Thursday, June 28, 2007

அது ஒரு பொடா காலம்! (11) சுப.வீரபாண்டியன்

கவலை காரணமாக, பரந்தாமனின் மூல நோய் மிகுதியாகிவிட்டது. உடலாலும், உள்ளத்தாலும் அவரைத் துன்புறுத்திய அன்றைய அரசின் மீது எனக்கு அடங்காச் சினம் எழுந்தது. ‘கருணை இல்லா ஆட்சி கடுகி ஒழிய வேண்டும்’ என்று கருதினேன்.

21.11.2002 காலை, உடல் நலிவுகளைப் பொருட்படுத்தாமல், காவல் துறையினரின் காவலுக்குப் பரந்தாமன் அழைத்துச் செல்லப்பட்டார்.

டிசம்பர் மாதத்தில் ஒரு நாள், மதியம் வரை நீதிமன்றம் நடக்கும் என்று வழக்கறிஞர் கூறியதும், மகன் இலெனினிடம் சொல்லி, அன்று நீதிமன்றத்துக்கு வீட்டிலிருந்து மதிய உணவு கொண்டு வரும்படி கூறினேன். சிறை உணவுகளைச் சாப்பிட்டுச் சாப்பிட்டு நாக்கு செத்துப் போயிருந்தது.

அந்த நாள் வந்தது. நீதிமன்றத்தில் ‘கேஸ்காரர்கள்’ அனைவரும் சந்தித்துக் கொண்டோம். கடலூரிலிருந்து, நெடுமாறன் ஐயாவும், கோவைச் சிறையிலிருந்து நண்பர் பாவாணனும், சேலம் சிறையிலிருந்து மருத்துவர் தாயப்பனும் அழைத்து வரப்பட்டிருந்தனர்.

தாயப்பனிடம் மெதுவாக, வீட்டிலிருந்து உணவு வரவிருக்கும் செய்தியைச் சொன்னேன். உமாவும் வீட்டு உணவு கொண்டுவர இருக்கும் செய்தியை அவர் சொன்னார். அதன் பின் இருவரும் நீதிமன்ற நடவடிக்கைகளில் அதிகம் கவனம் செலுத்தவில்லை.

மதியம் 2 மணியளவில் நீதிமன்றத்தை ஒத்திவைத்துவிட்டு, நீதிபதி கீழ் இறங்கி விட்டார்.

வீட்டிலிருந்து என் மனைவியும், மருமகள் விஜியும் எனக்கு எது பிடிக்கும் என்று எண்ணி எண்ணிச் சமைத்துக் கொண்டு வந்திருந்தனர். உமாவும் ஐயாவுக்குப் பிடித்த எலுமிச்சைச் சோறு, தேங்காய்ச் சோறு எனப் பலவித உணவைக் கொண்டு வந்திருந்தார்.

பாவாணனும் தாயப்பனும் ‘பணி’யைத் தொடங்கிவிட்டனர். ஐயாவுக்கும் எனக்கும் தட்டுகளில் உணவு பரிமாறப்பட்டது. முதல் வாய் உணவை நான் கையில் எடுத்ததுதான் தாமதம்... வழிக் காவலாக வந்த ஓர் உதவி ஆய்வாளர் மிக விரைந்து என்னிடம் வந்தார். ‘‘வீட்டுச் சாப்பாட்டுக்கெல்லாம் அனுமதி கிடையாது’’ என்றவர், என் மனைவியை நோக்கி ‘‘அம்மா, அந்தத் தட்டை வாங்கிக்குங்க’’ என்றார்.

அன்று நீதிமன்றத்துக்கு என் அண்ணன் எஸ்.பி.முத்துராமனும் வந்திருந்தார். ‘‘உங்க கண்ணு முன்னாடிதானே சாப்பாட்டையெல்லாம் எடுத்துவெச்சாங்க. அப்பெல்லாம் ஒண்ணும் சொல்லாம, இப்படி சாப்பிடப் போற நேரத்துல வந்து தடுக்கிறீங்களே?’’ என்றார் அவர்.

‘‘அதோ, அங்கே நிக்குற ஏ.சி.யோட உத்தரவு. நாங்க ஒண்ணும் செய்ய முடியாது’’ என்றார் காவலர்.

‘‘நாங்க எல்லாம் வழக்கமா சாப்பிட்டுக்கிட்டுதானே இருக்கோம்?’’ என்றார் தாயப்பன்.

‘‘அது ஒங்க எஸ்கார்ட்ஸைப் பொறுத்த விஷயம். ஆனா, எங்க ஏ.சி கூடாதுங்கறார். நாங்க அனுமதிக்க மாட்டோம். அவ்வளவுதான்!’’

பாவாணன் சற்று கோபக்காரர். அவர் என் பக்கம் திரும்பி, ‘‘நீங்க சாப்பிடுங்க. என்ன செய்யுறாங்கன்னு பார்த்துடுவோம். அதென்ன ஊருக்கு ஒரு சட்டம்..!’’ என்று பொரிந்தார்.

அதுவரை பொறுமையாக எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு இருந்த நெடுமாறன் ஐயா, அந்த உதவி ஆய்வாளரை அருகில் அழைத்தார். ‘‘என்ன, ஒங்க அதிகாரத்தைக் காட்டுறீங்களா?’’ என்று தொடங்கிப் பல கேள்விகளைக் கேட்டார். எதற்கும் பதில் சொல்லாமல் கேட்டுக்கொண்டு இருந்த அவர், பிறகு உதவி ஆணையர் (ஏ.சி.) இருக்குமிடம் நோக்கி நகர்ந்தார். அவரிடம் ஏதோ பேசிவிட்டு மீண்டும் நெடுமாறன் ஐயாவிடம் வந்து, ‘‘ஸாரி சார், ஏ.சி. அனுமதிக்க முடியாதுன்னு கண்டிப்பா சொல்லிட்டாரு’’ என்றார்.

அவ்வளவுதான்... ஐயா சட்டென எழுந்து, காவல் ஊர்தியை நோக்கி விரைந்தார். கடலூரிலிருந்து வந்த வழிக் காவலர்கள், ‘‘ஐயா! நீங்க சாப்பிட்டுட்டு வாங்க’’ என்றனர். ‘‘ஓ! அவர் சாப்பிடக் கூடாது. நாங்க மட்டும் சாப்பிடலாம். நல்லா இருக்குய்யா ஒங்க சட்டம்’’ என்று சொல்லிவிட்டு, ஊர்தியில் ஏறி அமர்ந்துவிட்டார்.

அண்ணன்கூட அருகில் சென்று சொல்லிப் பார்த்தார். ஐயா எதையும் கேட்கவில்லை. எனக்காகக் கடலூர் வரை அவரும் பட்டினியாகவே பயணப்பட்டார். பாவாணனும் தாயப்பனும்கூடப் பாதியில் உணவை நிறுத்திவிட்டுப் புறப்பட்டுவிட்டனர். என் அண்ணன், மனைவி, மகன், மருமகள் எல்லோர் முகத்திலும் ஒரு வாட்டம்.

உணவு பெரிதில்லை; ஆனால், உணர்வு பெரிதல்லவா! சிறையிலும், வெளியிலும் அன்று யாருமே மதிய உணவு உண்ணவில்லை.

காவல் துறைக் காவல் முடிந்து, பரந்தாமன் சிறை திரும்பினார். நாங்கள் அஞ்சியதைப் போல அங்கு எதுவும் நடைபெறவில்லை. மிரட்டல்களோ, சித்ரவதைகளோ எதுவும் இல்லை என்றும், மதிப்புடனேயே நடத்தினார்கள் என்றும் கூறினார். ஆறுதலாக இருந்தது.

வெடிகுண்டு குச்சிகளின் விவரம் காவல்துறைக்குத் தெரியும்தானே! அதனால்தான் வேறு வகையில் நெருக்கி விசாரிக்கவில்லை போலும் என்று பேசிக்கொண்டோம். எந்த ஒரு கூற்றின் கீழும், வெள்ளைத் தாளிலும் கையப்பமிடவில்லை என்ற செய்தியையும் கூறினார்.

எனினும், அவருடைய உடல்நலம் மேன்மேலும் கெடத் தொடங்கியதால், சிறைக்குள்ளேயே இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

வெளியில் இருக்கும் போது, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது துன்பமானது. ஆனால், சிறையில் அதற்குப் பெரிய போட்டியே நடக்கும். கைதிகளில் பலர், சிறை மருத்துவரிடம், ‘‘ஐயா! என்னை ஒரு வாரமாவது ஆஸ்பத்திரிக்கு அனுப்பணும்னு எழுதிக் கொடுங்கய்யா’’ என்று கெஞ்சுவார்கள். நேர்மையான மருத்துவர்கள், உண்மையான நோயாளிகளை மருத்துவமனைக்கு அனுப்புவார்கள். மற்றவர்கள் ‘பார்த்து’ அனுப்புவார்கள்.

சிறையைக் காட்டிலும், சிறை மருத்துவமனையில் சில வசதிகளும் சில சுதந்திரங்களும் உண்டு. மாலை 6 மணிக்கு அறையில் அடைத்துப் பூட்டுவது என்பது அங்கு கிடையாது. வெளியிலிருக்கும் ஒரு பெரிய கதவை மட்டுமே பூட்டுவார்கள். எனவே, நடமாட்டம் தடைப்-படாது. வரிசையாகப் படுக்கைகள் இருக்கும். சேர்ந்து அமர்ந்து பேசிக்கொண்டு இருக்கலாம். இரவில் ரொட்டியும், பாலும் கொடுப்பார்கள். எல்லாவற்றையும்விட, அங்கே மின் விசிறி உண்டு. அப்பாடா.... கொஞ்சம் காற்று வாங்கலாம். மருத்துவமனையில் மாடிப்பகுதி கிடைத்துவிட்டால், எதிரேயுள்ள சென்னை மாநகராட்சிக் கட்டடம் தெரியும். வாகனப் போக்குவரத்தைச் சற்று வேடிக்கை பார்க்கலாம். இவ்வாறு பல வாய்ப்புகள் உண்டென்று மோகனும், செல்வராஜும் சொன்னதைக் கேட்டு பரந்தாமனும் மகிழ்ச்சியாக மருத்துவ மனைக்குப் புறப்பட்டார். மருத்துவமனைக்கு மகிழ்ச்சியாகப் புறப்படும் முரண், எங்களைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது.

முதல் வகுப்புக் கைதிகள் என்பதால், எங்களுக்கு நாற்காலியும், மேசையும் வழங்கப்பட்டன. ஓர் இரவில், வெளியில் எரியும் விளக்கின் மங்கலான வெளிச்சத்தில், மேசை மீது புத்த கத்தை வைத்துச் சிரமப்பட்டுப் படித்துக்கொண்டு இருந்தேன். அப்போது காவலர்கள், ஓர் இளைஞனை எங்கள் தொகுதிக்குள் அழைத்து வந்தனர். ‘ஏதோ புது வரவு’ என்று நினைத்துக் கொண்டேன். என் அறையைத் தாண்டி, அந்த இளைஞனை அழைத்துச் சென்றபோது, அவனை எங்கோ பார்த்திருப்பது போன்று எனக்குப் பட்டது. சட்டென்று ஒரு மின்னல் வெட்டு! கண்டுபிடித்துவிட்டேன். ‘அட, அவன்தானா இவன்!’ என்ற ஆர்வத்தில் மீண்டும் அந்த இளைஞனை உற்றுப்பார்க்க முயல்வதற்குள், பக்கத்து அறையில் அவன் அடைக்கப்பட்டுவிட்டான்!

(தொடரும்)

நன்றி:
ஆனந்த விகடன்.
www.subavee.blogspot.com

3 comments:

thiagu1973 said...

விகடனில் நீங்கள் எழுதுகிறீர்கள் தானே

கோ.சுகுமாரன் Ko.Sugumaran said...

திரு. தியாகு அவர்களுக்கு,

விகடனில் நான் எழுதவில்லை.

நன்றி.

வெற்றி said...

சுகுமாரன்,
நல்ல தொடர். அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன்.

நன்றி.