Monday, November 13, 2006

மரண தண்டனை ஒழிப்புக்கு வலுசேர்க்கும் நூல்

அப்சலின் மரண தண்டனையைக் குறைக்கப் போராடிக் கொண்டிருக்கும் தில்லியைச் சேர்ந்த “Society for Protection of Detenues and Prisoners Rights (SPDPR)“ என்ற அமைப்பு வெளியிட்டுள்ள “முகமது அப்சல் குரு தூக்கிலிடப்படத்தான் வேண்டுமா?“ என்ற புத்தகத்தைத் தமிழில் பேராசிரியர் அ.மார்க்ஸ் மொழிபெயர்த்துள்ளார். தமிழில் முக்கிய பல நூல்களை வெளியிட்டுள்ள “கருப்புப் பிரதிகள்“ பதிப்பகம் இப்புத்தகத்தை வெளியிட்டுள்ளது.

8-11-2006 அன்று புதுச்சேரி செய்தியாளர்கள் மன்றத்தில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது, இப்புத்தகத்தை செந்தமிழர் இயக்க அமைப்பாளர் ந.மு.தமிழ்மணி வெளியிட தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி பெற்றுக் கொண்டார். பேராசிரியர் அ.மார்க்ஸ் முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியில் மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பாளர் இரா.மங்கையர்செல்வன், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை அமைப்பாளர் சி.மூர்த்தி, இராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் தி.சஞ்சீவி, மக்கள் சிவில் உரிமைக் கழகத் துணைத் தலைவர் இர.அபிமன்னன் ஆகியோர் உடன் இருந்தனர்.

பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் போலீஸ் திட்டமிட்டுப் புனைந்த குற்றச்சாட்டுகள், விசாரணையில் நடைபெற்ற குளறுபடிகள், வழக்கறிஞர்கள் செய்த துரோகம், ஊடகங்கள் ஏற்படுத்திய பரபரப்பானப் பொய்க் கதைகள், குற்றஞ்சாட்டப்பட்டவரின் நியாயத்தைக் காது கொடுத்துக் கேட்காத நீதிமன்றங்கள்...என இழைக்கப்பட்ட “தொடர் அநீதி“யின் விளைவுதான் அப்சலுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை என்பதை ஆதாரத்துடன் முன் வைக்கிறது இந்நூல்.

தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் மரண தண்டனை ஒழிப்புப் போராட்டத்திற்கு இந்நூல் மேலும் வலுசேர்க்கும் என்பதில் அய்யமில்லை.

“முகமது அப்சல் குரு தூக்கிலிடப்படத்தான் வேண்டுமா?“

முன்னுரையும் மொழிபெயர்ப்பும் : அ.மார்க்ஸ்
முதற் பதிப்பு : நவம்பர் 2006.
பக்கம் : 64. விலை : ரூ.25.00.
முகவரி : 45-அ, இஸ்மாயில் மைதானம்,
லாயிட்ஸ் சாலை, சென்னை – 600 005.
செல் : 94442 72500.
மின்னஞ்சல் : karuppu2004@rediff.com.

1 comment:

ROSAVASANTH said...

அங்கிலத்தில் வாசிக்க
http://rozavasanth.blogspot.com/2006/10/blog-post_24.html