Wednesday, July 22, 2009

"சங்கரதாஸ் சுவாமிகள் நாடகத் திரட்டு" நூல் (1250 பக்கங்கள்): வல்லினம் வெளியிட்டுள்ளது!

என் இனிய நண்பர் வல்லினம் மகரந்தன் நேற்று முன் தினம் நான் புதிதாக குடியேறிய வீட்டிற்கு வந்தார். கையில் ஒரு பெரிய புத்தகத்தோடு வந்தார். அவர் எந்த புத்தகம் வெளியிட்டாலும் உடனடியாக எனக்கு ஒரு பிரதியைக் கொடுத்து அதன் மூலம் மகிழ்ச்சி அடைவார்.

அதேபோல் தான் அன்றைக்கும் அவர் புதிதாக ஒரு புத்தகத்தைக் கொடுத்தார். மிகவும் பிரமிக்க வைக்கும் வகையில் "சங்கரதாஸ் சுவாமிகள் நாடகத் திரட்டு" என்ற 1250 பக்கங்கள் கொண்ட புத்தகம் அது. வல்லினம் வெளியீடாக வந்த அந்த புத்தகத்தை சென்னை பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றும் வீ.அரசு அவர்கள் தொகுத்துள்ளார். அரிய முயற்சி இது. இதற்காக பேராசிரியர் வீ.அரசு, வல்லினம் மகரந்தன் ஆகியோரை அனைவரும் பாராட்ட வேண்டும்.

நான் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் போது சங்கரதாஸ் சுவாமிகள் நாடகங்கள் பற்றி அறிந்துக் கொள்ள முடிந்தது. தமிழ் ஆசிரியர் இராதா அவர்கள் ஆண்டுதோறும் கம்பன் கலையரங்கில் சங்கரதாஸ் சுவாமிகள் நாடகங்களை நடத்துவார். அவர் மரபு சார்ந்த நாடக கலைஞர். மிகவும் சிரமப்பட்டு நாடகங்களை நடத்துவார்.

சங்கரதாஸ் சுவாமிகள் பற்றி புதுச்சேரியில் பிறந்தவர்கள் கேள்விப்படாமல் இருக்க முடியாது. அவரது நினைவிடம் புதுச்சேரி கருவடிக்குப்பம் சுடுகாட்டில் இருக்கிறது. எப்போழுது சாவு விழுந்தாலும் எரியூட்ட அங்கு செல்லும் போதெல்லாம் அந்த நினைவிடத்தைப் பார்க்காமல் வரமாட்டேன். எளிமையாகவும் எப்போது ஒருவித ஈர்ப்பை ஏற்படுத்தும் நினைவிடம் அது. ஆண்டுதோறும் நாடக கலைஞர்களும், கலை இலக்கிய பெருமன்றமும் அவரது நினைவு நாளில் அவருக்கு மரியாதை செய்து, நிகழ்ச்சிகள் நடத்துவது உண்டு. புதுச்சேரி அரசும் ஆண்டுதோறும் சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு நிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கம்.

வீ.அரசு குறிப்பிடுவது போல 'புதுச்சேரியைச் சேர்ந்த இவர்கள் சுவாமிகள் பற்றிய ஆவணத்தைக் கொண்டு வருவதின் மூலம், சுவாமிகள் பற்றிய புரிதலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறார்கள். சுவாமிகளுக்கும் புதுவைக்கும் நெருக்கமான உறவு தொடர்ந்து கொண்டே இருக்கிறது.'

புதுச்சேரியின் மூத்த பத்திரிகையாளரான தணிகைத்தம்பி அவர்கள் எடுத்த ஆவணப் படத்தில் இசைஞானி இளையராஜா அவர்கள் சங்கரதாஸ் சுவாமிகள் பற்றி குறிப்பிடும் போது வெளிப்பட்ட பக்தி கவனிக்கதக்கது. சங்கரதாஸ் சுவாமிகளின் தோற்றம் எவரையும் வணங்கத் தோன்றும் தோற்றம்.

1867-இல் பிறந்து 1922-இல் மறைந்த சங்கரதாஸ் சுவாமிகள் படைத்த பதினெட்டுப் பனுவல்கள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. அவை: ஞான செளந்தரி சரித்திரம், ஸதி அநுசூயா, கர்வி பார்ஸ், பிரஹலாதன் சரித்திரம், சாரங்கதரன், அல்லி சரித்திரம், சீமந்தனி நாடகம், சுலோசனா ஸதி, அபிமன்யு சுந்தரி, அரிச்சந்திரா, பவளக்கொடி சரித்திரம், நல்லதங்காள், வள்ளித் திருமணம், சத்தியவான் சாவித்திரி, கோவலன் சரித்திரம், லலிதாங்கி நாடகம், லவகுச நாடகம், பாதுபாபட்டாபிஷேகம்.

தொகுப்பாக பெரிய நூலாக வரும் போது படிப்பதில் சற்று மலைப்பு இருப்பது இயல்பான ஒன்றுதான். ஒருவருடைய படைப்பை முழுமையாக ஒருசேர படிப்பதன் மூலம் அவருடைய பன்முகப்பட்ட பார்வையை, முரண்பாட்டை, தொடர்ச்சியை நாம் உணர முடியும். அந்த வகையில் இந்த நூல் சங்கரதாஸ் சுவாமிகள் பற்றிய மதிப்பீட்டை அறிய பெரிதும் உதவும்.

நூலிற்கான அட்டைப் படத்தை ஓவியர் மருது மிகச் சிறப்பகாக வரைந்துள்ளார். சுவாமிகளின் உருவம் கோடுகளுக்குள் சிதையாமல் பதிவாகியுள்ளது.

முழுமையாக படிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. காலத்தை ஒதுக்கிப் படித்து விட்டு அதிகம் எழுத முயல்கிறேன். நூலைப் பார்த்தவுடன் ஒரு ஆவலில் இதை எழுதியுள்ளேன்.

நூல் பெற விரும்புவோர் தொடர்பு கொள்ள:

வல்லினம், எண். 9, செந்தமிழர் வீதி, நைனார்மண்டபம், புதுச்சேரி - 605 004. தொலைபெசி: 0413-2354115. மின்னஞ்சல்: vallinam@sifi.com.

விலை: ரூ. 700/-

3 comments:

Venkatesh said...

வணக்கம் தோழர்!

தங்களின் எழுத்து நடையில் ஒரு மாற்றத்தை உணர்கிறேன் மிக நெருக்கமாக பேசுவது போல் உள்ளது.

வெங்கடேஷ்

Anonymous said...

Dear friend,

Its fine to hear about the book on Sankaradass Swamigal in Tamil. I will get one book and tell my friends to read it. I can't able to type in Tamil. Sorry.

Viswanathan, Coimbatore.

Anonymous said...

நல்ல பதிவு.