Friday, October 09, 2009

மனித உரிமைப் போராளி டாக்டர் கே.பாலகோபால் காலமானார் -இரங்கல்!

வாழ்நாள் முழுவதும் மனித உரிமைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட 'மனித உரிமைப் போராளி' டாக்டர் .கே.பாலகோபால் (வயது: 57) நேற்று (08.10.2009), ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு மனைவி (வசந்தாலஷ்மி), ஒரு மகன் (பிரகதா) உள்ளனர். நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஈடு செய்ய முடியாத இழப்பு இது. மனித உரிமைத் தளத்தில் போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு அவர் ஒரு சிறந்த வழிகாட்டி.

ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டத்தில் பிறந்த பாலகோபால், கணிதத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.வாராங்கலிலுள்ள கக்காடியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றிவர். நக்சல்பாரி அரசியல் மீது ஏற்பட்ட ஈர்ப்புக் காரணமாக அவர் தன் வேலையை உதறிவிட்டு, மனித உரிமைக் களத்தில் இறங்கியவர்.

காவல் மரணங்கள், போலி மோதல், மரண தணடனை ஒழிப்பு ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்திப் போராடியவர். 'ஆந்திரபிரதேச சிவில் உரிமைக் குழு' என்ற அமைப்பில் பணியாற்றியவர். நக்சலைட் அமைப்புடன் முரண்பாடு ஏற்பட்டு, தனியாக 'மனித உரிமை அமைப்பு' நிறுவி செயல்பட்டவர்.

80-களில் ஆந்திர போலீசார் முன்னின்று நடத்திய 'பிரஜா பந்து' என்று அமைப்பினரால் கடத்தப்பட்டவர். இவரைக் கடத்தி வைத்துக் கொண்டு நக்சலைட் அமைப்பினர் பிடியில் இருந்த இரண்டு போலீசாரை விடுவிக்க 'பிரஜா பந்து' அமைப்பினர் கோரிக்கை வைத்தனர். பின்னர் நக்சலைட்கள் இரண்டு போலீசாரையும் விடுவித்த பின்னர் விடுவிக்கப்பட்டவர்.

போலி மோதல் குறித்து ஆந்திர உயர்நீதிமன்றத்தில் வாதாடி, போலி மோதல் நடந்தால் இந்திய தண்டனைச் சட்டம் 302 பிரிவின்கீழ் போலீசார் மீது வழக்குப் பதிய வேண்டும் என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை பெற்றுத் தந்தவர். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கறிஞராக ஆந்திர உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி வந்தவர்.

தலை சிறந்த எழுத்தாளர். தொடர்ந்து EPW போன்ற இதழ்களில் எழுதி வந்தவர். அவரது எழுத்தில் நேர்மையும், கறாரான பார்வையும் வெளிப்படும். சில ஆண்டுகளுக்கு முன் அவரை நேர்காணல் கண்டது நெகிழ்வான அனுபவம்.

1992 முதல் அவரோடு நான் நெருக்கமான உறவுக் கொண்டவன். 1996-இல் போலீசாரின் அச்சுறுத்தல் நிறைந்த சூழலில் அந்திராவின் நக்சலைட்கள் ஆதிக்கம் நிறைந்த நான்கு மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, போலி மோதல் குறித்து ஆய்வு மேற்கொண்டது மறக்க முடியாதது. 1998-இல் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 26 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்ட போது, அதை எதிர்த்து முதலில் குரல் கொடுத்தவர்.

ஒரிசா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் கிறித்துவர்கள் மீது நடந்த தாக்குதல் குறித்த உண்மை அறியும் குழுவில் இடம்பெற்று அவ்ரோடு பணியாற்றினேன். அதுதான் அவரை கடைசியாக பார்த்தது. கடந்த ஆகஸ்ட் 7-ந் தேதி முஸ்லீம் இடஒதுக்கீடு குறித்து அவரிடம் விரிவாக தொலைபேசியில் உரையாடியதுதான் கடைசி பேச்சு.

அவரது உடல் இன்று (09.10.2009) மாலை 4 மணிக்கு அடக்கம் செய்யப்படுகிறது. அவரது இறப்பிற்கு இந்தியா முழுவதும் உள்ள மனித உரிமை அமைப்பினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல். இன்னும் விரிவாக பாலகோபால் பற்றி எழுத உள்ளேன். இந்தப் பதிவையும் கூட அழுகையை அடக்கிக் கொண்டுதான் எழுதினேன்.

1 comment:

தங்க முகுந்தன் said...

மனித உரிமைகளுக்காக அரும்பணியாற்றிய அமரர் கே. பாலகோபால் அவர்களுடன் உங்கள் தொடர்பு மற்றும் அவரது அரும்பணிகள் பற்றிய செய்திகள் மனதை கசியவைக்கிறது! அவரைப் போன்ற மனிதத்துவமுடைய மனிதர்களைத் தான் நாமும் எதிர்பார்த்திருக்கிறோம். நாடும் எதிர்பார்த்திருக்கிறது. அவரது ஆத்ம சாந்திக்கு எமது பிரார்த்தனைகள். தகவலுக்கு நன்றி!