Friday, September 17, 2010

புதுச்சேரி லாஸ்பேட்டை காவல்நிலையத்தில் பெண் தற்கொலை: நீதி விசாரணை நடத்த கோரிக்கை!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 17.09.2010 அன்று விடுத்துள்ள அறிக்கை:

புதுச்சேரி லாஸ்பேட்டை காவல்நிலையத்தில் பானுமதி என்ற பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து நீதிவிசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

 புதுச்சேரி ஞானப்பிரகாசம் நகரைச் சேர்ந்த சுப்பிரமணியின் மகன் விஜயகுமார் என்பவர் பெத்துச்செட்டிப்பேட்டையை சேர்ந்த மோகன்ராஜின் மகள் சுகன்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இதற்கு இரு வீட்டாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவே இருவரும் லாஸ்பேட்டை காவல்நிலையத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர். இதுகுறித்து நேற்று (16.09.2010) லாஸ்பேட்டை போலீசார் இருவீட்டாரையும் காவல்நிலையத்திற்கு அழைத்து சமரசம் செய்துள்ளனர்.

அப்போது தன் மகன் விஜயகுமாரின் மீது கோபம் கொண்ட பானுமதி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தன் மகனைத் தாக்க முயன்றுள்ளார். அப்போது போலீசார் அவரை தடுத்துள்ளனர். அதன்பின்னர் அவர் அந்த கத்தியால் தன்னைத் தானே குத்திக் கொண்டு காவல்நிலையத்திற்கு உள்ளேயே மயங்கி கீழே விழுந்துள்ளார். பின்னர் அவரை போலீசார் தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றவுடன் அவர் இறந்துவிட்டதாக அங்கிருந்த மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

 காவல்நிலையத்தில் நடந்த சம்பவத்தைப் போலீசார் மூடிமறைக்கும் விதமாக பானுமதி காவல்நிலையத்திற்கு வெளியே சென்று தற்கொலை செய்துக் கொண்டதாக வழக்குப் பதிவுச் செய்துள்ளனர். எங்களது விசாரணையில் பானுமதி காவல்நிலையத்தில் தான் தற்கொலை செய்துக் கொண்டார் என்பது உறுதியாகிறது. சம்பவம் நடந்த பின்னர் உயர்அதிகாரிகளின் நேரடி ஆலோசனைப்படி காவல்நிலையத்தில் படிந்திருந்த ரத்தக் கறைகளைப் கழுவி போலீசார் தடயங்களை அழித்துள்ளனர். இதனைப் பொதுமக்களும், சம்பவத்தைக் கேள்விப்பட்டு அங்கு சென்ற சமூக அமைப்பைச் சேர்ந்தவர்களும் பார்த்துள்ளனர்.

 காவல்நிலையத்தின் உள்ளே நடந்த சம்பவம் என்பதால் இது சந்தேகத்திற்கு இடமின்றி காவல்நிலைய மரணம் தான். உச்சநீதிமன்றம் பல வழக்குகளில் சுட்டிகாட்டியுள்ளது போல் காவல்நிலையத்திற்கு உள்ளே போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்ட பின்னால் எந்த சம்பவம் நடந்தாலும் அதற்குப் போலீசார்தான் முழுப் பொறுப்பு. ஆனால், பட்டப்பகலில் பலர் முன்னிலையில் நடந்த சம்பவத்தைப் போலீசார் மூடிமறைப்பது தவறிழைத்த போலீசாரை காப்பாற்றும் நோக்கம் கொண்டதாகும்.


 திருமணம் போன்ற பெண்கள் தொடர்புடைய விவாகரங்களை விசாரிக்க அனைத்து மகளிர் காவல்நிலையங்கள் இருக்கும்போது லாஸ்பேட்டை போலீசார் இந்த காதல் திருமணப் பிரச்சனையை விசாரித்ததே அடிப்படையில் தவறானது.

 நடந்த உண்மைச் சம்பவத்தை வெளியே சொல்லக் கூடாது என இந்த வழக்கின் முக்கிய சாட்சியாக உள்ள இறந்தவரின் குடும்பத்தினரையும், பெண் வீட்டுக் குடுமபத்தினரையும் போலீசார் மிரட்டுள்ளதாகவும் தெரிகிறது.         

எனவே, இதுகுறித்து குற்றவியல் சட்டம் பிரிவு 174-ன் படி சந்தேக மரணம் எனப் போடப்பட்டுள்ள வழக்கைப் பிரிவு 176 (1-A)-ன் படி காவல்நிலைய மரணம் என மாற்றி பதிவு செய்ய வேண்டும். மேலும், மேற்சொன்ன சட்டப் பிரிவில் கூறியுள்ளது போல் நீதித்துறை நடுவர் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி பிரேத பரிசோதனையை மருத்துவர்கள் அடங்கிய குழு மூலமும், வீடியோவில் பதிவுச் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 இதுகுறித்து, துணைநிலை ஆளுநர், தலைமைச் செயலர், காவல்துறை இயக்குநர், முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் (சட்டம்–ஒழுங்கு) உள்ளிட்டவர்களுக்கு விரிவான அறிக்கை ஒன்றை அனுப்ப உள்ளோம்.

No comments: