Saturday, June 22, 2013

உலக இசை தினம்: துயரங்களால் வெளிப்படும் இசை!

நேற்று 'உலக இசை தினம்' என்பதைப் புதிதாக இந்த ஆண்டுதான் கேள்விப்பட்டேன். முகநூல் நண்பர்கள் பலரும் இதுகுறித்து பதிவிட்டிருந்தனர். எனக்கு இசைப் பற்றி ஓரளவுக்கு பரிச்சயம் இருந்தாலும் அதுபற்றி எதுவும் எழுதியதில்லை. நினைத்தாலே மனதை வருத்தப்பட வைக்கும் சிறைக் கைதிகள் பாடும் பாடல்கள் குறித்து நினைத்துக் கொண்டிருந்தேன். சிறையில் ஒவ்வொரு கணமும் துயரமாக நகரும். மாலை 6 மணி முதல் இரவுப் படுத்து உறங்கும் வரையிலான நேரம் நகர்வது என்பது மிகவும் கடினமாக இருக்கும். வெளியில் சுதந்திரமாக திரிந்த நினைவுகள் துவங்கி அனைத்தும் வந்து மனதை அழுத்தும். கதவடைப்பு முடிந்து இருட்டு படரும் நேரத்தில் ஒவ்வொரு பிளாக் மற்றும் செல்களிலிருந்தும் பாடல்கள் ஒலிக்கத் தொடங்கும். கைதிகள் தங்களுக்குத் தெரிந்த திரைப்பட பாடல்களைப் பாடுவர். பல சந்தர்ப்பங்களில் அவர்களது துயரங்கள் வெளிப்படும் வகையில் பாடல்கள் ஒத்துப் போவதும் உண்டு. நான் மதுரை சிறையில் இருந்த போது, நாங்களும் இவ்வாறு பாடுவது வழக்கம். கொள்கைப் பாடல்கள் முதல் திரைப்பட பாடல்கள் வரை அரங்கேறும். விரைப்பான கொள்கைகளைத் தாண்டி அனைவரது மனமும் கரையும். அந்த தருணத்தில் மனித மனம் எவ்வளவு நெகிழ்வானது என்பது வெளிப்படுத்தும். அன்று சிறையில் இருந்தவர்களில் தோழர்கள் பொழிலன், இளங்கோ ஆகியோர் இன்றும் சிறையில் உள்ளனர். இவர்களது துயரங்கள் மறைய அருகிலிருந்து யார் பாடுவார்கள் என்பதை நினைத்தால் கவலையாக இருக்கிறது. துயரத்தில் உழலும் மனிதருக்கு இசை அருமருந்தாவது நமக்கு கிடைத்த வரம்.

No comments: