Thursday, October 11, 2007

வாச்சாத்தி வழக்கு: தருமபுரி ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆஜராக வேண்டும் - உயர்நீதிமன்றம் உத்தரவு


தர்மபுரி மாவட்டம் வாச்சாத்தியில் போலீஸ் அத்துமீறலில் பாதிக்கப்பட்ட பழங்குடியினருக்கு இழப்பீடு தராவிட்டால் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

1992-ஆம் ஆண்டு வாச்சாத்தி கிராமத்தில் போலீசாரும், வனத்துறையினரும் பழங்குடியினர் மீது தாக்குதல் நடத்தினர்.

பழங்குடியினரின் வீடுகள் தாக்கப்பட்டு சூறையாடப்பட்டன. பலர் படுகாயம் அடைந்தனர். பழங்குடியினப் பெண்கள் 18 பேர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர்.

இச்சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல்வேறு கட்சிகள், சமுதாய இயக்கங்கள், மனித உரிமை அமைப்புகள் இதைக் கண்டித்ததோடு அத்துமீறிய போலிசார், வனத்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரினர்.

இச்சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்திரவிடப்பட்டது. இச்சம்பத்தை விசாரித்த சி.பி.ஐ., 155 வனத்துறையினர், 108 போலீசார், 6 வருவாய் துறையினர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தது. இவ்வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதனிடையே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பாதிக்கப்பட்ட 475 பேருக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.

ஆனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரையில் இழப்பீடு ஏதும் வழங்கப்படவில்லை. இதனைச் சுட்டிக்காட்டி பழங்குடியினர் சங்கத்தின் தலைவர் சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

நீதிபதிகள் எஸ்.ஜே.முகோபாத்யா, என்.பால் வசந்தகுமார் ஆகியோர் இவ்வழக்கை விசாரித்தனர். பலமுறை இவ்வழக்கு ஒத்தி வைக்கப்பட்டு, 10-10-2007 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பாதிக்கப்பட்ட 75 பேருக்கு மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டதாக அரசு வழக்கறிஞர் கூறினார்.

இதையடுத்து நீதிபதிகள் அளித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

பலமுறை நாங்கள் சொன்னபிறகும், இழப்பீடு தொகை பழங்குடியின மக்களுக்குத் தரப்படவில்லை. இவ்விஷயத்தில் மாவட்ட நிர்வாகம் செயல்படும்விதம் திருப்திகரமாக இல்லை.

இது தொடர்பாக நீதிமன்றத்திற்கு உதவ, தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவரும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் வரும் நவம்பர் 5-ஆம் நாளன்று உயர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.

இழப்பீடு தராததற்கு சரியான காரணத்தை அவர்கள் சொல்லாவிட்டால், அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம்.

பாதிக்கப்பட்ட பழங்குடியினரின் பட்டியலை ஆதி திராவிடர் நலத்துறை செயலாளர் தாக்கல் செய்ய வேண்டும்

என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

1 comment:

Anonymous said...

What a pity condition. The affected people are waiting for 15 years to get compensation. Judiciary also delaying the Justice. The human rights organisation are bound to do needful at this moment.