Thursday, December 09, 2010

டிசம்பர் 10 - மனித உரிமை நாள்: ஊழலுக்கு எதிராகப் போராட உறுதியேற்போம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு அமைப்புக் குழுக் கூட்டம் 08.12.2010 புதனன்று மாலை 6.30 மணியளவில் புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள கூட்டமைப்பு அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமைத் தாங்கினார். கூட்டத்தில் அமைப்புக் குழு உறுப்பினர்கள் இரா.ராஜராஜன், பா.மார்கண்டன், சீ.சு.சாமிநாதன், க.சின்னப்பா, ஏ.கலைவாணன், கி.சரவணன், பா.காளிதாஸ், கி.கண்ணன், கே.பாலாஜி உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1) டிசம்பர் 10, உலக மனித உரிமை நாளில் ஊழலை ஒழித்து நல்லாட்சிக்கு வழி வகுத்திடவும், ஊழலுக்கு எதிராகப் போராடவும் அனைத்து தரப்பு மக்களும் உறுதியேற்க வேண்டுகோள் விடுக்கிறோம்.

2) மழை நிவாரணமாக ரூ. 1000 ஏழை, பணக்காரன் என அனைவருக்கும் வழங்குவது தவறான முன்னுதாரணம். மழையால் உண்மையில் பாதிக்கப்பட்டவர்கள் யார் என்பதைக் கண்டறிந்து அவர்களுக்கு மட்டும் நிவாரணம் வழங்க வேண்டும்.

3) மழை நிவாரண விண்ணப்பத்தில் மத்திய அமைச்சர், முதலமைச்சர், அமைச்சர்கள் படங்களை அச்சிட்டு மலிவான அரசியல் செய்யும் ஆட்சியாளர்களின் போக்கை வன்மையாக கண்டிகிறோம். இதனைக் கைவிட்டு அரசு அலுவலர்கள் மூலம் உடனடியாக மழை நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4) அண்மையில் நடந்த துணைத் தாசில்தார் தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இதுகுறித்து அரசு சி.பி.ஐ. விசாரணக்கு உத்தரவிட வேண்டும். நடந்து முடிந்த தேர்வை ரத்து செய்து மீண்டும் நடத்த வேண்டும்.

5) தீபாவளிக்கு வழங்க இருந்த வேட்டி, சேலை வாங்குவதில் பல கோடி ரூபாய் ஊழல் நடக்க இருந்ததைக் கண்டறிந்து தலைமைச் செயலர் தடுத்துள்ளார். இதுகுறித்து அரசு சி.பி.ஐ. விசாரணக்கு உத்தரவிட வேண்டும். மக்களுக்கு காலதாமதமின்றி வேட்டி, சேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

6) காவல்துறையில் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர் தேர்வுக்கான அறிவிப்பில் தற்போது நடைமுறையில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், முஸ்லிம், மீனவர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை. எனவே, அரசு இதில் தலையிட்டு முறையான இடஒதுக்கீட்டை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

7) அரசியல் கட்சியினர், அமைப்பினர், பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டோர் என பலரின் மீது அரசு தேசிய பாதுகாப்புச் சட்டத்தை ஏவியுள்ளது. மனித உரிமைக்கு எதிரான தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழான நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும். தேவைப்பட்டால் இவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் போன்ற சாதாரண சட்டங்களிலேயே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

8) விவசாயிகள், மீனவர்கள் வாழ்வாதாரத்தை அழிக்கும், சுற்றுச் சூழலுக்கு எதிரான மூர்த்திக்குப்பம் துறைமுகத் திட்டத்தை அரசு ரத்து செய்ய வேண்டும். ஏற்கனவே கட்டப்பட்ட தேங்காய்த்திட்டு துறைமுகத்தால் புதுச்சேரி, தமிழக கடலோர கிராமங்கள் கடல் அரிப்பல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. கடல் அரிப்பைத் தடுக்க அரசு அறிவியல்பூர்வமான, மக்களுக்குப் பாதிப்பில்லாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

9) சென்டாக் கலந்தாய்வுக் கூட்டம் காலதாமதமாக நடந்து முடிந்ததால் புதுச்சேரியில் உள்ள அனைத்துக் கலைக் கல்லூரிகளிலும் ஏராளமான இடங்கள் மாணவர் சேர்கை நடைபெறாமல் காலியாக உள்ளன. தகுதியுள்ள பலர் விண்ணப்பித்தும் இடம் கிடைக்காததால் மாணவர்களின் ஓராண்டு கல்வி வீணாகியுள்ளது. எனவே, அரசு காலியாக உள்ள இடங்களில் விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு இடம் அளிக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

10) பாரா மெடிக்கல் மாணவர்களுக்கு பெருந்தலைவர் காமராஜர் கல்வி உதவித் தொகை வழங்க அரசாணை வெளியிட்டும் இதுவரையில் வழங்கப்படவில்லை. எனவே, அரசு உடனடியாக அரசாணைப்படி பாரா மெடிக்கல் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

No comments: