Friday, May 28, 2021

கச்சநத்தம் மூவர் படுகொலை: நினைவஞ்சலி..

28.05.2018 அன்று சிவகங்கை மாவட்டம், கச்சநத்தம் கிராமத்தைச் சேர்ந்த தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த ஆறுமுகம், சண்முகநாதன், சந்திரசேகர் ஆகிய மூவரை அகமுடையோர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வெட்டிப் படுகொலை செய்தனர்.

கச்சநத்தத்தில் உள்ள கறுப்பசாமி கோயில் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தினருடையது. 25.05.2018 அன்று நடந்த இக்கோயில் திருவிழா ஒட்டி ‘காலாஞ்சி’ அளிப்பது குறித்து அகமுடையோர், தேவேந்திரகுல வேளாளர் சமூகங்களுகிடையே முன்பகை இருந்து வந்துள்ளது. அதாவது கச்சநத்தம் ஊரைச் சேர்ந்த சந்திரகுமார் என்பவருக்குக் கோயிலில் இருந்து பூ, தேங்காய், பழம் கொண்டு சென்று அவரது வீட்டிற்கே அளிக்கும் முதல் மரியாதை செய்யவில்லை என்ற பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த முதல் மரியாதையைத்தான் ‘காலாஞ்சி’ என்று அழைக்கின்றனர். ‘காலாஞ்சி’ பற்றி திருமூலநாயினார் இயற்றிய “பத்தாம்திருமுறையென்னும் திருமந்திரம் மூவாயிரம்” நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த முன்பகையால், 26.05.2018 அன்று மேற்சொன்ன சந்திரகுமார் அவரது மகன் சுமன் ஆகியோர் தங்களுக்கு முதல் மரியாதை அளிக்காதது குறித்து தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களிடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அருவாளை எடுத்துவந்து வெட்ட முயன்றுள்ளனர். அப்போது ஊர்காரர்கள் தடுத்ததால் பிரச்சனை அத்தோடு முடிந்தது.

இதுகுறித்து தேவேந்திரகுல வேளாளர் தரப்பினர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அன்று இரவு பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த சண்முகநாதன், தேவேந்திரன் ஆகியோரிடம் மேற்சொன்ன சந்திரகுமார் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ‘எங்களுக்கு மரியாதை செய்யாமல் கறி விருந்து சாப்பிடுகிறீர்களா’ எனச் சாதியைக் குறிப்பிட்டுத் திட்டியுள்ளார். அப்போது அவ்வழியே வந்த திருப்பாச்சேத்தி போலீசார் சந்திரகுமாரை காவல்நிலையம் அழைத்துச் சென்று, பின்னர் விடுவித்துள்ளனர்.

மறுநாள் 27.05.2018 அன்று, கோயிலில் உச்சகால பூசை முடிந்தவுடன் தேவேந்திரகுல வேளாளர்கள் கூட்டம் போட்டு, சந்திரகுமாரை போலீசார் பிடித்துச் சென்றதால் பெரிய பிரச்சனை வரும் என்று கருதி பழையனூர் காவல்நிலையத்திற்குச் சென்று புகார் அளித்துள்ளனர். போலீசாரும் நடவடிக்கை எடுக்கிறோம் என்று உறுதி கூறி அனுப்பி வைத்துள்ளனர்.

மறுநாள் 28.05.2018 அன்று இரவு சுமார் 9 மணியளவில், ஏற்கனவே முதல் மரியாதை தரவில்லை என்ற முன்பகையோடு இருந்தவர்கள் கத்தி, அருவாள் போன்ற ஆயுதங்களோடு கச்சநத்தம் தேவேந்திரகுல வேளாளர் பகுதிக்குள் நுழைந்து மேற்சொன்ன சண்முகநாதன் உள்ளிட்டவர்களை வெட்டிச் சாய்த்தனர். இதில் ஆறுமுகம், சண்முகநாதன், சந்திரசேகரன் ஆகியோர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுள்ளனர். போலீசார் உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுத்திருந்தால் இப்படுகொலை சம்பவம் தடுக்கப்பட்டிருக்கும்.

இவ்வழக்கில் முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்த பழையனூர் காவல்நிலையப் போலீசார் 3 பெண்கள் உட்பட 33 பேர் மற்றும் 4 சிறார்கள் மீது வழக்குப் பதிவு செய்து அனைவரையும் கைது செய்தனர். அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறார்கள் கூர்நோக்கு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

கச்சநத்தம் பகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குச் செல்வாக்கு இருந்ததால், பாதிக்கப்பட்ட மக்களை மூத்த தோழர் இரா.நல்லக்கண்ணு நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். முற்போக்குச் சிந்தனையுடைய இயக்கங்களைச் சேர்ந்தோரும் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவாக இருந்துள்ளனர்.

இவ்வழக்கில் குற்ற அறிக்கைத் தாக்கல் செய்யப்பட்டது. வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி பாதிக்கப்பட்டோர் தேர்வின்படி மூத்த வழக்கறிஞர் சின்னராசு அரசு சிறப்பு வழக்கறிஞராக (Special Public Prosecutor) நியமிக்கப்பட்டார். அவருக்குத் துணையாக மனித உரிமை ஆர்வலரும், உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாட அயராது போராடி வருபவருமான தோழர் வழக்கறிஞர் பகத்சிங் உடன் இருந்து பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்கப் பாடுபட்டு வருகிறார்.

2019 நவம்பர் மாதம் தொடக்கத்தில் மூத்த வழக்கறிஞர் பொ.இரத்தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வருவது குறித்து கூறினார். விசாரணையின் முதல் நாள் நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டும், நீங்களும் வாருங்கள் என்று கூறினார். நானும் சரியென்று கூறினேன். வழக்கு விசாரணை சிவகங்கை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற இருந்தது.

சென்ற 06.11.2019 அன்று வழக்கறிஞர்கள் பொ.இரத்தினம், சோகோ பாட்சா, அழகுமணி ஆகியோர் மதுரையில் இருந்து வந்தனர். நானும் சிவகங்கை சென்றேன். சிவகங்கை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நுழைந்த உடனேயே ஒரு மூத்த வழக்கறிஞர் வழக்கறிஞர் பொ.இரத்தினம் அவர்களுக்குக் கைக் கொடுத்து “You are a legend sir” என்று கூறிச் சென்றார். அவர் இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆஜராகும் மதுரையைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் என்பதைப் பின்னர் அறிந்துகொண்டேன்.

வழக்கு விசாரணை நடைபெற இருந்த நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அரசு சிறப்பு வழக்கறிஞர் சின்னராசு, வழக்கறிஞர் பகத்சிங்குடன் வந்தார். 24 ஆண்டுகள் கழித்து அந்த மீசையின் கம்பீரம் குறையாத வழக்கறிஞர் சின்னராசு அவர்களைக் கண்டேன். கொடைக்கானல் தொலைக்காட்சி வெடிகுண்டு வழக்கில் தோழர் பொழிலன் உள்ளிட்ட சிலருக்கு வழக்கறிஞர் அவர். 1997-இல் திண்டுக்கல் நீதிமன்றத்தில் தீர்ப்பு நாளன்று அவரைப் பார்த்த பின்னர், அப்போதுதான் பார்த்தேன்.

வழக்கு விசாரணை முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி கார்த்திகேயன் முன்னிலையில் நடைபெற்றது. நாங்கள் அனைவரும் நீதிமன்றத்தில் அமர்ந்து கவனித்துக் கொண்டிருந்தோம். சாட்சிகள் நடந்த கொடூரமான மூன்று படுகொலைச் சம்பவங்களை வாக்குமூலமாக அளித்தனர். மதுரையின் அனைத்து மூத்த வழக்கறிஞர்களும் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆஜராயினர். நாங்கள் நீதிமன்றத்தில் இருந்தது பலரது கவனத்தையும் ஈர்த்தது.

பின்னர், வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றப் பொறுப்பு அப்போது மகளிர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த நீதிபதி ப.உ.செம்மல் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் இவ்வழக்கின் விசாரணையை நாள்தோறும் நடத்தினார். வழக்கு இறுதிக் கட்ட விசாரணை நிலைக்கு எட்டிய நிலையில் நீதிபதி ப.உ.செம்மல் கடலூர் மாவட்ட நிரந்திர மக்கள் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். வழக்கு விசாரணை அவர் விட்டுச் சென்ற நிலையிலேயே இன்றும் உள்ளது.

உடற்கூறாய்வு அறிக்கையின்படி இறந்துப் போன ஒவ்வொருவர் உடலிலும் 50க்கும் மேற்பட்ட ஆழமான காயங்கள். அவ்வளவுக் கொடூரமான படுகொலைகள்.

இன்று கச்சநத்தம் சாதிய படுகொலையில் உயிரிழந்த ஆறுமுகம், சண்முகநாதன், சந்திரசேகர் ஆகியோரின் நினைவு நாள். இப்பதிவை எழுதும் இந்நேரத்தில்தான் அந்த மூவரும் கொடூரமாகக் கொல்லப்பட்டனர்.

என் நெஞ்சார்ந்த நினைவஞ்சலி..

Thursday, May 27, 2021

மூத்த ஓவியர் தேசிய விருதாளர் பெ.மாணிக்கம் காலமானார்!

புதுச்சேரியின் மூத்த ஓவியரும், தேசிய விருது பெற்றவருமான ஓவியர் பெ.மாணிக்கம் இன்று காலமானார்.

புதுச்சேரி பால்பவனில் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றி பல்லாயிரக் கணக்கான பள்ளி மாணவர்களுக்கு, ஓவியக் கலையைப் பயிற்றுவித்தார்.

புதுச்சேரி பாரதியார் பல்கலைக்கூடத்தில் சில ஆண்டுகள் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றி தற்கால ஓவியக் கலைத்தளத்தின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றினார்.

1942-இல் பழனி அருகே உள்ள ஒட்டன்சத்திரத்தில் பிறந்தார். 1960களில் சென்னை ஓவியக் கல்லூரியில், புகழ்பெற்ற கே.சி.எஸ்.பணிக்கரின் கீழ் மாணவராகப் பயிற்சிப் பெற்றார்.

ஓவியரும் நடிகருமான சிவக்குமார், ஓவியர் ஆதிமூலம், சிற்பி தட்சிணாமூர்த்தி ஆகியோருடன் இணைந்து ஓவியக் கலையின் பல்வேறு பரிணாமங்களைப் பயிற்சியாக பெற்றறிந்தார். ஆறு ஆண்டுகள் சென்னையில் ஓவியப் பட்டயம் பெற்றபின், புதுச்சேரி அரசின் பால்பவனில் ஓவிய ஆசிரியராக நியமிக்கப்பட்டு பணியாற்றினார்.

இந்திய அளவில் பல்வேறு ஓவியக் கண்காட்சிகள், கலை முகாம்களில் பங்கேற்று தனது ஓவியத்திறனைக் கூர்மைப்படுத்திக்கொண்டார். பாரம்பரியக் கலைகளான தெருக்கூத்து, பொய்க்கால் குதிரை, ஆடல் கலைகள் உள்ளிட்ட தொண்மைக் கலைகளை நவீன ஓவியங்களாக்கி தனித்தன்மையோடு விளங்கினார்.

டெல்லி லலித்கலா அகாடமியின் புதுச்சேரி பிரதிநிதியாக ஐந்து ஆண்டுகள் பணியாற்றியபோது, புதுச்சேரியைச் சேர்ந்த பல ஆசிரியர்கள், இளம் கலைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் பல்வேறு ஓவிய முகாம்களிலும், கலைக் கண்காட்சிகளிலும் பங்கேற்கும் வாய்ப்புகளைப் பெற்றுத் தந்தார்.

ஓவியம் தவிர இலக்கியம், இசை, நாடகம் போன்ற துறைகளிலும் அதீத ஈடுபாடு கொண்டவர். பல ஆண்டுகளுக்கு முன் புகழ்பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சன் உள்ளிட்ட பலரோடு தொடர்பிலும், புதுச்சேரி கலைத்தளத்தின் வளர்ச்சியிலும் பெரும் பங்காற்றினார். இவரது கலைத்திறனைப் பாராட்டி புதுச்சேரி அரசு கலைமாமணி விருதும், டெல்லி லலித்கலா அகாடமியின் தேசிய விருதும் அளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

‘ஓவியக்கலை நுட்பங்கள்’ எனும் நூலும், எண்ணற்ற கட்டுரைகளும், பாரதியார் பல்கலைக்கூடத்தில் 2002ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்ட ஓவியப் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியை சிறு நூலாகவும் எழுதியுள்ளார்.

அவருடைய துணைவியாரின் இறப்புக்குப் பிறகு தூத்துக்குடியில் மகள் வீட்டில் கடந்த பத்து ஆண்டுகளாக இருந்து வந்தார். இந்நிலையில், இன்று 26.05.2021 காலை காலமானார்.

ஓவியர் பெ.மாணிக்கம் அவர்களின் இழப்பு புதுச்சேரிக்குப் பேரிழப்பு என்பதோடு, அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், ஓவியர்கள் என அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Monday, May 10, 2021

நீதிநாயகம் டி.கே.பாசு காலமானார்: ஆழ்ந்த அஞ்சலியும் இரங்கலும்..

சென்ற 08.05.2021 அன்று கொல்கத்தா உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி டி.கே.பாசு காலமானார். மனித உரிமையில் ஆர்வமுள்ளவர்கள் இவரது பெயரை உச்சரிக்காமல் இருக்க முடியாது.

காவல் மரணங்களைத் தடுக்க உச்சநீதிமன்றம் வழங்கிய வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பின் மனுதாரர் இவர். D.K.Basu Vs State of West Bengal (AIR 1997 SC 610). புகழ்ப் பெற்ற இவ்வழக்கு “டி.கே.பாசு வழக்கு” என்று எல்லோராலும் அழைக்கப்படுகிறது.

கடந்த 26.08.1986 அன்று, மேற்குவங்க சட்ட உதவிகள் அரசு சாரா அமைப்பின் செயல் தலைவர் என்ற முறையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்குக் கடிதம் ஒன்றை டி.கே.பாசு எழுதுகிறார். அதில் கொல்கத்தாவில் அதிக அளவில் காவல் மரணங்கள் நிகழ்வது குறித்து ‘தி டெலிகிராப்’ இதழ் வெளியிட்ட செய்திகளைக் குறிப்பிட்டு, இக்கடிதத்தையே ரிட் மனுவாக (பொதுநல வழக்கு) ஏற்று விசாரிக்க வேண்டுமெனக் கோருகிறார்.

மேலும், காவல் மரண வழக்குகள் முறையாக நடத்தப்படுவதில்லை, இவ்வழக்குகளில் குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல், இக்குற்றங்கள் “செழிக்கின்றன” எனவும் குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடும் வழங்கப்படுவதில்லை என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார். அதோடு காவல் மரணங்கள் குறித்து ஆழமாக ஆய்வு செய்து “custodial jurisprudence” உருவாக்கவும் கோரியிருந்தார்.

கடந்த 09.02.1987 அன்று இக்கடிதத்தை ரிட் மனுவாக ஏற்று உச்சநீதிமன்ற அபோதைய தலைமை நீதிபதி பி.என்.பகவதி அவர்கள் எதிர்மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். அதேபோல், கடந்த 29.07.1987 அன்று அலிகார் வழக்கறிஞர் அசோக்குமார் ஜொகிரி பில்கானா என்ற ஊரில் காவல் நிலையத்தில் மரணமடைந்த மகேஷ் பிகாரி என்பவர் கொல்லப்பட்டதை உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றார். இதனையும் மேற்சொன்ன டி.கே.பாசு வழக்கோடு சேர்த்து விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்.

இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம் கடந்த 14.08.1987 அன்று கீழ்க்காணும் உத்தரவைப் பிறப்பிக்கிறது:

“ஏறக்குறைய அனைத்து மாநிலங்களும் இதுபோன்ற குற்றச்சாட்டுக்கள் உள்ளன. தற்போது இக்குற்றச்சாட்டுகளான காவல் மரணங்கள், அதாவது செய்தித்தாள்கள் குறிப்பிடுவது போல லாக்-அப் மரணங்களின் அலைவரிசையும் அதிகரித்துள்ளன. இதுபோன்ற குற்றச்சாட்டுகளை அணுகுவதற்கு தற்போது போதிய கட்டுமானங்கள் (machinery) இல்லை. இக்கேள்வி பல்வேறு மாநிலங்கள் உள்ளடக்கிய அகில இந்திய அளவிலானது என்பதால், இதில் பல்வேறு மாநிலங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, அவர்கள் என்ன சொல்ல விரும்புகின்றனர் என்பதையும் பார்ப்போம். அனைத்து மாநில அரசுகளுக்கும் நோட்டீஸ் அனுப்பவும், அதேபோல், இந்திய சட்ட ஆணையத்திற்கும் நோட்டீஸ் அனுப்பி, இதுகுறித்து உரிய ஆலோசனைகளை இன்றைய நாளில் இருந்து இரண்டு மாதத்திற்குள் அளிக்க வேண்டுவோம்.”

இதனைத் தொடர்ந்து, மேற்கு வங்கம், ஒரிசா, அசாம், இமாச்சல் பிரதேசம், மத்திய பிரதேசம், அரியானா, தமிழ்நாடு, மேகாலயா, மகாராஷ்ட்ரா, மணிப்பூர், யூனியன் பிரதேசமான சண்டிகர் ஆகியவைத் தங்களது கருத்துக்களை உறுதிமொழிப் பத்திரமாக தாக்கல் செய்தன. இந்திய சட்ட ஆணையமும் தனது ஆலோசனைகளைத் தாக்கல் செய்தன. உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் டாக்டர் ஏ.எம்.சிங்கி நீதிமன்றத்திற்கு உதவ நடுநிலை அறிவுரையாளராக (Amicus Curiae) நியமிக்கப்பட்டார்.

இவ்வழக்கில், கடந்த 18.12.1997 அன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் குல்தீப் சிங், ஏ.எஸ்.ஆனந்த் தலைமையிலான இருநீதிபதிகள் அமர்வு வரலாற்று சிறப்பு மிக்கத் தீர்ப்பு வழங்கியது. இத்தீர்ப்பை நீதிநாயகம் ஏ.எஸ்.ஆனந்த் எழுதினார். அத்தீர்ப்பில், ஒருவரைக் கைது செய்யும் போது பின்பற்றப்பட வேண்டிய 10 கட்டளைப் பிறப்பிக்கப்பட்டது. இக்கட்டளைகளைக் காவல்நிலையங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கவும் உத்தரவிடப்பட்டது. மேலும், இக்கட்டளைகளைப் பின்பற்றாத காவல் அதிகாரிகள் மீது அந்தந்த மாநிலத்தில் உள்ள உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்து தண்டனைப் பெற்றுத் தரவும் உத்தரவிடப்பட்டது.

உச்சநீதிமன்றக் கட்டளைகளில் முகாமையானவை:

1) கைது செய்கின்ற அதிகாரி அடையாள அட்டை பொருத்தியிருக்க வேண்டும்.

2) கைது செய்தவுடன் அந்த இடத்திலேயே கைது குறிப்பு தயார் செய்ய வேண்டும்.

3) கைது செய்யப்படும் தகவலை உறவினர், நண்பர், தெரிந்தவருக்கு தெரிவிக்க வேண்டும்.

4) கைது செய்யப்பட்ட விபரம் 8 முதல் 12 மணி நேரத்திற்குள் உறவினருக்கு அறிவிக்க வேண்டும்.

5) தான் விரும்பும் ஒருவருக்கு தகவல் தெரிவிப்பதற்கான உரிமை உண்டு என்பதை கைது செய்யப்பட்டவருக்கு தெரிவிக்க வேண்டும்.

6) கைது செய்யப்பட்டவர் உடல் நிலையைப் பரிசோதித்து சோதனை குறிப்பு தயார் செய்ய வேண்டும்.

7) கைது செய்யப்பட்டவரை 48 மணி நேரத்திற்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனைச் செய்ய வேண்டும்.

8) கைது செய்யப்பட்டவரை விசாரிக்கும் போது வழக்கறிஞர் உடனிருக்க வேண்டும்.

பின்னாளில் இந்தக் கட்டளைகள் குற்றவியல் நடைமுறைச் சட்டத்திலேயே சேர்க்கப்பட்டன.

இந்தத் தீர்ப்பினால் காவல் மரணங்கள் முற்றிலும் ஒழியவில்லை என்றாலும், பெருமளவில் குறைந்தன. இதற்கு வித்திட்டவர்தான் “டி.கே.பாசு வழக்குப் புகழ்” நீதிநாயகம் டி.கே.பாசு அவர்கள். நீதிநாயகம் வி.ஆர்.கிருஷ்ணய்யர் ஒரு சிறைவாசியின் கடித்தத்தையே வழக்காக ஏற்று சிறைவாசிகளுக்கு உரிமைகள் வழங்கி தீர்ப்பு வழங்கினார். அதே போல ஒரு நீதிபதியின் கடிதத்தை வழக்காக ஏற்றவர் உச்சநீதிமன்ற அப்போதைய தலைமை நீதிபதி நீதிநாயகம் பி.என்.பகவதி.

நீதிநாயகம் டி.கே.பாசு கொல்கத்தா உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் வழக்கறிஞராகப் பணியாற்றியவர். கொல்கத்தா மற்றும் தேசிய சட்ட உதவிகள் அமைப்பின் தலைவராக இருந்தவர். 2006-இல் இலங்கையில் ஆசிய மனித உரிமை ஆணையத்தின் விசாரணை நீதிமன்றத்தின் பார்வையாளராக இருந்து செயல்பட்டவர். ‘ஆம்னஸ்டி இண்டர்நேஷனல்’ நிதியுதவியுடன் நடந்த இந்திய அளவிலான கீழமை நீதிமன்ற நீதிபதிகளுக்கான பயிற்சித் திட்டத்தின் ஆலோசகராகவும் இருந்தார். ஓய்வுப் பெற்ற உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமைப்பின் நிறுவுநர். அனைத்துலக அளவில் பல்வேறு கருத்தரங்களில் கலந்துகொண்டு சட்டத்தின் பல்வேறு அணுகுமுறைகள் குறித்து உரையாற்றிய சட்ட வல்லநர்.

2004-இல் தில்லியில் பொடா சட்ட வழக்குகளில் பாதிக்கப்பட்டோருக்கான ‘பொது விசாரணை’ நடைபெற்றது. இதில் நீதிபதியாக (Jury) கலந்துகொள்ள வந்தார் டி.கே.பாசு. அவரை ‘தோழமை’ தேவநேயன், கோ.சுகுமாரன் ஆகிய இருவரும் விமான நிலையத்தில் வரவேற்று தங்குடத்திற்கு அனுப்பி வைத்தோம். அமைதியான குணமுடையவராக இருந்தார்.

ஒரு ஆளுமை நிறைந்த சட்ட வல்லுநரை இழந்துள்ளோம். என் ஆழ்ந்த அஞ்சலியும் இரங்கலும்.. 

Sunday, May 09, 2021

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக ஆர்.சண்முகசுந்தரம் நியமனம்: வாழ்த்துகள்!

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக (Advocate General) மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார்.

1995-இல் அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவிற்கு எதிராக குற்றப் புகார் ஒன்றைத் தயாரித்தற்காக ரவுடிகளால் தாக்கப்பட்டார்.

2002-இல் திமுகவின் ராஜ்ய சபா உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அதற்கு முன்னர் தமிழக அரசின் அரசு வழக்கறிஞராக (State Public Prosecutor) பணியாற்றி உள்ளார்.

கற்றுத் தேர்ந்த திறமையான வழக்கறிஞர். மூத்த வழக்கறிஞர் என்.நடராஜன் அவர்களின் ஜீனியர். பல முக்கிய வழக்குகளில் ஆஜராகி உள்ளார். நீதித்துறை அகாடமியில் (Judicial Academy) புதுதாக பணியில் சேரும் நீதிபதிகளுக்குச் சட்ட வகுப்புகள் எடுக்கும் நிபுணர்களில் ஒருவர். மேலும், அனைத்துலக அளவிலும் பல்வேறு கருத்தரங்களில் கலந்துகொண்டு உரையாற்றி உள்ளார்.

2000-இல் இவருடன் நேரடியாக பழக்கம் ஏற்பட்டது. சந்தன வீரப்பன் கன்னட நடிகர் இராஜ்குமாரை கடத்தி வைத்திக் கொண்டு வைத்த கோரிக்கைகள் பல. அதில் மைசூர் நடுவண் சிறையில் ஒன்பதரை ஆண்டுகளுக்கும் மேலாக தடா சட்டத்தில் அடைக்கப்பட்டிருந்த 12 பெண்கள் உட்பட 124 தமிழர்களின் விடுதலைக் கோரிக்கை முக்கியமானது. வீரப்பனுக்கு உதவியதாக போடப்பட்ட பொய் வழக்கில் விசாரணை இன்றி சிறையில் வாடினர்.

வீரப்பன் கோரிக்கையை ஏற்று 124 தடா சிறைவாசிகளைப் பிணையில் விடுதலை செய்ய கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்தது. இதை எதிர்த்து வீரப்பனால் கொல்லப்பட்ட அதிரடிப்படை காவல் உதவி ஆய்வாளர் ஷகீல் அகமதுவின் தந்தை அப்துல் கரீம் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். தடா சிறைவாசிகள் 124 பேர், தமிழ்நாடு விடுதலைப் படையைச் சேர்ந்த சிறைவாசிகள் 5 பேர் என யாரையும் விடுதலை செய்யக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

சிக்கலான இச்சூழலில் மூத்த வழக்கறிஞர் என்.நடராஜன் அவர்களிடத்தில் அய்யா பழ.நெடுமாறன் உடன் சென்று விவாதித்தோம். வழக்கு விசாரணையை நடத்தி அனைவரையும் விடுதலை செய்ய யாரும் தடை செய்ய முடியாது எனக் கூறினார். அதோடு, தனி நீதிமன்றம் அமைத்து விரைந்து வழக்கை முடிக்கலாம் (Speedy trial) எனக் கூறி உச்சநீதிமன்றத்தின் 8 தீர்ப்புகளை நகலெடுத்துக் கொடுத்தார்.

இந்த முடிவோடு பழ.நெடுமாறன், கல்யாணி, கோ.சுகுமாரன் ஆகிய நாங்கள் அப்போதைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களைக் கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தோம். முன்னதாக எத்தனை மாதத்தில் மைசூர் தடா வழக்கை முடிக்கக் கேட்கலாம் என பழ.நெடுமாறன் அய்யா கேட்ட போது ஒரு மாதத்தில் முடிக்கக் கேட்போம் என்று சொன்னேன். அதேபோல், முதலமைச்சரிடம் கேட்டோம். அவர் சரியென ஒப்புக் கொண்டார். ‘நான் எஸ்.எம்.கிருஷ்ணா அவர்களிடம் பேசுகிறேன். நீங்களும் அவரிடம் சொல்லுங்கள்’ என்றார். அப்போது எஸ்.எம்.கிருஷ்ணா கர்நாடக முதலமைச்சர். பின்னர், நான் பெங்களூர் சென்று முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா அவர்களைச் சந்த்திதேன். அவரும் இம்முடிவுக்கு ஒப்புக் கொண்டார்.

இதுபோன்று வீரப்பன் வைத்த கோரிக்கைகள் அனைத்திற்கும் தீர்வுக் கண்டு, அதை இரு மாநில முதலமைச்சர்களிடம் எடுத்துக் கூறி உறுதிமொழிப் பெற்றோம். வீரப்பனிடம் இத்தீர்வுகளை எடுத்துக்கூறி, அவற்றை நாங்கள் நிறைவேற்றுகிறோம் என்று உறுதியளித்தோம். இதனை ஏற்றுதான் வீரப்பன் கன்னட நடிகர் இராஜ்குமாரை விடுவித்தார்.

ஏற்கனவே தடா வழக்குகளைத் தமிழ்நாடு பழங்குடிகள் மக்கள் சங்கம், மக்கள் கண்காணிப்பகம், சோகோ அறக்கட்டளை, மக்கள் சிவில் உரிமைக் கழகம் ஆகிய அமைப்புகள் சார்பில் வழக்கறிஞர்கள் நடத்தி வந்தனர். எங்களது கோரிக்கையை ஏற்று கர்நாடக அரசு தடா வழக்கை விரைந்து முடிக்க அமர்வு நீதிபதி கிருஷ்ணப்பா (இவருக்கு Conviction Krishnappa என்ற அடைமொழி உண்டு) தலைமையில் தனி நீதிமன்றம் ஒன்றை (Special Court) மைசூரில் அமைத்தது. அதாவது இவர் தண்டனை அளிக்கும் மனநிலையுள்ள நீதிபதி.

மேற்சொன்ன அமைப்புகளின் சார்பில் மூத்த வழக்கறிஞர் கே.ஜி.கண்ணபிரான் (ஆந்திரா), வேணுகோபால் (மைசூர்), வின்சென்ட் (மதுரை) உள்ளிட்ட வழக்கறிஞர்கள் வழக்கை நடத்தினர். பழ.நெடுமாறன் கூடுதலாக வழக்கறிஞர் சண்முகசுந்தரம் இவ்வழக்கில் ஆஜராகி நடத்தினால் நல்லது என்று முடிவெடுத்தார். அதன் அடிப்படையில், இவ்வழக்கில் வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜரானார்.

சென்னையில் இருந்து மைசூருக்கு அழைத்துச் சென்று வரும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. வழக்கு விசாரணைக்கு வரும் போதெல்லாம் சென்னையில் அதிகாலை சதாப்தி அதிவிரைவு தொடர் வண்டியில் புறப்படுவோம். சென்னை – மைசூர் 7 மணிநேரம் பயணம். மூத்த வழக்கறிஞர் என்று பாராமல் அவரிடம் வழக்குக் குறித்து கேள்விகள் கேட்பேன். அவர் நிதானமாக எல்லாவற்றுக்கும் பதில் சொல்வார்.

தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டு இரண்டே மாதத்தில் வழக்கு முடிந்தது. தடா வழக்கில் இருந்து 108 பேர் விடுதலை செய்யப்பட்டனர். 4 பேருக்கு வாழ்நாள் சிறை. மீதமுள்ளவர்களுக்குக் குறைந்த ஆண்டுகள் தண்டனை. அவர்கள் ஒன்பதரை ஆண்டுகள் சிறையில் கழித்ததால் விடுவிக்கப்பட்டனர். தீர்ப்பு நாளன்று நீதிமன்றத்தில் இருந்ததும், தடா சிறைவாசிகள் விடுதலையாகி எங்களுக்கு நன்றி சொன்னதும் மறக்க முடியாத தருணம்.

இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் கே.ஜி.கண்ணபிரான், ஆர்.சண்முகசுந்தரம் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் முன்வைத்த வாதங்கள் மிகுந்த துயரத்துடன் சிறையில் வாடிய அப்பாவி தமிழர்களின் விடுதலைக்கு வித்திட்டது.

இந்நினைவுகளுடன் அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் அவர்களுக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

Sunday, April 25, 2021

தமிழறிஞர் பிரான்சுவா குரோ மறைந்தார்: தமிழுக்குப் பேரிழப்பு!

நாங்கள் எல்லாம் செல்லமாக “தாத்தா” என்று அழைக்கும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தமிழறிஞர் பிரான்சுவா குரோ (Francois Gros) தனது 88ஆவது அகவையில் காலமான செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தில் இந்தியவியல் துறையின் ஆய்வாளரான கண்ணன்.எம். மூலம் அறிமுகமானவர். கற்றுத் தேர்ந்த, அறிவார்ந்தத் தமிழறிஞர். பழகுவதற்கு எளிய மனிதர். அவருடன் தேநீர் கடையில் தேநீர் பருகியபடி உரையாடிய நாட்களை நினைத்தால் கண்கள் கலங்குகின்றன. நிறை குடம் அவர். என்றும் தளும்பியது கிடையாது.

1960களின் தொடக்கத்திலிருந்து தமிழில் ஆராய்ச்சி மேற்கொண்டு வந்த பிரான்சுவா குரோ (1933 – 2021) பாரீசில், பாரீஸ் பல்கலைக்கழகத்தின் Ecole Pratique Des Hautes Etudes என்ற உயர் ஆராய்ச்சி நிறுவனத்தின் தென்னிந்திய வரலாறு மற்றும் மொழியியலுக்கான (Philology) பேராசிரியராகப் பணிபுரிந்தார்.

புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தின் இந்தியவியல் துறையில் தனது ஆராய்ச்சிப் பணியைத் துவக்கிய பிரான்சுவா குரோ 1977 முதல் 1989 வரை தூரக் கிழக்கு நாடுகளுக்கான பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தின் இயக்குநராகப் பணிபுரிந்தார்.

சங்கத் தமிழிலிருந்து தற்காலத் தமிழ்வரை நீளும் இவரது ஈடுபாடு பல்வேறு தமிழ்ப் படைப்புகளைப் பிரெஞ்சு மொழிக்குக் கொண்டு சென்றுள்ளது. பரிபாடல் (1968) திருக்குறள் காமத்துப்பால் (1993) இரண்டும் பிரெஞ்சில் நூல் வடிவம் பெற்றுள்ளன. காரைக்கால் அம்மையார் குறித்த நூலையும் பிரெஞ்சுக்கு மொழிபெயர்த்துள்ளார். தற்காலத் தமிழ்ச் சிறுகதைகளின் மொழிபெயர்ப்பும்  வெளிவந்துள்ளது.

அவர் இடைக்காலத் தென்னிந்திய வரலாறு மற்றும் தொல்லியல் குறித்த நூல்களும் வெளியிட்டுள்ளார். குறிப்பாக உத்திரமேரூர், திருவண்ணாமலை  உள்ளிட்ட கோயில் நகரங்களின் வரலாறு  பற்றியும் ஆய்வு செய்துள்ளார்.

பிரான்சுவா குரோ, கண்ணன்.எம். ஆகியோர் இணைந்து பாரதியார் தொடங்கி ஆத்மாநாம், பிரமிள், வில்வரத்னம் (இலங்கை) போன்றோரது கவிதைகள் உள்ளடக்கிய 200 கவிதைகளைப் பிரெஞ்சில் மொழிபெயர்த்துள்ளனர். அதேபோல், தேர்த்ந்டுக்கப்பட்ட 20 சிறுகதைகளையும் பிரெஞ்சில் மொழிபெயர்த்துள்ளனர்.  

தென்னிந்திய வரலாற்று அட்லஸ் ஒன்றை உருவாக்கியுள்ளார். அதில் கி.பி. 1600  வரலாற்றுக்கு முந்தைய தென்னிந்திய வரலாற்றை வரைபடங்களாகச் சித்தரித்துள்ளார்.  இது உலகிலேயே சிறந்த, அரிய தொகுப்பு என்கிறார் கண்ணன்.எம்.

இலக்கியம் மட்டுமன்றி வரலாறு, பண்பாடு, தொல்லியல் மீதும் ஆர்வம் கொண்டிருந்தார். புகழ்ப் பெற்ற வரலாற்றிஞர் ரொமீலா தாப்பரின் சகோதரர்  ரோமேஷ் தாப்பருடன் நட்பாக இருந்துள்ளார். அதேபோல், பிபின் சந்திரா, லோகேஷ் சந்திரா போன்றோருடன் நட்புடன் இருந்துள்ளார்.  கலை வரலாற்றறிஞர் கபில வட்சாயயன் உடனும் நட்புடன் இருந்தார். அவருடனான நட்பு பயன் தரக் கூடியது என்று பிரான்சுவா குரோ கூறியுள்ளார்.

புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள தஞ்சைப் பெரிய கோயில், கங்கைகொண்டசோழபுரம் கோயில் குறித்த நூல்கள் வெளிவர காரணமாக இருந்துள்ளார்.

பிரெஞ்சு, சமற்கிருதம், லத்தீன, கிரேக்க மொழிகள் மட்டுமின்றி தமிழிலும் புலமைப் பெற்ற அறிஞராக இருந்துள்ளார். 1994-இல் இலங்கையில் யாழ்ப்பாணத்தில் நடந்த மாநாடு தவிர்த்து, 1996-இல் கோலாலம்பூர் தொடங்கி 1995-இல் தஞ்சாவூரில் நடந்தது வரையில் அனைத்து உலகத் தமிழ் மாநாடுகளிலும் பங்கேற்றுள்ளார். இம்மாநாடுகளில் கல்விக் கற்பிக்கும் முறைக் குறித்து அறிந்துகொள்ள ஆர்வம் கொண்டிருந்ததாகவும்  கூறியுள்ளார்.

பிரான்சுவா குரோவிற்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின்கீழ் செயல்படும் மத்திய செம்மொழி உயராய்வு நிறுவனத்தால் வழங்கப்படும் 2008 – 2009 ஆண்டிற்கான குறள்பீட விருதும், ரூ. 5 லட்சம் தொகையும் வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது.  

பிரான்சுவா குரோ பிரான்சின் தென்கிழக்கில் உள்ள லியோன் நகரத்தில் வாழ்ந்துவந்தார்.  ஒவ்வொரு ஆண்டும் மூன்று மாதக் காலத்தைப் புதுச்சேரியில் தனது ஆராய்ச்சிப் பணிகளுக்காகச் செலவிட்டு வந்தார். அண்மைக் காலமாக உடல்நலக் குறைவால் புதுச்சேரிக்கு வராமல் பிரான்ஸ் நாட்டிலேயே தங்கியிருந்தார். பிரான்சுவா குரோ தன்னிடமிருந்த ஆயிரக்கணக்கான அரிய நூல்களைக் கனடாவில் உள்ள டொரண்டோ பல்கலைக்கழகத்துக்கு வழங்கியுள்ளார்.

“தமிழ் மொழிக்குச் செம்மொழித் தகுதி அறிவித்தது மட்டும் போதாது. அருங்காட்சியகத்தில் உள்ள செவ்வியல் கலைப்பொருட்கள் இறந்துப் போய்விடுகின்றன. அவற்றை அருங்காட்சியகத்தில் இருந்து வெளியே கொண்டு வர வேண்டும். அவற்றை வெகுமக்களின் பொது பண்பாட்டிற்குள் எடுத்துச் செல்ல வேண்டும். இதைச் செய்வதற்கான ஆய்வு, சிறந்த கல்வி கற்பிக்கும் முறைகள், தமிழில் கல்விச் சார்ந்த மொழிநுட்பங்கள் (Education tools in Tamil) உருவாக்க வேண்டும். இது தமிழ்நாடு மேலைநாடுகளுக்குத் தமிழைக் கற்றுத் தர ஏதுவாக இருக்கும்” என்று பிரான்சுவா குரோ கூறியுள்ளார்.

ஒரே மகனான இவருக்கு, பொறிஞரான அவரது தந்தையார் இலக்கிய நூல்களைக் கொடுத்து ஊக்கப்படுத்தி உள்ளார். தந்தையின் ஊக்கத்தால் உலகப் புகழ்ப் பெற்ற அறிஞராக மிளிர்ந்துள்ளார் பிரான்சுவா குரோ.

பிரான்சுவா குரோவின் மறைவு தமிழ் செவ்வியல் இலக்கியத்திற்கு மட்டுமின்றி, நவீனத் தமிழ் இலக்கியத்திற்கும் பேரிழப்பாகும். மொத்தத்தில், தமிழ் மொழிக்குப் பேரிழப்பாகும்.

துயரமான இத்தருணத்தில் அவருடனான உறவை எண்ணிப் பெருமை அடைகிறேன்..

அவருக்கு என் ஆழ்ந்த அஞ்சலி..

கோ.சுகுமாரன்

Sunday, April 18, 2021

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை சாதித்தோம்: அய்யா ஆனைமுத்து பாராட்டினார்!

2004-இல், புதுச்சேரியில் வன்னியர், மீனவர், நாவிதர், முடிதிருத்துவோர், ஒட்டர், எருகுலா உள்ளிட்ட சாதிகளுக்குக் கல்வி, வேலைவாய்ப்பில் 20% இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென ‘சமூக நீதிப் போராட்டக் குழு’ சார்பில் வணிக அவையில் கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றினோம்.

கம்பன் கலையரங்கில் ‘சமூக நீதி மாநாடு’ நடத்தினோம். மிகவும் பிற்படுத்தப்படோர் சமூக அமைப்புத் தலைவர்கள் அனைவரையும் ஒரே மேடையில் ஒருங்கிணைத்தோம். அய்யா ஆனைமுத்து சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டு, தனக்கே உரிய பாணியில் மிகச் சிறந்த உரையாற்றினார்.

அப்போழுது முதல்வர் ரங்கசாமி தலைமையிலான ஆட்சி. அவரைப் பலமுறை சந்தித்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டையினால் விளையும் பயன்களை எடுத்துச் சொன்னோம். அதோடு, புதுச்சேரி யூனியன் பிரதேச அரசுக்கு இடஒதுக்கீடு வழங்க அதிகாரம் உள்ளதையும் சட்ட ரீதியாக விளக்கினோம்.

நாங்கள் கூட்டம் நடத்தி சரியாக மூன்று மாதத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்குக் கல்வியில் மட்டும் 20% வழங்கி அரசாணைப் பிறப்பித்தார் முதல்வர் ரங்கசாமி. பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் நீதிபதி தங்கமணி அரசுக்கு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் இந்த இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. அரசாணை நகல் அய்யா ஆனைமுத்து பார்த்து சரியென சொன்ன பின்னால் பிறப்பிக்கப்பட்டு, அரசிதழிலும் வெளியிடப்பட்டது.

இந்த வரலாற்று சாதனைக் குறித்து ‘சிந்தனையாளன்’ இதழில் தலையங்கம் எழுதினார் அய்யா ஆனைமுத்து. இதற்காக சீனு.அரிமாப்பாண்டியன் வழியாக என்னிடமிருந்த ஆதாரங்கள், யார் யார் போராடினார்கள் போன்ற விவரங்களைப் பெற்று அவற்றை முறையாக பதிவு செய்திருந்தார்.

முதல்வர் ரங்கசாமி உள்ளிட்டு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு கிடைக்கப் பாடுபட்ட அனைவரது பெயர்களையும் குறிப்பிட்டு எழுதியிருந்தார். அதில் என்னைக் குறிப்பிட்டதோடு, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை மூன்றே மாதத்தில் சாதித்த என்னைப் பெருமைப்படுத்தி எழுதியிருந்தார்.

பின்னர், 2006-இல் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு வேலைவாய்ப்பிலும் 20% இடஒதுக்கீடு வழங்கி உத்தரவிட்டார் முதல்வர் ரங்கசாமி. இந்த இடஒதுக்கீட்டினால் மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்த விளிம்புநிலை மக்கள் பெரிதும் பயன்பெற்றனர், பயன்பெற்று வருகின்றனர்.

நான் பெரியாரை பார்த்ததில்லை. வாழும் பெரியாராக வாழ்ந்து காலமான அய்யா ஆனைமுத்து என்னைப் பாராட்டியது உலகளவில் எந்தவொரு பெரிய விருதைக் காட்டிலும் சிறந்தது. அதைவிட வேறு என்ன பெருமை வேண்டும்.

 

Wednesday, April 14, 2021

மேலவளவு தலித்துகள் படுகொலை வழக்கு: அதிமுக, திமுகவும் ஒரே நிலைதான் எடுத்தன...

கர்ணன் படச் சர்ச்சைக் குறித்து பலரும் பேசி வருகின்றனர். 1995 என்பதற்குப் பதிலாக 1997 என்று கொடியன்குளம் சம்பவம் நடந்த காலத்தை மாற்றி சொல்லியுள்ளது தவறுதான். 1991 – 1996 ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி. 1996 – 2001 வரை கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி. உதயநிதி ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று, அதனைத் திருத்திவிடுவதாக இயக்குநர் மாரி செல்வராஜ் கூறியதாக செய்தி வந்துள்ளது.

இந்தத் தவறை வைத்துக் கொண்டு ஏதோ அதிமுக ஆட்சியில் மட்டும்தான் தலித்துகளுக்கு எதிரான கொடுமைகள் நடந்தது போலவும், திமுக ஆட்சியில் அப்படி எதுவும் நடக்கவில்லை என்றும் பலரும் எழுதியுள்ளனர். மனுஷ்யபுத்திரன் தீக்குளித்துவிடுவார் போல. ஆனால், அதிமுக, திமுக என இரண்டு கட்சிகளின் ஆட்சிக் காலத்திலும் தலித்துகளுக்கு எதிரான கொடுமைகள் அரங்கேறின என்பதுதான் உண்மை.

1996-இல் மேலவளவில் பஞ்சாயத்து தலைவர் முருகேசன் உட்பட 6 தலித்துகள் அப்பகுதியிலுள்ள ஆதிக்கச் சாதியினரால் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். பேருந்தில் பயணம் செய்த முருகேசன் தலையை வெட்டி வீசினர் சாதி வெறியர்கள். முருகேசன் திமுகவைச் சேர்ந்தவர்.

இச்சம்பவம் நடந்த நாள் முதலே வழக்கறிஞர் பொ.இரத்தினம், உடன் பல்வேறு வழக்கறிஞர்கள் குழுவாகப் பாதிக்கப்பட்ட தலித்துகளுக்கு நீதிக் கிடைக்கப் பாடுபட்டனர். அம்மக்களுக்குச் சட்ட ரீதியாக உதவிகள் செய்தனர்.

இவ்வழக்கில் 41 பேர் குற்றம்சாட்டப்பட்டனர். இவ்வழக்கு விசாரணை உயர்நீதின்ற உத்தரவின் அடிப்படையில் சேலத்திற்கு மாற்றப்பட்டு நடந்தது. விசாரணை முடிந்து 27.06.2001 அன்று தீர்ப்பு அளித்த நீதிபதி ஏ.ஆர்.இராமலிங்கம் 17 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தும், மீதமுள்ள 24 பேரையும் விடுதலை செய்தும் தீர்ப்பளித்தார். விடுதலை செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டுமென அரசு வழக்கறிஞர் (அதிமுக) அரசுக்கு அறிக்கை அளித்தும், அபோதைய ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு மேல்முறையீடு செய்யவில்லை.

தண்டனைப் பெற்ற குற்றவாளிகள் அனைவரும் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இம்மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பி.சதாசிவம், என்.பால்வசந்தகுமார் ஆகியோர் அடங்கிய இரு நீதிபதிகள் அமர்வு 19.04.2006 அன்று தீர்ப்பு வழங்கியது.

அத்தீர்ப்பில் விசாரணை நீதிமன்றம் 17 பேருக்கு வழங்கிய ஆயுள் தண்டனையை உறுதி செய்தது. மேலும், மீதமுள்ளவர்களுக்குப் போதிய ஆதாரங்கள் இருந்தும் அரசு மேல்முறையீடு செய்யாத காரணத்தால் தண்டிக்க முடியவில்லை எனத் தீர்ப்பில் நிதிபதிகள் குறிப்பிட்டிருந்தனர்.

“52 …. we have concluded that there is enough material to hold against all the accused. But, unfortunately, the State has not preferred appeal against the acquittal of the remaining accused”

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டுமென அப்போதைய திமுக அரசுக்கு வழக்கறிஞர்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பிலும் மனு அளிக்கப்பட்டது. ஆனால், திமுக அரசும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவில்லை. முதல்வர் கருணாநிதி தண்டனைப் பெற்ற குற்றவாளிகள் மேல்முறையீடு செய்வார்கள், அதில் பார்த்துக் கொள்ளலாம் எனக்கூறி மேல்முறையீடு செய்ய வேண்டாம் எனக் கூறியுள்ளார்.

இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் வி.சிர்புர்க்கர், தீபக் வர்மா ஆகிய இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு 22.10.2009 அன்று குற்றவாளிகள் 17 பேரின் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது. விடுதலை செயப்பட்ட 24 பேருக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்யாததால் உச்சநீதிமன்றமும் இவர்களுக்குத் தண்டனை வழங்கவில்லை.

அதிமுக, திமுக என இரண்டு அரசுகளும் குற்றவாளிகளுக்கு ஆதரவாகவே செயல்பட்டன. இதனால், மீதமுள்ள 24 கொடும் குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பித்துக் கொண்டனர்.

தலித்துகளின் வழக்குகளில் அதிமுக, திமுக இரண்டுமே ஆதிக்கச் சாதிகளுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகின்றன. இதில் ஒன்றை விட்டு ஒன்றை நியாயப்படுத்துவது சரியல்ல.

மேலவளவு தலித்துகள் படுகொலை வழக்கில் வழக்கறிஞர் பொ.இரத்தினம் உள்ளிட்ட வழக்கறிஞர்களின் பங்களிப்பு அளப்பரியது. அதுகுறித்து விரிவாக எழுத வேண்டும்.

Friday, September 18, 2020

துரோகம் தானே?

விழுப்புரத்தில் புதிதாக அமையவுள்ள பல்கலைக்கழகத்திற்குத் திமுகவுக்கு உதயசூரியன் சின்னத்தை அளித்தவரும், பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்களுடன் நெருக்கமாக இருந்தவரும், திமுக முன்னாள் அமைச்சருமான மறைந்த ஏ.கோவிந்தசாமி பெயர் வைக்க வேண்டுமென மருத்துவர் இராமதாசு தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார். ஏ.கோவிந்தசாமி முதுபெரும் திமுக தலைவர்களில் முகாமையானவர். இத்தனைக்கும் பாமக திமுகவைக் கடுமையாக விமர்சித்து வருகிற கட்சி.

திமுக சின்னத்தில் போட்டியிட்டு விழுப்புரம் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட துரை.ரவிக்குமார் வள்ளலார் பெயர் வைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். வள்ளலார் பெயர் வைக்கக் கூடாது என்பதல்ல. ஆனால், திமுகவின் முதுபெரும் தலைவர் ஒருவர் பெயர் வைக்க வேண்டும் என பிற கட்சியிலிருந்து கோரிக்கை வரும் போது, அதை ஆதரிக்காமல் வேறொருவர் பெயர் வைக்க வேண்டுமென கோருவது சரியானதல்ல.

தலித் மக்களின் விடிவுக்கு உழைத்திட்ட, காங்கிரஸ் தலைவரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எல்.இளையபெருமாள் பெயர் வைக்கக் கோரி இருந்தாலும், அதில் ஒரு நியாயம் இருந்திருக்கும். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர், தன்னைத் தலித் அறிஞராக அடையாளப்படுத்திக் கொண்டவர் என்ற அடிப்படையில் கோருகிறார் என்று எடுத்துக் கொள்ளலாம். இந்திய அளவில் தலித் மக்களின் நிலைக் குறித்து ‘இளையபெருமாள் குழு அறிக்கை’ மிக முக்கியமான ஒன்று. திமுக ஆட்சியில் கலைஞர் முதலமைச்சாராக இருந்த போது அவருக்குத் தமிழக அரசின் ‘அம்பேத்கர் விருது’ அளித்து சிறப்பித்தார். புதிய பல்கலைக்கழகத்திற்குப் பெயர் வைக்கும் அளவுக்குத் தகுதியான தலைவர்.

திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்ற துரை.ரவிக்குமார் திமுகவிற்கும் தலித் அரசியலுக்கும் இழைக்கும் துரோகம் அல்லவா இது?

கோ.சுகுமாரன் / 18.09.2020

 

Sunday, September 06, 2020

வாங்க தோழர்..

1987-இல் எனக்கு வயது 20. கொல்லப்படுவதற்கு முன்பே தோழர் தமிழரசன் எனக்கு நெருக்கம். அவரோடு நடவடிக்கைகளில் நேரடியாகப் பங்கெடுத்ததில்லை. ஆனால், தமிழ்நாடு விடுதலை என்ற அரசியல் முழக்கத்திற்காக வீச்சுடன் உழைத்திட்ட காலம். தோழர் தமிழரசன் வழியில், மீன்சுருட்டி சாதி ஒழிப்பு அறிக்கையின் அடிப்படையில் சாதி ஒழிப்புடன் கூடிய தமிழ்நாடு விடுதலையே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டோம்.

தோழர் பொழிலன் வழிகாட்டலில் தமிழ்நாடு இளைஞர் பேரவை, தமிழ்நாடு மாணவர் பேரவையில் செயல்பட்ட காலம். செப்டம்பர் 1, 1987-இல் பொன்பரப்பியில் தோழர்கள் தமிழரசன், தருமலிங்கம், ஜெகன்நாதன், பழனிவேல், அன்பழகன் காவல்துறையால் அடித்துக் கொல்லப்பட்டனர். தோழர்களின் இழப்பு ஒருபுறம் அரசின் மீது கடும் சினத்தை ஏற்படுத்தியது. மறுபுறம் நினைக்கும் போதெல்லாம் கண் கலங்கி உள்ளுக்குள் அழுவேன். ஈடு செய்ய முடியாத இழப்பு எனினும், ஈடு செய்தே ஆக வேண்டிய இழப்பு என்பதால் பின்னாளில் அவர் பாதையில் பயணித்து வழக்கு, சிறை எனத் திசை மாறியது வாழ்க்கை.

தோழர் தமிழரசனின் தாயார் பதூசி அம்மாளை நேரில் சென்று பார்க்க வேண்டும் என முடிவு செய்தோம். சொந்த ஊர் மதகளிர்மாணிக்கம் என்றாலும், அப்போது அவர் தமிழரசனின் தங்கை திருமணம் செய்துகொடுத்த ஊரான பொன்பரப்பி குடிக்காட்டில் இருந்தார். புலவர் கலியபெருமாள், பொழிலன், நான் ஆகிய மூவரும் பேருந்தில் சென்றோம். பொன்பரப்பி செல்வது அதுவும் புலவர் கலியபெருமாள் உடன் செல்வது மிகவும் ஆபத்தானது. கண்காணிப்புக் கடுமையாக இருந்த நேரம். நாங்கள் பிடிபட்டிருந்தால், அதுவும் பொன்பரப்பி செல்கிறோம் என்று தெரிந்திருந்தால் கட்டாயம் காவல்துறையின் கடும் சித்திரவதையைச் சந்தித்திருப்போம். கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்போம். ஆனால், இதையெல்லாம் நன்கு அறிந்திருந்த புலவர் எங்களைப் பாதுகாப்போடு அழைத்துச் சென்றார். பேருந்தில் இருந்து ஒரு ஊரில் இறங்கினோம். அங்கிருந்து நீண்ட பயணம் போல் மிதிவண்டியில் பயணமானோம். புலவர் ஒரு மிதிவண்டியிலும், நானும் பொழிலனும் ஒரு மிதிவண்டியிலும் பயணமானோம். நான் ஒல்லியாக இருந்ததால் என்னை ஏற்றிக் கொண்டு மிதிவண்டியை ஓட்டிய பொழிலனுக்கு சிரமம் இருந்திருக்காது என்றே எண்ணுகிறேன்.

இன்று நினைத்தாலும் சிலிர்க்கிறது. பயணம் முழுவதும் அடர்ந்த முந்திரிக் காட்டின் வழியாக ஒத்தையடிப் பாதையில். விவசாயிகள் விளைவிக்கும் முந்திரிக்கு விலை வைக்க முடியாமல் யாரோ நிர்ணயிக்கும் விலைக் கொடுக்க வேண்டிய நிலை. இதை எதிர்த்துப் போராடியதுதான் தோழர் தமிழரசனின் முதல் போராட்டம் என்றுகூட சொல்லலாம். இதன்பின்னர், கூட்டுறவு சங்கங்கள் உருவாக்கப்பட்டன. விவசாயிகள் ஓரளவுக்குப் பயன்பெற்றனர். பொதுவுடமைத் தத்துவம் விதைக்கப்பட்ட செம்மண் பூமி அது. முந்திரிக் காட்டைவிட்டு வெளியே வந்ததும், எங்கெல்லாம் மக்கள் கூட்டம் இல்லாத வழியில் சென்று பொன்பரப்பி அடைந்தோம். பதூசி அம்மாளை சந்திக்க அவ்வீட்டிற்குள் சென்றோம்.

இந்திய ஒன்றிய அரசையே உலுக்கிய முனைமழுங்கா மாவீரனை ஈன்றெடுத்தத் தாயைக் காணப் போகிறோம் என்ற ஆவல். கறுத்த நிறம், நெடிய, திடமான ரவிக்கை அணியாமல் சேலை மட்டுமே உடுத்தி இருந்த கம்பீரமானப் பெண்மணி. எங்களைப் பார்த்ததும் “வாங்க தோழர்” என்று வரவேற்றார். இன்றும் அச்சொல் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. புலவர் மட்டுமே அவருக்கு அறிமுகம். ‘இவங்க நம்ம தோழர்கள்’ என்று மட்டுமே சொல்லி அறிமுகப்படுத்தினார். அவரும் எங்களைப் பற்றி தெரிந்த கொள்ள ஆர்வமாக இல்லை. அது அன்றைய அரசியல் நடைமுறை. பெரும்பாலும் தலைமறைவுத் தோழர்களையே சந்தித்தவர்.

தோழர் தமிழரசன் மற்றும் தோழர்கள் கொல்லப்பட்ட சம்பவங்கள் குறித்து தனக்குத் தெரிந்த தகவல்களை எல்லாம் சொன்னார். அழுது புலம்பவில்லை. ஆனால், பெற்ற பிள்ளையை இழந்துவிட்டோம் என்ற சோகம் இழையோடியது. புலவரால் தீவிரப் பொதுவுடமை அரசியலுக்குக் கொண்டு வரப்பட்டவர் தோழர் தமிழரசன். ஆனால், இப்படி ஒரு அரசியல் வாழ்க்கைக்குக் கொண்டு சென்று பலியாக்கிவிட்டீரே என்ற சராசரி பெண்கள் நினைக்கும் சூழலில், அதுபற்றிய கவலை துளியும் இல்லாமல், புலவருடன் மிகுந்த அன்புடனும், மதிப்புடன் பேசினார். எளிய சிற்றூர் புறத்தைச் சேர்ந்த பதூசி அம்மாளின் வீரமும், அரசியலும் அதில் வெளிப்பட்டது. அப்போது தன் மகன் கொல்லப்பட வாய்ப்பில்லை என்ற கருத்து நிலவுவதையும் கூறினார். பின்னர் அவரிடமிருந்து விடைப் பெற்றோம். மீண்டும் முந்திரிக்காட்டின் ஊடே மிதிவண்டிப் பயணம்.

அந்தச் சிறிய வயதில் எனக்குப் பெருமைதரும் பயணமாக அமைந்த ஒன்று. இதுபோல், எத்தனையோ ஆபத்தான சவால் நிறைந்தப் பயணங்களை மேற்கொண்டவன். பதூசி அம்மாவுக்கு வயது 104. இன்றும் தன் வேலைகளைத் தானே செய்கிறார். மாட்டுக்குத் தீனி வைப்பது என அன்றாட பிற வேலைகளையும் செய்து வருகிறார்.

“வாங்க தோழர்” – எவ்வளவு பெரிய அங்கீகாரம். என்ன விலைக் கொடுத்தும் பெற முடியாத தகுதி இது. அந்தத் தகுதி எனக்குக் கிடைத்தது பெரும் பேறுதான்.

Thursday, September 03, 2020

அய்யா வே. ஆனைமுத்து அறிக்கை...

1987, செப்டம்பர் 1 அன்று பொன்பரப்பி சிற்றூரில் தோழர்கள் தமிழரசன், தருமலிங்கம், ஜெகநாதன், பழனிவேல், அன்பழகன் ஆகியோரை தமிழகக் காவல்துறையினர் பொதுமக்கள் போர்வையில் அடித்துக் கொன்றனர். காயமடைந்து உயிரோடு இருந்தவர்களையும் சிகிச்சை அளிக்காமல் சாகடித்தனர். இதற்குக் காவல்துறை ரூ. 1 கோடி வரை செலவு செய்ததாக அப்போது கூறப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து அய்யா வே.ஆனைமுத்து அவர்கள் பொன்பரப்பி அதன் சுற்று வட்டாரப் பகுதிகளுக்குச் சென்று ஆய்வு செய்துள்ளார். வங்கிக் கொள்ளை நடந்த போதும், அதைத் தொடர்ந்த தாக்குதலையும் நேரடியாக பார்த்தவர்களைச் சந்தித்துள்ளார். கிடைத்தத் தகவல்களை ஆங்கிலத்தில் 18 பக்க அறிக்கையாக அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் பூட்டாசிங்கிற்கு அனுப்பியுள்ளார். அதில் தமிழரசன் மற்றும் தோழர்கள் உயிரைப் பறித்தது தவறு என்று தெளிவாகக் கூறியுள்ளார். அதோடு இதுகுறித்து தொடர்புடையோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கூறியுள்ளார். ஆனால், காவல்துறை இத்தாக்குதலில் ஈடுபட்டது பற்றி எதுவும் கூறவில்லை. இதுபற்றி அவரிடம் கேட்க வேண்டும். இருப்பினும், தோழர்கள் கொல்லப்பட்டது குறித்து அவரின் அறிக்கை ஓர் வரலாற்று ஆவணம்.