Saturday, September 18, 2021

சுப்பிரமணியன் காவல் மரண வழக்கு: காவல் ஆய்வாளர் உட்பட இருவருக்குப் பிடியாணை

கடந்த 2015ஆம் ஆண்டு கடலூர் மாவட்டம் நெய்வேலி நகரியத்தில் வசித்து வந்த மும்தாஜ் என்பவர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். மர்ம நபர்கள் அவரது வீட்டில் இருந்த நகைகளையும் திருடிச் சென்றனர்.

இவ்வழக்கில் சந்தேகத்தின் பேரில் கடந்த 29.05.2015 அன்று நள்ளிரவில் பட்டாம்பாக்கம், பி.என்.பாளையத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரை நெய்வேலி நகரியப் போலீசார் பிடித்துச் சென்றனர்.

அவரை 6 நாட்கள் காவல்நிலையத்தில் வைத்து அடித்து துன்புறுத்தி உள்ளனர். இதனால், சுப்பிரமணியன் உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டு அவர் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 06.05.2015 அன்று சிகிச்சைப் பலனின்றி இறந்து போனார்.

இதுகுறித்து நெல்லிக்குப்பம் காவல்நிலையத்தில் முதலில் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் பொதுமக்கள் போராட்டத்தைத் தொடர்ந்து காவல் மரணம் என வழக்குப் பதியப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடலூர் நீதித்துறை நடுவர் விசாரணை மேற்கொண்டு அறிக்கை அளித்தார்.

பின்னர், இவ்வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது. இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட சிபிசிஐடி போலீசார் அப்போழுது காவல் ஆய்வாளராக இருந்த இராஜா, காவலர்கள் செந்தில்வேல், செளமியன் ஆகியோர் மீது நீதிமன்றத்தில் இ.த.ச. 218, 330, 343, 348, 304(ii) ஆகிய பிரிவுகளில் குற்றஞ்சாட்டி குற்ற அறிக்கைத் தாக்கல் செய்தனர். தற்போது இவ்வழக்கு சிதம்பரம் இரண்டாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இவ்வழக்கு கடந்த 16.09.2021 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றத்தில் செளமியன் மட்டும் ஆஜராகி உள்ளார். காவல் ஆய்வாளர் இராஜா, செந்தில்வேல் ஆஜராகவில்லை.

நீதிமன்றத்தில் ஆஜராகாத காவல் ஆய்வாளர் இராஜா, செந்தில்வேல் ஆகியோருக்குப் பிணையில் வெளிவர முடியாத பிடியாணைப் பிறப்பித்து நீதிபதி ப.உ.செம்மல் உத்தரவிட்டார். மேலும், சிபிசிஐடி போலீசார் இருவரையும் பிடித்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படியும் உத்தரவிட்டார்.

இவ்வழக்கை கடலூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வழக்கறிஞர் குழுவினர் நடத்தி வருகின்றனர். மேலும், இவ்வழக்கை அக்கட்சியின் மாநிலச் செயலர் தோழர் கே.பாலகிருஷ்ணன் நேரடியாகக் கவனித்து வருகிறார்.

இச்சம்பவம் நடந்த போது உண்மை அறியும் குழு அமைத்து விசாரித்து அரசுக்கு அறிக்கை அளித்தோம்.

No comments: