Tuesday, May 16, 2006

அரசியல் அதிகாரப் போட்டியில்

நேர்காணல் : கோ. சுகுமாரன் .

அரசியல் அதிகாரப் போட்டியில் முதல் பலி சமூக மாற்றத்திற்கானப் போராட்டமே-

டாக்டர் கே. பாலகோபால்

மக்கள் யுத்தக் குழுவுக்கும், அரசுக்கும் இடையில் அண்மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கும், இதற்கு முன்பு நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன?

தற்பொழுதுள்ள நிலையில் சி.பி.அய். (மாவோயிஸ்ட்) க்கும், ஆந்திரப் பிரதேச அரசுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டது. தெலுங்கு தேசம் ஆட்சியில் இருந்தபோது, பேச்சுவார்த்தை நடந்ததாகச் சொல்லப்பட்டாலும், அதன் மூலம் எந்தப் பயனும் ஏற்படவில்லை. ஏனெனில், பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்பே ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்று சந்திரபாபு (நாயுடு) வலியுறுத்தினார். இது, முற்றிலும் நடைமுறைச் சாத்தியமற்ற முன்நிபந்தனையாகும். ஏனெனில், நக்சலைட்டுகள் பொது நீரோட்டத்திற்கு வர விரும்புகிறார்கள் என்பதும், அதற்கு ஒரு மதிப்புமிக்க வழியை எதிர்பார்த்து நிற்கிறார்கள் என்பதும் யாரும் நம்பக்கூடியதாக இல்லை. அவர்கள் அப்போதும் சரி, இப்போதும் சரி, ஆயுதப் போராட்டத்தைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.



புரட்சிகரப் போராட்டத்திற்கும், அதற்கெதிரான அரசின் கொடூரத் தாக்குதலுக்கும் இடையே சிக்கித் தவிக்கும் பொது மக்களின் நிலையிலிருந்துதான் அனுபவம் மிக்க பொது நல ஆர்வலர்களைக் கொண்ட "அக்கறையுள்ள குடிமக்களின் குழு', விவாதத்திற்குரிய இப்பேச்சுவார்த்தையை முன்வைத்தது. இப்பேச்சுவார்த்தைகூட, காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்த பிறகு ராஜசேகர (ரெட்டி), தொடக்க நிலையில் எந்த முன்நிபந்தனைகளையும் வைக்காததால்தான் நடைபெற்றது. காங்கிரஸ் அரசு, நக்சலைட்டுகளுடன் முன்நிபந்தனையற்ற போர் நிறுத்தத்தை அறிவித்தது. நக்சலைட்டுகளும் தங்கள் சார்பில் இத்தகையதொரு போர் நிறுத்தத்தை ஏற்று, பேச்சுவார்த்தைக்கென எந்த முன்நிபந்தனைகளையும் விதிக்கவில்லை. விவாதத்திற்குரிய ஒரே பொருள் என்னவெனில், பேச்சுவார்த்தை காலங்களில் ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லை என்ற உறுதியை அளித்திருக்கும் நக்சலைட்டுகள், ஆயுதங்களுடன் வருவார்களா, இல்லையா என்பதே. மாவோயிஸ்டுகள் குறைந்தபட்ச அளவில்கூட ஆயுதங்களைக் கீழே வைக்க முடியாது என்பதை வலியுறுத்தினர்.

ஆனால், ஆயுதப் போராட்டத்தையே அவர்கள் கைவிட வேண்டும் என்று முன் நிபந்தனையிடும் அரசு, பேச்சுவார்த்தை மற்றும் போர் நிறுத்த காலங்களில் அவர்கள் ஆயுதங்களுடன் நடமாடுவதை விரும்ப வில்லை. நாங்கள் ஆயுதமேந்தத் தவறினால், எதிரிகளால் தாக்கப்படுவோம் என்று மாவோயிஸ்டுகள் அச்சப்பட்டிருந்தால், அரசு அவர்கள் தங்கள் தற்காப்புக்காக ஆயுதங்களை வைத்துக் கொள்ளலாம் என்று அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஒப்புக் கொண்டிருக்கும். ஆனால், மாவோயிஸ்டுகளின் ஆட்சேபனை வெறும் அடையாளத்திற்காக மட்டுமே சொல்லப்பட்டதாக இருந்தது. இத்தகையதொரு அணுகுறை, பேச்சுவார்த்தைக்குத் தடையாக இருந்திருக்க வேண்டியதில்லை.பேச்சுவார்த்தைக்கான தேவையை மாவோயிஸ்டுகளோ, அரசோ மிக உறுதியாக உணர்ந்ததாகத் தெரியவில்லை. நக்சலைட்டுகள் நடமாட்டம் இருக்கும் பகுதிகளில் உள்ள ஆளும் கட்சியினர்தான், பேச்சு வார்த்தை நடைபெற வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தனர்.

இருப்பினும், கடந்த கால நிகழ்வுகளுக்கு எதிராக, ராஜசேகர (ரெட்டி) மிகவும் தந்திரமாக நடந்து கொண்டார். இப்பிரச்சினையில் இவருக்கு முன்பிருந்த சந்திரபாபு (நாயுடு)வின் கருத்தையே கொண்டிருந்த இவர், தான் அளித்திருந்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினார். எனவே, இப்பிரச்சனையில் அவர் எதையும் சொல்லாமல், அவருடைய உள்துறை அமைச்சரே எல்லா பேச்சுவார்த்தையிலும் முன்னின்று நடத்துமாறு பார்த்துக் கொண்டார். எந்தவொரு நோக்கமற்ற முதல் சுற்றுப் பேச்சுவார்த்தையை, ஊடகங்கள் மட்டுமே முக்கியச் செய்தியாக்கின. ஆனால், சந்திரபாபு (நாயுடு) எழுப்பிய அதே சந்தேகங்களைத்தான் ராஜசேகர (ரெட்டி)யும் எழுப்பினார்: சட்டப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு, சட்டத்திற்கு எதிராக ஆயுதமேந்திப் போராடும் போராளிகளுடன் அவர்கள் ஆயுதத்தைக் கீழே போடாத நிலையில் எப்படிப் பேச்சுவார்த்தை நடத்த முடியும்? அதே நேரத்தில், இப்போர் நிறுத்த ஒப்பந்தத்தை சீர்குலைக்கவும் காவல் துறைக்கு அனுமதியளித்து, "என்கவுன்டர்' மரணத்தையும் நடத்தத் தொடங்கினார். அதற்குப் பிறகு, பேச்சுவார்த்தைகளுக்கு வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது.

பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்து, மாவோயிஸ்ட் கட்சி மீண்டும் தடை செய்யப்பட்டு விட்டது. இனி என்ன நடக்கும் என்று நினைக்கின்றீர்கள்?
முன்னெப்போதைக் காட்டிலும், தற்பொழுது நிலவும் சூழல் மிகவும் ஆபத்தானது. மாவோயிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது, கவலைக்குரிய செய்தி அல்ல. ஏனெனில், 1992 லிருந்து 2004 வரை அது தடை செய்யப்பட்டிருந்தது. மக்கள் எழுச்சியை முடக்குவதற்கான கொடூர வழிறைகள் இல்லாவிடில் அனுதாபிகளுக்கும், மாவோயிஸ்டு உறுப்பினர்களுக்கும் பெரிய அளவில் நேரடியான பாதிப்பு இருந்திருக்காது. ஆனால், மக்கள் எழுச்சியை முடக்குவதற்கான இந்தப் புதுவித வழிமுறைகள் தான் கவலையை ஏற்படுத்துகின்றன.

இதனால்தான் பெயரே தெரியாத சில குழுக்கள் தங்களை "டைகர்', "கோப்ரா' என்று சித்தரித்துக் கொண்டு, மக்கள் அமைப்புகளின் தொண்டர்களைத் தாக்கி வருகின்றனர். மாவோயிஸ்டுகளுக்கு நெருக்கமாக உள்ள ஜனநாயக சக்திகளை வெளிப்படையாகவே கொன்று வருகின்றனர். தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியில் இருந்தபோது, ஆந்திரப் பிரதேச சிவில் உரிமைக் குழுவைச் சேர்ந்த புருஷோத்தம் மற்றும் முகமது ஆசாம் அலி என்ற இரண்டு சிவில் உரிமைப் போராளிகளை, இந்த "டைகர்'கள் முதலில் கொன்றனர் என்பது உண்மைதான். ஆனால், காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தபிறகு, பல்வேறு "கோப்ரா'க்கள் இதற்கு முன்பு இல்லாத வகையில் பரவலாக செயல்படத் தொடங்கி விட்டனர். அரசுக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததும், ஆறு மாதத்திற்குள்ளாகவே மிகப் பெருமளவுக்கு வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவாக இருக்கும் ஆசியர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள் என யாராக இருந்தாலும், அவர்கள் மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவாக அல்லது மறைமுகமாக அரசு வன்முறைக்கு எதிராகப் பேசுகின்றவர்களாக இருந்தாலும் இந்த அமைப்புகள் மிகக் கொடூரமாகக் கொன்றுள்ளன. பல்வேறு அமைப்புகளில் இருந்த தனிப்பட்ட போராளிகள் மட்டுமல்ல; ஒட்டுமொத்த அமைப்புகளுமே இத்தகைய முகமூடி கொலைகாரர்களைக் கண்டு, தங்கள்அமைப்பைக் கலைத்து விட்டனர். மனித உரிமை அமைப்பினர் மட்டுமே செயல்பட்டு வந்தனர். இதைச் சொல்லும் போதே, அப்படி நடந்துவிடாமல் இருக்க வேண்டுமே என்ற கவலையும் ஏற்படுகிறது.

வன்முறையை அவர்களால் ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை என்று கேட்டால், மாவோயிஸ்ட் வன்முறையால் பாதிப்புக்குள்ளானவர்கள், அவர்களுக்கு பதிலடி கொடுப்பதற்காக தாங்களாகவே ஆயுதமேந்தியிருக்கலாம்; எப்படி (காவல்துறை) அவர்களால் மாவோயிஸ்ட்டு வன்முறையைக் கட்டுப்படுத்த முடியவில்லையோ, அதேபோல அவர்களால் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான வன்முறையையும் கட்டுப்படுத்த முடியவில்லை என்று கூறுகின்றனர். இத்தகைய கூலிப்பட்டாளங்களில் உள்ள சிலர், நக்சலைட்டுகளால் பாதிப்படைந்தவர்களாகவோ, இல்லாமலோ இருக்கலாம். ஆனால், எல்லோருமே அப்படிப்பட்டவர்கள் என்பதில் உண்மையில்லை. நம்முடைய சந்தேகம் என்னவெனில், பெரும்பான்மையான "கோப்ரா'க்களும் "டைகர்'களும் போலிஸ்காரர்கள் என்பதுதான். இன்னொரு சந்தேகம், குற்றவாளிகளாக மாறிய முன்னாள் நக்சலைட்டுகள் சிலர், முன்னாள் தோழர்களுக்கு எதிராக, போலிஸ் பாதுகாப்புடன் செயல்படுகிறார்கள் என்பதும் உண்மையே. இத்தகைய போக்குகள், மிகவும் ஆபத்தானவை; இது பல்வேறு கொடிய வன்முறையாளர்களையே உருவாக்கும். காவல் துறைக்கு காட்டிக் கொடுப்பவர்களும், தங்களுடைய தனிப்பட்ட பாதுகாப்பு கருதி, இத்தகைய கொலைக்கூட்டங்களில் சேருகிறார்கள் என்றும் மாவோயிஸ்டுகள் கூறுகின்றனர்.

ஒரு மனித உரிமைப் போராளியாக உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் எதிர்கொண்ட தாக்குதல்கள் பற்றி சொல்லுங்கள்.


மனித உரிமைகளுக்காக களப்பணியாற்றுவது, எப்போதுமே ஆபத்துகள் நிறைந்தது. 1985 சூன் மாதம்தான் நான் முதல் முறையாக "அகில இந்திய வித்யார்த்தி பஷத்' ஆட்களால் வன் முறைக்கு ஆளானேன். கரிம்நகர் மாவட்டத்தில் உள்ள ஜக்டியல் என்ற பேருந்து நிலையத்தில், இரும்பு நாற்காலிகளாலும், ஹாக்கி மட்டைகளாலும் நான் தாக்கப்பட்டேன். இதற்குப் பழிவாங்கும் வகையில், அவர்களில் இருவர் நக்சலைட்டுகளால் கொல்லப்பட்டனர். ஆனால், இதற்கும் முன்னதாகவே "ஆந்திரப் பிரதேச சிவில் உரிமைக் கழக'த்தைச் சேர்ந்த கோபி ராஜண்ணா என்ற போராளி, சனவரி மாதம் இதே ஊரில் சங்பரிவார் கும்பலால் கொல்லப்பட்டார். அதற்குப் பிறகு அதே ஆண்டு, செப்டம்பர் 3 அன்று, ஆந்திரப் பிரதேச சிவில் உரிமைக் கழகத்தின் துணைத் தலைவர் டாக்டர் ராமநாதம், வாரங்கல்லில் பட்டப் பகலிலேயே கொல்லப்பட்டார். இது, காஜிப் பட்டு என்ற இடத்தின் காவல் துணை கண்காணிப்பாளரை, நக்சலைட்டுகள் (அப்போதைய மக்கள் யுத்தக் குழு) கொன்றதற்கானப் பழிவாங்கும் நடவடிக்கையாகும். நான் இந்த அமைப்பின் பொதுச் செயலாளராக இருந்தபோது, 7.12.91 அன்று வாரங்கல்லில் நாராபிரபாகர் (ரெட்டி) யும், 7.12.86 அன்று கரிம்நகர் மாவட்டத்தில் உள்ள அங்குனூல் ஜபா லட்சுமணன் (ரெட்டி)யும் கொல்லப்பட்டனர். இவர்கள் இருவருமே ஆந்திரப் பிரதேச சிவில் உரிமைக் கழகப் போராளிகளாவர்.

1989 இல், நான் கம்மம் அருகில் அய்தராபாத்தை நோக்கிப் பேருந்தில் சென்று கொண்டிருந்தபோது கடத்தப்பட்டேன். நக்சலைட்டுகளால் கடத்தப்பட்ட காவலர்களை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, இரண்டு இரவுகள் கண் கட்டப்பட்டு பிணைக் கைதியாக நான் வைக்கப்பட்டிருந்தேன். 1991 ஆம் ஆண்டு கம்மம் மாவட்டம் கோதகுடம் என்ற இடத்தில் மீண்டும் போலிஸ் ஏற்பாடு செய்த கிரிமினல்களால் தாக்கப்பட்டேன். என் முகத்தில் கடுமையாகத் தாக்கினார்கள். டாக்டர் ராமநாதம் என்பவர் பெயரில், நினைவு மண்டபம் எழுப்புவதற்காக நான் சேகரித்த பணத்தையெல்லாம் அவர்கள் பிடுங்கிக் கொண்டார்கள்.

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள தலித் இயக்கங்கள் பற்றி தங்களுடைய பார்வை என்ன?

ஆந்திரப் பிரதேசத்தில் 1985 இல் எழுச்சியுடன் தோன்றிய தலித் இயக்கம்தான், பார்ப்பனியத்தின் மீதான முதல் தாக்குதலாகும். இம்மாநிலத்தின் பார்ப்பன எதிர்ப்பு இயக்கம், தமிழ் நாட்டைப் போல வலுவாக இல்லை. இங்கு அதற்கான இடத்தை கம்யூனிஸ்ட் இயக்கம் ஆக்கிரமித்துக் கொண்டது. அது சில வழிகளில் ஒரு பரந்த செயல் திட்டத்தைக் கொண்டிருப்பினும், பார்ப்பனியத்தை விமர்சிப்பதில் அது பலவீனமுடனேயே இருக்கிறது. ஒரு துடிப்பான பகுத்தறிவு நாத்திக இயக்கம் இருந்தாலும், அது சூத்திரர்களில் மேலடுக்கில் உள்ள சாதியினரால் நடத்தப்படுகிறது. எனவே, அது பார்ப்பனியத்தை எதிர்ப்பதில் சில எல்லைகளைக் கொண்டிருக்கிறது. "கம்மா' மற்றும் "ரெட்டி' சாதிகளைக் கொண்ட இவ்வியக்கம், கொள்கையளவில் வர்ணாசிரம தர்மக் கோட்பாட்டை விமர்சிக்கிறது. ஆனால், தங்களைப் பார்ப்பனர்களுக்கு ஏற்புடையவர்களாகவும், அதே நேரத்தில் சூத்திரர்களிலேயே ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு சமத்துவத்தை, உரிமைகளை மறுப்பவர்களாகவுமே உள்ளனர். பஞ்சமர்கள் என்று வந்து விட்டால், இதைவிட மோசமாக நடந்து கொள்கின்றனர்.

இதற்கும் மேலாக, பகுத்தறிவு இயக்கத்தில் இருந்த கணிசமான பிரிவினர் மார்க்சிஸ்டுகளாக இருப்பது, பார்ப்பனியத்தை விமர்சிப்பதற்குத் தடையாக இருக்கிறது. மார்க்சியத்தின் கருதுகோள்களான அடித்தளம், மேல்கட்டுமானம், வர்க்கப் போராட்டம் போன்றவை, பார்ப்பனியத்தை எதிர்கொள்ளும் திறனற்றவையாக உள்ளன. பார்ப்பனியத்தை, அது முன்வைக்கும் வாழ்க்கை முறையை அதனளவிலேயே ஒட்டுமொத்தமாக எதிர்க்க வேண்டும். புலே, அம்பேத்கர், பெரியார் ஆகியோரின் சிந்தனைகளில் குறைபாடுகள் இருக்கலாம். ஆனால், பார்ப்பனிய எதிர்ப்பு என்பதில் அவர்களுடைய வழிமுறை மிகச் சிறப்பாக இருந்தது என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்.

17.7.1985 அன்று கரம்சேடு என்ற இடத்தில் "கம்மா' சாதியினரால் தலித் மக்கள் கொல்லப்பட்டபோதுதான் "ஆந்திரப் பிரதேச தலித் மகாசபா' என்ற தலித் இயக்கம் தோன்றியது. அதற்குப் பிறகுதான், ஒரு சிறு குழுவிற்குள் முடங்கியிருந்த அம்பேத்கரின் சிந்தனைகள், ஒரு மாபெரும் அரசியல் கொள்கையாக மாறியது. எண்பதுகளின் பிற்பகுதியில் மிகப் பிரபலமாக இருந்த "தலித் மகாசபா', தொண்ணூறுகளின் தொடக்கம்வரை ஆற்றலுடனேயே செயல்பட்டது. தலித் மக்களின் அன்றாட நடைமுறைப் பிரச்சினைகளையொட்டி அவர்களை ஒருங்கிணைக்காததாலும், கொள்கைத் தளர்ச்சியினாலும்தான் அது படிப்படியாக சரிவை சந்தித்தது. முற்போக்கு அமைப்புகளின் அடிப்படைகளைத் தகர்க்கும் பலவீனங்கள், தலித் அமைப்புகளையும் விட்டுவைக்கவில்லை என்பது வியப்புக்குரிய ஒன்றல்ல.

எல்லா முற்போக்கு இயக்கங்களைப் போலவே தலித் இயக்கத்திலும் ஊழல், சுயநலம், தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினரைப் போல, எல்லா போராட்டங்களுக்கும் மத்தியில் சுகங்களை அனுபவிப்பது போன்றவையும் ஒரு காரணம். கொள்கை அளவில் அரசு அதிகாரம் என்ற மாயையின் பின்னால் தொடர்ந்து செல்வது, முக்கியத் தடையாக இருக்கிறது. தலித் சிந்தனையாளர்கள் தாழ்த்தப்பட்ட, மலைவாழ், பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின மக்களின் ஒருங்கிணைப்பை மீண்டும், மீண்டும் வலியுறுத்தி அரசியல் அதிகாரத்தைப் பெற்றுவிடலாம் என்று கணக்குப் போடுவது, மிகச் சாதாரணமாகிவிட்டது. இதனால் சமூக மாற்றத்திற்கானப் போராட்டம்தான் முதலில் பலியாகிறது. சீர்திருத்தம் அல்லது புரட்சி என்று எப்படி அழைத்தாலும் அதுதான் புலே, பெரியார் மற்றும் அம்பேத்கர் காண விரும்பியதாகும்.

- பேட்டி அடுத்த இதழிலும்...

நன்றி: தலித முரசு

1 comment:

Anonymous said...

நன்றி சுகுமாரன் அவர்களே!
உங்கள் பணி தொடரட்டும்