Sunday, January 18, 2009

புதுச்சேரியில் எழுச்சியாக நடந்த அ.மார்க்ஸ் எழுதிய "கிறிஸ்தவர்களின் மீது தாக்குதல்" நூல் வெளியீட்டு விழா!



பேராசிரியர் அ.மார்க்ஸ் எழுதியுள்ள ‘கிறிஸ்தவர்களின் மீது தாக்குதல் ஒரிசா – கர்நாடகம்’ நூல் வெளியீட்டு விழா புதுச்சேரியில் 12.01.2009 திங்களன்று, மாலை 6.00 மணி முதல் 9.00 மணிவரையில், லப்போர்த் வீதியிலுள்ள பல்நோக்கு சமூக சேவா சங்கத்தின் அரங்கில் நடைபெற்றது.

விழாவிற்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமைத் தாங்கினார். கிறிஸ்துவ மக்கள் கூட்டமைப்பு தலைவர் சாமி ஆரோக்கியசாமி கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றார்.

சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் சே.சாதிக் இந்நூலை வெளியிட்டு கருத்துரை வழங்கினார். புதுச்சேரி – கடலூர் மறை மாவட்ட முதன்மைக் குரு மேன்மைமிகு பொன்.அந்தோணிசாமி அடிகள் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டு பேசினார். இந்நூலை தொகுத்து எழுதியுள்ள பேராசிரியர் அ.மார்க்ஸ் ஏற்புரை வழங்கினார். முடிவில் அமைப்புக் குழு உறுப்பினர் உளவாய்க்கால் பெ.சந்திரசேகரன் நன்றி கூறினார்.

நிகழ்ச்சியில் பேசிய புதுச்சேரி – கடலூர் மறை மாவட்ட முதன்மைக் குரு மேன்மைமிகு பொன்.அந்தோணிசாமி அடிகள் 'அமைதியாக வாழும் சமூகங்களிடையே வெறுப்பை உண்டாக்கி பிளவு ஏற்படுத்தும் சக்திகளிடம் நாம் கவனமாக இருக்க வேண்டும். இதுபோன்ற சமயத்தில் கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் ஒன்றாக, ஒற்றுமையாக இருக்க வேண்டும்' என்று வேண்டுகோள் விடுத்தார்.

டாக்டர் சே.சாதிக் 'மதவாதிற்கு எதிராக நாம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரத்தில் இந்தப் பிரச்சனையை அனுகும் போது உணர்ச்சிக்கு இடமளிக்க கூடாது. உணர்வுபூர்வமாக அனுக வேண்டும். மதவதிற்கு எதிரான இந்த நூலை எழுதிய அ.மார்க்ஸ், வெளியிட்ட மக்கள் உரிமைக் கூட்டமைப்பு நண்பர்களுக்கு என் பாராட்டுக்கள்' என்றார்.

மேலும், இந்த நூல் வெளியீட்டிற்கு ரூ.5000/- அன்பளிப்பாக அளித்தார். மேலும், நூல் வெளியீட்டு அரங்கில் கலந்துக் கொண்டவர்களில் நூல் வாங்க வசதி இல்லாதவர்களுக்கு நூல் வழங்கும்படியும், அதற்கான தொகையை அளிப்பதாகவும் உறுதியளித்தார். அரங்கத்தில் இருந்தவர்கள் இந்த அறிவிப்பிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கைத்தட்டி வரவேற்றனர்.

நிகழ்ச்சியின் முடிவில், கர்நாடகாவில் கிறிஸ்தவர்கள் மீது காவல் (காவி) துறை நடத்திய தாக்குதல் குறித்து 13 நிமிடங்கள் கொண்ட காட்சிகள் திரையிடப்பட்டன. அதைப் பார்த்த பல கன்னியஸ்திரிகள் கண்கலங்கினர். அமைதியை நேசிக்கும் கிறிஸ்தவர்களுக்கு இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் மீளாத அதிர்ச்சி அளிப்பதாக அமைந்தது.

நிகழ்ச்சிக்கு ஆண்கள், பெண்கள் என ஏராளமானவர்கள் கலந்துக் கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு புதுச்சேரி நகரம், கிராமம் என அனைத்துப் பகுதிகளிலும் வண்ண சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தன. வண்ண பதாகைகள் நகரெங்கும் வைக்கப்பட்டிருந்தன.

நிகழ்ச்சி குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி, தினகரன், மாலை மலர் உள்ளிட்ட தமிழ், ஆங்கில நாளேடுகளும், உள்ளூர் தொலைக்காட்சிகளும் செய்தி வெளியிட்டிருந்தன.

வண்ண சுவரொட்டி...


No comments: