Saturday, February 15, 2025

1ம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர் தொடர் பாலியல் துன்புறுத்தல்: கல்வித்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!


மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல்!!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (15.02.2025) விடுத்துள்ள அறிக்கை:

1ம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களால் மாணவ, மாணவியருக்குப் பாதுகாப்பற்ற நிலைக்குக் காரணமான பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.

தனியார் பள்ளி 1ம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் செய்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. அச்சிறுமியின் குடும்பத்தினர், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் 7 மணிநேரம் சாலை மறியல் போராட்டம் நடத்திய பின்னர்தான் ஆசிரியர் மணிகண்டன் மீது தவளக்குப்பம் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர். பள்ளி தாளாளர் உள்ளிட்டோர் கைது செய்யப்படுவர், பள்ளிக்குத் தற்காலிகமாக சீல் வைக்கப்படும், புகார் கூறிய மாணவியின் தந்தை உள்ளிட்ட உறவினர்களைத் தாக்கிய போலீசார் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும், குற்றமிழைத்த ஆசிரியருக்குக் கடும் தண்டனைப் பெற்றுத் தரப்படும் என மாவட்ட ஆட்சியர் திரு. அ.குலோத்துங்கன் உறுதியளித்த பின்னர் சாலை மறியல் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

ஆசிரியர் மணிகண்டன் மாணவிக்கு 4 மாதங்களாக தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் செய்ததாக பெற்றோர் புகார் கூறியுள்ளனர். பள்ளி தாளாளர், முதல்வர் உள்ளிட்டோர் மீதும் போக்சோ சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீசார் விரைந்து குற்ற அறிக்கைத் தாக்கல் செய்து குற்றமிழைத்த ஆசிரியருக்குத் தண்டனைப் பெற்றுத் தர வேண்டும்.

மூலக்குளம் தனியார் பள்ளியில் மாணவர் சக மாணவரைக் கத்தியால் குத்தினார், அம்மாணவரிடமிருந்து வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளி +2 மாணவர் பிளேடால் கையை அறுத்துக் கொண்டு, மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். புதுக்குப்பம் தொடக்கப் பள்ளியில் பழைய நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழுந்து 5ம் வகுப்பு மாணவி ஒருவர், 4ம் வகுப்பு மாணவர்கள் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.

கடந்த காலங்களில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவிகளுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களில் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. பல சம்பவங்களை மூடி மறைத்துள்ளனர். இதனால் குற்றமிழைத்த ஆசிரியர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பியுள்ளனர்.

பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் அரசு மற்றும் தனியார் பள்ளிகளைக் கண்காணிப்பதே இல்லை. இதனால் மாணவ, மாணவியர் பாதிக்கும் நிலைத் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. மாணவ, மாணவியருக்குப் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, துணைநிலை ஆளுநர், முதலமைச்சர், கல்வி அமைச்சர் இதில் தலையிட்டுப் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் (Director), இணை இயக்குநர் (Joint Director), முதன்மைக் கல்வி அதிகாரி (Chief Educational Officer) ஆகியோரை உடனே இடமாற்றம் செய்து, புதிய அதிகாரிகளை நியமிக்க வேண்டும். இல்லையேல், பொதுநல அமைப்புகள் சார்பில் கல்வித்துறை அலுவலக முற்றுகைப் போராட்டம் நடத்துவோம் என புதுச்சேரி அரசை எச்சரிக்கிறோம்.

Thursday, January 23, 2025

தனியார் பள்ளியில் +1 மாணவருக்குக் கத்திக்குத்து, நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்: பள்ளிக் கல்வித்துறையின் நிர்வாக சீர்கேடே காரணம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (23.01.2025) விடுத்துள்ள அறிக்கை: 

புதுச்சேரி தனியார் பள்ளியில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக +1 மாணவருக்குக் கத்திக்குத்து, ஏராளமான நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதற்குப் பள்ளிக் கல்வித்துறையின் நிர்வாக சீர்கேடே காரணம் என்பதால் 'மக்கள் உரிமைக் கூட்டமைப்பு' சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். 

ரெட்டியார்பாளையத்தில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளி ஒன்றில் பேஸ்புக் செய்தி தொடர்பாக மாணவர்களிடையே ஏற்பட்ட பிரச்சனையில் நேற்றைய தினம் +1 மாணவரை சக மாணவர் கத்தியால் குத்தியுள்ளார். மேலும், அம்மாணவரிடம் இருந்துப் போலீசார் ஏராளமான நாட்டு வெடிகுண்டுகளைப்  பறிமுதல் செய்துள்ளனர்.  

மாணவர்களிடையே வன்முறைக் கலாச்சாரம் பரவுவதற்குப் பள்ளிக் கல்வித்துறையின் நிர்வாக சீர்கேடே காரணம். பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தனியார் பள்ளிகளின் செயல்பாடுகளைக் கண்காணிக்கத் தவறியுள்ளனர். தனியார் பள்ளிகளுக்குச் சட்டத்திற்குப் புறம்பாக சலுகைகள் அளித்து அதன்மூலம் லாபமடைந்து வருகின்றனர். 

பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தனியார் பள்ளிகளை அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும். பள்ளிகள் மாணவர்களுக்கு நல்லொழுக்கம் கற்பித்து அவர்களைச் சிறந்த ஆளுமைகளாக உருவாக்க வேண்டும். அதைவிடுத்து மாணவர்களைக் குற்றம் செய்பவர்களாக ஆக்குவது இளம் தலைமுறையைப் பாதிக்கும்.  

பள்ளிகளில் மாணவர்களுக்கு ஒழுக்கத்தைக் கற்பிக்கும் வகுப்புகள் (Moral classes) தற்போது நடத்தப்படுவதில்லை. பள்ளி மாணவர்கள் மத்தியில் விளையாட்டு, கலை, இலக்கிய ஆர்வம் வளர்தெடுக்கப்பட வேண்டும். மாணவர்களுக்கு உளவியல் சார்ந்த கவுன்சிலிங் அளிக்க வேண்டும். பள்ளி மாணவர்களை வெறும் பாடத்தை மட்டுமே மனப்பாடம் செய்யும் இயந்திரங்களாக உருவாக்கக் கூடாது. 

பள்ளிக் கல்வித்துறை ஆட்சியாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப சட்டத்திற்குப் புறம்பாகச் செயல்படக் கூடாது. மாணவர்களின் நலனே முதன்மையானது என செயல்பட வேண்டும்.

இச்சம்பவம் குறித்து ரெட்டியார்பாளையம் காவல்நிலையப் போலீசார் வழக்குப் பதிவு செய்யாமல் காலம்தாழ்த்தி வருகின்றனர். எனவே, காவல்துறை உயரதிகாரிகள் தலையிட்டு உடனே வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அம்மாணவர் யூடியூப் பார்த்து வெடிகுண்டு தயார் செய்ததாகவும், அரியாங்குப்பத்தில் பட்டாசு வாங்கி அதிலிருந்து வெடிமருந்துகளைப் பிரித்து வெடிகுண்டு தயாரித்ததாகவும் தெரிகிறது. மாணவனுக்குப் பட்டாசு விற்றவர்கள் மீதும் காவல்துறை வழக்குப் பதிய வேண்டும். பட்டாசு விற்பனைக்குக் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும்.

Sunday, January 12, 2025

காலாப்பட்டு மத்திய சிறையில் விசாரணை சிறைவாசி மரணம்: உயர்நீதிமன்ற ஓய்வுப் பெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்திரவிட வேண்டும்!


மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (12.01.2025) விடுத்துள்ள அறிக்கை:

புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் விசாரணை சிறைவாசி மரணம் குறித்து உயர்நீதிமன்ற ஓய்வுப் பெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்திரவிட வேண்டுமென புதுச்சேரி அரசை 'மக்கள் உரிமைக் கூட்டமைப்பு' சார்பில் வலியுறுத்துகிறோம்.

கடந்த 10.01.2025 அன்று காலாப்பட்டு மத்திய சிறையில் விசாரணை சிறைவாசி நாராயணன் (வயது 45) நீதிமன்றத்திற்குச் சென்றுவிட்டு சிறைக்குத் திரும்பியுள்ளார். சிறையில் உடல்நலம் குன்றி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து காலாப்பட்டு காவல்நிலையப் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது உடல் ஜிப்மர் மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டு, விடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இறந்துபோன நாராயணனின் உறவினர்கள் அவருக்குச் சின்ன வயது, எவ்வித நோயும் இல்லை என்பதால் சாவில் மர்மம் இருப்பதாக புகார் கூறியுள்ளனர்.

கடந்த 16.09.2024 அன்று சிறுமி பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட விசாரணை சிறைவாசியான விவேகானந்தன் (வயது 56) காலாப்பட்டு மத்திய சிறையில் கழிவறையில் துண்டால் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

கடந்த 08.06.2024 அன்று காரைக்கால் கிளைச் சிறையில் கொலை வழக்கில் ஆயுள் தண்டனைச் சிறைவாசியான பிரதீஷ் (வயது 23) கைலியால் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

பிரதீஷ் தற்கொலை குறித்து தகவல் தெரிவிக்காததால் தேசிய மனித உரிமைகள் ஆணையம் முழு விவரங்களையும் அளிக்குமாறு டி.ஜி.பி., காரைக்கால் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு உத்திரவுப் பிறப்பித்துள்ளது.

புதுச்சேரி, காரைக்கால் சிறைகளில் சிறைவாசிகள் மரணம் அடிக்கடி நடக்கிறது. சிறைவாசிகளைப் பாதுகாப்பதில் புதுச்சேரி அரசும், சிறைத்துறையும் தோல்வி அடைந்துள்ளது.

சிறைவாசி நாராயணன் மரணத்திற்கு புதுச்சேரி அரசும் சிறைத்துறையும் பொறுப்பு (Vicariously liable) என்பதால், அவரது குடும்பத்திற்கு 5 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். ஏற்கனவே இறந்துபோன சிறைவாசிகள் விவேகானந்தன், பிரதீஷ் குடும்பத்தினருக்கும் தலா 5 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.

 எனவே, காலாப்பட்டு மத்திய சிறையில் விசாரணை சிறைவாசி மரணம் குறித்து உயர்நீதிமன்ற ஓய்வுப் பெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்திரவிட வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

 இதுகுறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு விரிவான புகார் அனுப்ப உள்ளோம்.

Friday, December 20, 2024

மூத்த வழக்கறிஞர் ஆர்.பலராமன் மறைவு: மக்கள் உரிமைக் கூட்டமைப்பு இரங்கல்!


மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (20.12.2024) விடுக்கும் இரங்கல் குறிப்பு:

புதுச்சேரி மூத்த வழக்கறிஞர் ஆர்.பலராமன் அவர்கள் மறைவுக்கு 'மக்கள் உரிமைக் கூட்டமைப்பு' சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். 

மூத்த வழக்கறிஞர் ஆர்.பலராமன் (வயது 88) நேற்று (19.12.2024) உடல்நலம்குன்றி காலமானார்.

புதுச்சேரி மூத்த  வழக்கறிஞர் ஆர்.பலராமன் அவர்கள் கற்றுத் தேர்ந்த வழக்கறிஞர் என்பதோடு பல வழக்குகளைத் திறம்பட நடத்தியவர். 

சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி மறைந்த எஸ்.இராஜசூர்யா அவர்கள் தலைமையில் இயங்கிய காவலர் புகார் ஆணையத்தின் (Police Complaints Authority) உறுப்பினராக இருந்து பொறுப்புடன் பணியாற்றியவர். 

காவலர் புகார் ஆணையத்தில் மனித உரிமை மீறல்கள் குறித்துப் பல்வேறு புகார்கள் அளித்த போது அதன் மீது பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்க உரிய உத்திரவுகள் வழங்கப்பட்டதில் முக்கியப் பங்காற்றியவர். 

புதுச்சேரி வழக்கறிஞர் சங்கத்திற்குக் குறிக்கோள்கள், விதிகளை உருவாக்கிப் பதிவு செய்ய காரணமாக இருந்தவர். 

அவரது மறைவு வழக்கறிஞர் சமூகத்திற்கு மட்டுமல்ல பொதுமக்களுக்கும் பெரிய இழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், வழக்கறிஞர்கள் உட்பட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Monday, December 09, 2024

வில்லியனூர் சங்கராபரணி ஆற்றுப் பாலம் கட்டியதில் ஊழல், முறைகேடு: சி.பி.ஐ. விசாரணைக்கு துணைநிலை ஆளுநர் உத்திரவிட வேண்டும்!


மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (09.12.2024) விடுத்துள்ள அறிக்கை:

புதுச்சேரி வில்லியனூர் சங்கராபரணி ஆற்றுப் பாலம் கட்டியதில் நடந்த ஊழல், முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு துணைநிலை ஆளுநர் உத்திரவிட வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.

புதுச்சேரி – விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் வில்லியனூர் ஆரியபாளையம் சங்கராபரணி ஆற்றுப் பாலம் கட்டும் பணி கடந்த 11.02.2022 அன்று தொடங்கியது. ரூபாய் 60 கோடியில் 360 மீட்டர் நீளம் 18 மீட்டர் அகலத்தில் கட்டப்பட்ட இப்பாலம் கடந்த 28.10.2024 அன்று துணைநிலை ஆளுநர், முதலமைச்சர் திறந்து வைத்தனர்.

இந்நிலையில் புயல், மழையின் போது இப்பாலத்தின் கிழக்குப் பகுதி இணைப்புச் சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. கட்டி முடிக்கப்பட்ட இரண்டு மாதத்திற்குள்ளேயே விரிசல் ஏற்பட்டதற்குப் பொதுப்பணித்துறை அதிகாரிகளும், ஆட்சியாளர்களும்தான் பொறுப்பு. பொதுமக்களின் உயிர்களுடன் விளையாடும் அரசசையும், பொதுப்பணித்துறையையும் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

இப்பாலத்தைக் கட்ட பொறுப்பாக இருந்த பொதுப்பணித்துறை உயரதிகாரி ஒருவர் பதவி உயர்வுப் பெறவும், தேசிய நெடுஞ்சாலைப் பிரிவுதான் வேண்டுமென ஆட்சியாளர்களுக்கு உரிய அழுத்தம் கொடுத்து இப்பதவியைப் பெற்றவர் என்று கூறப்படுகிறது. இப்படிப்பட்ட அதிகாரியால் எப்படி இப்பாலத்தை முறையாகக் கட்டி இருக்க முடியும். இப்பாலம் கட்டியதில் ஊழல், முறைகேடுகள் நடந்துள்ளன.

இப்பாலம் ஒதுக்கப்பட்ட நிதி முழுவதையும் செலவழித்து முறையாகக் கட்டப்பட்டுள்ளதா, மக்கள் பயணம் செய்ய பாதுகாப்பானதா என்பது குறித்து வல்லுநர் குழு மூலம் ஆய்வு செய்ய வேண்டும்.

மேலும், சங்கராபரணி ஆற்றுப் பாலம் கட்டியதில் நடந்த ஊழல், முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு துணைநிலை ஆளுநர் உத்திரவிட வேண்டும்.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர், மத்திய உள்துறைச் செயலர், சி.பி.ஐ. இயக்குநர், துணைநிலை ஆளுநர் உள்ளிட்டோருக்குப் புகார் அனுப்ப உள்ளோம்.

Thursday, December 05, 2024

காரைக்கால் சிறையில் சிறைவாசி தற்கொலை சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்காதது ஏன்? விளக்கம் அளிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்திரவு!


மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (05.12.2024) விடுத்துள்ள அறிக்கை:

காரைக்கால் மாவட்ட சிறையில் தண்டனைச் சிறைவாசி தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பற்றி தகவல் தெரிவிக்காதது ஏன்? என்பது குறித்து 8 வாரத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டுமென தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்திரவுப் பிறப்பித்துள்ளது.

கடந்த 08.06.2024 அன்று, காரைக்கால் மாவட்டச் சிறையில் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனைச் சிறைவாசி பிரதீஷ் (வயது 23) த/பெ. பழனிச்சாமி என்பவர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

இச்சம்பவம் குறித்து கடந்த 18.06.2024 அன்று மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்குப் புகார் அனுப்பி இருந்தோம். அதில் பிரதீஷ் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்திற்குச் சிறைத் துறையும், புதுச்சேரி அரசும்தான் பொறுப்பு. பணியில் அலட்சியமாக இருந்த சிறைத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரி இருந்தோம்.

இப்புகாரைப் பரிசீலித்த தேசிய மனித உரிமைகள் ஆணையம் கடந்த 26.11.2024 அன்று உத்திரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. அதில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் பதிவகத்தில் (Registry) இந்த காவல் மரணம் தொடர்பாக எந்த தகவலும் காணப்படவில்லை. எனவே, காரைக்கால் மாவட்ட நடுவர் (மாவட்ட ஆட்சியர்), முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர், காரைக்கால் மாவட்ட சிறைக் கண்காணிப்பாளர் ஆகியோர் இக்காவல் மரணம் பற்றி தகவல் தெரிவிக்காதது ஏன் என்பது குறித்து 8 வாரத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்திரவிட்டுள்ளது. இந்த உத்திரவின் நகல் டி.ஜி.பிக்கும் அனுப்பி வைத்துள்ளது.

மேலும், மரணம் ஏற்பட்டதற்கான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய அறிக்கை, தேசிய மனித உரிமைகள் ஆணைய வடிவப்படி காலாப்பட்டு மத்திய சிறை உள்ளிட்ட சிறைகளில் அடைக்கப்பட்ட போது மேற்கொள்ளப்பட்ட முதல்கட்ட சுகாதாரப் பரிசோதனை அறிக்கை, காலவரிசைப்படி முந்தைய சிறை உள்ளிட்ட சிறைகளில் நோய்களுக்குச் சிறைக்கு உள்ளேயும் வெளியேயும் சிகிச்சை அளிக்கப்பட்ட முழு மருத்துவ ஆவணங்கள், பிரேத விசாரணை அறிக்கை, தட்டச்சு செய்யப்பட்ட உடற்கூறாய்வு அறிக்கை, விசரா, ஹிஸ்டோபேத்தாலஜி ஆய்வுகள், தடய அறிவியல் துறை அறிக்கையின் அடிப்படையிலான மரணத்திற்கான காரணம், நீதித்துறை நடுவரின் விசாரணை அறிக்கை ஆகியவற்றை சமர்ப்பிக்கவும் உத்திரவிட்டுள்ளது.

மேலும், நீதித்துறை நடுவர் விசாரணை அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கை, இறுதி முடிவு மற்றும் எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை, குற்ற நடவடிக்கை, சி.பி.சி.ஐ.டி. விசாரணை அறிக்கை ஆகியவற்றை சமர்ப்பிக்கவும் உத்திரவிட்டுள்ளது.

தேசிய மனித உரிமைகள் ஆணையம் கடந்த 14.12.1993 அன்று அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச தலைமைச் செயலர்களுக்கு வழிகாட்டுதல் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் காவல் மரணம் மற்றும் பாலியல் வன்புணர்வுச் சம்பவங்கள் குறித்து மாவட்ட நடுவர் (மாவட்ட ஆட்சியர்), காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் தேசிய மனித உரிமைகள் ஆணையப் பதிவாளருக்கு 24 மணிநேரத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும். உரிய நேரத்திற்குள் தகவல் தெரிவிக்கவில்லை என்றால் சம்பவத்தை மூடிமறைக்க முயற்சித்ததாக கருதப்படும் என்று கூறியுள்ளது.

மேலும், கடந்த 21.06.1993 அன்று மேற்சொன்ன வழிகாட்டல் காவல் மரணம் மற்றும் பாலியல் வன்புணர்வுச் சம்பவங்கள் குறித்து மட்டுமல்ல, நீதித்துறைக் காவலில் நடந்தாலும் தகவல் தெரிவிக்க வேண்டுமென்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் வழிகாட்டல் ஒன்றை அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச தலைமைச் செயலர்களுக்கும் அனுப்பியுள்ளது.

எனவே, காவல் மரணம் மற்றும் பாலியல் வன்புணர்வுச் சம்பவங்கள் நடந்தால் மாவட்ட நடுவர் (மாவட்ட ஆட்சியர்), காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் 24 மணிநேரத்திற்குள் தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்குத் தகவல் அனுப்ப தலைமைச் செயலர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

Wednesday, November 06, 2024

தலித் பெண்ணை சாதிப் பெயரை சொல்லி ஆபாசமாக பேசிய வழக்கு: குற்றம்சாட்டப்பட்ட இருவரை கைது செய்ய வேண்டும்!


மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (06.11.2024) விடுத்துள்ள அறிக்கை:

புதுச்சேரி மணலிப்பட்டில் சாதிப் பெயரை சொல்லி ஆபாசமாக பேசிய வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இருவரை கைது செய்ய வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல்’ சார்பில் வலியுறுத்துகிறோம்.

கடந்த 05.10.2024 அன்று திருக்கனூர் அருகேயுள்ள மணலிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தலித் பெண் சாந்தாலட்சுமியை அவரது கணவரின் அண்ணன் சக்திவேல், அவரது மனைவி ஜெயந்தி ஆகியோர் சாதிப் பெயரை சொல்லி ஆபாசமாக பேசியுள்ளனர். சாந்தாலட்சுமி வடிவேலு என்பரை கலப்புத் திருமணம் செய்துகொண்டவர்.

இதுகுறித்து 06.10.2024 அன்று எழுத்துமூலம் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் 15 நாட்கள் கழித்து கடந்த 21.10.2024 அன்று எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளில் பி.சி.ஆர். பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

ஆனால், குற்றம்சாட்டப்பட்ட இருவரையும் இதுநாள் வரையில் பி.சி.ஆர். பிரிவு போலீசார் கைது செய்யவில்லை. இருவரும் வீட்டிலேயே இருந்துகொண்டு அன்றாட வேலைகளை செய்து வருகின்றனர். இவர்களால் புகார்தாரரான தலித் பெண்ணிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆபத்து உள்ளது. மேலும், இவர்கள் வழக்கின் சாட்சிகளை மிரட்டவும் வாய்ப்புள்ளது. வன்கொடுமைத் தடுப்புச் சட்ட வழக்கில் முன்ஜாமீன் கிடையாது என்பதால் இருவரையும் கைது செய்வது அவசியமாகிறது. பி.சி.ஆர். பிரிவு போலீசார் ஆரம்பம் முதல் வன்கொடுமைக் குற்றமிழைத்தவர்களுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகின்றனர்.

கடந்த 01.01.2024 முதல் 21.10.2024 வரை பி.சி.ஆர். பிரிவு போலீசார் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் 3 வழக்குகள் மட்டுமே பதிவு செய்துள்ளனர். பி.சி.ஆர். பிரிவு போலீசார் இச்சட்டத்தில் அளிக்கப்படும் புகார்களில் வழக்குப் பதிவு செய்யாமல் கணிசமாக பணம் பெற்றுக் கொண்டு கட்டப் பஞ்சாயத்து செய்து வருகின்றனர். பி.சி.ஆர். பிரிவுக்கு முழு நேர காவல் கண்காணிப்பாளர் நியமிக்கப்படவில்லை. இதனால், வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.

முதலமைச்சர் தலைமையிலான வன்கொடுமைத் தடுப்புச் சட்ட கண்காணிப்புக் குழு (Vigilance and Monitoring Committee) பெயரளவில் உள்ளதே தவிர முறையாக செயல்படவில்லை. இக்குழுக் கூட்டம் அவ்வப்போது கூட்டப்பட்டு வன்கொடுமைத் தடுப்புச் சட்ட வழக்குகளை ஆய்வு செய்ய வேண்டும்.

மேற்சொன்ன வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இருவரையும் உடனே கைது செய்ய வலியுறுத்தி டி.ஜி.பி.யை நேரில் சந்தித்து மனு அளிக்க உள்ளோம். அதன் பின்னரும் கைது செய்யவில்லை என்றால் அரசியல் கட்சிகள், இயக்கங்கள் சார்பில் போராட்டம் நடத்துவோம். 

Monday, October 21, 2024

தலித் பெண்ணை சாதியை கூறி ஆபாசமாக பேசிய புகாரில் வழக்குப் பதிவு செய்ய பி.சி.ஆர். பிரிவு போலீஸ் அதிகாரிகள் மறுப்பு: டி.ஜி.பி. தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்!

 



மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல்!!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (20.10.2024) விடுத்துள்ள அறிக்கை:

தலித் பெண்ணை சாதியை கூறி ஆபாசமாக பேசிய புகாரில் வழக்குப் பதிவு செய்ய பி.சி.ஆர். பிரிவு போலீஸ் அதிகாரிகள் மறுத்துள்ளதால் டி.ஜி.பி. தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.

புதுச்சேரி மணலிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தலித் பெண் சாந்தாலட்சுமி (வயது 31) கலப்புத் திருமணம் செய்துகொண்டவர். இவரது கணவரின் அண்ணன் சக்திவேல் மற்றும் அவரது மனைவி ஜெயந்தி ஆகியோர் கடந்த 05.10.2024 அன்று மாலை 5.30 மணியளவில் சாந்தாலட்சுமியை சாதியை கூறி ஆபாசமாக பேசி மிரட்டியுள்ளனர்.

இதுகுறித்து கடந்த 06.10.2024 அன்று பாதிக்கப்பட்ட தலித் பெண் சாந்தாலட்சுமி கோரிமேட்டில் உள்ள பி.சி.ஆர். பிரிவு உதவி ஆய்வாளரிடம் புகார் அளித்துள்ளார். ஆனால், புகார் கொடுத்து 15 நாட்கள் ஆகியும் இதுநாள்வரையில் இப்புகார் மீது வழக்குப் பதிவு செய்யவில்லை. பி.சி.ஆர். பிரிவு போலீஸ் அதிகாரிகள் முதல்கட்ட விசாரணை (Preliminary inquiry) செய்து வருவதாக கூறி வழக்குப் பதிவு செய்ய மறுத்து வருகின்றனர். மேலும், முதல்கட்ட விசாரணை என்ற பெயரில் சாட்சிகளை மிரட்டி வருகின்றனர்.

எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி அளிக்கப்படும் புகார் மீது முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்ய முதல்கட்ட விசாரணை தேவையில்லை. கைது செய்ய ஒப்புதல் தேவையில்லை என இச்சட்டப் பிரிவு 18(ஏ) தெளிவாக கூறியுள்ளது. மேலும், இச்சட்டப்படி முன்ஜாமீன் கிடையாது என்பதால் வழக்குப் பதிவு செய்த உடனேயே குற்றமிழைத்தவர்களைக் கைது செய்ய வேண்டும். இல்லையேல், இவ்வாறு நடவடிக்கை எடுக்காத எஸ்.சி., எஸ்.டி., வகுப்பைச் சாராத அதிகாரிகளுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை எனவும் இச்சட்டம் கூறுகிறது.

எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் முறையாக செயல்படுத்தப்பட வேண்டும். இதற்கென முதலமைச்சர் தலைமையில் மாநில அளவிலான கண்காணிப்புக் குழு (State Level Vigilance and Monitoring Committee) அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இக்குழு முறைப்படி செயல்படுகிறதா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

எனவே, இதில் டி.ஜி.பி. தலையிட்டு மேற்சொன்ன புகார் மீது வழக்குப் பதிவு செய்து குற்றமிழைத்த இருவரையும் உடனே கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

இதுகுறித்து முதலமைச்சர், தலைமைச் செயலர், டி.ஜி.பி., மாவட்ட ஆட்சியர், எஸ்.எஸ்.பி (குற்றம் மற்றும் புலனாய்வு) உள்ளிட்டோருக்கு மனு அனுப்பி உள்ளோம்.

Wednesday, October 09, 2024

சிபிஎஸ்இ 127 அரசுப் பள்ளிகளில் 126 பள்ளிகளுக்கு இணைப்பு அங்கீகாரம்: 1 பள்ளியின் நிலை குறித்து கல்வித்துறை விளக்கம் அளிக்க வேண்டும்!

 


மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல்!!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (09.10.2024) விடுத்துள்ள அறிக்கை:

சிபிஎஸ்இ 127 அரசுப் பள்ளிகளில் 126 பள்ளிகளுக்கு இணைப்பு அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையில் 1 பள்ளியின் நிலை குறித்து கல்வித்துறை விளக்கம் அளிக்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.

மத்திய அரசின் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் 10.09.2024 நாளிட்டு முதலமைச்சர் ரங்கசாமிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அக்கடிதத்தில், புதுச்சேரியில் உள்ள 127 அரசுப் பள்ளிகள் சிபிஎஸ்இ முறைக்கு மாற்றி இணைப்பு (Affiliation) வழங்க வேண்டுமென முதலமைச்சர் கடந்த 29.12.2022 அன்று கடிதம் எழுதி உள்ளார். இதுகுறித்து சிபிஎஸ்இ உடன் கலந்தாலோசித்து பரிசீலித்ததில் 127 அரசுப் பள்ளிகளுக்கு இணைப்புக் கேட்டு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது. மொத்தம் 127 பள்ளிகளில் 126 பள்ளிகள் பரிசீலிக்கப்பட்டு சிபிஎஸ்இ முறைக்கு மாற்றி இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 1 பள்ளிக்கு முழுமையற்ற விண்ணப்பம் சமர்பித்ததால் சிபிஎஸ்இ இணைப்பு வழங்க முடியவில்லை என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.

பள்ளிக் கல்வித்துறை சிபிஎஸ்இ-க்கு 10, 12ஆம் வகுப்புகளுக்குத் தேர்வுக் கட்டணம் செலுத்த போதிய நிதி ஒதுக்கீடு பெற உரிய காலத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டிருந்தோம். ஆனால், இதுவரையில் மேற்சொன்ன தேர்வுக் கட்டணம் செலுத்தியது குறித்து பள்ளிக் கல்வித்துறை உரிய விளக்கம் அளிக்கவில்லை.

இந்நிலையில், சிபிஎஸ்இ இணைப்புப் பெறாத அந்த 1 பள்ளி எது? அப்பள்ளியின் நிலை என்ன? இந்தாண்டு அப்பள்ளியில் பயிலும் 10, 12ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத முடியுமா? சிபிஎஸ்இ இணைப்புப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதா என்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும்.

கல்வித்துறையில் சிபிஎஸ்இ விவகாரங்களைக் கவனிக்கும் பள்ளிக் கல்வி இணை இயக்குநர் போதிய நிர்வாகத் திறமை இல்லாத காரணத்தால் இதுபோன்ற அவல நிலை ஏற்படுகிறது. இதைக் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசோ செயலற்று இருக்கிறது. இதனால், பாதிக்கப்பட போவது மாணவர்கள்தான் என்பதைப் புதுச்சேரி அரசுக்குச் சுட்டிக் காட்டுகிறோம்.

Sunday, September 29, 2024

சிபிஎஸ்இ தேர்வுக் கட்டண நிதி ஒதுக்கீடு குறித்து கல்வித்துறை உண்மைக்கு மாறான அறிக்கை: முதலமைச்சர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!


 மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல்!! 

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (29.09.2024) வெளியிட்ட அறிக்கை:

சிபிஎஸ்இ 10, 12ஆவது வகுப்புத் தேர்வுக் கட்டண நிதி ஒதுக்கீடு குறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் உண்மைக்கு மாறான அறிக்கை வெளியிட்டுள்ளதால், இதுகுறித்து முதலமைச்சர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.

சிபிஎஸ்இ 10, 12ஆவது தேர்வுக் கட்டணம் செலுத்த போதிய நிதி ஒதுக்கீடு செய்ய பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் உரிய காலத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மாணவர்கள் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்படும். இதுகுறித்து தலைமைச் செயலர் தலைமையில் உயர்மட்ட விசாரணைக்கு உத்திரவிட வேண்டுமென கடந்த 26.09.2024 அன்று அறிக்கை வெளியிட்டிருந்தோம். இது செய்தியாக பத்திரிகைகளில் வெளிவந்துள்ளது.

இந்நிலையில், நேற்றைய தினம் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ஒரு செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் உண்மைக்கு மாறான தகவல்களைக் கூறியதோடு, செய்தி வெளியிட்ட பத்திரிகைகளை மிரட்டும் தொனியில் கூறியுள்ளார்.

அந்த அறிக்கையில் சிபிஎஸ்இ 04.10.2024 அன்றைக்குள் தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று 04.09.2024 நாளிட்ட சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. நிதித்துறையின் பட்ஜெட் அதிகாரியால் பட்ஜெட் மதிப்பீடு 26.09.2024 அன்று வழங்கப்பட்டுள்ளது. செலவீனங்கள் ஒப்புதல் பெற பரிசீலனையில் உள்ளது எனவும் கூறியுள்ளார்.

அதாவது 04.09.2024 நாளிட்ட சிபிஎஸ்இ அனுப்பிய சுற்றறிக்கைக் கிடைத்தவுடன் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் காலதாமதமாக கடைசி நேரத்தில் நடவடிக்கை எடுத்ததை ஒப்புக் கொண்டுள்ளார். மேலும், நிதி ஒதுக்கீடு இன்னமும் செய்யவில்லை பரிசீலனையில்தான் உள்ளது எனவும் கூறியுள்ளார். நிதி ஒதுக்கீடு குறித்து முன்வைத்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் ஒப்புக் கொண்டுள்ளார்.

இன்னமும் 6 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், நிதி ஒதுக்கீடு கோப்புக்கு ஒப்புதல் பெற்று தேர்வுக் கட்டணம் செலுத்த முடியுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இதனால் மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் மத்தியில் பெரும் குழப்பம் நிலவுகிறது.

மேலும், அந்த அறிக்கையில் செய்தி வெளியிட்ட பத்திரிகைகளை மிரட்டும் தொனியில் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கூறியுள்ளார். பள்ளிக் கல்வித்துறையின் அவலங்களையும் செயலற்ற போக்கையும் செய்தியாக வெளியிட்டால், அதைச் சரி செய்ய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அதுதான் சிறந்த நிர்வாகியின் செயலாகும். அதைவிடுத்து உரிய காலத்தில் நிதி ஒதுக்கீடு பெற நடவடிக்கை எடுக்காத பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதில் பத்திரிகைகளை மிரட்டுவது கண்டிக்கத்தக்கது. மேலும், இது கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது.

எனவே, இது குறித்து முதலமைச்சர் உடனடியாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென வலியுறுத்துகிறோம்.