Monday, April 16, 2007

அமைச்சரின் உருவ பொம்மை எரிப்பு : போலீஸ் அத்துமீறல்





புதுச்சேரியில் துறைமுக விரிவாக்கத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைச்சரின் உருவ பொம்மையுடன் 13-04-2007 வெள்ளிக்கிழமை சவப்பாடை ஊர்வலம் நடைபெற்றது. இதில் போலீசாருக்கும் போராட்டக் குழுவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கூட்டத்தைக் கலைக்க போலசார் தடியடி நடத்தினர்.

இதில் இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசார் காயம் அடைந்தனர். அரசு பேருந்து கண்ணாடி அடித்து நொறுக்கப்பட்டதுடன், போலீஸ் ஜீப்பின் முகப்பு விளக்கும் உடைக்கப்பட்டது.

புதுச்சேரியில் தனியார் பங்கேற்புடன் ரூ. 2700 கோடி மதிப்பில் துறைமுக விரிவாக்கத் திட்டத்தை அமல் செய்ய புதுச்சேரி அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

இத் திட்டத்துக்கு தேங்காய்த்திட்டு பகுதி மக்கள் உள்பட பல்வேறு அமைப்பினர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தேங்காய்த்திட்டு மக்கள் 13-04-2007 வெள்ளிக்கிழமை அப்பகுதியில் ஒன்றாகத் திரண்டனர். சுகாதாரம் மற்றும் துறைமுகத் துறை அமைச்சர் இ.வல்சராஜின் உருவ பொம்மையைத் தயார் செய்தனர். அதை தென்னை ஓலையில் பின்னப்பட்ட பாடையில் வைத்து அலங்கரித்து, சவ ஊர்வலம் போன்று பொரி வீசிக் கொண்டு ஆட்டம்-பாட்டம் மேளதாளத்துடன் கடலூர் சாலையை நோக்கி புறப்பட்டனர். பெண்கள் ஒப்பாரி வைத்தனர். பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.

இப்போராட்டத்திற்கு போராட்டக் குழு அமைப்பாளர் எஸ்.காளியப்பன், கவுன்சிலர் எஸ்.பாஸ்கரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன், தந்தை பெரியார் தி.க. தலைவர் லோகு.அய்யப்பன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

இதையறிந்த போலீசார், வசந்த நகர் அருகே போராட்டக் குழுவினரை தடுத்து நிறுத்தினர். அப்போது கூட்டத்தில் இருந்த ஒரு பெண், இன்ஸ்பெக்டர் ரவிக்குமாரின் கண்ணில் மிளகாய்ப் பொடியைத் தூவியதாகக் கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட குழப்பத்தில் போலீசார் பாடையைப் பிடுங்கினர். ஆனால், உருவப்பொம்மை போராட்டக் குழுவினரின் கையில் இருந்தது. போலீசாரின் வளையத்தைத் தாண்டி அதை எடுத்துச் சென்று மரப்பாலம் சந்திப்பு அருகே எரித்தனர். இதைத் தொடர்ந்து அவர்களை கைது செய்ய போலீசார் முயற்சித்தனர்.

அப்போது திரண்டிருந்த மக்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த அரசு பஸ்சின் கண்ணாடி அடித்து நொறுக்கப்பட்டது.

இந்நிலையில் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட போலீசார் தடியடி நடத்தினர். அப்போது போராட்டக் குழுவினர் சிதறி ஓடினர். இதில் கவுன்சிலர் பாஸ்கரன் உள்ளிட்ட 12 பேர் பலத்தக் காயம் அடைந்தனர். 10-க்கும் மேற்பட்ட பெண்கள் காயம் அடைந்தனர். காயம் அடைந்த அனைவரும் ஜிப்பர் மருத்துவமனையில் சி்கிச்சைப் பெற்றனர்.


போலீஸ் தாக்குதலில் இருந்து தப்பி ஓடியவர்கள் போலீசார் மீது கல்வீச்சில் ஈடுபட்டனர். இதில் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், புதுச்சேரியில் செயல்படும் இந்திய ரிசர்வ் பட்டாலியன் படையைச் சேர்ந்த போலீஸ்காரர்கள் சக்திவேல், புஷ்பதியாகு, இளஞ்செழியன் ஆகிய 4 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்த அனைவரும் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து, அப் பகுதியில் பதற்றம் நிலவுவதால் ஆயுதம் தாங்கிய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே அடையாளம் கண்டறியப்பட்டுள்ள 20 பேர் உள்பட 250 பேர் மீது முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

No comments: