட்டு, அதை முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டிய வழியை ஆராய்ந்தார்.  கூட்டத்தில், நிறைய சர்வதேச சட்டங்கள் மற்றும் பல விஷயங்களைப் பற்றி பேசினார். பின்னர், நீதிமன்றத்தின் முன், குற்றவியல் சட்டம் மற்றும் சி.ஆர்.பி.சி பற்றி நன்கு அறிந்த நீதிபதி எம்.எஸ்.ஜனார்த்தனம் அவர்கள் முன்பு, வழக்கை நிவர்த்தி செய்வதற்கான வழிகளைக் கொண்டு வந்து குற்றவியல் சட்டத்தின் வரம்பிற்குள் நிறுத்தினார். ஆனால் சீனியர் கே.ஜி.கே. நீதிமன்றத்தின் முன் தனது வாதங்களை யு.டி.எச்.ஆர், ஐ.சி.சி.பி.ஆர் மற்றும் மனித உரிமைகளுக்கான சர்வதேச போராட்டத்திலிருந்து தொடங்கினார். பின்னர் அவர் இந்திய அரசியலமைப்பு மற்றும் அடிப்படை உரிமைகள் மற்றும் வழிநடத்தும் கோட்பாடுகளை யு.டி.எச்.ஆர் உடனும், மற்றும் 1966 உடன்படிக்கைகள் மற்றும் அனைத்தையும் ஒப்பிட்டு, வழக்கு விசாரணை மற்றும் தண்டனைகளை வழங்குவதற்கான முதல் நீதிமன்றம் மனித உரிமைகள் நீதிமன்றம் தான் என்று நீதிமன்றத்திற்குப் புரிய வைத்து, கவனத்தை ஈர்க்கும் வகையில் வழக்கை சிறப்பாக முன்வைத்தார்.

ஆறு சமர்ப்பிப்புகளில் பங்கேற்றோம்.  கிட்டத்தட்ட அனைத்து நீதிபதிகள், கற்றறிந்த மூத்தவர்கள், வழக்கறிஞர்கள், ஜெனரல்கள் மற்றும் அனைத்து அரசு வழக்கறிஞர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் அதில் பங்கேற்றன. அவர் அசாத்திய நம்பிக்கையுடன் நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததை அப்போதுதான் முதல் தடவையாக பார்த்தோம். அவர் சர்வதேச கருத்தரங்குகள், இயக்கங்கள், மனித உரிமை அமைப்புகள் மற்றும் அனைத்திலும் பங்கேற்றார் என்பதை நாங்கள் அறிந்தோம். நாங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கிற்கு கே.ஜி.கேவை  கொண்டுவருவதில் வழக்கறிஞர் சுரேஷ் பெரும் பங்காற்றினார். அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது, ஆனால் எப்படியிருந்தாலும், அந்த வழக்கின் தீர்ப்பின் பின்னரே (வி.பி. குணசேகரன் எதிர் தமிழக அரசு) இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மனித உரிமை நீதிமன்றங்களும் செயல்படத் தொடங்கின. அதுவரை, எந்த விதிகளும் இல்லாததால், அனைத்து நீதிமன்றங்களும் வெறுமனே தான் இருந்தன. சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் மட்டுமே இந்த செயல்பாடு தொடங்கியது. அது அப்போது ஒரு வரலாற்று சிறப்புமிக்க பங்களிப்பாகும். அந்த நேரத்தில் நாங்கள் கே.ஜி.கே உடன் இருந்தோம், நிச்சயமாக, அவருடைய அரசியலமைப்பு நிபுணத்துவம் எனக்கு நிறைய விசயங்களை கற்றுத் தந்தது.

இதைத் தொடர்ந்து நக்கீரன் வார இதழின் ஆசிரியர் திரு. நக்கீரன் கோபால், அவரது நிருபர்களும் காட்டுக்குள் சென்று வீரப்பனை பேட்டி எடுத்தனர். இந்த நேர்காணல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைப் பற்றியது. தான் ஆட்சிக்கு வந்தால் நக்கீரன் கோபாலை கைது செய்து  சிறையில் அடைப்பேன் என்று தனது தேர்தல் அறிக்கையில் சேர்க்கும் அளவிற்கு இந்தப் பேட்டியால் அவர் கோபமடைந்தார். பின்னர் அவர் ஆட்சிக்கு வந்தவுடன் கோபல் மீது நிறைய வழக்குகளைத் போடத் தொடங்கினார். இந்த வழக்குகளுக்காக நான் அவருக்கு கோவை, ஈரோடு மற்றும் மேற்கு மாவட்டங்களில் ஆஜரானேன். ஜெயலலிதா போட்ட வழக்குகளைப் பற்றி கோபால் என்னுடன் விவாதித்தார். மூத்தவழக்கறிஞர் கண்ணபிரான் இந்த வழக்குகளில் வாதிட்டால் நல்லது என்று நான் சொன்னேன். அதே நேரத்தில், திமுகவின் முரசொலி மாறன் எம்.பி. திரு. நக்கீரன் கோபாலிடம், இந்த வழக்கைக் இந்தியாவில் கையாளக்கூடிய ஒரே ஒரு நபர் திரு.கே.ஜி.கண்ணபிரான் மட்டுமே என்று அறிவுறுத்தினார். அந்த நேரத்தில் நீதிபதி சுபாஷன் ரெட்டி  சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தார். சுமார் நான்கு நீதிமன்ற விசாரணைகளின் போது நான்  கே.ஜி.கண்ணபிரான் உடன் தங்கியிருந்தேன். அந்த அனுபவம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தந்தது. சுபாஷன் ரெட்டி ஆந்திரத்தைச் சேர்ந்தவர் மற்றும் கே.ஜி.கே-க்கு நெருக்கமானவர் என்றாலும், அவர் வழக்கைத் சிறப்புப் பட்டியலுக்கு தள்ளிவிட முயன்றார். இதை அவர் நான்கு முறை செய்தார். இதற்குக் காரணம் சுபாஷன் ரெட்டி வழக்கை விசாரிக்க அஞ்சினார். கே.ஜி.கே வாதாடினால் நிறைய விஷயங்களைப் பேசுவார் என்பது அவருக்குத் தெரியும். நீதிபதிகள் கூட அவரைப் பார்த்து பயந்துவிட்டார்கள் என்பதை கவனித்தேன். ஆனால், ஏன் என்று அப்போது தெரியவில்லை.

பிப்ரவரி 14, 1998 அன்று  கோயம்புத்தூரில் 12 இடங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகள் பற்றி நாம் அனைவரும் அறிவோம். அல் உம்மா அமைப்பு அதற்குக் குற்றம்சாட்டப்பட்டுப் பின்னர் தடை செய்யப்பட்டது. இது கோயம்புத்தூர் மற்றும் தமிழ்நாட்டின் முழு காட்சியையும் மாற்றியமைத்தது.  குண்டு வெடிப்பின் விளைவாக 58 பேர் இறந்தனர், 252 பேர் காயமடைந்தனர், மேலும் ஏராளமான சொத்துக்கள் அழிந்தன. மொத்தம் 12 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கில் 75 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது; 158 பேர் கைது செய்யப்பட்டனர்; குற்றப்பத்திரிகை சுமார் 17,000 பக்கங்களைத் தாண்டியது. அந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட அப்துல் நசீர் மதானி (A14) கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய நான்கு மாநிலங்களில் வழக்குகளை உள்ளடக்கியவர். கேரளா தவிர மூன்று மாநிலங்கள் அவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்துமாறு என்னைக் கேட்டுக்கொண்டனர். நான் இதை ஏற்றுக்கொண்டேன். குற்றம்சாட்டப்பட்டவர்களுக்குக் கூட ஏழு ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட அனுபவமுள்ள வழக்கறிஞர்கள்  பிரதிநிதித்துவப்படுத்த முடியும் என்று அவர்கள் உயர்நீதிமன்றத்தில் மனு செய்தனர். எனவே, அந்த வகையில் 26 வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டனர். அந்த வழக்கில் எனது மூத்த வழக்கறிஞர் பி.திருமலைராஜன் ஆதரவையும் நாடினேன். அவரும் விசாரணைக்கு வந்தார். இந்த வழக்கு 2002-ல் தொடங்கியது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது 220 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, 1,200 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இது மிகவும் கடினமான வழக்கு. கிட்டத்தட்ட ஒரு கூண்டு கம்பிகளுக்குள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் வைக்கப்பட்டனர். நாங்கள் சாட்சிகளை விசாரிக்கலாம், ஆனால், யாரும் அங்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. வழக்கில், நானும் எனது மூத்த வழக்கறிஞர் திருமலைராஜன், அபுபக்கர் மற்றும் சிலரும் விசாரணையில் பங்கேற்றோம்.

18 முஸ்லிம்கள் போலீஸ் மற்றும் பிற இந்துத்துவ சக்திகளால் கொடூரமாக சுட்டுக் கொலை செய்யப்பட்டதற்குப் பழிவாங்குவதற்காக இந்த அல் உம்மா அமைப்பினர் கேரளா, கோயம்புத்தூர், சென்னை போன்ற பல்வேறு இடங்களில் சதி செய்தனர் என்பது அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு என்பதை நாங்கள் நன்கறிவோம். அவர்கள் வெடிகுண்டுகளை உருவாக்க ஆந்திரா மற்றும் மைசூர் பகுதிகளிலிருந்து வெடிபொருட்களை வாங்கினர். மேலும் எல்.கே.அத்வானியின் வருகையின் போது அவர்கள் தாக்குதலைத் நடத்த திட்டமிட்டுள்ளனர். 18 முஸ்லிம்கள் காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்ட பின்னர், 1997 நவம்பர் 29 அன்று நடந்த காவலர் செல்வராஜின் கொலைக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் முதல் வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் அனைவரும் குற்றவாளிகள் என்றும், மூன்று பேருக்கு மரண தண்டனையும் விதிக்கப்பட்டது. அதன்பிறகான விசாரணையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

அரசு தரப்புப்படி, குண்டு வெடிப்பின் பின்னணி காரணம் இது. விசாரணை நியாயமான முறையில் நடத்தப்படவில்லை. இது ஒரு வெளிப்படையான விசாரணை அல்ல, ஏனென்றால் நான் சாட்சியைப் பார்க்கச் சென்ற அடுத்த நிமிடம் என்னுடன் வந்த நபர் காவலில் வைக்கப்பட்டார். எனவே, எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை. விசாரணை பாரபட்சமானதாக இருந்தது. குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு நாங்கள் வாதாட வாய்ப்பு வழங்கப்பட்ட போதிலும், சாட்சிகளை சந்தித்து அறிந்து கொள்ள எங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. எனவே குற்றம் சாட்டப்பட்ட 168 பேரில் ஒருவர் மட்டுமே இந்து, மீதமுள்ளவர்கள் அனைவரும் முஸ்லிம்கள் ஒரு திட்டவட்டமான சார்பு இருந்தது.

பாஜக மையத்தில் ஆட்சிக்கு வந்ததால் வழக்கில் தண்டனையை உறுதி செய்வதில் குறியாய் இருந்தது. எனவே, இது வெறும் குற்றவியல் வழக்காக இல்லாமல் சில அரசியல் பின்னணியையும் பெற்றுள்ளது என்பதால் கே.ஜி.கே.வின் சேவையை நாட வேண்டும் என்று நான் எனது மூத்த வழக்கறிஞர்களுடன் விவாதித்தேன். கே.ஜி.கண்ணபிரான் வந்து  வாதிட்டால் வழக்குப் புதிய பரிமாணத்தில் பார்க்கப்படும். 1,200 சாட்சிகளைப் விசாரிப்பது அவருக்கு எளிதானது அல்ல என்று எங்களில் ஒருவர் சொன்னார். குற்றவியல் சதி வழக்கை மட்டுமே வாதிட அவர் இங்கு இருக்க வேண்டும். சாட்சிகளை  நாங்கள் கவனித்துக்கொள்வோம் என்று சொன்னேன். எனது மூத்த வழக்கறிஞர்கள் ஐதராபாத் சென்று அவரை இந்த வழக்கிற்கு வாதாட ஒப்பந்தம் செய்தனர். கே.ஜி.கண்ணபிரான் கோவை வந்து முருகன் தங்கும் விடுதியில் தங்கினார். எனது இளைய வழக்கறிஞர்களை நாங்கள் தயார் செய்யப் போகும் வழியைக் காண ஒரு வாய்ப்பாக அதைப் பயன்படுத்தினேன். அப்போது அங்கிருந்த இளைஞர்களின் பணியை அவர் கூர்ந்து கவனித்தார்.  திரு. கலையரசன் மற்றும் திரு. பாவேந்திரன் ஆகியோர் இந்த வழக்கில் பெரும் பங்கை வகித்தனர். அவர் எங்களுடன் அமர்ந்து வழக்கைப் பற்றி விவாதித்து, இளைய வழக்கறிஞர்களிடம் திட்டத்தைப் படிக்கச் சொன்னார். அவரை ஒரு மேதைமை மிக்கவராக நான் பார்த்த சந்தர்ப்பம் அது. அவர் ஒரு மனித உரிமைகள் அல்லது ஒரு குற்றவியல் வழக்கறிஞர் மட்டுமல்ல, இளைஞர்கள்  கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு முன்மாதிரி மற்றும் வழிகாட்டியாக இருந்தார் என்பதை நான் பார்த்தேன். அனைத்து விசயங்களைப் பற்றி தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க அனைத்து வழக்கறிஞர்களையும் ஊக்கப்படுத்தினார். 120பி-இன் கீழ் குற்றவியல் சதித்திட்டங்களை மட்டுமே கவனிக்கும் பொறுப்பை நாங்கள் அவரிடம் ஒப்படைத்தோம்.

அவர் அனைத்து குற்றச்சாட்டுகளையும் படித்தார். குற்றவியல் நடைமுறைச் சட்டம் 173-இன் கீழ் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகைகளில் 18 முஸ்லிம்களைச் சித்திரவதை செய்தவர்கள் யார் என்பதை குறித்து எதுவும் இல்லை. வாசிப்பின் போது அவர் “மிஸ்டர் மோகன் நீங்கள் போய் 1940 மிர்சா அக்பர், அஜய் அகர்வால் வழக்குத் தீர்ப்புகளை எடுத்து பாருங்கள்” என்று கூறுவார். அந்த அளவிற்கு அவரது நினைவாற்றல் இருந்தது.  எனவே மதுரையில் ஓய்வுபெற்ற வழக்கறிஞரிடமிருந்து பழைய புத்தகங்கள் பெற்று நாங்கள் படிக்க வேண்டியதாயிற்று. குற்றவியல் சதி என்றால் என்ன என்று அவர் எங்களுடன் அமர்ந்து விவாதித்தார்; மக்காலே இயற்றியப்படி 5ஏ அத்தியாயம் சட்டப் புத்தகத்தில் இல்லை. தேசிய இயக்கத்தை அடக்குவதற்காக மட்டும் இது 1938-இல் இயற்றப்பட்டது. குற்றவியல் சதித்திட்டத்தின் கூறுகளை அவர் விவரித்தார், பின்னர் குற்றச்சாட்டுகளைப் படித்தார். சீனியர் ஜூனியர் வித்தியாசமின்றி அனைவரின் கருத்துகளையும் கேட்டார்.

விசாரணைக்கு முன்னர், நீதிமன்றத்தின் சூழ்நிலையைப் பார்க்க வேண்டும் என்று அவர் விரும்பினார். அவர் என் நண்பர் ஒருவரிடமிருந்து கடன் வாங்கிய அங்கியை அணிந்து நீதிமன்றத்திற்கு வந்தார். அப்போது திரு. உத்திரபதி சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக இருந்தார். கே.ஜி.கே. நீதிமன்ற டெய்ஸில் எழுந்து நின்று, “நான் கே.ஜி.கண்ணபிரான்” என்றார்.  உடனடியாக நீதிபதி “உங்கள் வேஜஸ் ஆஃப் இம்பூனிட்டி புத்தகத்தை நான் படித்துள்ளேன்” என்று கூறினார், இது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. எங்கள் வாதங்களுக்கான நாள் வந்தது, அவர் சொன்ன முதல் வாக்கியம்:

“இந்தியா முழுவதும் மற்றும் சர்வதேச அரங்கில் வழக்குகளை நடத்திய எனது வழக்கறிஞர் வாழ்க்கையில், குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் முஸ்லிம்கள்,

சிறுபான்மையின மக்கள் என்ற ஒரு தனித்துவமான பாகுபாடு இருப்பதை நான் காணக் கூடிய முதல் வழக்கு இதுவாகும். அவர்கள் அனைவரும் ஒரு கூண்டில் சிங்கங்கள் அடைக்கப்பட்டிருப்பதை போல இங்கு வைக்கப்பட்டுள்ளதை நான் காண்கிறேன். இது ஒரு நியாயமான விசாரணையும் அல்ல. குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 327, தடா மற்றும் பொடாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை தவிர்த்து, அதற்கான சிறப்பு காரணங்கள் இல்லாவிட்டால், விசாரணைகள் திறந்த முறையில் இருக்க வேண்டும் என்று கூறுகிறது, இருப்பினும் இது இந்திய தண்டனை சட்டத்தின் வெடி பொருட்கள் சட்டம் மற்றும் ஆயுதச் சட்டம் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, இதில் இப்படி நடந்து கொள்வதற்கான அவசியம் என்ன?”

“விசாரணை கொடியிடப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார்.  “அரசியலமைப்பின் 21-வது பிரிவின் கீழ் வழக்கு விசாரணை நியாயமான முறையில் நடத்தப்பட வேண்டும்.” அவர் இந்திய சட்டங்களை மட்டுமின்றி ஐ.சி.சி.பி.ஆர் மற்றும் சர்வதேச சட்டங்களையும் பல தீர்ப்புகளையும் மேற்கோள் காட்டி எப்படி ஒரு வழக்கு நியாயமான முறையில் விசாரிக்கப்பட வேண்டும் என்பதை நீதிமன்றத்திற்கு சுட்டிக்காட்டினார். நீதிபதியே அவர் சுட்டிக் காட்டிய பாயிண்டுகளை பாராட்டும்படி ஆயிற்று.

“ஒரு வகையில் விசாரணை நியாயமான தன்மை கொண்டதல்ல, மறுபுறம் வழக்கு விசாரணையும் ஒரு நியாயமான வழியில் செல்லவில்லை. குண்டுகள் வெடித்தன மற்றும் மக்கள் காயமடைந்தனர் என்ற குற்றம் நடந்ததை நான் மறுக்கவில்லை, ஆனால் அரசியலமைப்பின் பிரிவு 21-இன் கீழ் விசாரணை நியாயமானதாக இல்லை.” அவர் தனது வாதத்தின் கருத்தை முழு நீதிமன்றமும் ஏற்கும்படி செய்தார். நீதிபதி உத்திரபதி கூட தனது தீர்ப்பில், குற்றம்சாட்டப்பட்ட அனைவருக்கும் அவரைப் போன்ற ஒரு வழக்கறிஞரால் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பு கிடைத்திருந்தால், தீர்ப்பு வேறு மாதிரியாக இருந்திருக்கும் என்று எழுதியுள்ளார். சொல்லிக் கொள்ளும்படி இந்த வழக்கில் விசாரணையும், நீதிமன்ற விசாரணையும் நடத்தப்படாததால், மரண தண்டனை விதிக்கப்படவில்லை. இது வழக்கில் ஒரு பெரிய திருப்புமுனையாகும்.

எச்.ஆர்.பி.சியை சேர்ந்த என் நண்பர் திரு. ராஜு அடுத்த நாள் செய்தித்தாள்களில் விசாரணையின் தனித்துவமான பாகுபாட்டை குறித்து படித்தது, அவருக்கும் பிற இளம் வழக்கறிஞர்களுக்கும் மிகவும் மகிழ்ச்சியை அளித்தது. பின்னர் கே.ஜி.கண்ணபிரான் அரசு தரப்பு வழக்குரைஞர்களிடம், “18 முஸ்லிம்களின் கொலைகளில் யார் குற்றவாளிகள்? இது 18 முஸ்லிம்களின் கொலைகளுக்குப் பதிலடி என்று நீங்கள் சொல்கிறீர்கள், எனவே கொலைகாரர்கள் யார் என்பதை நீதிமன்றத்தின் முன் வைக்க வேண்டும்” என்று கேட்டார். பின்னர் அவர் ஒப்புதல் வாக்குமூலங்களைப் பற்றிப் பேசினார், சதித்திட்டத்தின் குற்றச்சாட்டை நிரூபிக்க, சதிகாரர்களின் ஒப்புதல் வாக்குமூலம் சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்படாது என்று சட்டத்தில் கூறப்பட்டுள்ளதால் அவற்றை ஒதுக்கி வைப்பதாக கூறினார். எனவே 1940 மிர்சா அக்பர் முதல் கெஹர் சிங் வரை பல வழக்குகளை அவர் மேற்கோள் காட்டி, ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் நீதிமன்றம் இந்த வழக்கை தொடரக்கூடாது என்று கூறினார். இதற்கான தீர்வு 1951-இல் பைரி சிங் எதிர் அரசு வழக்கில் வழங்கப்பட்டுள்ளதை மேற்கோளாக நீதிமன்றத்தில் காட்டினார், இந்த தீர்ப்பு அனைத்து நீதிமன்றங்களுக்கும் இந்த வழிகாட்டலை வழங்கியது. 120A-ன் கீழ் குற்றச்சதி என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் சட்டவிரோத வழிமுறைகளின் மூலம் சட்டவிரோத செயலைச் செய்ய ஒப்புக்கொள்வது என்று அவர் கூறினார். சாட்சிய சட்டத்தின் 10-வது பிரிவின்படி அவரது சான்றுகள் ஏற்றுக்கொள்ளத்தக்கது. ஏனென்றால் சதித்திட்டத்தை நிரூபிக்கும் அடிப்படை, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் சட்டவிரோத வழிமுறைகள் மூலம் சட்டவிரோத செயல்களைச் செய்ய ஒப்புக் கொள்ள வேண்டும். மேலும் அதற்காக ஒன்று கூடி இருக்க வேண்டும் என்று கூறினார். அடுத்த 6 விசாரணைகளில் அவர் அற்புதமாக வாதிட்டார். அவரது வாதங்கள் ஒரு வகுப்பைப் போல இருந்து நீதிமன்றத்திற்கு வெவ்வேறு விசயங்களைக் கற்பித்தது. எட்டு முதல் பதினொரு சாட்சிகள் முக்கிய சதிகாரர்களாக ஆஜர்படுத்தப்பட்டனர்.  சமர்ப்பிப்புகளைப் படிக்க இளம் வழக்கறிஞர்களைக் கேட்டுக் கொண்டார். என் அறிவுக்கு எட்டி, இந்த 6 விசாரணைகள் முழு வழக்கையும் எங்களுக்கு ஆதரவாக மாற்றின.

இந்த வழக்கைப் பற்றி இதற்கு மேல் என்னால் பேச முடியாது. ஏனெனில் இது இன்னும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது, மேலும் 167 பேரில் 18 பேர் மட்டுமே உள்ளே உள்ளனர், மேலும் மாநிலமும் மேல்முறையீடு செய்துள்ளது. அந்த வழக்கில் இளைய, மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்றமும் நிறைய கற்றுக்கொண்டன. அதன்பிறகு நான் ஓய்வு பெற்ற நீதிபதி உத்திராபதியை சந்தித்தேன். அவர் கே.ஜி.கண்ணபிரானை மிகவும் பாராட்டியதோடு, அவரிடமிருந்து அடிப்படை குற்றவியல் நீதித்துறை பற்றி நிறைய கற்றுக்கொண்டேன் என்றார்.

நல்லக்காமன் வழக்கு. 1982 பிப்ரவரி 1 அன்று நடந்தது, நல்லக்காமன் ஒரு முன்னாள் இராணுவ வீரர். ஒரு ஒய்வுப் பெற்ற கர்னலான அவர் தனது ஆசிரியர் மனைவியுடன் வாடிப்பட்டியில் வசித்து வந்தார். இது ஒரு குத்தகைப் பிரச்சினை. ஒரு போலீஸ்காரர் உரிமையாளராக இருந்தார். குத்தகைதாரர்களைக் காலி செய்வதற்காக அப்போதைய உதவி ஆய்வாளர் பிரேம்குமார் நல்லக்காமனின்  மனைவியை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து கடுமையாக விசாரித்தார். மனைவியை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதை கேள்விப்பட்டு காவல் நிலையம் சென்ற போது, தனது மனைவியிடம் தவறாக நடந்துகொண்டு அவதூறாக விசாரிக்கப்படுவதைக் கண்டார். எனவே  கோபமடைந்த அவர் ஒரு போலீஸ்காரரை அறைந்தார். இதனால், நல்லகாமன் மற்றும் அவரது மகனின் துணிகள் பறிக்கப்பட்டு, அவர்கள் கைவிலங்கிடப்பட்டு பேருந்து நிலையத்திலிருந்து காவல் நிலையம் வரை தெருவில் இழுத்து செல்லப்பட்டனர்.

காவல்துறையினர் அவர்களை  அடிப்பதை, அந்த அசிங்கமான காட்சியை வாடிப்பட்டி நகரம் முழுவதும் பார்த்திருக்கிறது. இதனால் கோபமடைந்த மக்கள் ஆர்.டி.ஓ விடம் ஒரு மனுவை தாக்கல் செய்தனர். அந்த நேரத்தில் பிரிவு 176(1A) குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் இணைக்கப்படவில்லை. எனவே, ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தியதுடன் வழக்குப் பதிவு செய்தார். நல்லகாமன், அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர் மீது ஒரு வழக்குப் பதியப்பட்டு விசாரணை நீதிமன்றத்தால் தண்டனையும் வழங்கப்பட்டது. இது அமர்வு நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் ஒரு நீண்டகால சட்டப் போருக்கு வழிவகுத்தது. இந்த வழக்கு மேல்முறையீட்டிற்கு வந்தபோது, என் நண்பர் ராஜு, வழக்கறிஞர் கண்ணபிரானை இதில் ஈடுபடுத்தலாம் என்றார். நாங்கள் ஐதராபாத் சென்றோம், ஆனால் அந்த நேரத்தில் அவருக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் இது சாத்தியமில்லை என்று கூறினார். ஆனால், நடந்த சம்பவங்கள் மற்றும் மனிதாபிமானமற்ற சித்திரவதைகளை நாங்கள் விவரித்த போது, ​​அவர் 2006ஆம் ஆண்டில் மதுரைக்கு வர ஒப்புக்கொண்டார். நாங்கள் அறையில் வழக்குப் பற்றி விவாதித்தோம், அனைத்து மூத்த வழக்கறிஞர்களும் வந்திருந்தனர். இது தண்டனைக்கு எதிரான மேல்முறையீடு மற்றும் எதிர் வழக்காகும்.

நேர்மை மற்றும் நாணயத்திற்கு பெயர் பெற்ற நீதிபதியான செல்வம் அப்போது சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் நீதிபதியாக இருந்தார். மூத்த வழக்கறிஞர் கே.ஜி.கண்ணபிரான் தனது சமர்ப்பிப்புகளை முன் வைத்தார். இது, நானும், நீதிபதி தர்குண்டேவும் மற்றவர்களும் மதுரையில் அவசரநிலைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது தாக்கப்பட்ட  நினைவுகளுக்கு அழைத்துச் சென்றது. அவசரநிலையின் போது ஆர்ப்பாட்டக்காரர்களைக் காவல்துறை அடித்து தாக்கிய புகைப்படங்களை நீதிமன்றத்திற்கு கொண்டு வந்து காக்கிகளின் மனித உரிமை மீறல்களை நிரூபித்தார். பின்னர் அவர் கையில் உள்ள வழக்குக்கு வந்து வழக்கில் என்ன நடந்தது என்பதை முன்வைத்தார். உதவி ஆய்வாளர் பிரேம்குமாருக்கு எதிரான தண்டனை உறுதி செய்யப்பட்டு, வழக்கு உச்சநீதிமன்றம் வரை சென்றது. அவர் நீதிமன்றத்தில் தனது வாதங்களை முன்வைத்த விதம் காரணமாக எங்களால் உச்சநீதிமன்றத்திலும் அதிக சிரமமின்றி போராட முடியும்.

அவர் நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைக்கும் பாங்கும், விசாரணைக்கு முன்னர் இளைஞர்களுடன் கலந்துரையாடுவதும் அவரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று. அவர் “எந்த நீதிபதிகளையும் பார்த்து பயப்பட வேண்டாம், நீதிபதிக்கு எல்லாம் தெரியாது. அவர்களுக்கு கல்வி கற்பிப்பது வழக்கறிஞரின் கடமையாகும், அதனால்தான் நீங்கள் வழக்கைப் பற்றி முன்தயாரிப்புகளை மேற்கொண்டு வழக்கை குறித்த ஆழ்ந்த அறிவை பெற வேண்டும். நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு முன்பு சட்டம், மனித நடத்தை மற்றும் பிற காரணிகளைப் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.” என்று எப்போதும் கூறுவார். இந்த வழக்குகள் அனைத்தும் ஒரு வழக்கறிஞர் எப்படி இருக்க வேண்டும் என்பதை அவரிடமிருந்து நாம் கற்றுக்கொண்ட பாடங்கள்.

மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டது. ஆனால் கோவை குண்டுவெடிப்பில் தோழர்  கே.ஜி.கேவின் வாதங்களால் முழு வழக்கும் திசைத் திரும்பியது. எனவே, இந்த வழக்குகள் மூலம் நாங்கள், ஜூனியர்ஸ், சீனியர்ஸ் மற்றும் ஜூரிஸ்டுகள், நீதிபதிகள் என அனைவரும் அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டோம். அவர் ஒரு மனித உரிமைகள் மற்றும் குற்றவியல் வழக்கறிஞர் மட்டுமல்ல, அவர் ஒரு மனிதநேயவாதி. எனது நண்பர்கள் திரு. பாவேந்தன் மற்றும் திரு. கலையரசு அவரைப் பற்றி பேசுவார்கள்.  என்னுடன் ஏராளமான இளம் வழக்கறிஞர்கள் இருப்பதைக் கண்ட அவர், வாழ்நாள் முழுவதும் முன்மாதிரியாக நான் எடுத்துக் கொள்ள வேண்டிய ஆணையை எனக்குக் கொடுத்தார். அவர், “திரு.மோகன், உங்களுடன் பல ஜூனியர்ஸ் இருப்பதை நான் இங்கே காண்கிறேன். ஆகவே, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு போராடுவதற்காக உங்கள் வாழ்க்கையில் 100 மனித உரிமை வழக்கறிஞர்களை ஏன் உருவாக்கக்கூடாது” என்று கூறினார்.

அதனால்தான், என் வாழ்க்கையில் நான் குறிப்பாக ஒடுக்கப்பட்ட பிரிவுகளிலிருந்து இளைஞர்களை சேர்த்துக்கொண்டு எனக்குத் தெரிந்ததை அவர்களுக்குக் கற்பித்தேன். நான் அவர்களை வழக்கு விசாரணைகளுக்கு அழைத்துச் செல்வேன். நான் வகுப்புகள் எடுக்கும்போது கூட அவர்களை வகுப்புகளுக்கு அழைத்துச் செல்வேன். அந்த வகையில் அவர் எனக்கு நிறைய செய்துள்ளார்.

அவர் கோயம்புத்தூர் வெடிகுண்டு வழக்குக்கு வந்தபோது, ​​பாலக்காடு பிளாச்சிமடாவில் கோகோ கோலா எதிர்ப்பு கிளர்ச்சி நடப்பதாகக் கேள்விப்பட்டார். அபுபக்கர் அவர் கோரியபடி எங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்த அங்குச் செல்ல எங்களுக்கு ஒரு வாகனத்தை ஏற்பாடு செய்தார். இது ஒரு வகையான சர்வதேச இயக்கமாகும், கார்ப்பரேட்களால் மக்கள் சுரண்டப்படுவதற்கு எதிரான அவரது கோபத்தையும், பொது மக்கள் மீதான அவரது அனுதாபத்தையும் நான் கண்டேன். கிளர்ச்சியில் பொறுமையுடன் கலந்து கொண்ட அவர் அதில் பேசவும் செய்தார். அவருடைய பெயரே நமக்கு ஒரு அடையாள சின்னமாகவும், உத்வேகமாகவும் இருக்கிறது. அதனால்தான் திரு. கே.ஜி.கண்ணபிரானைப் பற்றி பேசுவது எனக்கு கிடைத்த ஒரு கெளரவமாக நான் கருதுகிறேன்.

இப்போது நான் பல எஸ்.சி/எஸ்.டி வழக்குகளில் சிறப்பு அரசு வழக்கறிஞராக ஆக நியமிக்கப்பட்டுள்ளேன். இதற்கு அவர்தான் முன்மாதிரி. அவர் குற்றம்சாட்டப்பட்டு சிறைக்குப் பின்னால் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் ஒரு சிறப்பு அரசு வழக்கறிஞராகப் போராடினார். மேலும் என்கவுன்டர் வழக்குகளில் ஒரு நடைமுறையை அமைத்ததில் அவரது பங்கு மிக முக்கியமானது.  இப்போதெல்லாம் ஒரு என்கவுன்டர் நடக்கும் போது காவல்துறையினர் மீது வழக்கை பதிவு செய்ய வேண்டும் என்று சொல்வது எங்களுக்கு மிகவும் எளிதானது. ஆனால் இத்தகைய வழக்குகளில் அவர் ஒரு சாம்பியன்.  ஆந்திராவில் போலி என்கவுண்டர்களுக்கு எதிராக அவர் போராடியபோது அவர் பல வழக்குகளைப் பதிவு செய்ததன் காரணமாக பிறகு தேசிய மனித உரிமைகள் ஆணையம் அதற்கான வழிகாட்டுதல்களைத் தாக்கல் செய்தது. இந்த அம்சங்களில் அவர் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளில், நாங்கள் நிறைய கற்றுக்கொண்டோம் என்பதை நான் இங்கு சமர்ப்பிக்கிறேன். அவர் நமக்குப் புரியவைக்க விரும்பிய விசயம் எளிமையான முறையில் செய்யப்பட்டது. நானும் வழக்கறிஞர் திரு. பாலமுருகனும் குறைந்தது பதினொரு கொலை வழக்குகளை நடத்தியுள்ளோம். குற்றம்சாட்டப்பட்ட ஆறு அப்பாவி இளைஞர்களை  நாங்கள் விடுவித்தோம். அவருடன் பணியாற்றிய எங்கள் அனுபவத்திலிருந்து குற்றவியல் சதித்திட்டத்தின் சிக்கல்களை நாங்கள் புரிந்துகொண்டோம். எனவே, எங்களுக்கு மிகவும் இனிமையான நினைவுகள் நிறைய இருந்தன. இவற்றைப் பகிர்ந்து கொள்ள எனக்கு ஒரு வாய்ப்பை வழங்கிய கல்பனா கண்ணபிரானுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

மேற்கோள் காட்டப்பட்டுள்ள வழக்குகள்:

1. வி.பி. குணசேகரன் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம் எதிர் உள்துறை செயலாளரால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட தமிழக அரசு (1996) இன் Crl.R.C.No.868.

2. ஆர்.ஆர்.கோபால் @நக்கீரன் கோபால் எதிர் அரசு 5 மார்ச், 2003 அன்று CRL.O.P.NO.4254 OF 2003 மற்றும் CRL.O.P.NO.4255 OF 2003

3. அப்துல் நாசர் மதானி எதிர் தமிழ்நாடு மாநிலம் & Anr.AIR 2000 SC 2293;  (2000) 6 எஸ்.சி.சி 204: 2000 எஸ்.சி.சி (கிரி) 1048.

4.மிர்சா அக்பர் எதிர் பேரரசர் (1941) 43 BOMLR 20.

5. அஜய் அகர்வால் எதிர் யூனியன் ஆஃப் இந்தியா மற்றும் ஆர்ஸ் 1993 ஏ.ஐ.ஆர் 1637, 1993 எஸ்.சி.ஆர் (3) 543.

6. கெஹர் சிங் & ஆர்ஸ் எதிர் ஸ்டேட் (டெல்லி அட்மின்.) 1988 ஏ.ஐ.ஆர் 1883, 1988 எஸ்.சி.ஆர்.  (2) 24.

7. பைரி சிங் எதிர் ஸ்டேட் ஏ.ஐ.ஆர் 1953 அனைத்தும் 785

8. கே. பிரேம்குமார் எதிர் வருவாய் பிரிவு அலுவலர் சி.ஆர்.எல். 2000ஆம் ஆண்டின் O.P எண் 6693.

Thursday, October 21, 2021

ஸ்ரீ பெரும்புதூரில் வழிப்பறி செய்த வடநாட்டு இளைஞன் என்கவுண்டர் கொலை – உண்மை அறியும் குழு அறிக்கை!

அக் 19, 2021,

சென்னை

சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீ பெரும்புதூர் அருகில் உள்ள பென்னலூரில் வசிக்கும் சுங்கச் சாவடி ஊழியர் இந்திரா (வயது 55, – க/பெ: ரெங்கநாதன்) என்பவரது 5 சவரன் நகையைப் பறித்துச் சென்ற இரு இளைஞர்களில் முர்துஷா ஷேக் (30) என்பவர் கடந்த அக் 11 அன்று தமிழக காவல்துறையால் என்கவுண்டரில் கொல்லப்பட்ட செய்தி ஊடகங்களில் வெளிவந்தது. இது குறித்த உண்மைகளை அறிந்து அறிக்கை அளிக்கும் நோக்கில் கீழ்க்கண்டவாறு ஒரு உண்மை அறியும் குழு சென்ற வாரம் அமைக்கப்பட்டது.

குழுவில் பங்குபெற்றோர்

அ.மார்க்ஸ், தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு (NCHRO), சென்னை,

செந்தில் தோழர், இளந்தமிழகம், சென்னை,

நவ்ஃபல், (NCHRO), கோவை,

வழக்குரைஞர் ஃபக்ருதீன் (NCHRO), சென்னை,

அயூப், காஞ்சிபுரம் (NCHRO),

இர்ஷாத், (NCHRO) காஞ்சிபுரம்,

காஜா மொஹிதீன், காஞ்சிபுரம்,

ஃபெரோஜ் கான், கோவை,

கி.நடராசன் (Organisation for Protection of Democratic Rights -OPDR), வழக்குரைஞர், சென்னை,

யு.சர்புதீன், சுங்குவார் சத்திரம்.

இக்குழுவினர் இது தொடர்பாகச் சந்தித்தவர்கள்:

எங்கள் குழு அக்டோபர்14 மற்றும் 16 தேதிகளில் நகையைப் பறிகொடுத்த சுங்கச்சாவடி ஊழியர் இந்திரா, மற்றும் இருங்காட்டுக் கோட்டை கிராமத்தினர், நகையைப் பறித்த வட மாநிலத்தவர் தங்கி இருந்ததாகச் சொல்லப்படும் அம்பேத்கர் நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமத்தில் வசிப்போர், கொள்ளையர்கள் தங்கி இருந்ததாகச் சொல்லப்படும் வீட்டிற்கு முன்னதாக உள்ள அஞ்சல் நிலைய ஊழியர்கள், அப்பகுதியில் பல்வேறு சிறு கடைகள் வைத்துள்ளோர், மற்றும் தொழில்கள் செய்வோர், முர்துஜா ஷேக்கால் கத்தியால் வெட்டப்பட்டவராகச் சொல்லப்படும் காவலர் மோகன்ராஜ் சிகிச்சைப் பெறுவதற்காகச் சேர்கப்பட்டிருந்த ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்கள், வட மாநிலத்தில் இருந்து வந்து இப்பகுதியில் வாழும் ஏராளமான தொழிலாளிகளில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட சிலர் ஆகியோருடன் கீழ்க்கண்ட காவல்துறை அதிகாரிகளையும் சந்தித்தோம்: காஞ்சிபுரம் டி.ஐ.ஜி சத்தியப் பிரியா, ஏ.டி.எஸ்.பி வினோத் சாந்தாராம், சம்பவத்திற்குப் பின் இப்பகுதியில் உள்ள வட மாநிலத்தவர் குறித்த கணக்கெடுப்புகளை மேற்பார்வை செய்யும் காவல் ஆய்வாளர் ந.முத்துச் சாமி எனப் பலரையும் சந்தித்தோம். சம்பவம் நடந்ததாகச் சொல்லப்படும் ஏரி மற்றும் காட்டுப் பகுதிகளையும் நேரில் சென்று பார்வையிட்டோம்.

நடந்தது என்ன என பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும் ஊர் மக்களும் சொல்வது:

ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடியில் பணி செய்யும் இந்திரா சென்ற அக்டோபர் 10 அன்று காலை சுமார் 8 மணி அளவில் சென்னை செல்லும் பொருட்டு சுங்கச் சாவடி அருகில் உள்ள EB காலனி பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தபோது இரு வடமாநிலத்தவர் இந்திராவிடம் சென்று ஏதோ வழி கேட்பவர்கள் போலத் தங்கள் மொழியில் பேசி, அவர் அணிந்திருந்த 5 சவரன் மதிப்புள்ள தங்கச் சங்கிலியைத் அறுத்துக் கொண்டு ஓடினர். இந்திரா வாய்விட்டு அலறியதைக் கேட்ட அங்கிருந்த ஒரு சிலர் அவர்களை விரட்டிப் பிடிக்க முனைந்தபோது, அவ் இருவரும் சென்னை செல்லும் திசையில் ஓடி வெங்கடேஸ்வரா கல்லூரி பக்கமாகத் திரும்பி அங்கிருந்த காட்டுப் பகுதியுள் நுழைந்து மறைந்துள்ளனர். இதற்கிடையில் இந்திரா செல்போன் மூலம் தன் மகன் மதியிடம் நடந்ததைக் கூற அவரும் அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களும் கொள்ளையர்கள் சென்ற திசையில் ஓடி, இருங்காட்டுக் கோட்டை ஏரிப்பக்கம் அமைந்துள்ள அடர்ந்த காடுகள் வழியே சிறிது நேரம் அலைந்து திரிந்து ஒன்றும் துப்புத் துலங்காமல் திரும்பியுள்ளனர் .

இதற்குள் செய்தி அறிந்து அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த இந்திராவின் இன்னொரு மகன் சத்தியா நடந்ததை அறிந்து, தனது நண்பர் கலைச்செல்வன் என்பவருடன் தனது வாகனத்தில் கிங்ஸ் கல்லூரியின் பின்புறமாகச் சென்று இருங்காட்டுக் கோட்டை ஏரியை அடைந்தபோது அங்கே இரு இளைஞர்கள் உடைமாற்றிக் கொண்டிருப்பதைக் கண்டு அவர்களை நோக்கி ஓடியுள்ளனர். இதைக் கண்ட அந்த இருவரில் ஒருவர் தன்னிடம் இருந்த கைத்துப்பாக்கியால் சுட்டுவிடுவதாக அவர்களை மிரட்டியுள்ளார். உடனே இவர்கள் இருவரும் தரையில் படுத்துவிட்டதாகவும், அதைக் கண்ட அவர்கள் இருவரும் அங்கிருந்து ஓடியுள்ளனர் எனவும் அறிகிறோம்.

அவர்கள் ஓடியபின் அவர்கள் நின்றிருந்த இடத்திற்குச் சென்ற சத்தியாவும், கலைச்செல்வனும், ஓடியவர்கள் நின்றிருந்த இடத்தில் கைத் துப்பாக்கி ஒன்றின் ஒரு பகுதியும் சில தோட்டாக்களும் சிதறிக் கிடந்ததைக் கண்டு அவற்றை எடுத்து வந்து காவல்துறையினரிடம் தந்துள்ளனர். ஓடிச் சென்றவர்களிடம் இருந்த கைத் துப்பாக்கியின் எஞ்சிய பகுதியால் அவர்களுக்கு இனிப் பயனில்லை எனும் நிலை ஏற்பட்டது இதன் மூலம் விளங்குகிறது.

வழிப்பறி செய்தவர்கள் பிடிக்கப்பட்டது, அதில் ஒருவர் என்கவுண்டரில் கொல்லப்பட்டது ஆகியன குறித்துக் காவல்துறையினர் சொல்வது:

சம்பவம் நடந்த ஒன்றரை மணி நேரத்திற்குள் ஸ்ரீபெரும்புதூர் காவல்நிலைய ஆய்வாளர், துணைக் கண்காணிப்பாளர் மற்றும் அருகில் உள்ள கல்வி நிறுவனம் ஒன்றில் பஞ்சாயத்துத் தேர்தல் வாக்குப் பெட்டிகளைக் காத்துநின்ற காவல்துறையினர் மற்றும் ஊர்மக்கள் எனப் பெரிய அளவில் ஏரிக்கரையில் திரண்டுள்ளனர். அடர்ந்த காடு என்பதால் காஞ்சிபுரம் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் மூன்று ட்ரோன்களைக் கொண்டுவந்து வழிப்பறி செய்த இருவரையும் தேடியுள்ளார். அப்படியும் ஒளிந்திருந்த குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க இயலவில்லை. இந்நிலையில் இருங்காட்டுக் கோட்டைப் பகுதியில் காவல்துறையினர் கொண்டுவந்து குவிக்கப்பட்டனர்.

தொடர்ந்து அன்று அந்தக் காட்டுப் பகுதியில் என்ன நடந்தது என்பது குறித்தும் முர்துஜா ஷேக்கை என்கவுண்டர் செய்து சுட்டுக் கொன்றது குறித்தும்

ஸ்ரீபெரும்புதூர் காவல் ஆய்வாளர், எஸ். கிருஷ்ணகுமார் தனது முதல் தகவல் அறிக்கையில் ((FIR No 1255, 11-10-2021, Sriperumbuddur) கூறுவது:

”செயின் வழிப்பறிச் சம்பவம் குறித்து சி1 திருப்பெரும்புதூர் காவல் நிலைய குற்ற எண் 1254/2021 பிரிவு 397 IPC யின்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு குற்றவாளிகளைக் கைது செய்ய தேடுதல் வேட்டை நடந்தது. அக்டோபர் 11 காலை சுமார் ஏழு மணி அளவில் காரந்தாங்கல் அடர்ந்த காட்டுப்பகுதியில் தேடுதல் வேட்டை நடந்தபோது சந்தேகத்துக்குரிய நபர் (ஒருவர் ஒளிந்திருந்ததைக் கண்டுபிடித்து) அவர் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையம் கொண்டுவரப்பட்டார்.

விசாரணையில் அந்த நபர் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த நெயிம் அக்தர் எனத் தெரியவந்தது. (அவரை விசாரித்தபோது) தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட தனது கூட்டாளியான மோர்துஜா ஷேக் என்பவர் மேவளூர்குப்பம் கிருஷ்ணா நதிநீர்க் கால்வாய் பக்கமாகப் படூர் கிராமத்திற்குச் செல்லும் சாலையின் அருகாமையில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் மறைந்திருப்பதாக் கூறினார். இந்தத் தகவலின் அடிப்படையில் நான் special team உதவி ஆய்வாளர் தர்மலிங்கம், தலைமைக் காவலர் மோகன் ராஜ் ஆகியோர் குற்றவாளியைப் பிடிக்க மதியம் சுமார் 12 மணிக்கு படூர் காட்டுப் பகுதியைச் சென்றடைந்தோம். அங்கு ரோந்து மேற்கொண்டபோது மதியம் சுமார் 1 மணி அளவில் அடர்ந்த புதரில் இருந்து ஒரு நபர் ஓடி வந்து முன்னால் நடந்து சென்ற தலைமைக் காவலர் மோகன்ராஜின் கழுத்துப் பகுதியில் கையில் இருந்த அரிவாளால் தாக்க முற்பட்டார். அவர் அந்த வெட்டுப்படாமல் கையால் தடுத்தபோது இடது கை புஜத்தில் பலமான வெட்டுப்பட்டது. மோகன்ராஜ் நிலைகுலைந்து தடுமாறி வீழ்ந்தபோது, சந்தேகப்படும் நபர் தன் துப்பாக்கியை எடுத்துச் சுட முயன்றபோது நான் அவரை தற்காப்பிற்காக இரண்டு முறை சுட்டேன்.” இது கிருஷ்ணகுமாரின் வாக்குமூலம். ஆம்புலன்சில் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு முர்துஜா ஷேக்கைக் கொண்டு சென்றபோது அவர் இறந்துவிட்டார் என ஆய்வாளர் கிருஷ்ணகுமார் தன் வாக்குமூலத்தை முடிக்கிறார்.

மொத்தத்தில் இது ஒரு வழக்கமான காவல்துறை என்கவுண்டர் படுகொலைதான் என்பது தெரிகிறது. அவரிடம் இருந்த துப்பாக்கியின் முன்பகுதி காணாமற் போனபின் அதைப் பயன்படுத்த முடியாது என்பது இங்கே கவனிக்கத்தக்கது. தவிரவும் அந்தத் துப்பாக்கியைக் காவல்துறையினர் பத்திரிகையாளர்களிடம் காட்டியபோது, அது முழுமையாக இல்லை என்பதையும் ”பீபிள்ச் வாட்ச்” அமைப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கை சுட்டிக் காட்டுவது குறிப்பிசத் தக்கது. எனவே அந்த பயனற்ற பாதித் துப்பாக்கியைக் காட்டி சுட்டுக் கொல்லப்பட்ட நபர் மிரட்டினார், அதனால் சுட்டோம் என்பது ஏற்க இயலாத ஒன்று.

சுங்கச் சாவடி ஊழியர் இந்திராவின் சங்கிலியை அறுத்த இருவரில் மற்றொருவர் பெயர் மத்புல் ஷேக் என்றும், அவர் என்கவுண்டரில் கொல்லப்பட்ட முர்துஜா ஷேக்கின் சகோதரன் எனவும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. மத்புல்ஷேக் இப்போது தீவிரமாகத் தேடப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

என்கவுண்டரில் கொல்லப்பட்ட முர்துஜா ஷேக்கின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, ஜார்கண்டில் உள்ள அவரது பெற்றோரைத் தொடர்பு கொண்டபோது அவரை இங்கேயே அடக்கம் செய்யுமாறு அவர்கள் கூறிவிட்டதாகவும். அதன்படி அவர் இஸ்லாமிய முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டுவிட்டதாகவும் காஞ்ஜிபுரம் டி.ஐ.ஜி. சத்தியப் பிரியா நாங்கள் அவரைச் சந்தித்தபோது கூறினார்.

இது தொடர்பாக எங்கள் குழு சந்தித்த காவல்துறையினர்:

நகையைப் பறி கொடுத்த இந்திராவைச் சந்தித்தபோது அவர் சென்ற அக்டோபர் 10 காலை சுமார் 8 மணி அளவில் தான் சென்னை செல்ல பேருந்துக்காக நின்றபோது புரியாத மொழியில் பேசிய இரு வட மாநிலத்தவர் தன்னிடம் ஏதோ கேட்பது போல வந்துத் செயினை அறுத்துக் கொண்டு ஓடியதையும், அவர் சத்தம் போட்டுக் கத்தியதையும், பின் அவர்கள் கொஞ்ச தூரம் ஓடி காட்டுப் பகுதியை நோக்கி சரிவில் இறங்கி ஓடி மறைந்ததையும் சொன்னார். பின் அவரது மகன்கள் வந்து சென்று காட்டுப் பகுதிக்குள் தேடியதையும் சொன்னார். செயினைப் பறிக்கும்போதோ, இல்லை தான் தப்பி ஓடியபோது துரத்தியவர்களை மிரட்டுவதற்காகவோ கொள்ளையர்கள் துப்பாக்கியைப் பயன்படுத்தினார்களா என நாங்கள் கேட்டபோது தன்னிடம் நகையைப் பறித்தபோது அப்படித் துப்பாக்கியைக் காட்டி எதையும் செய்யவில்லை என இந்திரா உறுதிபடக் கூறினார். செயின் அறுப்பு சம்பவம் நடந்த இடம் மற்றும் குற்றவாளிகள் தப்பிச் சென்ற வழி முதலியவற்றையும் பார்த்தோம்.

அடுத்து நாங்கள் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையம் சென்று அங்கிருந்த காவலர்களிடம் முதல் தகவல் அறிக்கை விவரங்களைக் கேட்டோம். இந்த வழக்கு தொடர்பாக இரண்டு முதல் தகவல் அறிக்கைகள் போடப்பட்டுள்ளன. ஒன்று நகையைப் பறி கொடுத்த இந்திராவின் புகார். இந்த முதல் தகவல் அறிக்கை யாரும் தரவிரக்கம் செய்ய இயலாமல் இது முடக்கப்பட்டுள்ளது. மற்றது இந்த அறிக்கையில் நாங்கள் முன் குறிப்பிட்டுள்ள ஆய்வாளர் கிருஷ்ணகுமார் தான் முர்துஜா ஷேக்கை சுட்டுக் கொல்ல நேர்ந்தது குறித்த முதல் தகவல் அறிக்கை. இதைத் தரவிரக்கம் செய்ய முடிந்தது.

உயர் அதிகாரிகள் சற்று நேரத்தில் வருவதாகச் சொன்னதால் சிறிது நேரம் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்திலேயே காத்திருந்துவிட்டுப் பின் அங்கிருந்து புறப்பட்டு காஞ்சிபுரம் மாவட்டக் காவல் நிலையத்திற்குச் சென்று மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் (SP) விடுப்பில் இருந்ததால், கூடுதல் கண்காணிப்பாளர் (ADSP) திரு வினோத் சாந்தாராமைப் பார்த்தோம். என்கவுண்டரில் கொல்லப்பட்ட மத்புல் ஷேக்கைக் கைது செய்து விசாரித்திருக்கலாம். நீதிமன்றத்தில் நிறுத்தி உரிய தண்டனைகள் வாங்கித் தந்திருக்கலாம். என்கவுண்டர் செய்திருப்பதற்கான அவசியம் இல்லை, அந்த நபர் நகையைப் பறித்தபோது கூட இந்திராவையோ, துரத்தியவர்களையோ துப்பாக்கியைக் காட்டி மிரட்டவுமில்லை. அவரை இப்படிச் சுட்டுக் கொன்றிருக்க வேண்டிய அவசியமில்லை என்பதைச் சொன்னோம். மத்புல் ஷேக்கிடம் துப்பாக்கி இருந்தது உண்மை எனவும், தேவையானால் சுட்டுக் கொல்ல வாய்ப்பிருந்ததையும் மறுக்க முடியாது எனவும் அவர் பதிலுரைத்தார். நாங்கள் அவரிடம் பேசிக்கொண்டிருந்த அன்று அப்படி ஒரு நபர் காஞ்சியில் துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பியதையும் குறிப்பிட்டார். ”எனினும் உங்கள் ஐயங்களை முன்வையுங்கள். நாங்கள் அதைக் கணக்கில் எடுத்துக் கொள்கிறோம்” என்றார்.

அடுத்து நாங்கள் ஐ.ஐ.ஜி. திரு சத்தியப் பிரியா அவர்களைச் சந்தித்தோம். அவர் சம்பவம் நடந்த இடங்களுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்தவர். அவரும் முர்துஜா ஷேக்கை என்கவுண்டர் செய்து கொன்றது தவிர்க்க இயலாத ஒன்று என்பதே தன் கருத்து எனக் குறிப்பிட்டார். முர்துஜாவிடம் கடைசிவரை மூன்று குண்டுகள் இருந்தன எனவும், அதை அவர் கைது செய்யச் சென்ற காவலர்கள் மீது பிரயோகிக்கக் கூடிய எல்லா வாய்ப்புகளும் இருந்ததை மறந்துவிடக் கூடாது எனவும் குறிப்பிட்டார். முர்துஜாவை என்கவுண்டர் செய்தது குறித்து I am convinced என்றார். முர்துஜாவால் கத்தியால் வெட்டப்பட்ட காவலர் மோகன்ராஜுக்குக் கடுமையான காயம் பட்டுள்ளதாகவும், அவருக்கு இன்னும் தீவிரமான சிகிச்சை அளிக்க வேண்டி உள்ளது எனவும் கூறினார்.

அடுத்து முர்துஜா ஷேக்கைப் பிடிக்கச் சென்றபோது அந்த நபர் தன் கையிலிருந்த கத்தியால் வெட்டியதாகக் கூறப்படும் அந்தத் தலைமைக் காவலர் மோகன் ராஜ் சிகிச்சை பெறுவதாகச் சொல்லப்பட்ட ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்குச் சென்றோம். அவர் படுகாயமுற்று மருத்துவமனையில் இருப்பதாகக் காவல்துறையால் சொல்லப்பட்டாலும், நாங்கள் அவர் தங்கிச் சிகிச்சை பெறுவதாகச் சொல்லப்பட்ட மருத்துவமனை வார்டுக்குச் சென்றபோது அவர் அங்கில்லை. பக்கத்தில் இருந்தவர்கள் அவர் அன்று மதியம் வீட்டுக்குக் குளிக்கப் போனார், இன்னும் வரவில்லை எனக் கூறினார்கள். தினசரி அவர் வீட்டுக்குச் சென்று தன் தினசரிக் கடமைகளை முடித்து வருவது தெரிந்தது. பின் நாங்கள் அந்த வார்டுக்குப் பொறுப்பாக உள்ள செவிலியரைச் சென்று விசாரித்தோம். சிகிச்சை முடிந்து இன்று மோகன்ராஜ் ”டிஸ்சார்ஜ்” செய்யப்பட்டுவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.

மொத்தத்தில் தலைமைக் காவலர் மோகன் ராஜுக்கு அப்படி ஒன்றும் பெரிய வெட்டுக் காயம் ஏதும் இல்லை என்பது விளங்கியது. இப்படியான என்கவுண்டர் கொலைகளைச் செய்யும்போது யாராவது ஒரு காவலருக்குப் பெரும் காயம் ஏற்படும் வகையில் தாக்கிய நிலையில் தற்காப்புக்காகத்தான் தாங்கள் என்கவுண்டர் செய்தோம் எனச் சொல்வது காவல்துறையில் வழக்கமாக உள்ளது. ஆனால் அவை பெரும்பாலும் உண்மை இல்லை என்பதைப் பல முறை நாங்கள் நேரில் கண்டுள்ளோம். எங்களின் அறிக்கைகளிலும் பதிவு செய்துள்ளோம்.

காரந்தாங்கல் கிராமத்தவர்கள் கருத்து

பெங்களூரு நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளதையும், அவற்றில் பெரிய அளவில் வட மாநிலங்களிலிருந்து தொழிலாளிகள் வந்து தங்கி வேலை செய்வதையும் அறிவோம். இந்தச் சம்பவம் நடந்த இறுக்கமான புதர்கள் மற்றும் ஏரிகள் அமைந்துள்ள இப்பகுதியில் ஹ்யூண்டாய் தொழிற்சாலை அமைந்துள்ளது. அங்கு பணி செய்யும் வடமாநிலத்தவர்கள் பெரிய அளவில் நெடுஞ்சாலை ஓரமுள்ள காரந்தாங்கல் கிராமத்தில்தான் வசிக்கின்றனர். சிலர் குடும்பமாகவும் இருக்கின்றனர்.

அக்டோபர் 16 அன்று எங்கள் குழு இரண்டாம் முறையாக இந்தக் கள ஆய்வு தொடர்பாக அங்கு சென்றபோது இந்தக் கிராமத்தில் இருந்து அங்குள்ள பலரையும் சந்தித்தோம். செயின் பறிப்பைச் செய்தவர்கள் தங்கி இருந்ததாகச் சொல்லப்படிம் வீடு, செயின் பறிக்கப்பட்ட இடம், கொள்ளையர்கள் துரத்தப்பட்டபோது ஓடி அவர்கள் ஒதுங்கிய காட்டுப்பகுதி, ஏரி முதலான பகுதிகளையும் பார்வையிட்டோம்.

இப்பகுதி மக்களைச் சந்தித்து நாங்கள் இது குறித்து விசாரித்தபோது முதலில் எதையும் சொல்வதற்குத் தயக்கம் காட்டினர். எங்கள் குழுவில் இருந்த வழக்குரைஞர் நடராசன், சர்புதீன் முதலானோர் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் சற்று இலகுவாக மக்களிடம் பேசவும், கருத்துக்களைச் சேகரிக்கவும் முடிந்தது.

நாங்கள் சென்றபோது காவல்துறையினர் அங்கு தங்கியுள்ள வெளிமாநிலத்தவர் குறித்த விவரங்களைச் சேகரித்துக் கொண்டிருந்தனர். இரு குழுக்களாகப் பிரிந்து அவர்கள் ஒவ்வொரு வீட்டாரையும் வரச்சொல்லி அவர்களின் ஆதார் அட்டை முதலானவற்றைப் பதிவு செய்து கொண்டுள்ளதைப் பார்த்தோம். காவல்துறை ஆய்வாளர் ந.முத்துச்சாமி அக்குழுவிற்குப் பொறுப்பேற்றிருந்தார். அவரைச் சந்தித்து என்கவுண்டர் தொடர்பான விவரங்களைக் கேட்டபோது, அந்த வழக்குத் தொடர்பாகத் தனக்கு எதுவும் தெரியாது எனவும், இந்த விவரங்களைச் சேகரிப்பது மட்டுமே தன் பணி எனவும் குறிப்பிட்டார். தாங்கள் விசாரித்துப் பதிவு செய்வோரிடம் ஆதார் அட்டை இல்லாமலிருந்தால் வேறு முக்கியமான ஆதாரங்களைப் பதிவு செய்துகொள்வதாகவும் கூறினார். அவரது ஜீப் நின்றிருந்த இடத்திற்கு அருகாமையில்தான் கொள்ளையர்கள் இருவர் தங்கி இருந்ததாகக் சொல்லப்படும் தெருவும் இருந்தது. அது குறித்தும் அவர் ஒன்றும் தெரிந்திருக்கவில்லை.

நாங்கள் சந்தித்துப் பேசிய அத்தனை பேர்களும் அங்கு தங்கியுள்ள வடமாநிலத்தவர்களால் எந்தப் பிரச்சினையும் இல்லை எனக் குறிப்பிட்டதை இங்கே பதிவு செய்வது அவசியம். பெரும்பாலும் ஜார்கண்ட், மே வங்கம், ஒடிஷா, பிஹார் முதலான மாநிலத்தவர்களான இவர்களுக்கு எந்த அடிப்படையில் வீடுகளை வாடகைக்குத் தருகிறீர்கள் எனக் கேட்டபோது ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே வீடுகளை வாடகைக்குத் தருகிறோம் என்றனர். அதில் ஒருவர் தன் வீட்டில் வாடகைக்கு இருக்கும் வடமாநிலத்தவரின் ஆதார் கார்டின் ஒரிஜினலையே தான் வாங்கி வைத்துள்ளதாகச் சிரித்துக் கொண்டே சொன்னார்.

இப்படி இங்கு தங்கியுள்ள வடமாநிலத்தவரில் பலர் முஸ்லிம்கள் என்பதால் இங்குள்ள முஸ்லிம் ஒருவர் தன் வீட்டு மாடியில் அவர்கள் தொழ இடமளிப்பதாகக் கேள்விப்பட்டு அவரைச் சந்திக்க முயன்றோம். இப்போது அங்கு அப்படித் தொழுகை நடப்பதில்லை எனத் தெரிந்தது. ஊருக்குள் இருந்த ஒரு கடையின் உரிமையாளரைச் சந்தித்துப் பேசியபோது அவரும் அப்பகுதியில் வாழும் இந்த வட மாநில மக்கள் குறித்த மிகவும் நல்ல அபிப்பிராயத்தையே முன்வைத்தார். அவர்களால் இதுவரை அங்கு எந்தப் பிரச்சினையும் ஏற்பட்டதில்லை என்றார்.

சாலைக்கு அருகில் உள்ள போஸ்ட் ஆபீசில் இருந்த பணியாளரைச் சந்தித்தபோது அவர் தபால்களை எடுத்துச் செல்லத் தயாராக இருந்தபோதும் நின்று அங்கிருக்கும் வட மாநிலத்தவர்கள் குறித்து மிகவும் நல்ல கருத்தையே கூறினார். போஸ்ட் ஆபீசை ஒட்டியுள்ள தெருவில்தான் கொள்ளையர்கள் இருந்ததாகக் கூறப்படுவதுபற்றிக் கேட்டபோது அதுவும் அவருக்கும் தெரியவில்லை.

கொள்ளையர்கள் வசித்ததாகச் சொல்லப்படும் அந்தத் தெருவில் ஒரு முன்னாள் கவுன்சிலரைச் சந்தித்தோம். வி.சி.க வைச் சேர்ந்த அவரும் அருகில் உள்ள ஒரு வீட்டைக் காட்டி அதற்குள்தான் இருந்தார்கள் எனச் சொல்லப்படுவதாகவும், அங்கு யார் இருந்தார்கள், எத்தனை பேர்கள் இருந்தார்கள் என்றெல்லாம் தனக்கு மட்டுமல்ல, அங்கு யாருக்கும் தெரியாது எனவும் சொன்னார். அவர்கள் இருந்ததாகச் சொல்லப்படும் வீட்டுக்குச் சென்றபோது, அது ஒரு பாழடைந்த குடிசை. எங்களைப் பார்த்துவிட்டு அந்த வீட்டுக்குள் படுத்திருந்த இரு நாய்கள் வெளியே ஓடின. அங்குதான் அவர்கள் இருந்தனர் என்பது நம்ப இயலாததாகவே இருந்தது.

மொத்தத்தில் அப்பகுதி மக்களுக்கு தங்கள் மத்தியில் வசித்த இந்த வடமாநில மக்கள் குறித்து எந்தப் புகாரும் இல்லை என்பதை நாங்கள் புரிந்துகொள்ள முடிந்தது.

எங்கள் குழுவின் பார்வைகளும் கோரிக்கைகளும்

காரந்தாங்கல் கிராமத்தில் எங்கள் குழு விசாரித்தபோது அக்டோபர் 11 அன்று காலை10 மணிக்கு மேல் ஒரு வட மாநிலத்தவரைக் காவல்துறையினர் பிடித்துச் சென்றதாகக் கூறுகின்றனர். சிலர் இரண்டு பேர்கள் எனவும் கூறினர். அன்று காலை அப்பகுதி பரபரப்பாய் இருந்ததையும் அம் மக்கள் பலரும் குறிப்பிடுகின்றனர். அப்படிப் பிடிக்கப்பட்டவர் நயிம் அக்தர் எனும் ஜார்கண்ட் மாநிலத்தவர் எனவும் அவரது டெலிபோன் மூலம் தொடர்பு கொண்டுதான் முர்துஜா ஷேக்கின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்து அவர் என்கவுண்டர் செய்து கொல்லப்பட்டார் என்கிற கருத்து ஒன்றும் உள்ளது. அந்த நயிம் அக்தர் தற்போது ரிமாண்ட் செய்யப்பட்டுச் சிறையில் உள்ளார்.

முர்துஜா ஷேக்கும் இன்னொருவரும் வழிப்பறி செய்து நகையைப் பறித்துச் சென்றனர் என்பது குற்றச்சாட்டு. அவர்கள் கைது செய்யப்பட்டு. வழக்குத் தொடுத்து அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத்தருவது என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை. சுமார் 300 ஆயுதம் தாங்கிய படையுடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள நிலையில் காவல்துறையினர் அவர்களை எளிதில் உயிருடன் பிடித்திருக்க முடியும். இப்படி முர்துஜா ஷேக்கைக் காவல்துறை கொன்றுதான் பிடிக்க வேண்டும் என்பதற்கு அங்கு அவசியம் இருக்கவில்லை. காவல்துறை சொல்லும் கதையில் எந்த நியாயமும் நம்பகத் தன்மையும் இல்லை. நகைப் பறிப்புச் சம்பவம் நரந்த்து அக்டோபர் 10. அடுத்த நாள் (அக்டோபர் 11) காலையே அவர்கள் சுற்றி வளைக்கப்பட்டார்கள் என்றெல்லாம் செய்தி பரப்பப்பட்டபோதே ஏதோ நடக்கப்போகிறது என்கிற அச்சம் ஏற்பட்டது. அப்படியே நடக்கவும் செய்த்து.

முர்துஜா ஷேக்கிடம் இருந்த துப்பாக்கி முந்திய நாளில் காட்டுக்குள் தப்பி ஓடும்போது விழுந்து உடைந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து தகவல்கள் முதல் தகவல் அறிக்கையில் பதியப்பட்டுள்ளதா எனத் தெரியவில்லை. இந்த வழக்கு தொடர்பான இரு முதல் தகவல் அறிக்கைகளில் ஒன்றுதான் தரவிரக்கம் செய்யும் நிலையில் உள்ளது என்பது இங்கு நினைவுகூரத் தக்கது. இந்திராவிடமிருந்து செயின் அறுக்கப்பட்ட சம்பவம் குறித்த முதல் தகவல் அறிக்கையைத் தரவிறக்கம் செய்து பார்க்க இயலாதவாறு வைக்கப்பட்டுள்ளதன் காரணமும் விளங்கவில்லை.

மொத்தத்தில் இது ஒரு அப்பட்டமான போலி மோதல் படுகொலை. இது குறித்து வழக்கு விசாரணையை என்கவுண்டர் செய்த காவல்துறையினரிடமே கொடுத்தால் நீதி கிடைக்காது. சி.பி.சி.ஐ.டி. போன்ற வேறு புலனாய்வு முகமை ஒன்றிடம் இந்த விசாரணை ஒப்புவிக்கப்பட்டு உரிய முறையில் விசாரிக்கப்பட வேண்டும்.

போலி என்கவுண்டரில் கொல்லப்பட்ட முர்துஜா ஷேக்கின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

எந்தப் பிரச்சினையையும் சாதி, மதம், இனம் என்கிற ரீதியில் பார்க்கப்படும் இன்றைய சூழலில் இந்தப் பிரச்சினை அப்படியான ஒரு கோணத்தில் இதுவரை அணுகப்படாதது ஓரளவு ஆறுதலாக இருக்கிறது. இந்நிலை தொடர வேண்டும். எனினும் கடந்த சில ஆண்டுகளாக வட மாநிலத்தவர் என்றால் வெறுப்பாகப் பார்க்கும் ஒரு நிலை இங்கு உருவாக்கப் பட்டுள்ளள்ளது வருந்தத் தக்கது. உலகமே ஒரு கிராமமாகச் சுருங்கிவிட்டதாகச் சொல்லப்படும் இந்நாளில் எல்லோரும் பல மாநிலங்களிலும், நாடுகளிலும் சென்று படிப்பதும் பணியாற்றுவதும் இயல்பாக உள்ளது. இந்நிலையில் இப்படியாகக் கட்டமைக்கப்படும் அந்நிய வெறுப்பு மிகவும் வருந்தத் தக்க, கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. காவல்துறையினரும் அந்தக் கோணத்திலிருந்து வடமாநிலத்தவரை அணுகக் கூடாது. இதே சென்னையில் சில ஆண்டுகளுக்கு முன் இப்படிக் குற்றம்சாட்டப்பட்ட ஐந்து வடமாநிலத்தவரை நம் காவல்துறை சுட்டுக் கொன்றது நினைவிற்குரியது. அப்போதும் அது ஒரு என்கவுண்டர் படுகொலைதான் என்பது இவ்வாறு உண்மை அறிந்து இங்கு வெளிப்படுத்தப்பட்டதும் குறிப்பிடத் தக்கது. இந்நிலை மாற வேண்டும்.

தமிழகத்தில் புதிய ஆட்சி உருவாகியுள்ள இந்தச் சில மாதங்களில் எதிர்க்கட்சிகளாக உள்ள பா.ஜ.க மற்றும் அ.இ.அ.தி.மு.க ஆகியக் கூட்டணிக் கட்சிகள் இங்கு சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாகப் பிரச்சாரம் செய்வதும் இந்த என்கவுண்டர் படுகொலைக்குப் பின்னணியாக உள்ளது எனவும் கூறலாம். இந்த என்கவுண்டர் நடந்த அடுத்த இரண்டு நாட்களில் தூத்துக்குடியிலும் ஒரு என்கவுண்டர் கொலை நடந்துள்ளதையும் காண்கிறோம். இப்படி அரசியல் நோக்கங்கள் குடிமக்களின் உயிர் பறிப்பிற்குக் காரணமாவது வேதனைக்குரியது. கண்டிக்கத் தக்கது.

“திருப்பெரும்புதூர் என்கவுண்டர் எதிரொலி: வீடுவீடாக அதிரடி வேட்டை; சிக்கப்போகும் வடமாநிலத்தவர்கள்!” எனும் தலைப்புச் செய்தியுடன் இரண்டு நாட்கள் முன்னர் ஜனனி என்பவரால் எழுதப்பட்ட கட்டுரை ஒன்று (EMIS in India, Industry Reports, Oct 17, 2021 ) ஒன்று வெளிவந்துள்ளது. வடமாநிலத்தவர் வசிக்கும் வீடொன்றில் சோதனை நடைபெறும் படத்துடன் அது வெளியிடப்பட்டுள்ளது. அருகில் வடமாநில இளைஞர்கள் நிற்கின்றனர். இவை எல்லாம் இங்கு வந்து பணிசெய்யும் பிறமொழியினர் மீது வன்முறைகள் பெருகவே வழி வகுக்கும். சில ஆண்டுகள் முன்னர் தமிழகத்தில் இப்படி வடமாநிலத்தவர்கள் சந்தேகத்தின் பேரில் ஆங்காங்கு நம் மக்களால் தாக்கப்பட்டதை நாம் மறந்துவிடக் கூடாது.

கடந்த 4 ஆம் தேதி ஓரகடம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றின் ஊழியர் இருவர் தாக்கப்பட்டு, அதில் ஒருவர் மரணம் அடைந்ததும், இன்னொருவர் உடலில் துப்பாக்கிக் குண்டுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதும் இப்போது இந்த நகைப் பறிப்புடன் தொடர்புபடுத்தி ஒட்டு மொத்தமாக வடமாநிலத் தொழிலாளர் மீது வெறுப்பு பரப்பப்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது. குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுதல் அவசியம். ஆனால் இப்படி ஒட்டுமொத்தமாக ஒரு “அந்நியர்” எதிர்ப்புக்கு வழிவகுக்கும் வகையில் சொல்லாடல்கள் பரப்பப்படுவது வருந்தத் தக்கது மட்டுமல்ல, ஆபத்தானதும் கூட. அரசும் காவல்துறையும், ஊடகங்களும் இதில் கவனமாக இருத்தல் வேண்டும்.

தொடர்பு முகவரி

அ.மார்க்ஸ், 1/33, G2, செல்ல பெருமாள் தெரு, லட்சுமிபுரம், திருவான்மியூர், சென்னை (600041). தொடர்பு : 9444120582

Wednesday, October 06, 2021

பாரதியார் பல்கலைக்கூட முதல்வர் நியமனத்தில் ஊழல், முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தல்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (06.10.2021) விடுத்துள்ள அறிக்கை:-

பாரதியார் பல்கலைக்கூட முதல்வர் நியமனத்தில் நடந்துள்ள ஊழல், முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென மத்திய, மாநில அரசுகளை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.

பாரதியார் பல்கலைக்கூடத்திற்கு ஏ.ஐ.சி.டி.இ. விதிகளுக்கு மாறாக இசைத்துறை உதவிப் பேராசிரியர் போஸ் என்பவரை முதல்வராக நியமித்து கலைப் பண்பாட்டுத் துறை செயலர் நெடுஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.

பாரதியார் பல்கலைக்கூடம் ஏ.ஐ.சி.டி.இ. ஏற்பும், புதுவைப் பல்கலைக்கழக அங்கீகாரமும் பெற்ற அரசு கல்லூரியாகும். இக்கல்லூரிக்கு விதிகளுக்கு மாறாக முதல்வரை நியமித்ததால் ஏ.ஐ.சி.டி.இ. ஏற்பும், பல்கலைக்கழக அங்கீகாரமும் ரத்தாகும் ஆபத்துள்ளது. இதனால், மாணவர்களின் படிப்பு செல்லாததாகிவிடும்.

உதவிப் பேராசிரியர் போஸ் மகாத்மா காந்தி, மகாகவி பாரதியார் பாடல்களைப் பாட மறுத்ததற்காகவும், உயரதிகாரிகளுக்குக் கீழ்படியாமல் ஒழுங்கீனமாக நடந்ததற்காகவும் இரண்டு முறை பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர். அவருக்கு இரண்டு எச்சரிக்கை மெமோ வழங்கப்பட்டுள்ளது.

மேலும், தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி பெற்ற தகவலின்படி கொரோனா காலத்தில் அனைத்து பேராசிரியர்களும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்திய போது உதவிப் பேராசிரியர்கள் போஸ், அன்னபூர்ணா இருவர் மட்டுமே நடத்தவில்லை. இதுகுறித்து புகார் அளித்தும் இதுவரையில் நடவடிக்கை இல்லை.

பல்கலைக்கூட முதல்வர் நியமனத்தில் ஊழல், முறைகேடுகள் நடந்துள்ளது எனப் பரவலாக செய்தி அடிபடுகிறது. கலைப் பண்பாட்டுத் துறை செயலர் டில்லியில் பணியாற்றிய போது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்களில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பல்கலைக்கூட நுண்கலைத் துறை, நிகழ்கலைத் துறை இரண்டையும் பிரித்து தனித்தனி முதல்வர் நியமிக்கப்பட ஆட்சி மன்ற குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு மாறாக தகுதி இல்லாத, பணிமூப்பில் இளையவரான, பல்வேறு குற்றச்சாட்டிற்கு உள்ளான ஒருவரை முதல்வராக நியமித்தது சட்டத்திற்குப் புறம்பானது. மேலும், ஏ.ஐ.சி.டி.இ மற்றும் யு.ஜி.சி. விதிகளுக்கு முற்றிலும் ஏதிரானது.

பல்கலைக்கூடத்திற்கு சட்டவிரோதமாக நியமிக்கப்பட்ட முதல்வரை உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். பல்கலைக்கூட நுண்கலைத் துறை, நிகழ்கலைத் துறை இரண்டையும் பிரித்து தனித்தனி முதல்வர் நியமிக்கப்பட வேண்டும்.

இதுகுறித்து புதுச்சேரி அரசுக்கும், தலைமைச் செயலர் உள்ளிட்ட உயரதிகாரிகளுக்கும் பல்வேறு மனுக்கள் அனுப்பியும் சட்டவிரோதமாக முதல்வர் நியமனம் நடந்துள்ளது. அனைத்து ஆதாரங்களையும் திரட்டி மத்திய அரசுக்கும், சிபிஐ இயக்குநர் உள்ளிட்ட உயரதிகாரிகளுக்கும் புகார் மனு அனுப்பியுள்ளோம்.

எனவே, பாரதியார் பல்கலைக்கூட முதல்வர் நியமனத்தில் நடந்துள்ள ஊழல், முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறோம்.


Saturday, September 18, 2021

சுப்பிரமணியன் காவல் மரண வழக்கு: காவல் ஆய்வாளர் உட்பட இருவருக்குப் பிடியாணை

கடந்த 2015ஆம் ஆண்டு கடலூர் மாவட்டம் நெய்வேலி நகரியத்தில் வசித்து வந்த மும்தாஜ் என்பவர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். மர்ம நபர்கள் அவரது வீட்டில் இருந்த நகைகளையும் திருடிச் சென்றனர்.

இவ்வழக்கில் சந்தேகத்தின் பேரில் கடந்த 29.05.2015 அன்று நள்ளிரவில் பட்டாம்பாக்கம், பி.என்.பாளையத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரை நெய்வேலி நகரியப் போலீசார் பிடித்துச் சென்றனர்.

அவரை 6 நாட்கள் காவல்நிலையத்தில் வைத்து அடித்து துன்புறுத்தி உள்ளனர். இதனால், சுப்பிரமணியன் உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டு அவர் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 06.05.2015 அன்று சிகிச்சைப் பலனின்றி இறந்து போனார்.

இதுகுறித்து நெல்லிக்குப்பம் காவல்நிலையத்தில் முதலில் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் பொதுமக்கள் போராட்டத்தைத் தொடர்ந்து காவல் மரணம் என வழக்குப் பதியப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடலூர் நீதித்துறை நடுவர் விசாரணை மேற்கொண்டு அறிக்கை அளித்தார்.

பின்னர், இவ்வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது. இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட சிபிசிஐடி போலீசார் அப்போழுது காவல் ஆய்வாளராக இருந்த இராஜா, காவலர்கள் செந்தில்வேல், செளமியன் ஆகியோர் மீது நீதிமன்றத்தில் இ.த.ச. 218, 330, 343, 348, 304(ii) ஆகிய பிரிவுகளில் குற்றஞ்சாட்டி குற்ற அறிக்கைத் தாக்கல் செய்தனர். தற்போது இவ்வழக்கு சிதம்பரம் இரண்டாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இவ்வழக்கு கடந்த 16.09.2021 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றத்தில் செளமியன் மட்டும் ஆஜராகி உள்ளார். காவல் ஆய்வாளர் இராஜா, செந்தில்வேல் ஆஜராகவில்லை.

நீதிமன்றத்தில் ஆஜராகாத காவல் ஆய்வாளர் இராஜா, செந்தில்வேல் ஆகியோருக்குப் பிணையில் வெளிவர முடியாத பிடியாணைப் பிறப்பித்து நீதிபதி ப.உ.செம்மல் உத்தரவிட்டார். மேலும், சிபிசிஐடி போலீசார் இருவரையும் பிடித்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படியும் உத்தரவிட்டார்.

இவ்வழக்கை கடலூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வழக்கறிஞர் குழுவினர் நடத்தி வருகின்றனர். மேலும், இவ்வழக்கை அக்கட்சியின் மாநிலச் செயலர் தோழர் கே.பாலகிருஷ்ணன் நேரடியாகக் கவனித்து வருகிறார்.

இச்சம்பவம் நடந்த போது உண்மை அறியும் குழு அமைத்து விசாரித்து அரசுக்கு அறிக்கை அளித்தோம்.

Monday, August 23, 2021

தமிழகத்தைப் போல் புதுச்சேரியில் பள்ளிகள், கல்லூரிகளை செப்டம்பர் 1 அன்று திறக்க வேண்டும்!

 

தமிழகத்தைப் போல் புதுச்சேரியில் பள்ளிகள், கல்லூரிகளை செப்டம்பர் 1 அன்று திறக்க புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (22.08.2021) விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசு வரும் 01.09.2021 அன்று முதல் பள்ளிகளில் 9, 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகள் சுழற்சி முறையில், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்படும் என அறிவித்துள்ளது. அதேபோல், கல்லூரிகள், பாலிடெக்னிக்குகளில் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு வகுப்புகள் சுழற்சி முறையில் செயல்படும் எனவும் அறிவித்துள்ளது.

ஆனால், புதுச்சேரியில் பள்ளிகள், கல்லூரிகளைத் திறப்பதற்கான எந்தவித அறிகுறியும் தென்படவில்லை. ஏற்கனவே பள்ளிகள் திறக்கும் நாள் அறிவிக்கப்பட்டு பின்னர் அதுவும் தள்ளி வைக்கப்பட்டது.

சென்ற ஜீலை 15 முதல் அரசு ஊழியர்கள் 100 விழுக்காடு பணிக்குத் திரும்ப வேண்டுமென அரசு உத்தரவிட்டது. ஆனால், அரசுக்குக் கோரிக்கை விடுத்தும் ஆசிரியர்களைப் பணிக்குத் திரும்ப உத்தரவிடவில்லை. இதனால், மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்குதல், மாணவர் சேர்க்கைப் பணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட வகுப்புகளும் முறையாக அனைத்து ஆசிரியர்களும் நடத்தவில்லை. ஏழை எளிய மாணவர்கள் போதிய வசதி இல்லாததால் ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ள முடியவில்லை. ஆன்லைன் வகுப்புகள் நடத்தாத ஆசிரியர்கள் மீதும் அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், மாணவர்களின் கல்விப் பாதிக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில் புதுச்சேரி அரசு மாணவர்கள் நலனில் அக்கறை செலுத்தவில்லை. பள்ளிக் கல்வித்துறை, உயர் கல்வித்துறையின் செயல்பாடு மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

எனவே, தமிழகத்தைப் போல் புதுச்சேரியிலும் வரும் 01.09.2021 அன்று பள்ளிகள், கல்லூரிகளைத் திறக்க புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’சார்பில் வலியுறுத்துகிறோம்.