Thursday, July 31, 2008

ஜார்க்கண்ட் சிறைகளின் நிலைமைகளை ஆராய்ந்த அகில இந்திய உண்மை அறியும் குழு!

அகில இந்திய அளவிலான உண்மை அறியும் குழுவினர் ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள சிறைகளின் நிலைமைகளைப் பற்றி நேரில் ஆய்வு செய்துள்ளனர். விரைவில் இக்குழுவினர் தமது அறிக்கையை வெளியிட உள்ளனர்.

கடந்த ஜூலை 19, 20, 21 ஆகிய நாட்களில் ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள பல்வேறு சிறைகளைப் பார்வையிட்டனர். சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளை நேரில் சந்தித்து விசாரணை மேற்கொண்டனர்.

இக்குழுவில் புதுச்சேரியிலிருந்து மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன், தமிழகத்திலிருந்து பேராசிரியர் அ.மார்க்ஸ், வழக்கறிஞர் கேசவன் ஆகியோர் இடம்பெற்றனர்.

மேலும், இக்குழுவில் எம்.கே.அசன் (முன்னாள் துணைவேந்தர், ராஞ்சி பல்கலைக்கழகம்), டாக்டர் சசி பூஷன் பதக் (மக்கள் சிவில் உரிமைக் கழகம், ராஞ்சி), பிரபாட் குமார் தெகதி (முன்னாள் நலவழித் துறை அமைச்சர், ஜார்க்கண்ட்), பேராசிரியர் மனாஸ் ஜோர்தார், தபன் தாஸ் (அரசியல் கைதிகள் விடுதலைக் குழு, மேற்குவங்கம்), டாக்டர் மிதிலேஷ் (மக்கள் சிவில் உரிமைக் கழகம், ராஞ்சி), அரசியல் கைதிகள் விடுதலைக்கான குழுவைச் சேர்ந்த ரோனா வில்சன் (ஜே.என்.யூ, தில்லி), ஷிவ் நந்தன் (காஷ்மீர்), மேதாப் அலாம் (ஜாமியா மில்லியா, தில்லி) உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.

இக்குழுவினர் ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள ராஞ்சி, அசாரிபாக், கிரிதி, லதேகர், டால்டன்கஞ்ச், கார்வா உள்ளிட்ட சிறைகளைப் பார்வையிட்டனர்.

நக்சலைட்டுகளை ஒடுக்குகிறோம் என்ற பெயரில் ஜார்க்கண்ட் அரசு பல அப்பாவி மக்களைப் பிடித்துச் சிறையில் அடைத்து வருகிறது. ஏறக்குறைய 1000 பேர் அரசியல் கைதிகளாக ஜார்க்கண்ட் சிறையில் வாடி வருகின்றனர். அண்மையில் கூட 170 பேர் எந்தவித குற்றச்சாட்டும் இல்லாமல் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அடக்குமுறைச் சட்டமான குற்றவியல் திருத்த சட்டம் பிரிவு 17-ன் படி எந்தவித விசாரணையும் இல்லாமல் மாவோயிஸ்ட்கள் ஆயிரக்கணக்கானவர்கள் பல ஆண்டுகளாக சிறைகளில் வாடி வருகின்றனர்.

ஜார்க்கண்டில் சிறைகள் போதிய அடிப்படை வசதிகள் இன்றியும், அங்கு சிறை விதிகள் பின்பற்றப்படுவதில்லை எனவும் தெரிய வந்துள்ளது. பெண்களுக்கும், சிறுவர்களுக்கும் தனிச் சிறை இல்லாததால் பெரும் சிரமத்திற்கிடையே அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுக் கிடக்கின்றனர்.

போதிய மருத்துவ வசதியின்றி சிறைகள் உள்ளன. விசாரணைக் கைதிகள் எவ்வித விசாரணையும் இல்லாமல் ஆண்டுக்கணக்கில் சிறையில் உள்ளனர். ஒதுக்கப்பட்ட எண்ணிக்கையைவிட அதிக அளவில் கைதிகள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். தேவையான அளவும், நன்கு தயாரிக்கப்பட்ட உணவும் கைதிகளுக்கு வழங்கப்படுவதில்லை.
கார்வா சிறையில் மூன்று கைதிகள் கடுமையாக சித்தரவதை செய்யப்பட்டு கைகளையும், கால்களையும் சங்கிலியால் பிணைக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளனர். இதனைக் கண்டறிந்த குழுவினர் சிறைக் கண்காணிபாளரிடம் இந்த மனித உரிமை மீறலை அனுமதிக்க முடியாது என்று கடுமையாக எச்சரித்தனர்.

ஜார்க்கணட் மாநிலத்தில் தனி “சிறைக் கையேடு” கிடையாது. பிகார் மாநிலத்தின் சிறைக் கையேட்டையே பயன்படுத்தி வருகின்றனர் என்பது தெரிய வந்துள்ளது.

ஜார்க்கண்ட் சிறைகளைப் பார்வையிட்ட உண்மை அறியும் குழுவினர் தமது முழு அறிக்கையை விரைவில் வெளியிட உள்ளனர். மேலும், சிறை மேம்பாடு குறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு அறிக்கையை அனுப்பி வைக்க உள்ளனர்.

உண்மை அறியும் குழு அறிக்கை இந்திய சிறைகளின் அவலத்தை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும்.

2 comments:

Anonymous said...

திரு. சுகுமாரன்...

உண்மை அறியும் குழு அறிக்கையை முழுமையாக பதிவிடவும்.

ஆரவமுதன்.

கோ.சுகுமாரன் Ko.Sugumaran said...

ஆரவமுதன் அவர்களுக்கு, நன்றி.

உண்மை அறியும் குழு அறிக்கை இறுதி செய்துக் கொண்டிருக்கிறார்கள்.

வெளியிட்ட பின் பதிவிடுகிறேன்.