Saturday, July 03, 2021

மதுரை மேலவளவு தியாகிகளின் நினைவிடத்தில் மலரஞ்சலி!


மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (03.07.2021) விடுத்துள்ள அறிக்கை:

மதுரை மேலூர் அருகேயுள்ள மேலவளவில் சாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட தலித்துகளின் நினைவிடத்தில் ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

கடந்த 1997ஆம் ஆண்டு மதுரை மாவட்டம், மேலூர் அருகேயுள்ள மேலவளவில் பஞ்சாயத்து தலைவராக இருந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த முருகேசன் உள்ளிட்ட 7 பேர் சாதி வெறியர்களால் கொடூரமாக கொல்லப்பட்டனர்.

உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பொ.இரத்தினம் தலைமையிலான வழக்கறிஞர் குழு பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக இப்படுகொலை வழக்கை விசாரணை நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை நடத்தி குற்றவாளிகள் 17 பேருக்கு ஆயுள் தண்டனைக் கிடைக்க காரணமாக இருந்தது.

வழக்கறிஞர் பொ.இரத்தினம் வழிகாட்டுதலில் செயல்படும் பெளத்த பொதுவுடைமை இயக்கம் சார்பில் மேலவளவு முருகேசன் உள்ளிட்டோர் கொல்லப்பட்ட நினைவு நாளான ஜூன் 30 அன்று நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த மேலூர் வட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால், வட்டாட்சியர் பல்வேறு கட்சிகள், அமைப்புகளுக்கு அனுமதி அளித்தும் இந்த இயக்கத்தினருக்கு அஞ்சலி செலுத்த அனுமதி அளிக்கவில்லை.

இந்நிலையில், வழக்கறிஞர் பொ.இரத்தினம் இந்த இயக்கத்தைச் சேர்ந்த ஜெயசேகர் மூலம் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேலவளவு நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த அனுமதி அளிக்குமாறு உத்தரவிட கோரி வழக்குத் தொடர்ந்தார்.

இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஆனந்து வெங்கடேஷ் கடந்த 01.07.2021 அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையில் அஞ்சலி செலுத்த பெளத்த பொதுவுடைமை இயக்கத்தைச் சேர்ந்த 10 பேருக்கு அனுமதி அளிக்குமாறு மேலூர் வட்டாட்சியருக்கு உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து வழக்கறிஞர் பொ.இரத்தினம் தலைமையில் மேலவளவு முருகேசன் உள்ளிட்ட 7 பேரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. மேலவளவு, சென்னகரம்பட்டி, எட்டிமங்களம் ஊர்களைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

புதுச்சேரியில் இருந்து மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், புதுவைத் தமிழ்நெஞ்சன், இரா.சுகன்யா ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலவளவு தியாகிகளுக்கு மலரஞ்சலி செலுத்தினர்.

No comments: