Saturday, September 08, 2012

இதயத்தின் ஆழத்தில் சூல்கொள்ளூம் மாயவிதை

சென்ற சென்னை புத்தகக் கண்காட்சியில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (NCBH) வெளியிட்டுள்ள மூன்று ரஷ்ய நாவல் புத்தகங்களை வாங்கி வந்தேன். அவை விளாதிமிர் கொரலென்கோ எழுதிய கண் தெரியாத இசைஞன், சிங்கிஸ் ஐத்மாத்தவ் எழுதிய ஜமீலா, அன்னை வயல். கண் தெரியாத இசைஞன் 2003ல் படித்ததாக ஞாபகம். பழைய பதிப்பு ஒன்று கிடைத்தது படித்தேன். மதுரைக்குச் சென்று திரும்பியவுடன் சற்று உடல் நிலை சரியில்லாமல் போனது. அதற்கு மன நிலையும் ஒரு காரணம். அப்போது இந்த நாவல்களைப் படித்தேன்.

கண் தெரியாத இசைஞனின் நுட்பமான, துல்லியமான வாழ்க்கை எழுத்தில் பதிவு செய்யப்பட்ட விதம் மிக அழகு. இரு கண்கள் தெரியவில்லை என்றாலும் உடலின் ஒவ்வொரு உறுப்பும் உணர்ச்சியையும், உணர்வையும் உள்வாங்கி அவனை அவை இயக்குவதைப் புரிந்துக் கொள்ள முடிகிறது. அன்னை வயல் போராட்டக் களத்தில் ஒரு தாய் எவ்வாறு தன் வாழ்வுக்காகப் போராடுகிறாள் என்ற சோகம் அழுத்தமாக விவரிக்கப்பட்டுள்ளது. தாயின் போராட்டத்தின் ஊடாகவே வீரஞ்செரிந்த மக்கள் போராட்டம் கண்முன் நடப்பது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. ஜமீலா ஒரு அழகு தேவதையின் காதல் பற்றிய ரசனை நிறைந்த சித்தரிப்பு. கணவனைப் போருக்கு அனுப்பிவிட்டு, இளம் வயதின் உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டு அவள் படும்பாடு, அதன் ஊடாக அவளுக்குள் நுழையும் காதல், அதை எதிர்க் கொள்ளூம் சிக்கலான மனநிலை, இறுதியில் அவள் துணிந்து எடுக்கும் முடிவு என கண்களில் கனவுகளை நிழலாட செய்யும் நாவல்.

ஜமீலா புத்தகத்திற்கு எழுதப்பட்டுள்ள பதிப்புரை நூல் வெளியீட்டாளர்களை இந்நாவல் எந்தளவிற்கு உலுக்கியுள்ளது என்பதைக் காட்டுகிறது. அதன் ஒரு பகுதி இது.

“காதல் எந்த இரும்பு இதயத்தையும் பலமிழக்க வைத்துவிடும். மனித இதயத்தின் ஆழத்தில் சூல்கொள்ளூம் மாயவிதை அது. ஆண் பெண் நட்பிற்குப் பின்னால் ஒளிந்து கிடக்கும் ஆச்சரியக் குறியீடு!

காதல் யாருக்கும் எப்போதும் வரலாம். அது அவரவர் சூழலைப் பொறுத்தது.

இக்குறுநாவலின் மீது மெல்ல செவி சாய்த்து ஒட்டுக் கேட்டால் ரயில் ஓடும் ‘தடக் தடக்’ சப்தமும், பச்சைப் பசேலென நீளும் புல்வெளிகளும், வயல்வர்ப்புகளும், கணவாய் அடுத்து பாறைகளினூடே ஒரு ரட்சஷனின் நீள நாக்கைப் போல் நீண்டுகொண்டே போகும் ஒற்றையடி செம்மண் பாதையும், அதிலே ஓரிரண்டு குதிரை வண்டிகளின் சப்தமும், இருமருங்கே ஒன்றையொன்று பிடித்துத் தள்ளிக்கொண்டு முந்தியபடி குதித்தோடும் சிற்றோடைகளின் அழகும் கண்முன்னே விரியும்.

கதையின் கதவைத் திறந்துகொண்டு உள்ளே சென்றால்…’ஜமீலா’ எனும் ஒரு அழகு தேவதை முன்னிற்பாள்.”

1 comment:

இரா.சுகுமாரன் said...

ஜமீலா நாவல் நானும் வைத்திருக்கிறேன். எப்போதோ படித்தது. கொஞ்சம் கொஞ்சம் நினைவு வருகிறது.
நன்றி