Saturday, April 16, 2011

டாக்டர் பினாயக் சென்னிற்கு உச்சநீதிமன்றம் பிணை: மனித உரிமை அமைப்புகளுக்கு கிடைத்த வெற்றி

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 16.04.2011 அன்று விடுத்துள்ள அறிக்கை:

புகழ் பெற்ற மனித உரிமை ஆர்வலர் டாக்டர் பினாயக் சென்னிற்கு உச்சநீதிமன்றம் பிணை வழங்கியுள்ளதை வரவேற்பதோடு, இது மனித உரிமை அமைப்புகளுக்கு கிடைத்த வெற்றி என்பதை மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.

அடித்தட்டு மக்களுக்காக சேவை புரிந்து வந்த டாக்டர் பினாயக் சென் மீது சட்டிஸ்கர் மாநில காவல்துறை மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு வைத்திருந்தார் எனக் கூறி தேசதுரோக குற்றச்சாட்டில் அவரை கைது செய்து சிறையில் அடைத்தது. அவர் மீதான வழக்கு விசாரணை ராய்ப்பூர் செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து முடிந்து அவருக்கு கடந்த டிசம்பர் 24ந் தேதியன்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

வன்முறையிலும், சட்டத்திற்குப் புறம்பான வழிமுறைகளின் மீதும் நம்பிக்கையற்ற பினாயக் சென்னிற்கு அயுள் தண்டனை விதிக்கப்பட்டது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்ததோடு, உலக அளவில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இந்தியா முழுவதும் இத்தீர்ப்பை எதிர்த்து கண்டன கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

புதுச்சேரியிலும் மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் கடந்த ஜனவரி 2ந் தேதியன்று கண்டன கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் பினாயக் சென் மீதான வழக்கைத் திரும்பப் பெறவும், அவருக்கு உச்சநீதிமன்றம் பிணை வழங்கவும் வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தற்போது பினாயக் சென்னிற்கு உச்சநீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும், உச்சநீதிமன்றம் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் எதுவும் இல்லை என்றும், மவோயிஸ்டுகளை ஆதாரிப்பது குற்றமல்ல எனவும் கூறியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இக்கருத்து பினாயக் சென் சட்டிஸ்கர் மாநில காவல்துறையால் திட்டமிட்டு பழிவாங்கப்பட்டதை உறுதி செய்கிறது. மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு காலம் கடந்தாவது நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

உச்சநீதிமன்றம் தேசதுரோக சட்டப் பிரிவான (Sedition) இந்திய தண்டனைச் சட்டம் 124-ஏ பிரிவை பயன்படுத்துவது குறித்து கேள்வி எழுப்பியுள்ளது. வெள்ளையர்களை எதிர்த்து சுதந்திரத்திற்கு போராடியவர்கள் மீது ஏவப்பட்ட இந்த சட்டப் பிரிவு இன்றைக்கும் தேவையா என்ற விவாதம் தற்போது மீண்டும் எழுந்துள்ளது.

உச்சநீதிமன்றத்தின் கருத்தை தொடர்ந்து மத்திய சட்டத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி தேசதுரோக சட்டப் பிரிவை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளார். இது மனித உரிமை ஆர்வலர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளிக்கிறது.

எனவே, தேசதுரோக சட்டப் பிரிவை உடனடியாக நீக்கவும், இந்தியா முழுவதும் தேசதுரோக குற்றச்சாட்டில் சிறைகளில் உள்ளவர்களின் மீதான வழக்குகளை மறுபரீசிலனை செய்து, அவர்களை விடுதலை செய்யவும் மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.

1 comment:

Arulselvan Senthivel said...

பிநாயக் சென்னுக்கு வழங்கப் பட்ட பிணை குறித்த செய்திகளைத் தமிழ் நாளிதழ்கள் எவ்வாறு செய்தியாக வெளியிட்டுள்ளன என்பது குறித்து புதுச்சேரி பல்கலைக்கழக ஊடக மாணவர்கள் நடத்திய ஆய்வறிக்கை எம்து வலைப்பதிவில் வெளியிடப் பட்டுள்ளது என்பதைத் தங்களது கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறோம்.
URL:
http://mediawatch2011.blogspot.com/2011/04/blog-post_16.html

அருள்செல்வன்
மின்னணு ஊடக ஆய்வு மையம்
பாண்டிச்சேரி பல்கலைக் கழகம்