மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல்!!
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (19.04.2026) விடுத்துள்ள அறிக்கை:
காரைக்காலில் பணிச் சுமையால் இறந்த ஐஆர்பிஎன் பிரிவு ஏஎஸ்ஐ வேல்முருகன் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென 'மக்கள் உரிமைக் கூட்டமைப்பு' சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.
காரைக்காலில் 30 நாட்களுக்கு மேல் ஆட்சியர் அலுவலகத்தில் தொடர்ந்து இரவுப் பணி பார்த்த ஐஆர்பிஎன் பிரிவு ஏஎஸ்ஐ வேல்முருகன் (வயது 45) மூளைக்குப் போகும் நரம்பு ரத்த அழுத்தத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இறந்து போயுள்ளார்.
காரைக்காலில் பாதுகாப்புப் பணியில் இரண்டு ஐஆர்பிஎன் பிரிவு ஏஎஸ்ஐகளை மட்டுமே தொடர்ந்து பயன்படுத்தி வந்துள்ளனர். ஆள் பற்றாக்குறை என்று கூறி இதுபோன்று செய்துள்ளனர். இதனால், தூக்கமின்மை, மன அழுத்தம் காரணமாக மேற்சொன்ன காவல் அதிகாரி உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்து போயுள்ளார். இதற்குக் காவல்துறையும் அரசும் முழுப் பொறுப்பேற்க வேண்டும்.
ஐஆர்பிஎன் காவலர்களுக்குப் போதிய மருத்துவ விடுப்பு, சுழற்சி முறையில் பணி மாற்றம், பதவி உயர்வு உள்ளிட்ட பணிப் பிரச்சனைகள் குறித்து காவல்துறை தலைமையிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் இப்போது ஒரு உயிர் போயுள்ளது.
பணிச் சுமையால் காவல் அதிகாரி உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தது, ஐஆர்பிஎன் பிரிவுக் காவலர்கள் பணிப் பிரச்சனைகள் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்திரவிட வேண்டும். பாதிக்கப்பட்ட காவல் அதிகாரியின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.
