Wednesday, June 23, 2010

புதுச்சேரியில் 7 ஆண்டு சிறை முடித்த ஆயுள் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் - மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை

தமிழக அரசைப் பின்பற்றி புதுச்சேரி அரசும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை முடித்த ஆயுள் கைதிகளை விடுதலை செய்ய வேண்டுமென மனித உரிமை ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.

22.06.2010 அன்று, காலை 11 மணியளவில், புதுச்சேரி செய்தியாளர் மன்றத்தில் மனித உரிமைக்கான மக்கள் கழகத்தின் தமிழகத் தலைவர் பேராசிரியர் அ.மார்க்ஸ், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் புதுச்சேரி தலைவர் இர.அபிமன்னன், கிராமப் பஞ்சாயத்து தலைவர்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு துணை அமைப்பாளர் கோ.அ.ஜெகன்நாதன் ஆகியோர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேராசிரியர் அ. மார்க்ஸ் கூறியதாவது:

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி தமிழக அரசு 10 ஆண்டுகள் சிறை தண்டனை முடித்த ஆயுள் கைதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பட்ட கைதிகள் 500 பேரை விடுதலை செய்யப் போவதாக அறிவித்துள்ளது. புதுச்சேரி அரசும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை முடித்த ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்.

தமிழக அரசு அண்ணா பிறந்த நாளில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை முடித்த ஆயுள் கைதிகள் 2006-ல் 472 பேரையும், 2007-ல் 190 பேரையும், 7 ஆண்டுகள் சிறை தண்டனை முடித்த ஆயுள் கைதிகள் 1409 பேரையும், 2009-ல் 10 பேரையும் விடுதலை செய்துள்ளது.

புதுச்சேரி அரசு 1999 முதல் 2009 வரை 14 ஆண்டுகள் சிறை தண்டனை முடித்த ஆயுள் கைதிகள் 11 பேரை மட்டுமே விடுதலை செய்துள்ளது. அதில் 8 பேர் புதுச்சேரி மத்திய சிறையிலும், 3 பேர் தமிழக சிறைகளிலும் இருந்தவர்கள். கடைசியாக ஒரு பெண் கொலை வழக்கில் தண்டனை அடைந்த, 2009-ல் 14 ஆண்டுகள் சிறை தண்டனை முடித்த ஆயுள் கைதி செல்லிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த குப்புசாமி என்பவரை விடுதலை செய்துள்ளது.

புதுச்சேரியில் ஆயுள் தண்டனைக் கைதிகள் 78 பேர் உள்ளனர். இதில் 43 பேர் 7 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். இவர்கள் அனைவரையும் புதுச்சேரி அரசு விடுதலை செய்ய வேண்டும்.

இந்திய அரசியல் சட்டம் பிரிவு 161 மாநில ஆளுநர்களுக்கும், பிரிவு 72 குடியரசுத் தலைவருக்கும், குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 435 மாநில அரசுக்கும் ஆயுள் தண்டனைக் கைதிகளின் தண்டனையைக் குறைத்து விடுதலை செய்யும் அதிகாரத்தை வழங்கியுள்ளது.

தேசிய மனித உரிமைகள் ஆணையம் கடந்த 1999, 2003 ஆகிய ஆண்டுகளில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை முடித்த ஆயுள் கைதிகளை விடுதலை செய்ய வழிகாட்டுதல் ஒன்றை மாநில தலைமைச் செயலர்களுக்கும், யூனியன் பிரதேச நிர்வாகிகளுக்கும் அனுப்பியுள்ளது.

புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால் ஆயுள் கைதிகளை விடுதலை செய்யும் அதிகாரம் மத்திய அரசிடம் உள்ளது. புதுச்சேரி அரசு மத்திய அரசை அணுகி மேற்சொன்ன 7 ஆண்டுகள் சிறை தண்டனை முடித்த 43 ஆயுள் கைதிகளையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செய்தியாளர்: புதுச்சேரி சிறையில் ஆயுள் கைதிகள் உள்ளிருந்தவாறே கொலைத் திட்டம் தீட்டி செயல்படுத்தி வருகிறார்கள், அவர்களை விடுதலை செய்தால் என்ன ஆவது?

புதுச்சேரி சிறையிலுள்ள ஆயுள் தண்டனைக் கைதிகள் அனைவரும் கொலைக் குற்றத்தில் ஈடுபடுவதில்லை. ஒரு சிலர் மட்டுமே அவ்வாறு கொலை செய்ய தூண்டுதலாக உள்ளனர். புதுச்சேரி சிறையில் செல் போன்கள் இயங்க முடியாத வகையில் ஜாமர் கருவிப் பொறுத்த வேண்டுமென பல காலமாக கூறி வருகிறோம். அரசு அதுபற்றி எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. புதுச்சேரி போலீசாருக்கும் ஜாமர் கருவி பொறுத்துவதில் சிக்கல் இருக்கிறது. தற்போது குற்றம் நடந்தால் சிறையில் உள்ள கைதிகளின் செல் போன்களைக் கண்காணித்து குற்றவாளிகளை அடையாளம் காணுகின்றனர். அதனால், ஜாமர் கருவிப் பொறுத்துவதைப் போலீசும் விரும்பவில்லை. போலீசார் உறுதியான நடவடிக்கை எடுத்தால் சிறையிலிருந்தே நடத்தப்படும் குற்றங்களைத் தடுக்க முடியும்.

ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்வதில் பல்வேறு விதிமுறைகள் உள்ளன. குறிப்பாக ஒருவருடைய நன்னடத்தை, உளவியல் ரீயான மாற்றம், குடும்பத்தினரோடு பழகும் விதம், கல்வியறிவு, மன மாற்றம், செய்த குற்றம் என பல்வற்றைக் கணக்கில் எடுத்துக் கொண்டுதான் விடுதலை செய்கிறார்கள். வெறுமனே 7 ஆண்டுகள் சிறை தண்டனை முடித்த ஆயுள் கைதிகள் அனைவரையும் எங்கும் விடுதலை செய்யப்படுவதில்லை.

தமிழகத்தில் அண்ணா நூற்றாண்டையொட்டி விடுதலை செய்ய்யப்பட்ட 7 ஆண்டுகள் சிறை தண்டனை முடித்த ஆயுள் கைதிகள் 1405 பேரில் 7 மட்டுமே திரும்பவும் சிறிய குற்றங்களில் சிறைக்கு வந்துள்ளாதாக தமிழக சிறைத் துறை ஐ.ஜி. சியாம் சுந்தர் அளித்துள்ள புள்ளி விவரம் கூறுகிறது. எனவே, சிறையில் இருந்து வெளியே வந்த அனைவரும் குற்றம் செய்வார்கள் என்பது ஏற்புடையதல்ல.


செய்தியாளர்: போலியான மனித உரிமை அமைப்புகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? புதுச்சேரியில் மனித உரிமை அமைப்பு என்ற பெயரில் குழந்தைகளைக் கடத்திய பெண் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளார்களே?

மனித உரிமை என்ற பெயரில் சிலர் தவறு செய்வதை நாங்கள் அறிவோம். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென என்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்தில்லை. ஆனால், ஒரு சிலர் செய்வதை வைத்துக் கொண்டு தமிழக அரசு மனித உரிமை என்ற பெயரைப் பயன்படுத்தக் கூடாது என்று சட்டம் போட்டுள்ளது தவறானது. உலகம் முழுவதும் மனித உரிமை 150 மேற்பட்ட அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.

செய்தியாளர்: உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை எதிர்த்து சுவரொட்டி ஒட்டியவர்களை தமிழகப் போலீஸ் கைது செய்துள்ளதே?

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை எதிர்த்து சுவரொட்டி ஒட்டியவர்களை தமிழகப் போலீஸ் கைது செய்துள்ளது கண்டிக்கத்தக்கது. செம்மொழி மாநாட்டை ஆதரிக்க உரிமை உள்ள போது அதை எதிர்க்கும் உரிமையும் வேண்டும். சுவரொட்டி ஒட்டியவர்கள் மட்டுமல்ல திருநெல்வேலியில் எஸ்.எம்.எஸ். அனுப்பியவர்களையும் தமிழகப் போலீஸ் பிடித்துச் சென்று மிரட்டியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments: