Saturday, June 02, 2012

ராசாங்கத்தின் ராஜாங்கம்

‘எழுத்து சார்ந்து அதிகம் பங்களிப்பு செய்திராத’ என்னுடைய சிறு குறிப்பிற்கு காலச்சுவடு ஆசிரியர் குழுவில் ஒருவரும், முக்கிய தலித் படைப்பாளியாக வளர்ந்து வருபவருமான ஸ்டாலின் ராசாங்கம் விரிவாக ஒரு எதிர்வினையைச் செய்துள்ளார். எழுத்து சார்ந்து அதிகம் பங்களிப்பு செய்து வருபவராயினும் எதிர்வினை என்னும் பெயரில் அவர் கொட்டியிருக்கும் வார்த்தைகளில் வெளிப்படும் வன்மத்தையும் வக்கிரத்தையும் அவரால் மறைத்துவிட முடியவில்லை. பேராசிரியர் கல்யாணி, அ.மார்க்ஸ் மற்றும் இந்திய அளவில் மனித உரிமை இயக்கங்களில் செயல்படும் தோழர்களுடன் இணைந்து நான் செய்து வரும் மனித உரிமைப் பணியைத் தேவையின்றியும், இவ்விவாதத்திற்கு கொஞ்சமும் தொடர்பில்லாமலும் கொச்சைப்படுத்திக் காழ்ப்பைக் கக்கியுள்ளது இதற்கொரு சான்று.

88-ல் அரசியல் செயல்பாட்டின் விளைவாக வெடிகுண்டு வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சிறைவாசத்தையும் சந்தித்தவன் நான். இதன் விளைவாகப் பாதியில்விட்ட படிப்பைத் தொடர இயலாமல் முழு நேரமாக மக்கள் மத்தியில் என்னால் இயன்ற சிறு பணிகளைச் செய்து வருகிறேன். கொடிய மனித உரிமை மீறல்களை நானே அனுபவித்தவன் என்கிற வகையில் அதற்கு எதிராக தொடர்ந்துச் செயல்பட்டு வருகிறேன். என்னுடைய இந்தப் பணிகளுக்கு நான் எந்த ஊதியத்தையோ, பெருமைகளை ஒருபோதும் கோரியதில்லை, கோரப் போவதுமில்லை. தலித் மக்கள் மீதான வன்கொடுமைகளை மட்டுமின்றி, பழங்குடியினர், பெண்கள், சிறுபான்மையினர் எனப் பாதிக்கப்படும் எல்லோருக்காகவும் எனது எல்லைக்குட்பட்ட வகையில் ஏதோ செய்து வருகிறேன். எந்தச் சந்தர்ப்பத்திலும் இதற்காக நான் எந்தச் சலுகையையும் யாரிடமும் கோரியதில்லை. எனது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்களின் உதவிகளை மட்டுமே நம்பி இந்தச் செயல்பாடுகளை முழு நேரமாக செய்து வருகிறேன். இப்போதுகூட நண்பர் ராசாங்கம் எனது இந்தப் பணிகளைக் கொச்சைப்படுத்திப் புண்படுத்தி இருக்காவிட்டால் இத்தனையையும் சொல்லி இருக்கமாட்டேன்.

ராசாங்கம் சொல்லியிருப்பதுபோல நான் எழுத்துச் சார்ந்து அதிகம் பங்களிப்புச் செய்திராதவன்தான். இருந்தாலும் சமகால அரசியலில் தொடர்ந்து செயல்பட்டு வருபவன் என்கிற வகையில் ஓரளவு எல்லாவற்றையும் வாசித்து வருபவன். உங்களைப்போல காலச்சுவடு அளவுக்கு நான் உயராவிட்டாலும், நிறப்பிரிகை இதழ் புதுச்சேரியை மையமாகக் கொண்டு இயங்கியபோது, இராமர் அணில் கதை சொல்வார்களே அதுபோல, என்னால் முடிந்தவற்றைச் செய்தவன் நான். தலித் அரசியல் அறிக்கை நகல் உருவாக்கத்தில் என்னுடைய சிறு பங்களிப்பும் உண்டு. நெருக்கடி நிறைந்த காலத்தில் ‘தாயகம்’ என்றொரு இயக்க இதழ் நடத்திய அனுபவமும் உண்டு. முகநூல், வலைப்பூ ஆகியவற்றிலும் அவ்வப்போது பதிவுகள் செய்து வருகிறேன். வலைப்பூவினருக்கான அமைப்பிலும் நான் செயல்பட்டு வருகிறேன். இந்த வகையில்தான் என் நண்பரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன் அவர்களின் கருத்து குறித்துப் பதிவு செய்திருந்தேன்.

அந்தப் பதிவு அப்படியே காய்ந்து உதிர்ந்து போய்விடாமல் விவாதத்திற்குக் கொண்டு வந்ததற்காக முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னுடைய பதிவு தேர்தல் களத்தில் தலித் கட்சிகளுக்கு உரிய முக்கியத்துவம் கிடைப்பது குறித்து எழுதப்பட்டது. திருமாவளவன் அவர்கள் உ.பி.யுடன் ஒப்பிட்டுள்ளதால் நானும் அந்த ஒப்பீடு குறித்துச் சில சொல்லி இருந்தேன். அண்மையில் உ.பி தேர்தல் முடிவுகள் குறித்த ஆய்வுகள் சிலவற்றைப் படித்த பின்னணியில் அதைச் சொல்லி இருந்தேன். ராசாங்கம் இந்தப் பிரச்சினையைப் பின்னுக்குத் தள்ளிவிட்டுத் தனது எதிர்வினையில் 90 சதத்தைப் பெரியார் மீதான தாக்குதல்களுக்கும், என் மீதான தனிப்பட்ட தாக்குதல்களுக்கும் செலவிட்டுள்ளார். என் மீதான தாக்குதல் குறித்து நான் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டேன். பெரியார் குறித்த லாவணி சுமார் ஐந்தாண்டுகள் முன்பு நடந்து முடிந்த ஒரு விஷயம். இரண்டு தரப்பினரும் சொல்ல வேண்டியவைகளைச் சொல்லி முடித்தாயிற்று. பழைய பஞ்சாங்கத்தையே நீங்கள் மீண்டும் அரங்கேற்றியுள்ளீர்கள். நானும் இதற்குப் பதில் சொல்ல வேண்டுமானால் மீண்டும் ஏற்கனவே சொல்லப்பட்டவற்றையே திருப்பிச் சொல்ல வேண்டியிருக்கும். இது தேவையில்லாத கால விரயத்திற்கே இட்டுச் செல்லும். இந்த விஷயத்தைக் கிளப்பிய உங்கள் ஆசான்கள் கொஞ்ச நாட்களில் அதிலிருந்து ஜகா வாங்கியதையும், பெரியார் படத்தைப் போட்டு ஓட்டுக் கேட்டு நின்றதையும் எல்லோரும் அறிவர். காலச்சுவடை விட்டு நீங்கள் தூக்கி எறியப்படும் காலத்தில் இதுகுறித்த உங்கள் நிலைப்பாடும் மாறலாம்.

இப்போது நான் எனது குறிப்பில் முன்வைத்திருந்த தேர்தல் பிரச்சினைக்கு வருவோம். தலித் அரசியலின் பல பரிமாணங்களில் தேர்தல் பங்கேற்பும் ஒன்று. அது குறித்தே திருமாவளவன் அவர்கள் பேசியிருந்தார். நானும் அது குறித்தே எழுதியிருந்தேன். வேறு பல சந்தர்ப்பங்களிலும் திருமாவளவன் அவர்கள் தேர்தல் கூட்டணி முயற்சிகளில் தான் திராவிட இயக்கங்களால் அலட்சியம் செய்யப்பட்டதைப் பற்றிக் கூறியுள்ளார். அது உண்மை. ஆனால் திராவிடக் கட்சிகள் தலித் கட்சிகளை மட்டுமல்ல, பா.ம.க, முஸ்லிம் கட்சிகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் எல்லாவற்றையும்தான் அலட்சியம் செய்கின்றன. சென்ற பாராளுமன்ற தேர்தலின் போது மு.க.ஸ்டாலின் பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களைப் பார்த்து, “எல்லாத் தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துவேன் என்று கூறுகிறீர்களே, எனக்கும் ஒரு தொகுதி ஒதுக்குங்கள்” என்று கிண்டலடிக்கவில்லையா?

பிரச்சினை இதுதான். தேர்தல் அரசியலில் மரியாதை என்பது எண்ணிக்கையைச் சார்ந்தது. நமக்குப் பின்னால் இருக்கும் வாக்கு வங்கியைப் பொருத்தது. திராவிடக் கட்சிகள் இல்லாமல் காங்கிரஸ் கட்சி பெரும் பலத்துடன் இருந்தாலும் அப்போதும் இதேதான் நடந்திருக்கும்.

உ.பி.யில் உள்ள நிலைமை வேறு. இது குறித்து விரிவான புள்ளி விவரங்களுடன் நான் எங்கு வேண்டுமானாலும் விவாதிக்கத் தயார். ஏறக்குறைய 22 சதமுள்ள தலித் ஒற்றுமை என்பது அங்கு நிறுவப்பட்ட ஒன்று. ஆனால் இதற்கான பெருமை மாயாவதிக்கு உரியதல்ல. அவருடைய பங்கு இந்த ஒற்றுமையில் சிதைவு ஏற்படுத்தியதுதான். ஒற்றுமையை உருவாக்கியது கான்ஷிராமின் பெருமைக்குரிய பங்களிப்பு. அவர் எந்நாளும் உட்சாதி அடையாளத்தை முன்வைத்ததே இல்லை. முன்வைப்பதைக் கடுமையாகக் கண்டித்தும் வந்தார். அவர் எந்த உட்சாதிப் பிரிவைச் சேர்ந்தவர் என்பதே இன்னும் ஆராய்ச்சிக்குரிய ஒன்றாகத்தான் உள்ளது. அது மட்டுமல்ல, தலித் ஒற்றுமையைத் தாண்டி இதர ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் முஸ்லிம்களின் நம்பிக்கையையும் அவர் பெற்றிருந்தார். ‘பகுஜன்’ என்கிற கோட்பாட்டின்படி அவர் இதைச் செய்தார்.
“85 பார் 15 கா நஹின் சலேகா, நஹின் சலேகா” என்பது அவரது முழக்கங்களில் ஒன்று. அதாவது 15 சதவீத மக்கள் 85 சதவீத மக்களை இனி ஆள்வது நடக்காது, நடக்காது என்பது இதன் பொருள். “திலக் தராசு அவுர் தல்வார் இங்கோ மாரோ ஜூடே சார்” என்பது இன்னொரு முழக்கம். அதாவது நெற்றிப்பொட்டு (பார்ப்பனர்), தராசு (வைசியர்), வாள் (சத்திரியர்) ஆகியவற்றைச் செருப்பால் அடிப்போம் (சமர்களின் சின்னமாக இங்கே செருப்பு கூறப்படுகிறது) என்பது பொருள். பார்ப்பனர், சத்திரியர், வைசியர் போக எஞ்சியுள்ள தலித் மற்றும் சூத்திரர்களைத்தான் அவர் 85 சதவீத மக்கள் என்றார். உ.பி.யில் அன்று பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு இல்லாததால் அவர்கள் அரசுப் பதவிகளில் உரிய இடம் பெறவில்லை என்பதைச் சுட்டிக்காட்டினார்.

இப்படி தேர்தலை நோக்கிய ஒரு அகன்ற கூட்டணிக்கு அவர் முயற்சித்தார். இதன் அடிப்படையாக தலித் ஒற்றுமை இருந்தது. கிட்டத்தட்ட 22 சதவீத தலித்களையும் அவர் ஒன்றாகத் திரட்டியிருந்தார். இந்தியத் தேர்தல் முறையில் 35 சதவீத வாக்குகளை ஒரு கட்சி பெற முடியுமானால் அது ஆட்சியைப் பிடித்துவிட இயலும். எனவே 22 சதவீத வாக்குகளையும் அதற்கு அப்பால் ஒடுக்கப்பட்ட சில பிற்படுத்தப்பட்ட சாதிகள் மற்றும் முஸ்லிம்களின் ஆதரவையும் பெற்றிருந்த பகுஜன் சமாஜ் கட்சிக்குத் தேர்தல் அரங்கில் ஒரு மரியாதை இருந்தது.  2007ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 10 சதவீத வாக்குள்ள பார்ப்பனர்கள் மாயாவதியுடன் இணைந்து நிற்கத் தயாராக இருந்தார்கள் என்றால் அதன் பின்னணி இதுதான். அப்போதும் கூட எல்லாப் பார்ப்பனர்களும் மாயாவதிக்கு வாக்களிக்கவில்லை என்பதையும் யாதவ்கள் உள்ளிட்ட பிற்படுத்தப்பட்டவர்களில் சுமார் 20 சதவீதம் பேர் மயாவதிக்கு ஆதரவாக இருந்தனர் என்பதையும் விரிவாக ஆய்வு செய்து ‘எகனாமிக் அன்ட் பொலிடிகல் வீக்லி (EPW)’ இதழில் கட்டுரை வந்தது. நிறைய எழுதும் ராசாங்கம் அதற்குத் தக தான் எழுதுகிற விஷயங்கள் குறித்து நிறையப் படிக்கவும் வேண்டும்.

இன்று மாயாவதிக்கு ஏற்பட்டுள்ள தோல்வியில் ஊழல் ஒரு பங்கு வகித்தாலும், கான்ஷிராமின் கொள்கையில் இருந்து அவர் விலகியதே முக்கிய காரணமாக உள்ளது. பார்ப்பனர்களுக்கு அவர் அளித்த அதிக முக்கியத்துவம் முஸ்லிம்களை அவரிடமிருந்து பிரித்தது மட்டுமல்லாமல், தலித் ஒற்றுமையிலும் பிளவை ஏற்படுத்தியது. தலித் உட்பிரிவுகளில் ஒன்றான ஜாதவ்கள் இன்று பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து விலகி நின்றது இன்றைய அவரது படுதோல்விக்கு ஒரு காரணமாகி உள்ளது.

இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டுதான் தமிழகத்திலும் தலித் அமைப்புகள் தலித் ஒற்றுமைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனக் கூறியிருந்தேன். ஆனால் இங்கு நிலைமை அதுவல்ல. பட்டியல் இனத்தவர்களில் ஒருவரான “தேவேந்திர குல வேளாளர்கள்” (பள்ளர்கள்) தாம் தலித்களே இல்லை என்கின்றனர். அருந்ததியர்களுக்கு உள் ஒதுக்கீடு என்பது முற்றிலும் நியாயமான கோரிக்கை. இதை மற்ற இரு முக்கிய பிரிவினரும் எதிர்க்கின்றனர். இந்தப் பிரச்சினையில் திருமாவளவன் அவர்களின் கருத்து என்ன என்பது அவருக்குத்தான் தெரியும். டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் இதற்கு எதிராகப் போராட்டமே நடத்தினார். இன்று மதுரை உயர்நீதிமன்றத்தில் அருந்ததியர் இடஒதுக்கீட்டிற்கு எதிராகத் தொடரப்பபட்டுள்ள வழக்கின் பின்னணியில் மதுரையைச் சேர்ந்த தலித் அறிவுஜீவிகளாக அறியப்படும் ஸ்டாலின் ராஜாங்கம் உள்ளிட்டோரின் பங்கு ஊரறிந்த இரகசியம். மதுரையில் இதற்கென ஒரு இரகசியக் கூட்டம் நடத்தப்பட்டதும் பலருக்கும் தெரியும்.

மற்ற அரசியல் கட்சிகளைப் போலவே தலித் கட்சித் தலைவர்களும் ரம்ஜான் அன்று தொப்பி போட்டுக் கொண்டு கஞ்சி குடிப்பதோடு சரி. தலித் – முஸ்லிம் ஒற்றுமைக்கு எந்த முயற்சியையும் இருதரப்பினரும் மேற்கொள்வதில்லை. ஆங்காங்கு தலித் முஸ்லிம் மோதல்கள் நடைபெறும்போதும் கூட தலைவர்கள் அங்கு சென்று ஒற்றுமை ஏற்படுத்த முயற்சிப்பதில்லை.

தேர்தல் களத்தில் எண்ணிக்கையைக் காட்டுதல் ஒன்றே மரியாதை பெறுவதற்கான வழி என்கிற அடிப்படையிலேயே இதைச் சொல்ல வேண்டியதாயிற்று. ஆனால் இன்று உட்சாதி ஒற்றுமை சாத்தியமில்லாமல் போனது மட்டுமின்றி ஒருவருக்கொருவர் எதிராக நிற்க வேண்டிய நிலையும் தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. அப்படியாகும்போது எந்த ஒரு தலித் கட்சிக்கும் அதிகப்பட்சமான வாக்கு வங்கி 5 அல்லது 6 சதவீதம் என்கிற அளவிலேயே நின்று விடுகிறது. தலித் விடுதலைக்கு ஆதரவாக உள்ள மற்ற இயக்கங்களையும் தலித் கட்சிகள் தேவையில்லாமல் தமது பெரியார் எதிர்ப்பு அரசியலின் விளைவாக அந்நியமாக்கின. எல்லா தலித் அரசியல் கட்சிகளும் அப்படிச் செய்யவில்லை. விடுதலைச் சிறுத்தைகளும் அது சார்ந்த அறிவுஜீவிகளும் அதைப் படு தீவிரமாகச் செய்தனர். பெரியாரோ, திராவிட இயக்கங்களோ விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. ஆனால், தலித்களின் இன்றைய நிலைகள் அனைத்திற்கும் பெரியாரே காரணம் என்பதாக முன்வைத்தது ரொம்பவும் அபத்தமாக இருந்தது. இதில் முன்னோடியாக இருந்த ரவிக்குமார் பார்ப்பன நிழலில் ஒதுங்கி நின்று இதைச் செய்தது குறிப்பிடத்தக்கது.

ஸ்டாலின் ராஜாங்கம் போன்ற தலித் அறிவுஜீவிகளின் உச்சபட்சமான பிளவுவாதம் இன்று சாதிவாரிக் கணக்கெடுப்பிற்கு எதிராக அவர்கள் எழுப்பும் குரலில் வெளிப்படுகிறது. சாதிவாரிக் கணக்கீட்டை முற்போக்கு சக்திகள் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளன. வன்னியர்கள் உள்ளிட்ட ஒவ்வொரு பிற்படுத்தப்பட்ட சாதியும் தங்கள் எண்ணிக்கையைக் கூட்டிக் காட்டி அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியில் உள்ள நிலையில் அவரவர்களின் உண்மையான எண்ணிக்கையைத் தெரிந்து கொள்வது என்பதே இடஒதுக்கீடு நியாயமாகச் செயல்படுவதற்கு ஏதுவாகும். இதனால் பெரும்பான்மைவாதம் தலைதூக்கும் எனச் சொல்வதை ஏற்க இயலாது. சாதிவாரிக் கணக்கீடு வந்த பின்புதான் யார் பெரும்பான்மைச் சாதி, யார் சிறுபான்மைச் சாதி என்பது தெரியும் எனச் சொல்வது சிறுபிள்ளைத்தனம். தேவர், வன்னியர், நாடார் முதலானோர் பெரும்பான்மையினர் என்பதும் நாவிதர், துணி வெளுப்போர் முதலானோர் மிகச் சிறிய சாதிகள் என்பதும் பொதுப் புத்திக்குத் தெரியாதா என்ன? அருந்ததியர்கள் சாதிவாரிக் கணக்கீட்டை ஆதரிக்கின்றனர். இந்நிலையில் ராசாங்கம் போன்றோரின் நிலைப்பாடு தலித் அரசியலை மேலும் பிளவுபடுத்துவதற்கே இட்டுச் செல்லும். பிற்படுத்தப்பட்ட சாதிகளிடமிருந்தும் தலித் கட்சிகளை அந்நியப்படுத்தும்.

ஆனால் இது குறித்தெல்லாம் கவலைப்படாமல் எல்லாப் பழியையும் எளிதாகப் பெரியார் தலையில் போட்டுக் கட்டுரை எழுதிவிட்டுப் போய்விடலாம். இன்று நாடெங்கிலும் சாதி ரீதியாகக் கட்சிகள் உருவாகித்தான் உள்ளன. சமாஜ்வாதிக் கட்சி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் எல்லாம் சாதிக் கட்சிகள் இல்லையா? இவைகளை எல்லாம் பெரியார்தான் தொடங்கி வைத்தாரா?

நமது நாடு சாதிகளாகப் பிளவுண்ட ஒரு நாடு. அண்ணல் அம்பேத்கர் சொன்னதுபோல இங்கு ஒவ்வொரு சாதியும் அதற்குக் கீழே உள்ள சாதியை ஒடுக்கிக் கொண்டுள்ளன. ஒடுக்கப்பட்ட எல்லாச் சாதிகளுக்கும் அவற்றுக்குரிய எல்லா உரிமைகளும் வழங்கப்பட வேண்டும். இதில் ஆக ஒடுக்கப்பட்டவர்கள் தலித்கள். அவர்களது விடுதலைக்கு எல்லாவற்றையும் காட்டிலும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்கிற அடிப்படையிலேயே நான் பிரச்சினைகளைப் பார்க்கிறேன். சாதி மற்றும் தீண்டாமைக் கொடுமைகளைக் கருத்தியல் ரீதியாக நியாயப்படுத்தும் பார்ப்பனீயமும் முதலாளியமும்தான் இந்தியப் புரட்சியின் எதிரிகள் என்றார் அம்பேத்கர். இத்தகைய சாதி மற்றும் தீண்டாமைக் கருத்தியலுக்கு எதிராக சமூகத் தளத்தில் இயங்குவதும், பிற்படுத்தப்பட்ட சாதிகளின் வன்கொடுமைகளுக்கு எதிராக வன்கொடுமைத் தடுப்புச் சட்டங்களை மேலும் வலுவாகச் செயற்படுத்துவதில் விழிப்புக் காட்டுவதும், தேர்தல் களத்தில் தலித் ஒற்றுமையைக்கட்டி ஆதரவுத் தொகுதியை விரிவாக்குவதும் மட்டுமே இன்றைய செயல்பாடாக இருக்க முடியும் என நான் உறுதியாக நம்புகிறேன். அந்த அடிப்படையிலேயே செயற்படுகிறேன்.

ஸ்டாலின் ராசாங்கம் போன்றவர்கள் அவரே பெருமைப்பட்டுக் கொள்வது போல என்னை எல்லாம்விட அதிகமாக எழுதுவது வரவேற்கப்படக் கூடிய ஒன்று. ஆனால் இப்படி எழுதுவதோடு நிற்காமல் கொஞ்சம் களத்தில் இறங்கி வேலை செய்யவும் வேண்டும். அப்படிச் செய்யும்போதுதான் இத்தகைய பிளவுவாதம் எத்தகைய தீங்கானது என்பது தெரியும். அதிலிருந்து விடுதலைப் பெற இயலும்.

கடைசியாக ஒன்று: ராசாங்கம் தனது கட்டுரை முழுவதும் “பிராமணர்” எனப் பவ்யம் காட்டுவது ரசிக்கத்தக்கதாக உள்ளது. ஒரிடத்தில் கூட தப்பித் தவறி பார்ப்பனர் என அவர் எழுதிவிடவில்லை. ஒருவேளை அப்படி எழுதினால் காலச்சுவடு கண்ணன் விளக்கம் கேட்டு ‘மெமோ’ கொடுத்துவிடுவார் என்கிற அச்சமோ என்னவோ. ஸ்டாலின் மீது எனக்குச் சில விமர்சனங்கள் உண்டு. ஆனால் அவர் எந்நாளும் பார்ப்பனியம் போன்ற ஒரு கருத்தியலுக்கும் காலச்சுவடு போன்ற முதலாளிகளின் எல்லாவிதமான அநீதிகட்கும் பணிந்து போனதில்லை. ஸ்டாலின்மீது உண்மையிலேயே உங்களுக்கு மரியாதை இருக்குமானால் உங்கள் பெயரிலுள்ள ஸ்டாலினை நீக்கிவிட்டுக் காலச்சுவடு ராசாங்கம் என மாற்றி வைத்துக்கொள்ளுங்கள், பொருத்தமாக இருக்கும்.

இதுகுறித்த விவாதங்களை அரசியல் நோக்கர்கள், களத்தில் செயல்படுவோர் என அனைவரிடமும் இருந்து எதிர்ப் பார்க்கிறேன்.

குறிப்பு: 23.05.2012-இல் முகநூலில் வெளியிடப்பட்ட குறிப்பு.

1. பெரியார் பிறந்த மண்ணில் ஏன் ஒரு தலித் முதல்வராக முடியவில்லை?

2..ஸ்டாலின் ராஜாங்கம் எதிர்வினை

No comments: