Thursday, September 20, 2007

புதுதில்லியில், உலக வங்கியின் தாக்கங்கள் குறித்து மக்கள் தீர்ப்பாயம்

புதுதில்லியில் 2007, செப்டம்பர், 21 முதல் 24 வரை 4 நாட்கள் உலக வங்கி குறித்து மக்கள் தீர்ப்பாயம் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது.

இந்தியா போன்ற வளர்ந்து வரும் மூன்றாம் உலக நாடுகள் மீது வளர்ச்சி என்ற பேரில், உலக வங்கியின் திட்டங்களால் எவ்வாறு நமது வளங்கள் சுரண்டப்படுகின்றன என்பதை வெளிக் கொண்டு வருவதற்கான முன்முயற்சியே இந்த மக்கள் தீர்ப்பாயம்.

உலக வங்கி, அடித்தட்டில் உழலும் பாதிக்கப்பட்ட சமூகத்தினரிடையே ஏற்படுத்திய தாக்கங்கள்:
குறிப்பாக -

1)பெண்கள், குழந்தைகள், சிறுபான்மையினர், ஆதிவாசிகள், விவசாயிகள்.

2)சுற்றுச் சூழல், மனித உரிமைகள்.

3)மிகப் பெரிய மூலதனம் கொண்ட பன்னாட்டு நிறுவனங்களின் நலனுக்காக உலக வங்கியின் திட்டங்கள்.

4)சமூக வளர்ச்சிக்கானத் திட்டங்களாகிய வறுமை ஒழிப்பு, ஏற்றதாழ்வைக் குறைத்தல், உணவு, கல்வி, மருத்துவம் போன்ற திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் தலையிடுதல் (எடுத்துக்காட்டாக மானியம் வெட்டு).

5)அரசு, தனியார் துறையிலும் ஒளிவுமறைவின்மை, ஊழல், பதிலளிக்கும் கடமை ஆகியவற்றால் ஏற்பட்ட தாக்கங்கள்.

6)நாட்டின் ஆளுகை, இறையாண்மை, ஜனநாயக மதிப்பீடுகள் மீதான தாக்கம்.

7)சமூகத்தில் உண்டாக்கப்படும் மோதல்கள், இராணுவமயமாக்கல்.

ஆகியவை குறித்து இத்தீர்ப்பாயத்தில் விவாதிக்கப்பட உள்ளன.

இதில், உலக வங்கித் திட்ட்த்தால் பாதிக்கப்பட்டோர், இவற்றை எதிர்த்துப் போராடும் இயக்கத்தினர், அரசுத் தரப்பினர், உலக வங்கிப் பிரதிநிதிகள் என பல தரப்பினரும் கலந்து கொள்கின்றனர்.

இத்தீர்ப்பாயத்தில், எழுத்தாளர்கள் அருந்த்திராய், மகேஸ்வதா தேவி, முன்னாள் நீதிபதிகள் பி.பி.சாவந்த், எச்.சுரேஷ், உஷா, சமூக ஆர்வலர்கள் மெகர் இஞ்சினியர், அருணா ராய், பேராசிரியர் அமித் பதூரி உள்ளிட்டவர்கள் நடுவர்களாக இருந்து வழிநடத்த உள்ளனர்.
சமூக ஆர்வலர் மேதா பட்கர், பத்திரிகையாளர் பிரபுல் பித்வாய், மனித உரிமை ஆர்வலர், மூத்த வழக்கறிஞர் கே.ஜி.கண்ணபிரான், பிரசாந்த் பூஷன், அர்ஷ் மந்தர் உள்ளிட்ட ஏராளமான அறிஞர்கள் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்க உள்ளனர்.

இந்தியா முழுவதும், உலக அளவிலும் செயல்படும் 50-க்கும் மேற்பட்ட அமைப்புகள் இத்தீர்ப்பாயத்தை நடத்துகின்றன. ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக ஆசிரியர்கள் சங்கம், மாணவர் சங்கம் ஆகியவையும் இவ்வமைப்புகளுடன் இணைந்து செயல்படுகின்றன.
இத்தீர்ப்பாயத்தில் தமிழகம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து பலர் கலந்துக் கொள்கின்றனர். புதுச்சேரியிலிருந்து மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன், சென்னயிலிருந்து தோழமை அமைப்பு சார்பில் அ.தேவநேயன் உள்ளிட்டவர்கள் பங்கேற்கின்றனர்.

மேலதிக தகவல்களுக்கு:

உலக வங்கி தீர்ப்பாயம்

No comments: