Monday, August 23, 2010

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டத் தீர்மானங்கள்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம் 22.08.2010 ஞாயிறன்று காலை 10.00 மணிக்கு தொடங்கி மதியம் 1.00 மணி வரையில் வணிக அவையில் நடைபெற்றது. மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ. சுகுமாரன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் புதுச்சேரி நகரம் மற்றும் கிராம அளவில் இருந்து 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துக் கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக கிராமப் பஞ்சாயத்து தலைவர்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு தலைவர் கோ. அ. ஜெகன்நாதன் கலந்துக் கொண்டார். 

கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1)     இந்திய அரசியல் சாசனத்திற்கும், மண்டல் குழு தொடர்பான இந்திரா சகானி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் 11 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன பெஞ்ச் வழங்கிய தீர்ப்பிற்கும் எதிராக உள்ள பிராந்திய இடஒதுக்கீட்டை முற்றிலுமாக ரத்து செய்ய புதுச்சேரி அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல், மாணவர்களையும், பொதுமக்களையும் திரட்டி மாபெரும் போராட்டம் நடத்த வேண்டிவரும் என புதுச்சேரி அரசுக்கு எச்சரிக்கிறோம்.  

2)     புதுச்சேரி மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அரசு மருத்துவ கல்லூரிக்கு மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் பெற்று, இந்த ஆண்டு முதலே மாணவர் சேர்க்கையை நடத்த புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3)     புதுச்சேரியில் முஸ்லிம்களுக்கும், மீனவர்களுக்கும் தலா 2 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படும் என அறிவித்துள்ள புதுச்சேரி அரசுக்கு இக்கூட்டம் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறது. மேலும், முஸ்லிம்களும், மீனவர்களும் இந்த கல்வி ஆண்டிலேயே இடஒதுக்கீட்டின் பயனை அடையும் வகையில் உடனடியாக அரசாணை வெளியிட வேண்டும்.

4)     துறைமுக விரிவாக்கத் திட்டத்தை எதிர்த்து மத்திய உள்துறை அமைச்சகம் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் ஒரு வழக்குத் தொடர்ந்துள்ள நிலையில் புதுச்சேரி அரசு துறைமுக விரிவாக்கத் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். மேலும், இத்திட்டத்தை எதிர்த்து அனுப்பப்பட்ட புகார்கள் குறித்து விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் அமைத்த சிறப்புத் தணிக்கைக் குழுவின் விசாரணை அறிக்கையை உள்துறை அமைச்சகம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதில் துறைமுக விரிவாக்கத் திட்டத்தில் நடந்த ஏராளமான குறைபாடுகள், முறைகேடுகள், ஊழல்கள் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இதுகுறித்து மத்திய அரசு உடனடியாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

5)     புதுச்சேரியில் கிராமப் பஞ்சாயத்துகளுக்கு உரிய நிதி, அலுவலகம், பணியாள், நலத் திட்ட விண்ணப்பங்கள் உள்ளிட்ட அதிகாரங்கள் கேட்டு நீண்ட காலமாகப் போராடும் பஞ்சாயத்துத் தலைவர்களின் கோரிக்கையை தொடர்ந்துப் புறக்கணித்து வரும் புதுச்சேரி அரசைக் இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. புதுச்சேரி அரசு கிராமப் பஞ்சாயத்துத் தலைவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும்.   

6)     புதுச்சேரி கல்வித் துறை சார்பில் தேர்வுச் செய்யப்பட்ட ஒப்பந்த ஆசிரியர் தேர்வில் மதிப்பெண் திருத்தப்பட்டு ஊழல் நடந்துள்ளது பற்றி ஆதாரத்துடன் புகார் செய்தும், பல்வேறு கட்டப் போராட்டம் நடத்தியும் புதுச்சேரி அரசு இதுவரையில் பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் சுந்தரவடிவேலு உள்ளிட்ட அதிகாரிகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காததை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. புதுச்சேரி அரசு இதுகுறித்து உடனடியாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

7)     புதுச்சேரி துணை நிலை ஆளுநருக்கு அனுப்பப்படும் புகார்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, புகார் கூறப்படும் அதிகாரிகளுக்கே அப்புகாரை அனுப்பி வைத்து கருத்து கேட்பது முற்றிலும் தவறான போக்காகும். எனவே, புதுச்சேரி மாநிலத்தின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட துணை நிலை ஆளுநர் தவறு செய்யும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து ஊழல், முறைகேடற்ற நிர்வாகத்தை உருவாக்க வேண்டும்.

8)     1989-ஆம் ஆண்டு முதல் மனித உரிமைகளுக்காகப் பாடுபட்டு வரும் மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் முதல் மாநில மாநாடு வரும் 2011 ஜனவரி மாதம் புதுச்சேரியில் நடத்தப்படும். இம்மாநாட்டில், அகில இந்திய அளவிலான மனித உரிமை ஆர்வலர்கள், முன்னாள் நீதிபதிகள், சமூக ஆர்வலர்கள் என பல்துறை அறிஞர்களை அழைப்பது எனவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

9)     மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் செயல்பாடுகளை மக்களிடத்தில் கொண்டு செல்ல “குரல்” என்ற பெயரில் ஒரு செய்தி மடலைத் தொடர்ந்து நடத்துவது எனக் இக்கூட்டம் முடிவுச் செய்கிறது.

10)    மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் செயல்பாடுகளுக்குத் தொடர்ந்து ஆதரவுத் தந்து வரும் பத்திரிகை மற்றும் ஊடகத் துறையினருக்கு இக்கூட்டம் மனமார்ந்த நன்றியத் தெரிவித்துக் கொள்கிறது. 

No comments: