Saturday, June 16, 2007

அருந்ததியர்களுக்கு உள்ஒதுக்கீடு கோரிக்கை : ரவிக்குமார் எம்.எல்.ஏ. எதிர்ப்பு



Ravikumar MLA on Arunthathiar Reservation - BBC - Tamilosai - 12-6-2007
Ravikumar MLA on A...
Hosted by eSnips

தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கு வழங்கப்படும் 18 விழுக்காடு இடஒதுக்கீட்டில் அருந்ததிய இன மக்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க வேண்டுமென்ற கோரிக்கைக்கு விடுதலைச் சிறுத்தைகளின் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

12-6-2007 அன்று சென்னையில் பல்வேறு அருந்ததிய இன மக்களின் இயக்கங்களை ஒருங்கிணைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாபெரும் பேரணி ஒன்றை நடத்தியது. இதில் தமிழகமெங்கும் இருந்து பல்லாயிரக்கணக்கான அருந்ததியர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் என். வரதராஜன் தலைமையிலான குழு தமிழக முதல்வர் கருணாநிதியை கோட்டையிலுள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தது.

அம்மனுவில், பாதாளச் சாக்கடை, துப்புரவுப் பணியை நவீனப்படுத்த வேண்டும்; அருந்ததியர் குறித்த முழுமையான கணக்கெடுப்பை நடத்த வேண்டும்; தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் அருந்ததியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இருந்தனர்.

கோரிக்கை மனுவைப் பெற்றுக் கொண்ட முதல்வர் கருணாநிதி, அருந்ததியர் பற்றிய கணக்கெடுப்பு நடத்த ஒரு குழு அமைக்கப்படும்; மற்ற கோரிக்கைகளையும் அரசு பரிசீலிக்கும் என உறுதியளித்துள்ளார்.

இப்பேரணியில் கலந்து கொண்ட ஆதித் தமிழர் பேரவையின் தலைவர் இரா.அதியமான் `தமிழகத்தில் மூன்றில் ஒரு பங்காக இருக்கின்ற அருந்ததிய இன மக்களுக்குத் தாழ்த்தப்பட்டோருக்கான 18 சதவீத மொத்த இடஒதுக்கீட்டில், மூன்றில் ஒரு பங்கான 6 சதவீதத்தை வழங்க வேண்டும்' என்றார்.

தாழ்த்தப்பட்ட மக்களில் அடித்தட்டில் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் உழன்றுவரும் அருந்ததியர்களுக்கு தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்குவதுதான் இயற்கை நீதி, சமூக நீதி. தமிழகத்திலுள்ள பல அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள் பல காலமாக இக்கோரிக்கையை எழுப்பி வருகின்றன. இந்தச் சூழலில், ஆளும் திமுக கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அருந்ததியர்களின் கோரிக்கையை முன்னெடுத்திருப்பது ஒரு முக்கிய திருப்பம் எனலாம்.

இதனிடையே, தமிழகத்தில் குறிப்பிடத்தகுந்த தலித் கட்சியான விடுதலைச் சிறுத்தைகளின் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார், அருந்ததிய இன மக்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் இலண்டன் பி.பி.சி. தமிழோசை வானொலிக்கு அளித்த நேர்காணலில் தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகளின் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் நேர்காணலில் கூறியதாவது :

’அருந்ததியின மக்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஆந்திர பிரதேசத்தில் முதன்முதலில் எழுப்பப்பட்டது. தெலுங்கு தேசக் கட்சி ஆட்சியில் சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தபோது உள்ஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றினார். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்ககான இடஒதுக்கீட்டை இப்படி பிரிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் ஆந்திர பிரதேசத்தின் அந்த சட்டத்தை ரத்து செய்துவிட்டது. இப்போது இதே கோரிக்கையை இங்கே எழுப்புகிறார்கள். இடஒதுக்கீடு என்பது எந்தவொரு பிரச்சினைக்கும் முழுமையான தீர்வாகாது. இடஒதுக்கீடு மூலம் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களில் 10 விழுக்காட்டினர் மட்டும்தான் பயன்பெற முடியும். மொத்த இடஒதுக்கீட்டில் தனியார் துறை, அரசு ஒதுக்கீடு என இடஒதுக்கீடு பூர்த்தி செய்யப்பட்டாலும்கூட அது அந்த சமூகத்தைச் சேர்ந்த 10 விழுக்காட்டு மக்களுக்கே பயன் அளிக்கக் கூடியதாகும். ஆக, இடஒதுக்கீடு என்பதிலேயே முழுமையான ஒரு தீர்வைக் கண்டுவிடலாம் என்ற தவறான கண்ணோட்டத்தில்தான் உள்ஒதுக்கீடு கோரிக்கைகள் முன் வைக்கப்படுவதாக நான் கருதுகிறேன்’
என்று கூறியுள்ளார்.

அருந்ததியர்களுக்கான உள்ஒதுக்கீட்டை எதிர்ப்பதன் மூலம் சாதிப் படிநிலையில் கடைகோடியில் இருக்கும் அருந்ததிய இன மக்களுக்கு தன் ஆதரவு இல்லை என்பதையே ரவிக்குமார் தெளிவுப்படுத்தியுள்ளார். மேலும், தாழ்த்தப்பட்ட மக்களில் கீழ்நிலையிலுள்ள அருந்ததி இன மக்கள் முன்னேற்றம் அடைவதால் தன்னுடைய சமூக மக்களுக்கான இடங்கள் பறிபோகும் என்ற அச்சத்தை அவர் இப்படி வெளிப்படுத்தி உள்ளதாகவே கருத வேண்டியுள்ளது.

விடுதலைச் சிறுத்தைகளின் சட்டமன்ற உறுப்பினராக இருந்து ரவிக்குமார் இப்படி அருந்ததிய இன மக்களுக்கு எதிராக கருத்து தெரிவித்திருப்பது பல்வேறு அய்யங்களுக்கு வழிவகுத்துள்ளன. ஒட்டுமொத்த தலித்துகளுக்கானக் கட்சி என கூறிவரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவன், இதுபற்றிய மறுப்போ அல்லது அருந்ததிய இன மக்களுக்கான உள்ஒதுக்கீடு பற்றியோ இதுவரையில் எதுவும் கூறாமல் இருப்பது, ரவிக்குமாரின் கருத்தை ஆதரிக்கிறாரா என எண்ணத் தோன்றுகிறது. இது குறித்து அவர் உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

ரவிக்குமார் அருந்ததியர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்திருப்பது இதுவே முதல் முறையல்ல. 2004-ஆம் ஆண்டு ஆகஸ்டில் வெளிவந்த `காலச்சுவடு' என்ற பார்ப்பன - இந்துத்துவ இதழில், ’இறந்த உதடுகள் ஒன்று கூடும் பொழுது’ என்ற தலைப்பில் புகழ்பெற்ற கவிஞர் பாப்லோ நெரூடா நூற்றாண்டையொட்டி, அவரைப் பற்றி எழுதிய குறிப்பு ஒன்றில் இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.

’நெரூடா கொழும்பில் வசித்த பங்களா மிகப்பெரியது. அதன் கழிவறை வெளியே தனியே அமைக்கப்பட்டிருந்தது. அந்தக் கழிவறையை யார் சுத்தம் செய்கிறார்கள் என்பது நெரூடாவுக்கு தெரியாது. ஒருநாள் அது யாரென்பது நெரூடாவுக்குத் தெரியவந்தது. ''இலங்கையில் நான் இதுவரை சந்தித்திராத அழகி. ஒரு சிலையைப் போல இருந்தாள். அவள் ஒரு தமிழ்ப்பெண், பறையர் சாதியை சேர்ந்தவள். அவள் சிவப்பும் பொன்நிறமும் கொண்ட மட்டரகமான புடவையை உடுத்தியிருந்தாள். கைகளில் கனமான வளையல்கள். அவளது மூக்கின் இரு புறமும் இரண்டு சிறிய சிவப்பு மூக்குத்திகள் மின்னிக்கொண்டிருந்தன. அவை வெறும் கண்ணாடிகள்தான் என்ற போதிலும் அவளது முகத்தில் ரத்தினங்களாய் மின்னிக்கொண்டிருந்தன.''

அவளை வசியப்படுத்த நெரூடா பலவித முயற்சிகளைச் செய்கிறார். எதற்கும் பலனில்லை. ''ஒரு நாள் நேராகச் சென்று அவளது கையைப் பிடித்தேன், கண்களைப் பார்த்தேன். அவளோடு பேச என்னிடம் மொழியும் இல்லை. சிறு புன்னகை கூட இன்றி அவள் படுக்கையறைக்கு வந்தாள்.'' ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தென்னிந்தியச் சிற்பத்தைப் போல அவள் இருந்ததாக நெரூடா வர்ணிக்கிறார். ''அவளைப் புணர்ந்தது ஒரு சிலையைப் புணர்ந்ததுபோல் இருந்தது. கடைசிவரை அவளது கண்கள் திறந்தபடியே இருந்தன. அவளிடமிருந்து ஒரு எதிர்வினையும் இல்லை.''

பறையர் என நெரூடா குறிப்பிட்டிருப்பது அக்காலத்தில் (1929) கொழும்பில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்த சக்கிலிய வகுப்பினரைத்தான். நெரூடாவின் வர்ணனையைப் படிக்கும்போது ஏறத்தாழ நெரூடா அந்தப் பெண்ணைக் கற்பழித்தார் என்றே சொல்லத் தோன்றுகிறது.’


பாப்லோ நெரூடா உறவு கொண்டது பறையர் வகுப்பைச் சேர்ந்த பெண் அல்ல, அவள் சக்கிலியர் வகுப்பைச் சேர்ந்தவள் என குறிப்பிட்டதின் பின்னணி எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய ஒன்றுதான். ரவிக்குமார் இவ்வாறு எழுதியதற்கு அப்போது பலதரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பாப்லோ நெரூடா உறவு கொண்டது, ரவிக்குமார் சொற்களில் கூறினால் கற்பழித்தது ஒரு தலித் பெண் என எடுத்துக் கொள்ளாமல் அவள் அருந்ததிய இனப் பெண் எனக் குறிப்பிட்டுச் சொன்னதின் உள்ளீடு நுண்ணிய சாதி ஆதிக்க வெளிப்பாடு; அம்பேத்கர், பெரியார் போன்றவர்கள் வலியுறுத்திய சாதி ஒழிப்புக்கு முரணானது; தலித் விடுதலைக்கு எதிரானது.

ரவிக்குமார் அவரது பேச்சிலும், எழுத்திலும் தொடர்ந்து வலியுறுத்திய ஒன்றை அவருக்கு தற்போது நினைவுபடுத்த விரும்புகிறேன்.

`எவன் ஒருவன் தான் பிறந்த சாதிக்கு துரோகம் இழைக்கிறானோ, அவனே சாதியை ஒழிக்க முடியும்.’

16 comments:

சந்திப்பு said...

சுகுமாறன் மிகச் சிறப்பாக பதிவிட்டுள்ளீர்கள். தலித் மக்களிலேயே அருந்ததிய மக்கள்தான் மிகவும் அடிநிலையில் இருக்கிறார்கள். நம்மைப் பொறுத்தவரை தாழ்த்தப்பட்ட மக்களுக்குள் முரண்பாடுகளை உண்டாக்குவது நமது நோக்கமல்ல. அதே சமயம் இருக்கின்ற இடத்தை பகிர்ந்து கொள்வதில்கூட அருந்ததி மக்கள் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள் என்பதுதான் நிகழ்கால வரலாறு. அந்த அடிப்படையில்தான் சி.பி.எம். உட்பட அருந்ததிய அமைப்புகள் உள்ஒதுக்கீடு கோருகிறது. இது அத்தியாவசியமானது. இதை எதிர்ப்பது இடஒதுக்கீடுடையே எதிர்ப்பதற்கு சமமாகும். இதைத்தான் பார்ப்பனீயம் செய்துக் கொண்டு வருகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டியுள்ளது. ரவிக்குமார் உணர்வாரா? திருமாவளவன் வாய்திறப்பாரா?

Anonymous said...

ஆந்திர அரசு கொடுத்த உள் ஒதுக்கீடு செல்லாது என்று உச்சநீதி மன்றம் கூறிவிட்ட பின் தமிழக அரசால் அதை செய்ய முடியுமா.
தலித் அமைப்புகள் சில உள் ஒதுக்கீட்டினை எதிர்க்கின்றன,சில
ஆதரிக்கின்றன. அரசியல் சட்டப் பிரச்சினையை தீர்க்க வேண்டிய மத்திய அரசு ஒரு குழுவினை
அமைத்திருக்கிறது.அக்குழு அமைத்ததையே சில தலித் அமைப்புகள் ஏற்க மறுத்து எதிர்க்கின்றன. தமிழ் நாட்டில் தலித்களுக்கான இட ஒதுக்கீட்டினை 19% ஆக மாக்சிஸ்ட்கள் கோருவது இன்னும் வேடிக்கை.

ரவிக்குமார் சில கசப்பான உண்மைகளை கூறியுள்ளார். அரசியல் சட்டத்தில் தலித்களில் உள் ஒதுக்கீட்டிற்கு இடமில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.தலித்களுக்கான இட ஒதுக்கீட்டினை அதிகரிக்க முடியாது என்று மத்திய அரசும் முடிவு செய்துவிட்டது. தீக்கதிரும், மார்க்ஸிட்களும் இது குறித்து எடுத்துக் கூறாமல் போராட்டத்திற்கு
ஆள் திரட்டுகிறார்கள். பிறர் அறியாமையை வைத்து அரசியல் செய்கிறார்கள். உண்மைகளை மறைத்து போராட்டத்திற்கு தூண்டுவது சரிதானா?. உங்களைப் போன்றவர்கள் சட்ட சிக்கல்களை எழுதுவதில்லை, அதற்கான தீர்வுகளையும் கூறுவதில்லை.

Anonymous said...

`காலச்சுவடு' என்ற பார்ப்பன - இந்துத்துவ இதழில்,

அதனால்தான் அதில் வசந்தி தேவி போன்றவர்கள் எழுதுகிறார்களா?

எழில் said...

அவர்கள் தெலுங்கு பேசுபவர்கள், அதனால், அவர்களுக்கு தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடே கொடுக்கக்கூடாது என்று ஒரு மேதாவி ஒருமுறை கூறினார்.

இது கட்சி சார்பற்று அனைவரும் ஆதரிக்கவேண்டிய ஒன்று.

அருந்ததியர்களுக்கான உள் இட ஒதுக்கீட்டை ஆதரிக்கிறேன்.

நட்புடன்
எழில்

மாசிலா said...

ரவிக்குமாரின் இவ்வாதிக்க போக்கு மிகவும் கண்டனத்துக்கு உரியதே. சமுதாயத்தின் மிகவும் கடைகட்டத்தில் இருக்கும் அருந்ததியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு கொடுத்து தூக்கிவிடவேண்டியது அவசியமானதுதான்.

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி கோ.சுகுமாரன்.

Anonymous said...

Mr.Sukumaran,

You have exposed a right thing in a right time. What Viduthalai siruthaikal Thol.Thirumavalavan will tell for this. I think he will feel a lot for a wrong choice that's Ravikumar. Anyway seeing these statements, I think that we have to travel a long way to abolish Caste system under the light of Dr.Ambedkar and Thanthai Periyar.

Thanks.

Anonymous said...

இட ஒதுக்கீட்டின் முலம் பயன் பெறுவது அருந்ததியர் போன்றவர்கள் இல்லை.ஓசி அடிப்பதெல்லாம்,சுகுமாரன்,கோவி,சிவபாலன்,குழலி போன்ற வசதி படைத்த கிருமி லேயர் ஓ பி சி கும்பல் தான்.தங்களைத் தாங்களே கேவலமாக பாக்வேர்ட் என்று வர்ணித்துக்கொண்டு இவர்கள் ஓசி அடிப்பட்டு மிகவம் கேவலமான அயோக்யத்தனம்.இந்த அயோக்யத்தனத்துக்கு இவர்கள் வைத்த பெயர் சமூக நீதி.

Anonymous said...

Discussing about Ravikumar is waste of time as the solution does
not depend on his views.Is it possible to give quota within
quota for Arundathiars.That is
the question.

Anonymous said...

கிரிமிலேயர் பற்றி பேசும் அனானியே!

இடஒதுக்கீட்டினால் பயன்பெறுவது அந்தத்த சமூகத்தில் ஓரளவாவது படித்தவர்கள்தான். ஆனால்,ஏதோ ஓ.பி.சி. மட்டும் தான் இடஒதுக்கீட்டினால் பயன் பெறுவதுபோல் ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்த வேண்டாம். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. என்று அனைத்து சமூகங்களும்தான் பயன் பெறுகின்றன.

இடஓதுக்கீட்டை எதிர்க்கும் நீங்கள் பார்ப்பனரா? பார்ப்பன அடிவருடியா? உங்கள் பருப்பு எல்லாம் இனி வேகாது சாமி..

கோ.சுகுமாரன் Ko.Sugumaran said...

அனானி அவர்களே..

//Is it possible to give quota within quota for Arundathiars.That is the question.//

மொத்த இடஒதுக்கீடு 50 விழுக்காட்டிற்கு மேல் இருக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளதை மீறி தமிழகத்தில் 69 விழுக்காடு இடஒதுக்கீடு உள்ளது.இதேபோல் அருந்ததியர்களுக்கு தனிஒதுக்கீடு தருவதில் பெறும் சட்ட சிக்கல் உள்ளதாக தெரியவில்லை.

தமிழக முதல்வரும் கணக்கெடுப்பு நடத்தி கொடுக்கலாம் எனக் கூறியுள்ளார். அரசு உறுதியான முடிவு எடுத்தால் எந்தத் தடையையும் தகர்த்து எறியலாம்.

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பிறடுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு உள்ளது. இதே அடிப்படையில் அருந்ததியருக்கு உள்ஒதுக்கீடு வழங்கலாம்.

இதற்கு தேவை அரசின் உறுதியான நடவடிக்கை.

//Discussing about Ravikumar is waste of time as the solution does
not depend on his views.//

ரவிக்குமாரின் கருத்தைக் கேட்டு அரசு முடிவு எடுப்பதில்லை. ஆனால், தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் அருந்ததியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க விடுதலைச் சிறுத்தைகளின் கருத்து முக்கியமானது. ரவிக்குமார் விடுதலைச் சிறுத்தைகளின் சட்டமன்ற உறுப்பினராக இருந்து இப்படி கருத்து சொல்வதுதான் சிக்கல்.

தலித் விடுதலை என்று சொல்லி வந்த ரவிக்குமாரை அம்பலப்படுத்து தலித் விடுதலைக்கு அவசியம்.

Anonymous said...

ரவிக்குமார் கூற்று சரி என்று ஒரு அனானி எழுதியிருக்கிறார்.உள் ஒதுக்கீடு தரமுடியும் என்கிறார்
சுகுமாரன்.ஆந்திரா தர முயன்று அதை உச்ச நீதிமன்றம் தடை செய்த பின் தமிழக அரசு அதே போல் உள் ஒதுக்கீடு தர முடியுமா. இது ஒரு சட்ட ரீதியான கேள்வி. இதற்கான விடைதான் தேவை.
ரவிக்குமார் மீதுள்ள காழ்ப்புகளை காட்ட இந்தப் பிரச்சினையை பயன்படுத்த வேண்டுமா.திருமா,
ரவிக்குமாரின் பல கருத்துக்களை நிராகரித்திருக்கிறார், உள் ஒதுக்கீட்டினை ஆதரிப்போம் என்று பேசியிருக்கிறார்.வி.சி அமைப்பின் கருத்துக்கள்,ரவிக்குமாரின் தனிப்பட்ட கருத்துக்களும் எப்போதும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று அமைப்பு எதிர்ப்பார்ப்பதில்லை. எனவே குட்டையை
குளப்பி அதில் மீன் பிடிக்க முயல வேண்டாம்.அருந்ததியர் பிரச்சினைகளை பயன்படுத்தி உங்கள் சில்லறை அரசியல் ஆதாயங்களைத் தேட வேண்டாம்

கோ.சுகுமாரன் Ko.Sugumaran said...

அனானிக்கு,

உள்ஒதுக்கீடு அளிப்பதில் சட்டபடி தடை இல்லை. அருந்ததியர்களுக்கு உள்ஒதுக்கீடு அளித்து தனிச் சட்டம் இயற்றி அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி ஒப்புதல் பெற வேண்டும்.
இதை எதிர்த்து யாராவது உச்சநீதிமன்றத்தை நாடினால், அதை உரிய வகையில் எதிர்கொண்டால் போதும். இதற்கு பல எடுத்துக்காட்டுக்கள் உள்ளன.

தற்போதுகூட இசுலாமியர்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. ஆனால், ஆந்திராவில் இசுலாமியர்களுக்கு 5% இடஒதுக்கீடு அளித்தபோது, அதை உயர்நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. நிலை இப்படியிருக்க தமிழக அரசு மீண்டும் இசுலாமியர்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பது பற்றி பேசுவது எப்படி்? இன்னும் சொல்லப் போனால் ஆந்திர அரசும் இசுலாமியர்களுக்கு இடஒதுக்கீடு அளிப்போம் என கூறுவது எப்படி?

ரவிக்குமார் விடுதலைச் சிறுத்தைகளின் சட்டமன்ற உறுப்பினர். அவரது கருத்து தமிழக அரசை நிர்பந்திக்காது என்பதற்கு என்ன உத்திரவாதம்.

//வி.சி அமைப்பின் கருத்துக்கள்,ரவிக்குமாரின் தனிப்பட்ட கருத்துக்களும் எப்போதும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று அமைப்பு எதிர்ப்பார்ப்பதில்லை//

ஒரு முக்கிய கொள்கை குறித்து விடுதலைச் சிறுத்தைகள் - ரவிக்குமார் கருத்து மாறுபடுவதுதான் ஜனநாயகமா? உங்கள் கருத்துப்படி திருமா அதிமுக பக்கமும், ரவிக்குமார் திமுக பக்கமும் இருக்க முடியுமா? ஒருமித்த கருத்து தேவையில்லையா?

அருந்ததியர் பிரச்சனையைப் பயன்படுத்தி யாரும் சில்லறை அரசியல் ஆதாயம் தேட வேண்டிய அவசியம் இல்லை. தொடர்ந்து அருந்ததியருக்கு எதிராக ரவிக்குமார் தொடர்ந்து பேசுவது சரிதானா? இதை திருமா ஆதரிக்கிறாரா? என்பதுதான் கேள்வி.

ரவிக்குமார் சாதாரண உறுப்பினர் என்றால் பரவாயில்லை. ஆனால், அவர் ஒரு சட்டமனற உறுப்பினர். அதனால் இந்த கேள்வியை எழுப்புகிறேன். திருமாவும் ரவிக்குமாரை போன்றே அருந்ததிய இன மக்களுக்கு எதிராக இருப்பதாக மக்கள் நினைத்துவிடக் கூடாது என்பதுதான் என் கவலை.

கடைசியாக ஒன்று, அவர் மீது எனக்கு எந்த காழ்ப்பும் இல்லை. அவரது கருத்து மீதுதான் மாறுபாடு.

Anonymous said...

Your argument about the Arunthathiars is ok. whether the TN government will do this. I have no hope on Karunanithi. He will simply leave this without any announcement. I hope that you are having faith in Karunanithi. But, CPM will take sincere effort to achieve the demand.

Best Wishes Sugumaran.

தருமி said...

`எவன் ஒருவன் தான் பிறந்த சாதிக்கு துரோகம் இழைக்கிறானோ, அவனே சாதியை ஒழிக்க முடியும்.’//

- இது புரியவில்லையே?!

Anonymous said...

உள்ஒதுக்கீடு அளிப்பதில் சட்டபடி தடை இல்லை. அருந்ததியர்களுக்கு உள்ஒதுக்கீடு அளித்து தனிச் சட்டம் இயற்றி அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி ஒப்புதல் பெற வேண்டும்.
இதை எதிர்த்து யாராவது உச்சநீதிமன்றத்தை நாடினால், அதை உரிய வகையில் எதிர்கொண்டால் போதும். இதற்கு பல எடுத்துக்காட்டுக்கள் உள்ளன.

The fact is AP govt. could not
divide quota for SCs among various
communities as the Supreme Court
struck it down.So how can Karunanidhi do it.AP the Supreme
Court struck it down in 2004.The AP govt is unable to do anything.This is the reality.

Anonymous said...

"தற்போதுகூட இசுலாமியர்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. ஆனால், ஆந்திராவில் இசுலாமியர்களுக்கு 5% இடஒதுக்கீடு அளித்தபோது, அதை உயர்நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. நிலை இப்படியிருக்க தமிழக அரசு மீண்டும் இசுலாமியர்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பது பற்றி பேசுவது எப்படி்? இன்னும் சொல்லப் போனால் ஆந்திர அரசும் இசுலாமியர்களுக்கு இடஒதுக்கீடு அளிப்போம் என கூறுவது எப்படி? "

அப்படி இட ஒதுக்கீடு செய்தால் நீதிமன்றங்கள் அதை தடை செய்துவிடும். பாருங்கள், நாங்கள் கொடுத்தோம், ஆனால் சிலர் தடை உத்தரவு பெற்றுவிட்டார்கள், என்று சொல்லி அனுதாபம்
பெற்றுக் கொள்ளலாம். ஒரு கல்லில் இரு மாங்காய்.மைனாரிட்டி ஒட்டு வங்கியைக் குறித்து வைத்து ஆடப்படும் நாடகம். போலி மதசார்பின்மை வாதிகள் மைனாரிட்டிகளுக்கு இட ஒதுக்கீடு என்றால்
வரவேற்பார்கள். அனைத்து கிறித்துவர்களும், இஸ்லாமியரும் சமூக ரீதியாகவும்,கல்வி ரீதியாகவும்
இட ஒதுக்கீடு பெற வேண்டிய நிலையில் பின் தங்கியா இருக்கிறார்கள் என்று நீங்களெல்லாம்
கேட்க மாட்டீர்கள். இஸ்லாமியருக்கு 20% கிறித்துவருக்கு 10% இட ஒதுக்கீடு கொடுக்கலாம்,
ஆனால் ஏழையாக உள்ள இந்துக்கள் அனைவருக்கும் இட ஒதுக்கீடு தரக்கூடாது என்றுதானே
சொல்வீர்கள். நீங்களும் அரசியல் கட்சிகளும் இந்து விரோதக் கூட்டணிதானே அமைத்திருக்கிறீர்கள்.கோடிஸ்வர முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு,மைனாரிட்டி கல்வி நிறுவனங்கள் தலித்களுக்குக் கூட இட ஒதுக்கீடு செய்ய வேண்டியதில்லை இதுதானே
உங்கள் 'சமூக நீதி'க் கொள்கை. ஆந்திராவில் முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு தரப்பட்ட
போது அதை எதிர்த்து நீதிமன்றம் சென்றவர்களில் ஒபிசிக்களும் உண்டு.
அது போல் தலித் இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீட்டினை எதிர்த்து வழக்குத் தொடர்ந்து வென்றவர்கள் இன்னொரு தலித் பிரிவான மலாவைச் சேர்ந்தவர்கள். மலாக்களுக்கும்,
மடிகாக்களுக்கும் இந்தப் பிரச்சினையில் கருத்தொற்றுமை ஏற்படவில்லை.

தலித்களிடையே பிளவு ஏற்பட்டால் அரசியல் கட்சிகளுக்கு கொண்டாட்டம்.தலித்கள் அரசியல் ரீதியாக ஒன்றிணைந்து செயல்பட்டால் இங்கும் ஒரு தலித் கட்சி பி.எஸ்.பி போல் வலுவாக உருவாகிவிட்டால் தலித்கள் ஒட்டுக்கள் சிதறாது.உள் ஒதுக்கீடு தலித்கள் உள் சாதி ரீதியாக
பிளவுபடுவதை ஊக்குவிக்கும்.ஒட்டுகள் சிதறும், தங்களுக்குள் தலித்கள் மோதிக் கொள்வர்.இது கலைஞருக்கு வசதியானது. எனவே கலைஞர் உள் இட ஒதுக்கீட்டினை ஆதரிப்பார்.தலித்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.தங்களின் எதிரிகள், நன்மை செய்வது போல் நடித்து ஏமாற்றுகிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.