Sunday, August 01, 2010

சமூக சேகவர் பாலாவை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 01.08.2010 அன்று விடுத்துள்ள அறிக்கை:

சென்டாக் கவுன்சிலிங்கில் பங்கேற்ற மாணவர்களுக்கு உதவி செய்துக் கொண்டிருந்த பெற்றோர் மாணவர் நலச் சங்கத்தின் தலைவர் பாலாவை தாக்கிய காலாப்பட்டு உதவி ஆய்வாளர் வேலையன் மற்றும் போலீசார் மீது உரிய கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

புதுச்சேரி காலாப்பட்டு பொறியியல் கல்லூரி வளாகத்தில் நேற்றைய தினம் தனியார் மருத்துவ கல்லூரிகளின் சேர்கைக்கான சென்டாக் கவுன்சிலிங் காலை முதல் தொடங்கி நடந்துக் கொண்டிருந்தது. அப்போது பெற்றோர் மாணவர் நலச் சங்கத்தின் தலைவர் பாலா மற்றும் அவரது நண்பர்கள் சிலர் கவுன்சிங்கில் பங்கேற்ற மாணவர்களுக்கு உதவி செய்துக் கொண்டிருந்தனர். கவுன்சிங்கில் பங்கேற்ற அரசு உயர் அதிகாரிகள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் பிள்ளைகளுக்கும் இவர்கள் உதவி செய்துள்ளனர்.

இந்நிலையில் மதியம் 3.00 மணியளவில் அங்கு வந்த காலாப்பட்டு உதவி ஆய்வாளர் வேலையன் மற்றும் போலீசார் மேற்சொன்ன பாலாவை சட்டையின் காலரை பிடித்து இழுத்து கீழே தள்ளி தாக்கியுள்ளனர். அப்போது அங்கு கூடியிருந்த பெற்றோர்கள் போலீசாரிடமிருந்து பாலாவை காப்பாற்றி உள்ளனர்.

மாணவர் நலனுக்காக பாடுபடுவது மட்டுமல்லாது காவல்துறை உயர் அதிகாரிகளோடு நெருக்கமாக இருந்து அவர்களுக்குப் பல்வேறு வகையில் உதவி வரும் பாலாவை போலீசார் தாக்கியது ஆச்சரியத்தை அளிக்கிறது. எந்தவித காரணாமும் இல்லாமல் பாலாவை தாக்கிய போலீசாரின் காட்டுமிராண்டித்தனத்தை வன்மையாக கண்டிக்கிறோம்.

மேலும், வெளியே இருந்து பாதுகாப்புத் தர வேண்டிய போலீசாரை பொறியியல் கல்லூரி வளாகத்திற்குள் அனுமதித்தது யார் என்பதை அரசு விளக்க வேண்டும். சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற எந்தவித உருப்படியான நடவடிக்கையும் எடுக்காத காவல்துறை இதுபோன்று சமூக சேவை செய்பவர்களைத் தாக்குவது ஏற்புடையதல்ல.

எனவே, பொறியியல் கல்லூரி வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்து பொதுமக்கள் முன்னிலையில் மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ள காலாப்பட்டு உதவி ஆய்வாளர் வேலையன் மற்றும் போலீசார் மீது உரிய கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென புதுச்சேரி அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.

No comments: