Sunday, March 23, 2008

புதுச்சேரி அமைச்சர் வல்சராஜ் பதவி விலக கோரி சட்டசபை முற்றுகை - 500 பேர் கைது!

demo-against-valsarajjpg.jpg

புதுச்சேரியில் ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளான நலவழித் துறை அமைச்சர் இ.வல்சராஜ் உடனடியாக அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி 13-03-2008 காலை சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி மாநிலம், மாகேயில் கூட்டுறவுத் தகவல் தொழில் நுட்ப மையத்திற்கு நிலம் வாங்கியதில் நடந்த ஊழல், முறைகேடுகள் தொடர்பாக புதுச்சேரி லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், நலவழித் துறை அமைச்சர் இ.வல்சராஜ் மீது ஊழல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு காவல்துறையினர் வழக்குப் புலன் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளான அமைச்சர் இ.வல்சராஜை உடனடியாக அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும், வழக்கை மத்திய புலனாய்வுத் துறை (சி.பி.ஐ.) விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்திற்கு, விடுதலைச் சிறுத்தைகள் சு.பாவாணன், மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பாளர் இரா.மங்கையர்செல்வன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன், ஜனநாயக முன்னேற்றக் கழக அமைப்பாளர் பா.அழகானந்தம், செந்தமிழர் இயக்க அமைப்பாளர் நா.மு.தமிழ்மணி, தமிழர் திராவிடர் கழகத் தலைவர் மு.அ.குப்புசாமி உள்ளிட்ட கட்சி, இயக்கப் பொறுப்பாளர்கள் முன்னிலை வகித்தனர்.

இதில் கலந்துக் கொண்ட 150 பெண்கள் உட்பட 500 பேரை போலீசார் கைது செய்தனர்.

No comments: