Wednesday, July 11, 2007

மேதா பட்கர் மீது வழக்கு தொடர்ந்தவருக்கு அபராதம் : உச்சநீதிமன்றம்


சமூக ஆர்வலர் மேதா பட்கர் தலைமையில் இயங்கும் நர்மதை அணை எதிர்ப்பு இயக்கத்தின் நடவடிக்கைகள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தவருக்கு அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

குஜராத்தில் நர்மதா நதியில் அணை கட்டப்படுவதால் பாதிக்கப்படும் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தி வருகிறார் மேதா பட்கர். இதற்காக நர்மதை அணை எதிர்ப்பு இயக்கம் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளார்.

இந்த அமைப்பு வெளிநாட்டில் இருந்து நிதி உதவி பெறுகிறது என்றும், வெளிநாட்டு சக்திகள் சொல்கிறபடி செயல்பட்டு இந்தியாவில் அரசியல் உறுதியைக் குலைக்கிறது என்றும் குஜராத்தைச் சேர்ந்த தேசிய மக்கள் உரிமைக் கவுன்சில் என்ற தொண்டு நிறுவனம் குற்றம்சாட்டியது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கும் தொடர்ந்தது.நர்மதை அணை எதிர்ப்பு இயக்கச் செயல்பாடு பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டு இருந்தது.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நர்மதை அணை எதிர்ப்பு இயக்கம், தனிப்பட்ட ஆதாயத்திற்காக வேண்டுமென்றே தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரியிருந்தது.

இந்த வழக்கை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் சி.கே.தாக்கர், அல்ட்மாஸ் கபீர் ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் விசாரித்து தள்ளுபடி செய்தது. நீதிமன்ற நேரத்தை வீணடித்ததற்காக மனுதாரருக்கு ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிப்பதாக தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மக்களுக்காகப் போராடும் இயக்கங்களைக் கொச்சைப்படுத்தும் நோக்கத்தோடு செயல்படுபவர்களுக்கு இத்தீர்ப்பு ஒரு பாடமாக அமையும்.

No comments: