Friday, December 24, 2010

தந்தை பெரியார் 37-வது நினைவு தினம்: மக்கள் உரிமைக் கூட்டமைப்பு அஞ்சலி


தந்தை பெரியார் 37-வது நினைவு தினத்தை முன்னிட்டு புதுச்சேரி பிள்ளைத்தோட்டத்தில் உள்ள அவரது சிலைக்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமையில் அமைப்புக் குழு உறுப்பினர்கள் பா.மார்கண்டன், சீ.சு.சாமிநாதன், சு.காளிதாஸ், ஏ.கலைவாணன், பா.காளிதாஸ், கி.சரவணன் ஆகியோர் கலந்துக் கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

புதுச்சேரி மாணவர் கூட்டமைப்பு சார்பில் அதன் நிறுவனர் சதீஷ் (எ) சாமிநாதன் தலைமையில் விக்னேஷ் குமார், முருகன், மதிவாணன், ராஜா, பரணி, விக்னேஷ் ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

Wednesday, December 15, 2010

தில்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை பின்பற்றி, முதல் தகவல் அறிக்கைகளை இணையத்தில் வெளியிட வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 15.12.2010 அன்று விடுத்துள்ள அறிக்கை:

தில்லி உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பைப் பின்பற்றி காவல் நிலையங்களில் பதியப்படும் அனைத்து முதல் தகவல் அறிக்கைகளையும் 24 மணி நேரத்திற்குள் இணையதளத்தில் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென புதுச்சேரி அரசை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் கேட்டுகொள்கிறோம்.

இதுகுறித்து மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 15.12.2010 அன்று தலைமைச் செயலர், சட்டத்துறை செயலர் மற்றும் காவல்துறை இயக்குநர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனு விவரம்:

கடந்த 06.12.2010 அன்று தில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா, நீதிபதி மன்மோகன் ஆகியோர் வழங்கிய தீர்ப்பில் கூறப்பட்டுள்ள செயல்படுத்தப்பட வேண்டிய பகுதிகளைக் குறிப்பிடுகிறோம்.

1) குற்றம்சாட்டப்பட்டவர் குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 207-ல் கூறப்பட்டுள்ள காலவரம்பிற்கு முன்னரே முதல் தகவல் அறிக்கைப் பெறலாம்.

2) குற்றம்சாட்டப்பட்டவர் தான் ஒரு வழக்கில் சேர்க்கப்பட்டிருக்கிறாரா அல்லது அவர் பெயர் முதல் தகவல் அறிக்கையில் இருக்கிறதா என்பதை தெரிந்துக் கொள்ள அவரோ,அவருடைய பிரதிநிதியோ சான்றிடப்பட்ட முதல் தகவல் அறிக்கை நகலைக் கேட்டு, சம்பந்தப்பட்ட காவல் அதிகாரியிடமோ அல்லது காவல் கண்காணிப்பாளரிடமோ விண்ணப்பிக்கலாம். அவ்வாறு அளிக்கப்பட்ட விண்ணப்பத்தை ஏற்று நீதிமன்றத்தில் செலுத்தக் கூடிய கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு 24 மணி நேரத்திற்குள் முதல் தகவல் அறிக்கை நகல் அளிக்க வேண்டும்.

3) பதியப்படும் முதல் தகவல் அறிக்கைகளை அது பிரச்சனையை ஏற்படுத்தக்கூடிய வழக்கினுடையது அல்லாமல் இருந்தால், அவற்றை பதிவுச் செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் டில்லி காவல்துறை இணையதளத்தில் வெளியிட வேண்டும். அதனை குற்றம்சாட்டப்பட்டவரோ அல்லது தொடர்புடைய எவரும் நகல் எடுத்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்து தங்களது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வுக் காணலாம்.

4) முதல் தகவல் அறிக்கையை இணையதளத்தில் வெளியிட வேண்டுமென்ற நீதிமன்றத்தின் உத்தரவை தில்லி காவல்துறை பிப்ரவரி 1, 2011 முதல் நடைமுறைப்படுத்த வேண்டும்.

இத்தீர்ப்பில் கூறப்பட்டுள்ளவற்றை புதுச்சேரியிலும் நடைமுறைப்படுத்த அரசும், காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த தீர்ப்பு நகலை அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும், காவல்நிலையங்களுக்கும் அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Thursday, December 09, 2010

டிசம்பர் 10 - மனித உரிமை நாள்: ஊழலுக்கு எதிராகப் போராட உறுதியேற்போம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு அமைப்புக் குழுக் கூட்டம் 08.12.2010 புதனன்று மாலை 6.30 மணியளவில் புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள கூட்டமைப்பு அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமைத் தாங்கினார். கூட்டத்தில் அமைப்புக் குழு உறுப்பினர்கள் இரா.ராஜராஜன், பா.மார்கண்டன், சீ.சு.சாமிநாதன், க.சின்னப்பா, ஏ.கலைவாணன், கி.சரவணன், பா.காளிதாஸ், கி.கண்ணன், கே.பாலாஜி உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1) டிசம்பர் 10, உலக மனித உரிமை நாளில் ஊழலை ஒழித்து நல்லாட்சிக்கு வழி வகுத்திடவும், ஊழலுக்கு எதிராகப் போராடவும் அனைத்து தரப்பு மக்களும் உறுதியேற்க வேண்டுகோள் விடுக்கிறோம்.

2) மழை நிவாரணமாக ரூ. 1000 ஏழை, பணக்காரன் என அனைவருக்கும் வழங்குவது தவறான முன்னுதாரணம். மழையால் உண்மையில் பாதிக்கப்பட்டவர்கள் யார் என்பதைக் கண்டறிந்து அவர்களுக்கு மட்டும் நிவாரணம் வழங்க வேண்டும்.

3) மழை நிவாரண விண்ணப்பத்தில் மத்திய அமைச்சர், முதலமைச்சர், அமைச்சர்கள் படங்களை அச்சிட்டு மலிவான அரசியல் செய்யும் ஆட்சியாளர்களின் போக்கை வன்மையாக கண்டிகிறோம். இதனைக் கைவிட்டு அரசு அலுவலர்கள் மூலம் உடனடியாக மழை நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4) அண்மையில் நடந்த துணைத் தாசில்தார் தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இதுகுறித்து அரசு சி.பி.ஐ. விசாரணக்கு உத்தரவிட வேண்டும். நடந்து முடிந்த தேர்வை ரத்து செய்து மீண்டும் நடத்த வேண்டும்.

5) தீபாவளிக்கு வழங்க இருந்த வேட்டி, சேலை வாங்குவதில் பல கோடி ரூபாய் ஊழல் நடக்க இருந்ததைக் கண்டறிந்து தலைமைச் செயலர் தடுத்துள்ளார். இதுகுறித்து அரசு சி.பி.ஐ. விசாரணக்கு உத்தரவிட வேண்டும். மக்களுக்கு காலதாமதமின்றி வேட்டி, சேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

6) காவல்துறையில் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர் தேர்வுக்கான அறிவிப்பில் தற்போது நடைமுறையில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், முஸ்லிம், மீனவர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை. எனவே, அரசு இதில் தலையிட்டு முறையான இடஒதுக்கீட்டை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

7) அரசியல் கட்சியினர், அமைப்பினர், பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டோர் என பலரின் மீது அரசு தேசிய பாதுகாப்புச் சட்டத்தை ஏவியுள்ளது. மனித உரிமைக்கு எதிரான தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழான நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும். தேவைப்பட்டால் இவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் போன்ற சாதாரண சட்டங்களிலேயே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

8) விவசாயிகள், மீனவர்கள் வாழ்வாதாரத்தை அழிக்கும், சுற்றுச் சூழலுக்கு எதிரான மூர்த்திக்குப்பம் துறைமுகத் திட்டத்தை அரசு ரத்து செய்ய வேண்டும். ஏற்கனவே கட்டப்பட்ட தேங்காய்த்திட்டு துறைமுகத்தால் புதுச்சேரி, தமிழக கடலோர கிராமங்கள் கடல் அரிப்பல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. கடல் அரிப்பைத் தடுக்க அரசு அறிவியல்பூர்வமான, மக்களுக்குப் பாதிப்பில்லாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

9) சென்டாக் கலந்தாய்வுக் கூட்டம் காலதாமதமாக நடந்து முடிந்ததால் புதுச்சேரியில் உள்ள அனைத்துக் கலைக் கல்லூரிகளிலும் ஏராளமான இடங்கள் மாணவர் சேர்கை நடைபெறாமல் காலியாக உள்ளன. தகுதியுள்ள பலர் விண்ணப்பித்தும் இடம் கிடைக்காததால் மாணவர்களின் ஓராண்டு கல்வி வீணாகியுள்ளது. எனவே, அரசு காலியாக உள்ள இடங்களில் விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு இடம் அளிக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

10) பாரா மெடிக்கல் மாணவர்களுக்கு பெருந்தலைவர் காமராஜர் கல்வி உதவித் தொகை வழங்க அரசாணை வெளியிட்டும் இதுவரையில் வழங்கப்படவில்லை. எனவே, அரசு உடனடியாக அரசாணைப்படி பாரா மெடிக்கல் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tuesday, December 07, 2010

சமூகப் புரட்சியாளர் அம்பேத்கர் 54-ஆவது நினைவு தினம்: மாலை அணிவித்து மரியாதை!

சமூகப் புரட்சியாளர் அம்பேத்கர் 54-ஆவது நினைவு தினத்தையொட்டி, புதுச்சேரி சட்டப்பேரவை எதிரேயுள்ள அவரது சிலைக்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமையில் கூட்டமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதில் மக்கள் உரிமைக் கூட்டமைப்பு அமைப்புக் குழு உறுப்பினர்கள் சீ.சு.சாமிநாதன், ப.மார்கண்டன், கலைவாணன், காளிதாஸ் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

புதுச்சேரி மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் அதன் நிறுவுநர் சதீஷ் (எ) சாமிநாதன் தலைமையில் தாகூர் அரசுக் கலைக் கல்லூரி, மோதிலால் நேரு அரசு தொழில் நுட்பக் கல்லூரி ஆகியவற்றின் சார்பில் மாணவர்கள் அம்பேத்கருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பாபர் மசூதியை இடித்தவர்கள் மீது நடவடிக்கை கேட்டு ஆர்ப்பாட்டம் - வீடியோ!



Monday, December 06, 2010

டிசம்பர் 6 - பாபர் மசூதியை இடித்தவர்கள் மீது நடவடிக்கை கேட்டு தமுமுக ஆர்ப்பாட்டம்!

பாபர் மசூதி இடிக்கப்ப்பட்ட டிசம்பர் 6 அன்று, புதுச்சேரி மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் காலை 10 மணியளவில், சுதேசி பஞ்சாலை அருகில் கண்டன தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு தமுமுக தலைமைக் கழகப் பேச்சாளர் புதுமடம் அணிஸ் தலைமைத் தாங்கினர். மாவட்ட துணைத் தலைவர் ஹாபீஸ் முஹம்மது புஹாரி தொடக்கவுரை ஆற்றினார். மாவட்ட தலைவர் எம்.ஏ.அஷ்ரப் (எ) ரஹமத்துல்லா, மாவட்ட செயலாளர் ஒய்.பலுல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் முஹம்மது சலீம், கிராமப் பஞ்சாயத்து தலைவர்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு துணை அமைப்பளார் கோ.அ.ஜெகன்நாதன், சிங்காரவேலர் முன்னேற்ற கழகத்
தலைவர் கோ.செ.சந்திரன், புதுவை கிருஸ்துவர் கூட்டமைப்பு தலைவர் சாமி ஆரோக்கியசாமி ஆகியோர் கலந்துக் கொண்டு கருத்துரை உரையாற்றினர்.

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் கண்டன உரையாற்றினார்.

முடிவில் தமுமுக மாவட்ட பொருளாளர் ஜெ.காஜா கமால் நன்றியுரை கூற ஆர்ப்பாட்டம் நிறைவுற்றது.

ஆர்ப்பாட்டத்தில் கீழ்காணும் கோரிகைகள் முன்வைக்கப்பட்டன:

1. பாபர் மசூதி நிலம் தொடர்பான அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்த மேல்முறையீட்டு வழக்கை உச்சநீதிமன்றம் விரைந்து முடிக்க வேண்டும்.

2. ரெபரேலி நீதிமன்றத்தில் நடக்கும் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கு விசாரணையை விரைவுப்படுத்த வேண்டும்.

3. பாபர் மசூதி இடிக்கப்பது குறித்த லிபரான் ஆணையம் விசாரித்து குற்றம்சாட்டிய அத்வானி உள்ளிட்ட 68 பேர் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.