Wednesday, September 08, 2010

ஊழல் அதிகாரி அரிகரனைப் பாதுகாக்கும் தலைமைச் செயலக அதிகாரிகளுக்குக் கண்டனம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ. சுகுமாரன் 08.09.2010 அன்று விடுத்துள்ள அறிக்கை:

லலித் கலா அகாடமியின் அதிகாரி அரிகரனை பணி நீக்கம் செய்து அமைச்சர் கோப்பில் கையெழுத்திட்ட பின்பும், அவருக்கு பதவி நீக்க ஆணையை வழங்காமல் அவரை பாதுகாக்கும்  நோக்கோடு செயல்படும் தலைமைச் செயலக அதிகாரிகளின் போக்கை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வன்மையாக கண்டிகிறோம்.

லலித் கலா அகாடமியின் அதிகாரி அரிகரன் பாரதியார் பல்கலைக்கூடத்தில் முதல்வராக இருந்த போது செய்த ஊழல், முறைகேடு, அரசு அனுமதியின்றி வெளிநாடு சென்றது குறித்து  விசாரிக்க அரசு உயர் அதிகாரிகளான தேவநீதிதாஸ், ராகேஷ் சந்திரா மற்றும் ஏ.எப்.டி. மேலாண் இயக்குநர் எஸ்.டி. சுந்தரேசன் ஆகியோர் தலைமையில் விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்த விசாரணைக் குழுக்கள் முன்பு அரிகரன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பலவும் நிரூபிக்கப்பட்டுள்ளன.

 இதனைத் தொடர்ந்து ஊழல் அதிகாரி அரிகரனை பணிநீக்கம் செய்ய வேண்டுமென வலியுறுத்தி, மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில், கடந்த மார்ச் 23 அன்று மாணவர்களைத் திரட்டி சட்டசபை முற்றுகைப் போராட்டம் நடத்தினோம். தற்போது அவரை பணிநீக்கம் செய்து கலைப் பண்பாட்டுத் துறை அமைச்சர் ஷாஜகான் உத்தரவிட்டுள்ளார். 

ஆனால், அரிகரனை பணிநீக்கம் செய்துள்ள கோப்பு தற்போது கலைப் பண்பாட்டுத் துறை செயலர் வசம் உள்ளது. அரிகரனுக்கு பணிநீக்க ஆணை வழங்குவதைத் தடுத்து, அவரை பாதுகாக்கும் வகையில் தலைமைச் செயலக உயர் அதிகாரி ஒருவர் செயல்படுவதாக தகவல் வந்துள்ளது. தவறு செய்த அதிகாரியைப் பாதுகாப்பது அரசு நிர்வாகத்தையே சீர்குலைத்து விடும் என அரசுக்குச் சுட்டிக்காட்டுகிறோம்.

 மேலும், அரிகரன் வெளிநாட்டிற்குத் தப்பிச் செல்லும் வகையில் அவருக்கு வெளிநாடு செல்ல தலைமைச் செயலக அதிகாரிகள் அனுமதி வழங்கி உள்ளதாகவும் தெரிகிறது. துறை நடவடிக்கையை எதிர்நோக்கி இருக்கும் அதிகாரியை வெளிநாட்டிற்குச் செல்ல அனுமதிப்பது ஊழல், முறைகேட்டிற்குத் துணைப் போவதாகும்.  

 எனவே, இதில் துணைநிலை ஆளுநர் அவர்கள் தலையிட்டு ஊழல் அதிகாரி அரிகரனுக்கு உடனடியாக பணிநீக்க ஆணையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் வெளிநாடு செல்ல வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.

No comments: