Friday, November 09, 2012

புதுச்சேரியின் நீர் ஆதாரத்தைப் பாழாக்கிய செம்மண் கொள்ளை


முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் மற்றும் பலர் கைதாகி வழக்கை எதிர்க்கொண்டது இந்த செம்மண் பூமியால்தான். இது புதுச்சேரியிலிருந்து 10 கி.மீ. தூரத்தில் உள்ள தமிழகப் பகுதி. இந்த வளம் நிறைந்த செம்மண் பூமியை அதிகாரத்தைப் பயன்படுத்தி, சுரண்டி விற்று லாபமடைந்ததுதான் இவர்கள் மீதான குற்றச்சாட்டு. மேலோட்டமாகப் பார்த்தால் வெறுமனே ஒரு ஊழல் என்றே இதை எண்ணத் தோன்றும். ஆனால், இந்த மண் சுரண்டலால் புதுச்சேரியின் ஒட்டு மொத்த நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டது என்பது மிகப் பெரும் சோகம். மேலே சொன்ன செம்மண் பூமி விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், நடுமேடு கிராமம் ஆகும்.

புதுச்சேரிக்கு முழுவதுக்கும் குடிநீர் வழங்கிய பகுதி முத்தரையர்பாளையம். இது இந்த செம்மண் பூமிக்கு மிக அருகிலிருக்கும் சிறிய ஊர். நான் சிறுவனாக இருந்த போது இங்கிருந்து தான் நகரத்திற்கு குடிநீர் வரும். அவ்வளவு இனிப்பாகவும், சுவையாகவும் இருக்கும். இந்த நீரைப் பருகியவர்கள் வெளியூர் சென்றாலும் கையில் ஒருபுட்டியில் இந்த நீரை எடுத்துச் சென்று அருந்துவர். புதுச்சேரியில் தண்ணீர் நன்றாக இருக்கும் என்றால் அது முத்தரையர்பாளையம் தண்ணீரைத்தான் குறிக்கும்.

மழை பெய்யும் காலங்களில் உபரி நீர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வீடூர் அணையில் தேக்கி வைக்கப்படும். இந்த நீர் செஞ்சி ஆற்றில் தேங்கி, சுத்துக்கேணி வாய்க்கால் வழியாக புதுச்சேரியின் நீர் ஆதாரமான உசுட்டேரிக்கு வந்து சேரும். உசுட்டேரி புதுச்சேரியில் இருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள 12 சதுர கி.மீ. அளவுள்ள ஏரி. இந்த ஏரியின் வட கிழக்குப் பகுதி தமிழகப் பகுதி. இந்த ஏரியில் தேங்கி நிற்கும் நீர் புதுச்சேரிக்கு மிகப் பெரிய நீர் ஆதாரம். இப்படி தேக்கி வைக்கப்படும் இந்த நீர் நிலத்தடி நீராக வடிந்து இந்த செண்மண் பூமிக்கு அடியில் ஓடி வந்து முத்தரையர்பாளையத்தைச் சேரும். உசுட்டேரி விஜயநகரத்து ஆட்சியில் உருவாக்கப்பட்டது. இந்த ஏரியைப் பாதுகாக்க ஒரு ‘உசுட்டேரி பாதுகாப்பு இயக்கம்’ ஒன்றை உருவாக்கி வைத்துள்ளோம். அது தனிக் கதை.

முத்தரையர்பாளையம் புதுச்சேரி நகரத்திற்கே குடி நீர் வழங்கிய மிகப் பழமையான நீர்தேக்க அமைப்பு கொண்ட பகுதி. இப்போதெல்லாம் நீரை உயரமான நீர்தேக்க தொட்டியில் சேமித்து மக்களுக்கு வழங்குகிறார்கள். ஆனால், முத்தரையர்பாளையத்தில் நீரை நிலத்திற்கு கிழே 50 X 50 அடி அளவுள்ள 12 அடி ஆழமுள்ள பெரிய தொட்டிக் கட்டி அதில் சேமித்து வைப்பார்கள். அங்கிருந்து தொடக்கத்தில் நீராவி என்ஜின், பிறகு டீசல் என்ஜின் மூலமும் நீரை இறைத்து குழாய் வழியாக வழங்கி வந்தார்கள். இப்பகுதி கடல் மட்டத்தைவிட 70 அடி உயரமான பகுதி என்பதால் இயற்கையாகவே நீரோட்டம் புதுச்சேரியில் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்றடையும். இந்த நீர் பகிர்வுத் திட்டம் 1863ல் செயல்பாட்டிற்கு வந்தது. தற்போது முத்தரையர்பாளையம் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு மட்டும் இங்கிருந்து குடிநீர் வழங்கி வருகிறார்கள். முத்தரையர்பாளையம் நிலத்தடி நீர் மட்டம் தற்போது 250 அடிக்கு கீழே போய்விட்டது. துவக்கத்தில் 30 - 40 அடி ஆழத்தில் நீர் கிடைத்தது என்பது பழங்கதை. இந்த இயற்கை சார்ந்த அறிவியல்பூர்வமான குடிநீர் வழங்கு முறை பிரெஞ்சுக் காலத்தில் உருவாக்கப்பட்டது.

புதுச்சேரியில் 70களில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிக் கட்டி குடிநீர் வழங்கும் முறை வந்தது. மக்கள் தொகை பெருக்கம், அண்டை மாநிலத்திலிருந்து குடியேற்றம் என புதுச்சேரியின் மக்கள் தொகை பல்கிப் பெருகிவிட்டது. இதனால், குடிந்நிர் தேவை அதிகமானதால் இந்த மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி கட்டும் முறை வந்தது. முதன் முதலின் நீர்தேக்கத் தொட்டி பட்டாணிக் கடை ஜங்ஷனில் கட்டப்பட்டது. பின்னர் ரயில் நிலையம், முத்தியால்பேட்டை என பல இடங்களில் இந்நீர் தேக்கத் தொட்டிகள் உள்ளன. இன்று நிலத்தடி நீரை மட்டுமே நம்பி குடிநீர் விநியோகம் உள்ளது.

இவ்வாறு புதுச்சேரியின் நீர் ஆதாரமான முத்தரையர்பாளையத்திற்கு நீர் வரத்து தடுக்கப்பட்டதற்கும், நீர் மாசுப்பட்டதற்கும் மேலே சொன்ன செம்மண் கொள்ளை மிகப் பெரும் காரணம். முதல் 3 அடியில் இருக்கும் மணல், அதற்குக் கீழே இருக்கும் செம்மண், அதற்கும் கீழே கூழாங்கற்கள் என அனைத்து வகை இயற்கை வளங்களையும் சுரண்டினார்கள். இந்த கூழாங்கற்களுக்கு கீழேதான் சுவையான, தூய்மையான நீர் ஓடும். செழுமையான செம்மண்ணை வாரிச் சென்று காசாக்கிய இந்த அரசியல்வாதிகள் புதுச்சேரியின் நீர் ஆதாரத்தை கெடுத்தார்கள். நீர் ஆதாரம் எப்படி சீர்குலைந்தது என்பதை மட்டுமே இங்கு எழுதியுள்ளேன். அதனால் ஏற்படும் மற்ற அழிவுகள் ஏராளம். இதனால், சுற்றுச்சூழல் சமத்தன்மை முற்றிலும் சீர்குலைந்துவிட்டது என்பது சோகத்திலும் சோகம்.

இந்தப் புகைப்படத்தில் உள்ளதைப் பார்த்தால் இந்த செம்மண் கொள்ளை எத்தகையது என்பது முழுமையாக புரியாது. நேரில் பார்த்தால்தான் அதன் கொடூரம் புரியும். வாருங்கள் ஒருமுறை…

No comments: