Thursday, May 29, 2025

தனியார் ஓட்டல் பெண் ஊழியர்கள் மீது தாக்குதல், மன உளைச்சலில் பெண் ஊழியரின் கணவர் மரணம்: போலீசார் மீது குற்ற வழக்குப் பதிவு செய்ய வேண்டும்!


மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல்!!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (29.05.2025) விடுத்துள்ள அறிக்கை:

தனியார் சொகுசு ஓட்டலில் நகை திருடு போன புகாரில் தவளக்குப்பம் காவல்நிலையத்தில் பெண் ஊழியர்கள் 4 பேர் மீது தாக்குதல், மன உளைச்சலில் பெண் ஊழியரின் கணவர் மரணமடைந்த சம்பவத்திற்குக் காரணமான பெண் காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 4 போலீசார் மீது குற்ற வழக்குப் பதிவு செய்ய வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.

தவளக்குப்பம் அருகேயுள்ள தனியார் சொகுசு ஓட்டலில் நகை திருடு போனதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கடந்த 11.05.2025 அன்று தவளக்குப்பம் காவல்நிலையப் போலீசார் அங்கு பணிபுரியும் பூர்ணாங்குப்பத்தைச் சேர்ந்த கலையரசி உட்பட 4 பெண் ஊழியர்களைக் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு 4 பேரையும் கடுமையாக தாக்கி அவமானப்படுத்தி உள்ளனர். மனைவி தாக்கப்பட்டது பற்றி அறிந்த கலையரசியின் கணவர் அர்ஜூனன் மன உளைச்சலுக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்துபோனார்.

இச்சம்பவத்திற்குத் தவளக்குப்பம் பெண் காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 4 போலீசார்தான் காரணம். அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தியதால் தற்போது காவல் உதவி ஆய்வாளர் சண்முக சத்யா, காவலர்கள் சுரேஷ், வசந்த ராஜா, பெண் காவலர் பிருந்தா ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

போலீசார் பெண்களைக் காவல்நிலையத்திற்கு அழைத்து விசாரிக்கக் கூடாது, அவர்கள் வசிக்கும் இடத்திற்கோ அல்லது அவர்கள் தேர்வு செய்யும் இடத்திற்கோ சென்று விசாரிக்க வேண்டுமென்று பி.என்.என்.எஸ். சட்டப் பிரிவு 179(1) கூறுகிறது. ஆனால், தவளக்குப்பம் போலீசார் காவல்நிலையத்தில் 4 பெண் ஊழியர்களையும் நள்ளிரவு 1 மணிவரை விசாரணை என்ற பெயரில் அடித்து துன்புறுத்தி அவமானப்படுத்தியது சட்ட விரோதமானது.

காவல்துறை தற்போது பெண் காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 4 போலீசாரை பணியிட மாற்றம் செய்துள்ளது போதுமான நடவடிக்கை அல்ல. அனைவரையும் உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். பெண் ஊழியர்களை சட்டவிரோதமாக காவல்நிலையத்தில் வைத்து அடித்து துன்புறுத்தியது, இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி பெண் ஊழியர் கலையரசியின் கணவர் அர்ஜூனன் இறந்து போனதற்கு மேற்சொன்ன பெண் காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 4 போலீசார்தான் முழு பொறுப்பு.

எனவே, சட்டத்திற்குப் புறம்பாக பெண் ஊழியர்களைக் காவல்நிலையத்திற்கு அழைத்து, அடித்து துன்புறுத்தி அவமானப்படுத்திய தவளக்குப்பம் காவல்நிலையப் பெண் காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 4 போலீசார் பேர் மீது குற்ற வழக்குப் பதிவு செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட பெண் ஊழியர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

பி.என்.என்.எஸ். சட்டப் பிரிவு 179(1)-ன்படி பெண்களைக் காவல்நிலையத்திற்கு அழைத்து விசாரிக்கக் கூடாது என்பது குறித்து அனைத்துக் காவல்நிலையங்களுக்கும் டி.ஜி.பி. சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.

இச்சம்பவம் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு விரிவான புகார் அனுப்ப உள்ளோம்.

Sunday, May 25, 2025

ஏழு ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை உடனே புதுப்பிக்க வேண்டும்!


மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (25.05.2025) விடுத்துள்ள அறிக்கை: 

கடந்த ஏழு ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை உடனே புதுப்பித்து செயல்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டுமென புதுச்சேரி அரசை 'மக்கள் உரிமைக் கூட்டமைப்பு' சார்பில் வலியுறுத்துகிறோம்.

புதுச்சேரியில் 1998ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மாநில அளவிலான பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைக்கப்பட்டது. அதன்பிறகு, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆணையம் புதுப்பிக்கப்பட்டு வந்தது. ஆறாவதாக அமைக்கப்பட்ட புதுச்சேரி பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் காலம் 2018ஆம் ஆண்டு மே மாதத்தோடு முடிவடைந்தது. அதன் பிறகு, நன்றாக செயல்பட்டு வந்த பிற்படுத்தப்படோர் ஆணையம் ஏழு ஆண்டுகளாகியும் புதுப்பிக்கப்படவில்லை.

கடந்த காலத்தில் ஆட்சி செய்த அரசாங்கங்கள்  அலுவல் சாரா உறுப்பினர்களை நியமனம் செய்வதில் தாமதம் செய்து வந்ததால் புதுப்பிக்கப்படவில்லை. ஏழு ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாததால், பல பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

அதிகாரிகள் கோப்புகளைக் காலத்தோடு அனுப்பியும், தற்போது பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர், முதலமைச்சர் அலுவலகத்தில் நான்கு ஆண்டுகளாக இக்கோப்பு தூங்கிக் கொண்டிருக்கின்றது. 

மேலும், பிற்படுத்தப்பட்டோர் ஆணைய அலுவலகத்தில் வேலை செய்து வரும் ஊழியர்கள் மற்றும் தினக்கூலி ஊழியர்களுக்கு காலத்தோடு சம்பளம் வழங்காததால் சிரமப்பட்டு வருகின்றனர். 

அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள், சாதிச் சங்கங்கள்  பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் புதுப்பிக்கப்பட வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் அரசு செவி சாய்க்கவில்லை. பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் புதுப்பிக்கப்பட்டால்தான், சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த முடியும்.

பிற்படுத்தப்பட்ட பிரிவில் சாதிகளைச் சேர்த்தல், பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ள விடுபட்ட சாதிகளை மத்திய அரசுப் பட்டியலில் சேர்த்தல், பிற்படுத்தப்பட்ட பழங்குடியின பிரிவிற்கு வெட்டறு தேதி (Cut off date) நிர்ணயம் செய்தல், சாதிவாரிக் கணக்கெடுப்பு எடுத்து மக்கள் தொகைக்கு ஏற்றவாறு பிற்படுத்தப்பட்ட (BC), மிகவும் பிற்படுத்தப்பட்ட (MBC), மிக மிக பிற்படுத்தப்பட்ட மீனவர் (EBC), பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் (BCM), பிற்படுத்தப்பட்ட பழங்குடியினர் (BT) சமூகங்களுக்கு இடஒதுக்கீடு அளவினை மாற்றியமைத்தல் போன்ற முக்கியமான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.

எனவே, புதுச்சேரி அரசு உடனே தலைவர், அலுவல் சாரா உறுப்பினர்களை நியமித்து மாநில அளவிலான பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தைப் புதுப்பித்து செயல்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

இதுகுறித்து துணைநிலை ஆளுநர், முதலமைச்சர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர், தலைமைச் செயலர், துறை செயலர் ஆகியோருக்கு மனு அனுப்ப உள்ளோம்.

Thursday, May 01, 2025

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்: மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வரவேற்பு!


மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (01.05.2025) விடுத்துள்ள அறிக்கை: 

மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதை 'மக்கள் உரிமைக் கூட்டமைப்பு' சார்பில் வரவேற்கிறோம். 

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதன் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை அரசியல் கட்சிகளாலும், சமூக அமைப்புகளாலும் நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டது.

மண்டல் குழு தொடர்பான இந்திரா சகானி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் சமூக ரீதியான இடஒதுக்கீடு மொத்தம் 50 சதவீதத்திற்கு மேல் வழங்கக் கூடாது என கூறியுள்ளது. 

சாதிவாரி கணகெடுப்பு நடத்தினால் மேற்சொன்ன உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி சமூக ரீதியான இடஒதுக்கீடு 50 சதவீதத்திற்கு மேல் வழங்கக் கூடாது என்பதை மாற்றி கூடுதல் சதவீத இஒதுக்கீடு வழங்க வழிவகுக்கும். 

பெரியாரியல் அறிஞர் வே.ஆனைமுத்து அவர்கள் முன் வைத்த விகிதாச்சார இடஒதுக்கீடு வழங்குவதற்கும் சாதிவாரி கணக்கெடுப்பு அடிப்படை காரணியாக அமையும். 

மத்திய அரசின் இந்த முடிவு சமூக நீதி வரலாற்றில் மிக முக்கியமான முன்னெடுப்பு ஆகும். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் ஏற்றத்திற்கு பெருமளவில் உதவும். 

உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் கூறிய சமூக ரீதியான இடஒதுக்கீடு 50 சதவீதத்திற்கு மேல் வழங்கக் கூடாது என்பதை மாற்றி கூடுதலாக இடஒதுக்கீடு வழங்கவும், தனியார் துறைகளில் இடஒதுக்கீடு வழங்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனவே, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதை 'மக்கள் உரிமைக் கூட்டமைப்பு' சார்பில் மனதார வரவேற்கிறோம். அரசியல் கட்சிகள் வலியுறுத்தியபடி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த காலக்கெடு (Time line) விதிக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறோம்.