Monday, November 23, 2015

மழையால் வாழ்விழந்து நிற்கும் மக்கள்

கடந்த சில நாட்களாக கடலூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்த்து வந்தேன். மழைக்கு இதுவரையில் 47 பேர் உயிரிழந்துள்ளனர். மக்கள் வீடு, உடைமைகளை இழந்து தவிக்கின்றனர். பல இடங்களில் வீடு இருந்ததற்கான அடையாளமே இல்லாமல், மண் குவியலுக்குள் வாழ்ந்த குடும்பங்களின் வாழ்க்கைச் சுவடுகள் மூழ்கிப் போயிருந்த துயரத்தைக் காண முடிந்தது. நெய்வேலி அருகேயுள்ள பெரியகாட்டுப்பாளையம் கிராமத்தில் வெள்ளத்தில் அடித்துச் சென்ற அருந்ததியர் இனத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 10 பேர் பலியாகி உள்ளனர். நாங்கள் சென்ற போது லட்சுமி என்ற பெண்ணின் உடல் கிடைத்தது. ஓடைக் கரையோரம் வீடுகளில் குடியிருந்ததால் வெள்ளம் மிக எளிதாக இவர்களை அள்ளிச் சென்றுள்ளது. இடிந்த வீட்டின் முன்பு தாய் தன் பிள்ளைகளின் சான்றிதழ்களைக் காய வைத்த காட்சி மனதை வாட்டியது. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் முன்னறிவிப்பு இல்லாமல் தண்ணீரை வெளியேற்றியதாலும் கடும் பாதிப்பும், உயிர் சேதமும் ஏற்பட்டுள்ளது. விவசாய நிலங்கள் முழுவதும் நீரில் மூழ்கி சேதமடைந்து மண் மேடாக காட்சியளிக்கின்றன. அந்நிலங்களைத் திருத்தி மீண்டும் விவசாயம் செய்ய நீண்ட காலமாகும். சொந்த நாட்டிலேயே மக்கள் பள்ளிக்கூடங்களில் அகதிகளாக உள்ளனர். தேர்தல் நேரம் என்பதால் அரசியல் கட்சியினர், சில தொண்டு நிறுவனத்தினர் சற்று ஆறுதல் தரும்படி நிவாரண உதவிகளைச் செய்து வருகின்றனர். தமிழக அரசும் இயன்றளவு நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால், இவை அனைத்தும் அம்மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப உதவாது. நல்லதொரு வாழ்க்கை வாழ்ந்து வந்த முந்திரிக்காட்டு மக்கள் வரிசையாக நின்று, தட்டு ஏந்தி உணவு வாங்கிச் சென்று உண்ட காட்சி துயரத்தின் உச்சம். நாம் மழையை சபிக்க முடியாது. அது இயற்கையின் வரம். ஆனால், எதுபற்றியும் கவலைப்படாமல் ஆளுகின்ற, ஆண்ட அரசுகளை நினைத்தால் கடும் கோபம் வருகிறது. எந்த முன்னேற்பாடுகளும் செய்யாமலும், நீர் ஓட வேண்டிய வாய்க்கால், ஓடை, இயற்கைத் நீர்த்தேக்கங்களான குட்டை, குளம், ஏரி ஆகியற்றை இல்லாமல் செய்ததும் என அரசின் திட்டமிட்ட இயற்கை அழிப்பே இந்த பேரிடருக்குக் காரணம். இதை வைத்துக் கொண்டு அரசியல் கட்சித் தலைவர்கள் அரங்கேற்றும் அரசியல் ஆபாசத்தின் உச்சம் எனலாம். இந்நேரத்தில் பிரான்ஸ் நாட்டில் நடந்த தாக்குதல் குறித்த அந்நாட்டு கட்சிகள், ஊடகங்களின் அனுகுமுறையை நினைத்துப் பார்க்கிறேன். எவ்வளவு நாகரீகமாக அதை எதிர்க் கொண்டார்கள். தமிழகம் இன்னும் சீரழியும் நிலை வருமோ என அஞ்சுகிறேன்.

புகைப்படம்: இயக்குநர் தங்கர்பச்சான்