Saturday, September 15, 2007

மக்கள் போராளி ஷிலா திதியை விடுதலை செய்ய கையெழுத்திடுங்கள்

ஒரிசாவைச் சேர்ந்த ஆதிவாசிப் பெண் ஷிலா திதி ஒரிசா, ஜார்க்கண்ட், சட்டீஸ்கர், பீகார் மக்களுக்காகப் பாடுபட்டு வரும் ஆற்றல்மிக்க களப்போராளி. இவர் “நரி முக்தி சங்” என்ற அமைப்பின் முன்னாள் தலைவர்.

ஷிலா திதி கடந்த 2006 அக்டோபர் 7 அன்று, ஒரிசா மாநிலம், சுந்தர்கார்க் மாவட்டத்திலுள்ள லத்திகட்டா காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ஆம்ஜோர் கிராமத்தில் போலிசாரால் கைது செய்யப்பட்டார். அவர்மீது அரசுக்கு எதிராக “தேச துரோக” குற்றம் செய்ததாக பொய் வழக்குப் போட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட ஷிலா திதி அருகிலுள்ள சி.ஆர்.பி.எப். முகாமிற்குக் கொண்டு செல்லப்பட்டு, 2 நாட்கள் சட்டவிரோத காவலில் வைத்து, உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டுள்ளார்.

பின்னர் அவர் நீதித்துறை நடுவர் முன் ஆஜர்படுத்தப்பட்டு, மீண்டும் போலிஸ் காவலில் விசாரணைக்காக எனக் கூறி அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அவர் 4 நாட்கள் போலிஸ் காவலில் வைக்கப்பட்டு கடும் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். போலிசாரின் சித்திரவதையால் அவரது முன்தலையிலும் வயிற்றிலும் கடுமையான ரத்தக் காயம் ஏற்பட்டுள்ளது. போலிசார் அவரது காலிலும், பாதத்திலும் லத்தியால் அடித்து மிருகத்தனமாக தாக்கியுள்ளனர். மேலும், அவரது கண்களைத் துணியால் கட்டி, அவரை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று அலைக்கழித்துள்ளனர்.

மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த போலிசார் தொடர்ந்து அவரிடம் விசாரித்துள்ளனர்.

அவர் ரூர்கெலா சிறையில் 6 மாதங்கள் அடைக்கப்பட்டு இருந்தார். தற்போது ஜார்க்கண்டடில் உள்ள சாய்பாசா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாததால் அவரது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. சிறை நிர்வாகத்தினர் படிப்பதற்கு அவருக்கு இதழ்களோ, புத்தகங்களோ கொடுக்க மறுத்து வருகின்றனர். மேலும் எழுதுவதற்கு பேனாவோ, தாளோ கூட கொடுக்க மறுத்துள்ளனர். கடந்த 2007 ஜூலை 7-அன்று அவர் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்திலும் பிணை கிடைத்துள்ளது. ஆனால், சிறையிலிருந்து வெளியே வந்த அவரை சிறை வாசலிலேயே போலிசார் மேலும் பல்வேறு பொய் வழக்குகளில் கைது செய்துள்ளனர்.

ஷிலா திதி ஆதிவாசி சமூகத்தைச் சேர்ந்தவர். அவர் தன்னம்பிக்கையும் கொள்கைப்பற்றும் மிகுந்தவர். சமூகத்தில் அடிமைத்தனத்தில் உழன்று கொண்டிருக்கும் பெண்களுக்கு ஆதரவாக, அவர்களின் உரிமைகளுக்காகவும் விடுதலைக்காகவும் செயல்பட்டுக் கொண்டிருப்பவர். காலம் காலமாக நிலவிவரும் பழக்க வழக்கங்கள், மரபுகள் பெண்களை இரண்டாந்தார குடிமக்களாகவே வைத்துள்ளதை உணர்ந்து அதற்கு எதிராக செயல்பட்டு வருபவர்.

இதன் விளைவே அவர் பெண்களின் பங்கேற்புடன் “நரி முக்தி சங்” என்ற அமைப்பை நிறுவினார். காலப் போக்கில் இந்த அமைப்பு வலுவானதாக மாறியது. இதில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் உறுப்பினராகி, தங்கள் உரிமைகள் பற்றி விழிப்புணர்வு பெற்றுள்ளனர். “நரி முக்தி சங்” பெண்கள் மீதான சுரண்டல், ஆதிக்கம், பாகுபாடு போன்ற ஒடுக்குமுறை வடிவங்களை எதிர்த்துப் போராடி வருகிறது. இந்த அமைப்பினால் நூற்றுக்கணக்கானப் பெண்கள் கல்வியறிவு பெற்று முன்னேற்றம் கண்டுள்ளனர்.

இதற்கு ஷிலா திதியின் அயராத உழைப்பு, சமரசமற்ற போராட்டம் ஆகியவையே காரணம். மேலும், அவர் அரச வன்முறைக்கு எதிராகவும் போராடினார். பல்வேறு பொய் வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டு வாடும் ஆயிரக்கணக்கான ஆதிவாசி ஒடுக்கப்பட்ட பெண்களுக்கு உறுதுணையாக, உற்ற தோழியாக இருந்து, அவர்களின் விடுதலைக்குப் பாடுபட்டுக் கொண்டிருந்தவர். நசுக்கப்பட்ட வகுப்பான ஆதிவாசி சமூகத்திலிருந்து மக்கள் பணிக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட மூத்த பெண் விடுதலைப் போராளி ஷிலா திதி. அவருக்கு ஏற்பட்டிருக்கும் இந்த கொடிய நிலைக்குக் காரணமான அரசையும், அதன் ஏவலாளியான போலிசையும் அனைவரும் கண்டிக்க வேண்டும்.

இந்நிலையில், ஷிலா திதிக்கு நீதிக் கிடைக்க அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்.

•ஷிலா திதியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
•அவருக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிப்பதோடு, உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
•பெண்கள் விடுதலைக்காகப் போராடியவர் என்ற அடிப்படையில்,சிறையில் அவருக்கு “அரசியல் சிறைவாசி” என்ற தகுதி அளிக்கப்பட வேண்டும்.

இக்கோரிக்கையை வலியுறுத்திடும் வகையில் கீழ்காணும் முகவரிக்குள் சென்று கையெழுத்திட வேண்டுகிறோம்.

கையெழுத்திட கிளிக் செய்யவும்

மேலும், தேசிய மனித உரிமைகள் ஆணையம், தேசிய பெண்கள் ஆணையம் ஆகியவற்றுக்கும் மனு அனுப்ப வேண்டுகிறோம்.

The Chairperson,
National Human Rights Commission (NHRC),
Faridcot House, Copernicus Marg,
New Delhi – 110 001.

Fax: 011-23385368.
Mobile: 98102 98900.
E-Mail: covdnhrc@nic.in


The Chairperson,
National Commisson for Women,
4, Deen Dayal Upadhayaya Marg,
New Delhi – 110 002.

Phone: 011-23237166,23236988.
Fax: 011-23236154.
Complaint Cell: 011-23219750.
E-Mail: ncw@nic.in

4 comments:

மாசிலா said...

கையெழுத்து போட்டாச்சு.
மாசிலா.

Jeevan said...

கையெழுத்திட்டாச்சு

http://radio.ajeevan.com/

கோ.சுகுமாரன் Ko.Sugumaran said...

அன்புடைய மாசிலா, ஜீவன் ஆகியோருக்கு,

வணக்கம்.

ஒரு சமூகப் போராளியைக் காப்பாற்ற
கையெழுத்து இட்டமைக்கு மிக்க நன்றி...

ஜமாலன் said...

தோழர் கையொப்பம் இட்டுவிட்டேன்.

உங்கள் மக்கள் உரிமைக்கான பணி தொடர வாழ்த்துகிறேன். உங்களை எனது சக பயணியாக்கிக் கொண்டதில் மகிழ்கிறேன்.

வணக்கங்களுடன்
ஜமாலன்.