Monday, April 09, 2007

பிற்பட்டோர் இடஒதுக்கீடு : உச்சநீதிமன்றத்திற்கு கண்டனம்

உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்திற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இது கோடான கோடி பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும். `சமூக நீதிக்கான கட்சிகள், இயக்கங்கள்' சார்பில் இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.

இந்த அநீதியை எதிர்த்து தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில் கூடிய அரசியல் கட்சியினர் தமிழகத்தில் நாளை பந்த் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர். இதனை வரவேற்கிறோம். தமிழகத்தைப் பின்பற்றி புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி புதுச்சேரியிலும் நாளைக்கு பந்த் போராட்டம் நடத்த வேண்டும்.

மண்டல்குழு பரிந்துரை குறித்து இந்திரா சகானி வழக்கில் ஒன்பது நீதிபதிகள் வழங்கிய தீர்ப்புக்கு முரணாக தற்போது உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இது அரசியல் சட்டத்தையே கேள்விக்குள்ளாக்கும் செயல் என சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சாதி ரீதியான சமூகத்தில் இடஒதுக்கீடு அவசியம் என தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் போன்ற மகத்தான தலைவர்கள் கூறியுள்ளனர். சாதிய ஏற்றத்தாழ்வுகள் மறைய இடஒதுக்கீடு வழிவகுக்கும். இதுபோன்ற சமூக காரணிகள் பல இருந்தும் வெறும் சட்டரீதியாக சமூகப் பிரச்சினையை உச்சநீதிமன்றம் அணுகுவது தவறானது.

உயர்கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகித இடஒதுக்கீடு சட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடையை உச்சநீதிமன்றம் மறுபரிசீலனை செய்யவேண்டும். இதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சமூக நீதிக் காவலர் வி.பி. சிங் அவர்கள் கூறியுள்ளதுபோல் மத்திய அரசு இடஒதுக்கீடு குறித்து அகில இந்திய அளவில் வாக்கெடுப்பு ஒன்றை உடனடியாக நடத்த வேண்டும்.

உச்சநீதிமன்றம் விதித்த தடையால் வரும் கல்வியாண்டில் ஐ.ஐ.எம்., ஐ.ஐ.டி., போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய இடங்கள் பறிபோகும் ஆபத்துள்ளது. இதனை எதிர்த்துப் போராடி சமூக நீதியை நிலைநாட்ட அனைத்துக் கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும்.

புதுச்சேரி அரசு உடனடியாக அனைத்துக் கட்சி, இயக்கங்கள் கூட்டத்தைக் கூட்டி உச்சநீதிமன்றம் விதித்த தடையை எதிர்க்க வேண்டும். அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவோடு உச்சநீதிமன்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

உச்சநீதிமன்றத்தில் ஒரு சிலர்தவிர அனைவருமே உயர்சாதி வகுப்பைச் சேர்ந்தவர்கள். உச்சநீதிமன்றத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் போதியளவில் நீதிபதிகளாக இல்லாதததுதான் இதுபோன்ற தீர்ப்புகள் வருவதற்குக் காரணம்.

எனவே, நீதித்துறையில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

உச்சநீதிமன்றம் தடை விதித்து வழங்கியுள்ள தீர்ப்பை எதிர்த்து 30-03-2007 அன்று மாலை 4-00 மணியளவில், பிள்ளைத்தோட்டம், பெரியார் சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பட்டத்திற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மா.இளங்கோ தலைமை தாங்கினார்.
மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன், தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பாளர் இரா.மங்கையர்செல்வன், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் தங்க.கலைமாறன், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்புச் செயலாளர் அரசு.வணங்காமுடி, மீனவ மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவரும் வீராம்பட்டினம் கவுன்சிலருமான பா.சக்திவேல், தலைவர் காங்கேயன், முன்னாள் தலைவர் விசுவநாதன், மக்கள் சிவில் உரிமைக் கழகம் முத்துக்கண்ணு, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி, செந்தமிழர் இயக்கத் தலைவர் ந.மு.தமிழ்மணி, மண்ணின் மைந்தர் நல உரிமைச் சங்க ஒருங்கிணைப்பாளர் இர.அபிமன்னன், செம்படுகை நன்னீரகம் தலைவர் கு.இராம்மூர்த்தி, தேங்காய்த்திட்டு கவுன்சிலர் எஸ்.பாஸ்கரன், சமூக நீதிப் போராட்டக் குழு அ.மஞ்சினி, அ.ஜோதிபிரகாசம், தமிழர் திராவிடர் கழகம் மு.அ.குப்புசாமி
உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துக் கொண்டனர்.

1 comment:

Anonymous said...

அப்புறம் , கோவை குண்டுவெடிப்பு பயங்கரவாதிகளிடம் வாங்கின காசு தீந்து போச்சோ ? மீண்டும் வந்திட்டீங்க ,