Thursday, February 18, 2010

புதுச்சேரியில் மது தயாரிக்கும் நிறுவனம் வரி ஏய்ப்பு மூலம் ரூ. 5 கோடி மோசடி: சி.பி.ஐ விசாரணைக்கு கோரிக்கை!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 18.02.2010 அன்று விடுத்துள்ள அறிக்கை:

கூடுதல் கலால் வரி கட்டாமல் அரசை ஏமாற்றி சுமார் 5 கோடி ரூபாய் மோசடி செய்துள்ள மும்பையைச் சேர்ந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் மீது சி.பி.ஐ. விசாரணக்கு உத்தரவிட்டு உரிய கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி துணை நிலை ஆளுநருக்கு ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் இன்று மனு அளித்துள்ளோம்.
   
மும்பையைச் சேர்ந்த திலக்நகர் இன்டஸ்ட்ரீஸ் லிட் என்ற நிறுவனம் ‘மேன்ஷன் ஹவுஸ் பிராண்டி’ உள்ளிட்ட மது வகைகளை தயாரித்து விற்பனைச் செய்து வருகிறது. இந்த மது வகை தயாரிக்கப்படும் மொத்த அளவில் 80 சதவீதம் புதுச்சேரி உள்ளிட்ட தென் இந்தியாவில் விற்பனைச் செய்யப்படுகிறது.

இந்த நிறுவனம் கூடுதல் கலால் வரி செலுத்தாமல் அரசை ஏமாற்றி சுமார் 5 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது தெரிய வந்துள்ளது. புதுச்சேரி அரசு மக்களுக்குத் பல்வேறு திட்டங்களுக்காக செலவிடும் மொத்த தொகையில் 70 சதவீதம் கலால் வரி மூலம் ஈட்டுகிறது.
   
புதுச்சேரி அரசு மது தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு 58 சதவீத விற்பனை வரி விதித்துள்ளது. புதுச்சேரியிலுள்ள நான்கு மது தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு இந்த விற்பனை செலுத்துவதில் இருந்து வரி விலக்கு அளித்துள்ளது. இதனால், பல்வேறு மது தயாரிக்கும் நிறுவனங்கள் இந்த தொழிற்சாலைகளில் மதுவை நிரப்பி விற்பனைச் செய்வதன் மூலம் குறுக்கு வழியில் வரி விலக்கை அனுபவித்து வருகின்றன. இதனால், அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.
   
இந்நிலையில், புதுச்சேரி அரசு இந்த வருவாய் இழப்பை ஈடுகட்ட கூடுதல் கலால் வரி விதித்து அரசாணை ஒன்றை கடந்த 23.04.2007 அன்று வெளியிட்டது. அதில், பல்வேறு வரிக் கட்டண வரம்புகளை நிர்ணயித்துள்ளது. மேற்சொன்ன மது தயாரிக்கும் நிறுவனம் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள ரூ. 850 முதல் ரூ. 1049-ஐ வரம்பாக வைத்து மது தயாரிப்பதாக அரசுக்கு தெரிவித்தது. இதன்படி ஒரு கேஸ் மது விற்பனைக்கு அரசுக்கு ரூ. 522 கூடுதல் கலால் வரி செலுத்தி வருகிறது. மேற்சொன்ன ரூ. 850 முதல் ரூ. 1049 வரம்பை தாண்டினால் கூடுதலாக கலால் வரி கட்ட வேண்டும்.

இந்நிலையில், இந்த வரையறுக்கப்பட்ட வரம்பை மீறி அரசை ஏமாற்றும் நோக்கத்தோடு மேற்சொன்ன நிறுவனம் மது தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்த வரம்பைத் தாண்டி ரூ. 1050 முதல் ரூ. 1349 என்ற அடுத்த வரம்பு அளவுக்கு மது தயாரித்தால் ஒரு கேசுக்கு    ரூ. 99 கூடுதலாக கலால் வரி செலுத்த வேண்டும். மேற்சொன்ன மது நிறுவனத்தினர் இந்த கூடுதல் தொகையை ஆண்டு விற்பனை லாபமாக கணக்குக் காட்டி, அந்த தொகையை மது விநியோகஸ்தர்கள் மற்றும் விற்பனையாளர்கள் ஆகியோரிடம் இருந்து திரும்பப் பெற்றுக் கொள்கின்றனர். இதனால், வரியாக அரசுக்குச் சேர வேண்டிய தொகை முதலாளிகளிடமே திரும்பவும் சென்றுவிடுகிறது.

கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் இந்த நிறுவனம் புதுச்சேரியில் மொத்தம் 5 லட்சம் மதுப் பாட்டில்களை விற்பனைச் செய்து, அதன் மூலம் ரூ. 300 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இதன்படிப் பார்த்தால் அரசுக்கு சேர வேண்டிய கூடுதல் கலால் வரி ரூ. 5 கோடியை திட்டமிட்டு ஏமாற்றி மோசடி செய்துள்ளது. இது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.

ஒரு நிறுவனத்தின் மோசடி கணக்கே பல கோடிகளைத் தாண்டும் போது இன்னும் இதுபோல புதுச்சேரியில் உள்ள பல்வேறு மது தயாரிக்கும் நிறுவனங்களின் கணக்கைப் பார்த்தால் புதுச்சேரி அரசுக்கு பல கோடிகள் நஷ்டம் ஏற்பட்டு வரும் ஆபத்தை புரிந்துக் கொள்ள முடிகிறது.

புதுச்சேரி அரசு பல்வேறு மக்கள் நலம் சார்ந்த திட்டங்களைச் செயல்படுத்த நிதி பற்றக்குறையால் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டுள்ளது. இந்நிலையில், இதுபோன்ற மோசடி தொடர்ந்து பல ஆண்டுகளாக நடப்பது கடும் கண்டனத்திற்குரியதோடு, அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து இதுபோன்று வரும் காலங்களில் நடக்காமல் தடுக்க வேண்டும். 

எனவே, புதுச்சேரி அரசுக்கு பெரும் வருவாய் இழப்பை ஏற்படுத்தி, மோசடிக் குற்றம் செய்துள்ள  சம்பந்தப்பட்ட மது நிறுவனத்தின் உரிமையாளர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கவும், இதுகுறித்து உடனடியாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடவும் வேண்டிக் கொள்கிறோம்.

Tuesday, February 16, 2010

சென்னை உயர்நீதிமன்றத்தின் பெயரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உயர்நீதிமன்றம் என மாற்ற கோரிக்கை!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 16.02.2010 அன்று விடுத்துள்ள அறிக்கை:

சென்னை உயர்நீதீமன்றத்தின் பெயரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உயர்நீதிமன்றம் என மாற்ற வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.

மத்திய அரசு மெட்ராஸ் உயர்நீதிமன்றம் என்ற பெயரை சென்னை உயர்நீதிமன்றம் என மாற்ற வரும் பாராளுமன்ற கூட்டத் தொடரில் புதிய சட்டம் ஒன்றை இயற்ற முடிவு செய்துள்ளது. கடந்த 1996-ம் ஆண்டு மெட்ராஸ் என்ற பெயரை சென்னை என மாற்றிய பிறகும்கூட உயர்நீதிமன்றத்தின் பெயர் மாற்றப்படவில்லை. அப்போது உயர்நீதிமன்றத்தின் பெயரை மாற்ற வேண்டுமென வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் பிரிட்டீஷ் ஆட்சியில் பம்பாய், கல்கத்தா, மெட்ராஸ் ஆகிய நகரங்களில் மூன்று உயர்நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டன. இந்த நீதிமன்றங்களின் பெயர்கள் அந்தந்த நகரங்களின் பெயரிலேயே அழைக்கப்பட்டன. ஆனால், இந்த மூன்று நகரங்களின் பெயர்கள் மும்பை, கொல்கத்தா, சென்னை என மாற்றப்பட்ட பின்னரும் கூட உயர்நீதிமன்றங்களின் பெயர்கள் மாற்றப்படாமலேயே இருந்தன. தற்போது மத்திய அரசு இந்த மூன்று உயர்நீதிமன்றங்களின் பெயர்களை மாற்ற முடிவு செய்துள்ளதை வரவேற்கிறோம்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் பெயரை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என மாற்ற வேண்டுமென உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த கோரிக்கை நியாயமானது. இந்தச் சூழலில், ‘தமிழ்நாடு’ என பெயர் மாற்ற சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து தன் உயிரைவிட்ட சுந்தரலிங்கனார் தியாகத்தை நினைவில் கொள்வது பொறுத்தமானது.

புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால் சென்னை உயர்நீதிமன்றத்தின் நேரடி கட்டுப்பாட்டில் வருகிறது. பிரஞ்சு ஆட்சியின் கீழ் இருந்ததால் தனித்த கலாச்சாரம் மற்றும் அடையாளம் கொண்ட பகுதியாக புதுச்சேரி இன்றும் திகழ்கிறது.

1966-ம் ஆண்டு நவம்பர் 1-ந் தேதியன்று பஞ்சாபில் இருந்து தனியாக பிரித்து அரியானா மாநிலம் உருவாக்கப்பட்டது. அப்போது பஞ்சாப் உயர்நீதிமன்றத்தின் பெயர் பஞ்சாப் மற்றும் அரியான உயர்நீதிமன்றம் என மாற்றப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.

எனவே, சென்னை உயர்நீதிமன்றத்தின் பெயர் மாற்றி சட்டம் இயற்றும் போது புதுச்சேரி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உயர்நீதிமன்றம் என மாற்ற வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.

இதுகுறித்து குடியரசுத் தலைவர் திருமதி பிரதீபா பாட்டீல், பிரதமர் டக்டர் மன்மோகன்சிங், சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி, உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி திரு. கே.ஜி.பாலகிருஷ்ணன், சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எச்.எல்.கோகலே, தமிழக முதலமைச்சர் திரு. மு.கருணாநிதி ஆகியோருக்கு விரிவான மனு அனுப்பியுள்ளோம். இந்த கோரிக்கையை ஆதரிக்க வேண்டி புதுச்சேரியிலுள்ள அனைத்துக் கட்சி, அமைப்புகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ளோம்.

Sunday, February 14, 2010

புதுச்சேரி சிறைக் கைதிகளின் உறவினர்கள் மறியல் - போலீஸ் தடியடி: பெண்கள் கைது!

புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள மத்திய சிறையில் தூய்மையான குடிநீர், போதிய தண்ணீர் வசதியுடன் கூடிய கழிப்பறை, பார்வையாளர் அறையில் உறவினர்களுடன் நெருங்கிப் பேச வசதி ஆகிய அடிப்படை வசதிகள் செய்துக் கொடுக்க வேண்டும். ஆயுள் தண்டனைக் கைதிகளுக்கு காலதாமதம் செய்யாமல் உடனுக்குடன் பரோல் வழங்க வேண்டும். தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ளதுபோல் 7 ஆண்டுகள் சிறை தண்டனை முடித்த ஆயுள் தண்டனைக் கைதிகளை முன் விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தண்டனைக் கைதிகள் கடந்த 8-ந் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

உண்ணாவிரதம் இருந்த கைதிகளில் சிலர் மயக்கம் அடைந்ததால் அவர்களை மருத்துவமனையில் சேர்க்க வேண்டுமென கைதிகள் கோரினர். ஆனால், சிறை நிர்வாகம் அதற்கு மறுப்புத் தெரிவித்தது. இதனிடையே, 13.02.2010 அன்று காலை 'உண்ணாவிரதம் இருக்கும் கைதிகளின் கோரிக்கைகளை ஏற்று உடனடியாக கைதிகளின் உயிரைக் காப்பாற்றவும், உடல்நிலைப் பாதிக்கப்பட்ட கைதிகளை வெளி மருத்துவமனையில் சேர்த்துச் சிகிச்சை அளிக்கவும்' வேண்டி துணைநிலை ஆளுநர், தலைமைச் செயலர், காவல்துறை இயக்குநர் (டி.ஜி.பி.), சிறைத்துறை தலைவர் (ஐ.ஜி.) ஆகியோருக்கு 'மக்கள் உரிமைக் கூட்டமைப்பு' சார்பில் தந்தி அனுப்பப்பட்டது.

உடனடியாக ஆயுள் தண்டனைக் கைதிகள் செல்வம், குள்ள ரகுமான், லோகநாதன், சுதாகர், சதீஷ், குமார் ஆகிய 6 பேர் சிகிச்சைக்காக அரசுப் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

ஏற்கனவே, மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் கைதிகளுக்கு ஆதரவாக 12.02.2010 அன்று கைதிகளின் உறவினர்கள் திரளாக கலந்துக் கொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து காவல்துறை இயக்குநர் (டி.ஜி.பி.) வர்மா, சிறைத் துறை தலைவர் (ஐ.ஜி.) பங்கஜ் குமார் ஜா ஆகியோர் சிறைக்கு வந்து நேரடியாக பேச்சு வார்த்தை நடத்தும் வரை உண்ணாவிரதம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கைதிகள் தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து  கைதிகளின் உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்தது.

இந்த நிலையில் கைதிகளின் உறவினர்கள் 13.02.2010 அன்று காலை 11.30 மணியளவில் புதுச்சேரி வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை அருகே மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து உருளையன்பேட்டை போலீசார் அந்த பகுதிக்கு விரைந்துச் சென்றனர். சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தி 45 பேரை கைது செய்தனர். பின்னர் போக்குவரத்து சீரானது.

போலீசாரின் தடியடியில் போராட்டத்தில் ஈடுபட்ட வயதானவர்கள், குழந்தைகள், பெண்கள் காயமடைந்தனர். போராட்டத்திற்கு ஆதரவுத் தெரிவிக்க சென்ற சதீஷ் (எ) சாமிநாதன், மணி ஆகியோரும் காயமடைந்தனர்.

பின்னர் கைது செய்யப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இப்போராட்டத்தினால், பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

Friday, February 12, 2010

புதுச்சேரி சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி ஆர்ப்பாட்டம்!


புதுச்சேரி சிறைக் கைதிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி, அவர்களின் உயிரைக் காப்பாற்ற வலியுறுத்தி 12.02.2010 வெள்ளியன்று, காலை 10 மணியளவில், சுதேசிப் பஞ்சாலை அருகில் ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காலாப்பட்டு மத்திய சிறையிலுள்ள தண்டனைக் கைதிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4 நாட்களாக தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். சிறையில் தூய்மையான குடிநீர், போதிய தண்ணீர் வசதியுடன் கூடிய கழிப்பறை, பார்வையாளர் அறையில் உறவினர்களுடன் நெருங்கிப் பேச வசதி ஆகிய அடிப்படை வசதிகள் செய்துக் கொடுக்க வேண்டும். ஆயுள் தண்டனைக் கைதிகளுக்கு காலதாமதம் செய்யாமல் உடனுக்குடன் பரோல் வழங்க வேண்டும். தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ளதுபோல் 7 ஆண்டுகள் சிறை தண்டனை முடித்த ஆயுள் தண்டனைக் கைதிகளை முன் விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமைத் தாங்கினார். கிராம பஞ்சாயத்து ஒருங்கிணைந்த கூட்டமைப்பு துணை அமைப்பாளர் கோ.அ.ஜெகன்நாதன் தொடக்கி வைத்தார்.      

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அமைப்புச் செயலர் சு.பாவாணன், பகுஜன் சமாஜ் கட்சியின் அமைப்பாளர் சி.மூர்த்தி, அகில இந்திய பார்வட் கட்சியின் பொதுச்செயலாளர் உ.முத்து, லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் புரட்சிவேந்தன், மனித நேய மக்கள் கட்சியின் செயலாளர் எம்.ஏ.அஷ்ரப் (எ) ரகமத்துல்லா, மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தலைவர் இர.அபிமன்னன், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் தலைவர் அ.அப்துல் ரசாக் கான், துணைத் தலைவர் அபுபக்கர், மார்க்சிய - பெரியாரிய பொதுவுடமைக் கட்சித் தலைவர் திருநாவுக்கரசு, புதுச்சேரி மாணவர் கூட்டமைப்பு அமைப்பாளர் சதீஷ் (எ) சாமிநாதன், மக்கள் விழிப்புணர்ச்சி இயக்கத்தின் செயலாளர் சரவணன் உட்பட பல்வேறு கட்சி, அமைப்பினர் கலந்துக் கொண்டு உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் சிறைக் கைதிகளின் குடும்பத்தினர் உட்பட 200-க்கும் மேற்பட்டவர்கள் திரளாக கலந்துக் கொண்டனர்.

Thursday, February 11, 2010

புதுச்சேரி சிறை நிலைமையைக் கண்டறிய மனித உரிமை ஆர்வலர்கள் குழுவை அனுப்ப வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 11.02.2010 அன்று விடுத்துள்ள அறிக்கை:

புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்கும் கைதிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதால்,  புதுச்சேரி அரசு உடனடியாக மனித உரிமை ஆர்வலர்கள் அடங்கிய குழு ஒன்றை சிறைக்கு அனுப்பி நிலைமைகளைக் கண்டறிய வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

காலாப்பட்டு மத்திய சிறையிலுள்ள தண்டனைக் கைதிகள் சுமார் 100 பேர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3 நாட்களாக காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இதில் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் புதுச்சேரி அரசுப் பொது  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காலாப்பட்டு மத்திய சிறை எந்தவித அடிப்படை வசதியும் இல்லாமல் உள்ளது. கைதிகளுக்கு நல்ல குடிநீர் வழங்கப்படவில்லை. கழிவறைகள் இருந்தும் போதிய தண்ணீர் வசதி இல்லாததால் துர்நாற்றம் வீசுவதால் கடும் நோய் பரவும் ஆபத்துள்ளது. கைதிகளைப் பார்ப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள அறையில் கைதிகளுக்கும் பார்வையாளர்களுக்கும் அதிக இடைவேளி உள்ளதால் உறவினர்களுடன் பேச முடியாமலும், தங்கள் குழந்தைகளைக் கூட தொட்டுக் கொஞ்ச முடியாமலும் கைதிகள் மன உளைச்சலுக்கு உள்ளாகி பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆயுள் தண்டனைக் கைதிகளின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அவர்களுக்கு சட்டப்படி வழங்கப்பட வேண்டிய பரோல் தேவையில்லாமல் மறுக்கப்படுகிறது. தேவையான பத்திரங்கள் கொடுத்தும் சிறை விதிப்படி உடனடியாக வழங்கப்பட வேண்டிய பரோல் சிறை அதிகாரிகளால் வேண்டுமென்றே காலதாமதப்படுத்தப்படுகிறது.

தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் 7 ஆண்டு சிறை தண்டனை முடித்த ஆயுள் தண்டனைக் கைதிகள் முன்விடுதலை செய்யப்படுகின்றனர். ஆனால், புதுச்சேரி அரசு இதுபற்றி போதிய அக்கறை இல்லாமல் கைதிகளின் உரிமையை மறுத்து வருகிறது.

நீதிபதி முல்லா குழு அறிக்கை உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் சிறை சீர்திருத்தம் குறித்து மத்திய அரசுக்கு அளித்துள்ள அறிகையின் பரிந்துரைகளைச் செயல்படுத்த புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்களின் உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டுவர புதுச்சேரி அரசு விரைந்து செயல்பட்டு கைதிகளின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

Wednesday, February 10, 2010

சேலத்தில் பியூஸ் சேத்தியா கைதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்: கொளத்தூர் மணி, அ.மார்க்ஸ் பங்கேற்பு!




சேலத்தில் செயல்பட்டு வருகிற சுற்றுச்சுழல் ஆர்வலரும் பழங்குடி மக்கள் உரிமைகளுக்காக குரல் கொடுப்பவருமான பியூஸ் சேத்தியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து சேலத்தில் 5.2.2010 காலை 11 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் பழைய பேருந்து நிலையம் மணிக்கூண்டு அருகில் நடைபெற்ற இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மனித உரிமை ஆர்வலர் பேராசிரியர் அ. மார்க்ஸ் தலைமைத் தாங்கினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி. வழக்குரைஞர் ப.பா. மோகன், மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் செயலாளர் சா.பாலமுருகன், தமிழ்நாடு மனித உரிமை இயக்கத் தலைவர் பூமொழி, டாக்டர் ஜீவானந்தம், நிலவன், மா.செந்தில், கோ.சீனிவாசன், மாயன், பிந்துசாரன், ஆனந்தராஜ், எத்திராஜ, மாதேஸ்வரன், ராமு, குமார் அம்பாயிரம், பார்த்திபன், நெப்போலியன், அசோகன்ஆகியோர் கலந்துக் கொண்டு பேசினார்கள்.

வெளிநாட்டு நிறுவனங்களுக்காகவும் கார்ப்பரேட்டுக்களுக்காகவும் இன்று நாடெங்கும் கனிம வளமும் நீர் வளமும் நிறைந்த நிலைகள் ஏராளமாக வாரி வழங்கப்படுகின்றன. இதனால் பாதிக்கப்படக் கூடிய பழங்குடி மக்களும் விவசாயிகளும் இந்நிலையை எதிர்த்துப் போராடி வருகின்றனர், இந்தப் போராட்டத்தை ஒடுக்குவதற்காக இன்று மத்திய அரசு ‘பச்சை வேட்டை நடவடிக்கை’ என்கிற பெயரில் சுமார் 1 லட்சம் துணை ராணுவப் படைகளை பழங்குடி மக்களுக்கு எதிராக இறக்கியுள்ளது. இது தவிர தாக்குதல் பயிற்சிப் பெற்ற மாநில போலீசும் அரசே நடத்துகிற ‘சல்வா ஜுடும்’ போன்ற சட்ட விரோத கூலிப்படைகளும் இன்று பழங்குடி மக்களைத் தாக்கிக் கொண்டுள்ளனர். இதன் விளைவாக சத்தீஸ்கர் மாநிலத்தில் மட்டும் 3 லட்சம் பழங்குடி மக்கள் உள்நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டு முகாம்களில் வாழ்கின்றனர். பலர் கொல்லப்பட்டுள்ளனர். ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பழங்குடிப் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுவது அன்றாட நிகழ்வாகிவிட்டது.

இந்திய அரசு இவ்வாறு தம் சொந்த மக்கள் மீதே ஒரு யுத்தம் தொடங்கியிருப்பதை எதிர்த்து இன்று ஹிமான்சு குமார் போன்ற காந்தியவாதிகளும், ஆனந்த பட்வர்தன் போன்ற கலைஞர்களும் நோம் சோம்ஸ்கி போன்ற உலகப்புகழ் பெற்ற அறிஞர்களும் கண்டித்துள்ளனர். பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் ராபி ரே, முன்னாள் மத்திய அமைச்சர் சாந்தி பூக்ஷன் ஆகியோரும் இதைக் கண்டித்துள்ளனர்.

இந்தியா முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கக் கூடிய இந்த எதிர்ப்புக் போராட்டத்தின் ஒரு அங்கமாக தமிழகத்தில் ‘நீதிக்கும் அமைதிக்குமான இயக்கம்’ என்கிற அமைப்பு மத்திய உள்துறை அமைச்சருக்குக் கடிதங்கள் அனுப்புவது, சைக்கிள் பிரச்சாரம் செய்வது ஆகிய நடவடிக்கைகளைத் திட்டமிட்டது.

சென்ற ஜனவரி 26 அன்று சேலத்தில் குடியரசு தின விழா முடிந்த பின் இது குறித்த துண்டறிக்கை விநியோகிப்பதற்காக சென்றிருந்த பியூஸ் சேத்தியாவை சேலம் மாநகர காவல்துறை கைது செய்து அடித்து இழுத்துச் சென்றது. அவர் மீது இன்று தேசத்துரோக வழக்கு உள்பட பல கடுமையான பிரிவுகளின்படி வழக்குகள் தொடரப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைத்துள்ளது.

அமைதியான முறையில் செயல்பட்டு வந்த ஒரு மனித உரிமைப் போராளி இவ்வாறு துன்புறுத்தப்பட்டுள்ளதைக் கண்டித்தும், நாடெங்கும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இயக்கத்தின் ஓரங்கமாகச் செயல்பட்ட ஒருவர் மீது இத்தகைய கொடும் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்ந்திருப்பதையும் அவருக்கு பிணை மறுக்கப்படுவதையும் கண்டித்து இன்று இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பியூஸ் சேத்தியா உடனே விடுதலை செய்யப்பட்ட வேண்டும். அவர் மீதுள்ள வழக்குகள் திரும்பப் பெறப்பட வேண்டும். அவரை அடித்து வாகனத்தில் ஏற்றிய போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் முதலான கோரிக்கைகளை வற்புறுத்தியும் தொடர்ந்து மனித உரிமைப் போராளிகள் மீது பொய் வழக்குகளைப் போடும் சேலம் மாநகர காவல்துறையை கண்டித்தும் உரையாற்றியவர்கள் பேசினார்கள்.

‘நீதிக்கும் அமைதிக்குமான இயக்கம்’ சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.